"என்னக்கா சொல்ற?" என்றார் ஜெகா புரியாமல்.
"யார் கண்டா பிள்ளையை மயக்க இங்க
மட்டும் தான் எழுதியிருக்காளா இல்ல வேற எங்கயும் எழுதியிருப்பாளா..?" என்று யோசனையோடு தளிரை அவசரமாக ஆராய்ந்த ராஜி,
"ப்ச் நான் தான் சொன்னேனே ஆதிக்கு ஃபோன் வந்து இங்க கிளம்பறான்னு சொன்னப்பவே
இவ தான் வர சொல்லியிருப்பான்னு நீதான் நம்பலை இப்போ பார்த்தியா? நல்லவேளை நாம வந்ததால இவ அடிக்கிற கூத்து தெரிஞ்சது இல்ல
என்னாகி இருக்கும்" என்ற ராஜி தான் உதய் 'சுஜியின் வீட்டிற்கு கிளம்புகிறேன்' என்றதும் தங்கை மூலமாக அம்பலவாணனிடம் பேச செய்திருந்தார்.
"என்ன இருந்தாலும் நம்ம மருமகள் நாமலே
ஆசிர்வாதம் செய்யலைன்னா எப்படி..?" என்ற ஜெகாவின் வார்த்தையை
நம்ப மறுத்த கணவரிடம்,
"எனக்கு நம்ம பையன் வாழ்க்கை
மட்டுமில்ல நீங்களும் உங்க நிம்மதியும் முக்கியம்.. இனிமேல் தளிரை நான் எதுவும்
பேசமாட்டேன் இப்போ நம்பறீங்களா..?" என்று
கிளப்பிக்கொண்டு இங்கே வந்திருந்தார்.
"ஆமாக்கா நீ சொன்னது நல்லதா
போச்சு.." என்றவரின் பார்வை தளிரை வருடிகொண்டிருந்த மகன் மீது நிலைக்க..,"ப்ச் அப்படி என்ன வீம்பு..? என் பையன் எத்தனை முறை கேட்டும் வாயே திறக்கலையேக்கா இவ.. ஆம்பளையை கெஞ்ச
விடறா, காலை பிடிக்க வைக்கிறா.., இதெல்லாம்
என்ன பழக்கம்..?" என்று அதிருப்தியோடு தளிரை பார்த்தார்.
"அடிப்போடி அங்க பாரு.." என்று உதய்
தளிரை சுட்டிகாட்டிய ராஜி, "பார்த்தியா இப்போ நீ
சொல்றதை கூட கேட்காத அளவு ஆதியை எப்படி வசியபடுத்தி வச்சிருக்கான்னு.., மகராசி வீட்டுக்கு வந்தப்புறம் உன்னையும் என்னையும் எங்க வைக்க
போறாளோ.." என்று ராஜி தங்கைக்காக வருத்தம் கொள்ள அவரோ மகன் தன் வார்த்தையை
மதிக்காததில் கொதித்து போயிருந்தார்.
பின்னே தளிர் அம்பலவாணன் தேர்ந்தெடுத்த மணமகள் என்று
எண்ணியிருந்த ஜெகாவுக்கு அன்று சுஜி சொன்னது போல 'ஒருவேளை
மகன் இவளை காதலிக்கிறானோ..? அதனால் தான் திருமணத்தில் இத்தனை
ஆர்வமாக கலந்து கொள்கிறானோ..?' என்று சந்தேகத்தை நிவர்த்தி
செய்து கொள்ளவே இங்கே வந்தவருக்கு 'உண்மை என்ன?' என்பதை இத்தனை பேர் கூடியிருக்கையில்
சபீனா, விம் பார் கொண்டு உதய் துல்லியமாக விளக்கிவிட்டதில்
அத்தனை கோபம்.
"கலக்குறீங்க அண்ணி" என்ற நிவி
இன்னுமே அவள் கைகளை வியப்புடன் பார்க்க ராகவன் மகிழ்வோடு நண்பனை அணைத்து கொண்டான்.
"இதுக்கு தான் என் தம்பியை வளையல் போட்டு விட சொன்னியா..?" என்று சுஜி தளிரின் தோளில் இடிக்க தளிரிடம் வெட்கப்புன்னகை..!!
"வாவ் மாமா நேம் இங்க இங்க்லீஷ்ல இருக்கு,
நானும் கண்டுபிடிச்சுட்டேன்.." என்று குழந்தைகள் குதூகலிக்க அனைவரின்
முகத்திலும் சொல்லிலடங்கா மகிழ்ச்சி.
"என் தம்பி முகத்துல என்னைக்கும் இல்லாத
சந்தோஷத்தை கொண்டு வந்துட்ட தளிர்.. ரொம்ப தேங்க்ஸ்" என்று சுஜி தளிரை
அணைத்து கொள்ள மறுபுறம் அணைத்த நிவியோ ஒருபடி மேலே போய் அவள் கன்னத்தில் முத்தமிட
அவளை தொடர்ந்து வைஷு கௌஷிக்கும் தளிருக்கு முத்தமிட்டனர்.
பார்வையால் தளிரை வருடி கொண்டிருந்த உதய்யை
கண்டு, "யார் கண்ணும் பட்டுடாம இப்படியே ஒத்துமையா
சந்தோஷமா இருக்கணும்" என்று சரவணின் பாட்டி இருவரையும் நெட்டி
முறிக்க ராஜியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
குழந்தைகள் முதற்கொண்டு அனைவரும் பார்த்து முடிக்க
அடுத்தடுத்து வளையல்களை ஏற்றியவன் இடக்கரத்தை பிடித்து அதிலிருந்த மொழிகளில்
ரசனையோடு தன் விழிகளை நிலைக்கவிட அவனை நிதானமாக ரசிக்கவிடாமல், "உதய் சீக்கிரம் போடு.." என்ற மற்றவர்களின் குரல் வரவும் வேகமாக
போட்டுவிட்டவனுக்கு அவள் கையை விடும் எண்ணம் சுத்தமாக இல்லை.
தன் கரத்தில் கூடிய அழுத்தத்தில் "உதய்" என்று
தளிர் தத்தளிக்க "அண்ணி கண்டிப்பா உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை, எங்க
அண்ணா ரொம்ப லக்கி.. பாட்டி திருஷ்டி கழிக்கணும் சொல்றாங்க வாங்க" என்று நிவி
அவளை காப்பாற்றி இருந்தாள்.
நேரம் சென்றதே தெரியாத வகையில் அனைவரின் மனமும் முகமும்
மகிழ்ச்சியில் பூரித்திருக்க தளிரின் மருதாணி குறித்து குழந்தைகள், இளையவர்கள்
மட்டுமல்லாமல் பெரியவர்களும் நிறைவுடன் பேசிக்கொண்டிருந்தனர்.
"நம்ம உதய் குணத்துக்கு ஏத்த மாதிரி
அருமையான பெண்ணை தேர்ந்தெடுத்து இருக்கீங்க சம்பந்தி.." என்று ராகவனின்
தந்தை அம்பலவாணனிடம் சொல்ல அவரோ புன்னகையுடன் மகனை பார்த்தார். ஆனால் உதய்யின்
பார்வை உணவை எடுத்து வைத்து கொண்டிருந்த தளிரின் மீதிருந்த அகல மறுக்க கைபேசி அழைப்பு
அவனை மீட்டிருந்தது.
"சொல்லு செல்வம்" என்றவாறு உதய்
வெளியில் செல்ல "மாமா சாப்பாடு ரெடி எல்லாரும் வாங்க,
வாங்கப்பா" என்ற சுஜி "உதய் சாப்பிடாம எங்கப்பா
கிளம்பிட்டான்..?"
"முக்கியமான கால் வந்ததும்மா பேசிட்டு
வந்துடுவான் நீ வா" என்று மகளுடன் செல்ல தளிர், நிவி
அனைவருக்கும் பரிமாற தொடங்கினர்.. சுஜி வைஷு கௌஷிக்கை ஒன்றாக அமர வைத்து ஊட்டியவள்
இறுதியாக இருவருக்கும் பாயசத்தை கொடுத்து,
"ஒழுங்கா
சண்டை போடாம குடிச்சுட்டு டம்பளரை கழுவி என்கிட்டே கொடுக்கணும் புரிஞ்சதா..?"
என்று மிரட்டிவிட்டு டைனிங் டேபிளுக்கு சென்றாள்.
"நிவி நீ உட்கார்" என்று தங்கையை
அமர்த்தி பரிமாறியவள், "தளிர் உதய் கால் பேசி
முடிச்சுட்டானான்னு பார்த்து கூட்டிட்டு வா நீங்களும் உட்காந்துப்பீங்க"
என்று சொல்லவும் அம்பலவானனுக்கு அப்பளத்தை எடுத்து வைத்து கிளம்பிய அதேநேரம்
மீண்டும் கௌஷிக்கும் வைஷுவும் ஒருவரை ஒருவர் துரத்தி
கொண்டு இருந்தார்கள்.
இறுதியில் டைனிங் டேபிளை சுற்றி வந்து, "காப்பாத்துங்க மாமி" என்று தளிரை பிடிக்க முற்பட்ட வைஷுவின் கைபட்டு
தளிரின் புடவை முழுக்க ரசம் கொட்டிவிட்டது.. அதோடு அவள் பின்னே வந்த
கௌஷிக் டம்பளரில் இருந்த நீரையும் வைஷு மீது ஊற்றுவதற்கு பதில் தளிர் மீது
ஊற்றி விட்டான்.
"ப்ச் வர வர உங்க சேட்டை அதிகமாகிடுச்சு..
என்ன பண்ணியிருக்கீங்க..? ஒரு இடத்துல ஒழுங்கா உட்கார
மாட்டீங்களா..?"
"ம்மா டம்பளர் வாஷ் பண்றப்போ கௌஷிக்
வேணும்னே என்மேல தண்ணி ஊத்திட்டான்"
"இல்லம்மா இந்தக்கா பொய் சொல்றா..?
நான் டாப் ஓபன் பண்ணி வாஷ் பண்றப்போ என் மேலயும் தண்ணி பட்டுச்சு
அக்கா ஏன் என் பக்கத்துல நிக்கணும் வாஷ் பண்ணிட்டு போக வேண்டியது தானே..?"
"நீ ஏன்டி கிளம்பாம அவன் பக்கத்துல
நின்ன..?"
"அவன் ஒழுங்கா வாஷ் பண்றானான்னு
பார்க்கறதுக்கு வைட் பண்ணேன்ம்மா ஆனா அவன் என்மேல் ஊத்திட்டான் அதான் நானும்
ஊத்தினேன்"
"அவன் செய்தா நீயும் செய்வியா..? உனக்கும் அவனுக்கும் வித்யாசமில்லை.." என்றவர் மகனை இழுத்து அவன்
முதுகில் ஒன்று வைத்து, "அவ உன்னை வாட்ச் பண்ண தானே
நின்னிருக்கா..? எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லணும்
சொல்லியும் அதென்ன அக்கா மேல தண்ணீ ஊத்துறது..?"
"உங்களால மாமி
புடவை நனைஞ்சுடுச்சு இப்படி செய்தா எந்த கெஸ்ட் நம்ம வீட்டுக்கு வருவாங்க..?
இனி மாமி இங்க வரவே மாட்டாங்க பார்த்துக்கோ" என்று சுஜி கண்களை
உருட்ட கௌஷிக் அவரிடம் இருந்து நழுவி வெளியில் ஓடிவிட்டான்.
ஆனால் வைஷுவிற்கு சாமார்த்தியம் போதாமல், "ஸாரிம்மா.. ஸாரி மாமி இனி இந்த மாதிரி செய்யமாட்டேன்.. நீங்க வீட்டுக்கு
வராம இருக்காதீங்க.." என்று விட்டால் அழுதுவிடுபவள் போல இருந்தவள் "டென்
தவுசன்ட் டைம்ஸ் ஸாரி மாமி" என்று மீண்டும் மன்னிப்பை யாசித்தாள்.
"ச்சோ விடுங்க அண்ணி குழந்தைங்க தானே..
சாரீ மாத்தினா ஆச்சு, அதுக்கு ஏன் அவளை அழ விடறீங்க.."
என்ற தளிர் வைஷுவை அணைத்து தேற்றினாள்.
"அவளை விடு இப்படிதான் கொஞ்ச நேரம்
மூஞ்சியை தூக்கி வச்சிருப்பா அப்புறம் சரியாகிடுவா.. சரி நீ வா" என்ற சுஜி மாடிக்கு
அழைத்து செல்ல, "அண்ணி இந்த புடவையை கட்டுங்க" என்று
தான் எடுத்து வந்த சீர்வரிசை தட்டை கையோடு கொடுத்தனுப்பினாள்.
சென்னைக்கு சென்ற போதே சீர் செய்வதற்கு சுஜி தளிரை அவளுக்கு
பிடித்த புடவையை தேர்ந்தெடுக்க சொல்ல தென்றலும் நிவியும் அங்கிருந்த மயில்வர்ண
புடவையை காண்பித்து அது தளிர்க்கு அட்டகாசமாக பொருந்தும் என்றதில் அதையே
எடுத்துக்கொண்டாள்.
அதேசமயம் நிவியும் அண்ணிக்கு பரிசளிக்க விரும்பி அவளுக்கு
பிடித்த பட்டை தேர்ந்தெடுக்க சொல்ல அடுத்த பத்தாவது நிமிடம் தளிர் கையில் இருந்த
புடவையை கண்டு, "என்ன காம்பினேஷன் தளிர் இது..?" என்று சுஜி
வியந்தாள்.
பின்னே பட்டு புடவையாக இருந்தாலும் இது போன்ற அடர் நிறங்களை பெரும்பாலும்
அவளே தவிர்த்து விடுவாள்... லேட்டஸ்ட் ட்ரென்ட்க்கு ஏற்ப புடவை எடுப்பவளுக்கு அவள்
தேர்வு ஆச்சர்யம் கொடுக்காமல் வேறென்ன செய்யும்..?
"அண்ணி உதயாதித்தன்'னா
சூரியன் தானே?" என்று தளிர் கேட்க தென்றலும் நிவியும்
ஆச்சர்யத்தில் விரிந்த விழிகளோடு, "அக்கா, அண்ணி அண்ணாவையும் அண்ணியையும் டினோட் பண்ற காம்பினேஷன்ல புடவை
எடுத்திருக்காங்க' என்று பார்டரின் நிறத்தை சுட்டி காட்ட சுஜியால்
அவள் ரசனையை மெச்சாமல் இருக்க முடியவில்லை. தளிர் இதை உதய்க்கு சர்ப்ரைஸாக வைக்க
நினைத்திருக்க நிவியோ சந்தோஷத்தில் அண்ணனுக்கு அழைத்து சொல்லிவிட்டாள்.
அறைக்கதவை திறந்து தளிரிடம் துண்டை கொடுத்த சுஜியிடம், "எதுக்கு அண்ணி குளிச்சுட்டு டைம் ஆகிடாதா..? நான்
ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு சாரீ மாத்திக்கிறேனே"
"அதெல்லாம் ஒன்னும் நேரமாகிடலை தளிர்..
ராகுகாலம் முடிஞ்சு தான் கிளம்ப முடியும் எப்படியும் இன்னும் ஒன்றரை மணி
நேரமிருக்கு ஏற்கனவே நான் சொல்லியும் கேட்காம உதய்க்கு பிடிச்ச ஸ்வீட்டாவது
செய்யறேன்னு கிட்சன்ல நின்னுட்ட.. வீட்டுக்கு போய் நீ குளிச்சு ரெடியாக
நேரமாகிடும் அதனால இங்கயே தலைக்கு ஊத்திக்கோ நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு
வரேன் அதுக்கப்புறம் கிளம்பினோம்னா பியூட்டிஷியன் ரெடி பண்ண நேரம் சரியா
இருக்கும்" என்றதும் "சரிங்கண்ணி" என்றவள் குளிக்க சென்றாள்.
*************************
பிரச்சனை என்று செல்வம் அழைத்திருக்க அதை தொட்டு மேலும் சில
அழைப்புகளை பேசி முடித்து உள்ளே வந்த உதய்யின் கண்கள் தளிரை தேட அதை கண்டுகொண்ட
ராகவன்,
"என்ன மச்சான் யாரையோ தீவிரமா தேடுற மாதிரி தெரியுது..."
என்று தோளில் கை போட்டு சிரிப்போடு கேட்கவும்,
"ஏன் உனக்கு தெரியாதா..? எல்லாம் என் நேரம்டா, சரி சொல்லு தளிர் எங்க..?"
என்று கேட்டதும் நடந்ததை சொன்னவன் "சரி நீ சாப்பிட வா"
என்றான்.
"சாப்பாடா..?" என்ற
உதய்யின் கண்கள் தூரத்தில் இருந்தே டைனிங் ஹாலை ஒருமுறை வலம்வர பெரியவர்கள்
அனைவரும் உணவில் கவனமாக இருந்தனர். "மச்சான் நல்லா கேட்டுக்கோ இன்னும் அரை
மணி நேரத்துக்கு யாரும் மாடிக்கு வரக்கூடாது அது உன் பொறுப்பு! முக்கியமா வைஷுவும்
கௌஷிக்கும்" என்ற உதய் சீட்டி அடித்துக்கொண்டே மாடியேற அவன் கையை பிடித்து
நிறுத்திய ராகவன் நண்பனின் மனம் அறிந்து,
"டேய் நில்லுடா இவ்ளோ பேர் இருக்காங்க உன்
இஷ்டத்துக்கு கிளம்பிட்ட..? யாராவது பார்த்துட்டா
என்னாகிறது.." என்ற ராகவ் அவனை கட்டுபடுத்த பார்க்க,
'பெயரை
பார்த்ததுமே அத்தனை பேர் முன்னிலையில் அவளை அள்ளி எடுத்து முத்தாட துடித்த உதய்
தன் கட்டுக்குள்ளேயே இல்லாதிருக்கும் நிலையில் இப்போது நண்பனுக்கு மட்டும்
கட்டுப்பட்டு விடுவானா என்ன?' ராகவ்வின் கையை உதறிவிட்டு
மாடியேறி விட்டான்.
"என் பொண்டாட்டியை பார்க்கதானேடா போறேன்
யார் பார்த்தா என்ன..? எங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ணாம
பார்த்துக்கோ.."
"மச்சான் யாராவது உன்னை எங்கன்னு கேட்டா
நான் என்ன சொல்ல..?" என்று மாடியை
பார்த்தவண்ணம் ராகவ் புலம்பி கொண்டிருக்க அவன் விழிவட்டத்தில் மாடியேறிய வைஷுவும்
கௌஷிக்கும் விழ பதறி சென்று அவர்களை பிடித்து கொண்டான்.
"எங்கடா போறீங்க..?"
"விடுங்க சித்தா இந்த வைஷுக்கா ஓவரா பண்றா
நான் மாமிகிட்ட அவளுக்கு இம்போசிஷன் கொடுக்க சொல்லணும் அப்போதான் என் வழிக்கு
வரமாட்டா.." என்று கௌஷிக்கும் "விடுங்க சித்தா அவன் என்னை டூ டைம்ஸ்
அடிச்சான் நான் மேம் கிட்ட சொல்லி அவனை ஃபோர் டைம்ஸ் அடிக்க வைக்கணும்" என்று
இருவரும் திமிர,
"டேய் கொஞ்சம் அமைதியா இருங்கடா"
"முடியாது சித்தா இவனால தான் மேம் எங்க
வீட்டுக்கு வராம போயிருப்பாங்க.. அவனுக்கு அடி வாங்கி கொடுக்கல என் பேர் வைஷ்ணவி
சரவணன் இல்லை" என்று வைஷு பல்லை கடித்தாள்.
"அய்யோ நீங்க இப்போ அங்க போககூடாது...
தயவுசெய்து என்கூட வாங்க உங்க பஞ்சாயத்தை நான் தீர்த்து வைக்கிறேன் .. "
"ஏன் சித்தா..?" என்றனர் இருவரும் கோரசாக..
"சொல்றேன்டா ஆனா எந்த கேள்வியும் கேட்காம
அமைதியா என்கூட வாங்க.. அப்போ தான் ஐஸ்க்ரீம் வாங்கி தருவேன்" என்று
இருவரையும் வெளியில் அழைத்து சென்றவன் மறக்காமல் நிவியை அழைத்து உதய் மாடிக்கு
சென்றிருப்பதை சொல்ல பதறி போனவளின் பார்வை ஹாலில் வந்தமர்ந்த ஜெகா, ராஜியை சென்றடைந்தது.
நல்லவேளை சுஜியின் மாமியாரிடம் பவ்யமாக பேசிக்கொண்டு
இருந்தவர்களின் கவனம் இங்கு இல்லை. "இத்தனை பேர் இருக்கப்போ ஏங்க இப்படி..
நீங்களாவது சொல்லலாமே ஏற்கனவே.. ப்ச்" என்று நிவி பரிதவிக்க..,
"ஏன்டி உங்கண்ணன் நான் எதை சொல்லி
கேட்டிருக்கான்னு நீ என்னை கேள்வி கேட்கிற..? வாங்கிட்டு போன
வளையலை தளிர் போட்டுக்காததுல அவனுக்கு கொஞ்சம் கஷ்டமாகிடுச்சு அதுக்கு
முன்னிருந்தே எங்க தளிருக்கு இவனை பிடிக்காம உங்கப்பாக்காக சம்மதிச்சதோ! லைஃப்
எப்படி இருக்குமோன்னு புலம்பிட்டு இருந்தவன் தளிர் கை முழுக்க பேரை பார்த்ததுல
துள்ளி குதிக்கலையே தவிர அவ்ளோ சந்தோஷம்டி! நிவி அவன் முகத்தை நீ சரியா பார்க்கலை
ஆனா நான் பார்த்தேன்.." என்றவனின் முகத்தில் நண்பன் கொண்ட மகிழ்ச்சியை
விஞ்சிய மலர்ச்சி.
"நிஜமா தளிர் எழுதியிருந்ததை பார்த்து
நமக்கே அவ்ளோ சந்தோஷம் அவனுக்கு இருக்காதா..? இப்போ தளிர்
தனியா போயிருக்குன்னு சொல்லவும் நான் சொல்றதை கேட்காம கிளம்பிட்டான்டி..."
"அதெல்லாம் சரிங்க.., அண்ணாவை யாரும் பார்த்துடலையே.."
"இல்ல நிவி.. சரி
இவங்களை நான் பார்த்துக்கறேன் நீ யாரையும் அங்க போகவிடாத.. முடிஞ்சா கொஞ்ச நேரம்
கழிச்சு தளிருக்கு ஃபோன் பண்ணி கிளம்ப நேரமாகிடுச்சுன்னு சொல்லி கீழ வர
சொல்லிடு.." என்றவன் தன்னிடம் இருந்து நழுவிய கௌஷிக்கை பிடித்து தோளில்
போட்டுகொண்டு வைஷுவோடு வெளியேறினான்.
Comments
Post a Comment