"வாங்கண்ணா.. வாங்க மாப்பிள்ளை, வா நிவி.." என்று இளந்தளிரை அழைத்து வந்தவர்களை தண்ணீரோடு வரவேற்ற
சீதாலட்சுமி வீட்டினுள் அழைத்தார்.
"இருக்கட்டுமா! தளிரை
விட்டுட்டு போக தான் வந்தேன். வேலை எல்லாம் எப்படி போயிட்டிருக்கு பஸ் டைமுக்கு
வந்துடுச்சு தானே வேற ஏதாவது தேவைப்படுதா..?"
"வந்துடுச்சுண்ணா இங்கயும் எல்லாமே
தயார்.." என்று பேசிக்கொண்டிருக்கையில் தென்றல் அவர்களுக்கு குடிக்க
பழச்சாறோடு வந்தாள்.
"வேண்டாம் ப்ரீஸீ இதேதான் சாப்ட்டுட்டு
வரேன் வயிறு ஃபுல் சுத்தமா இடமில்லை.. நீ என்ன இன்னும் ரெடியாகாம இருக்க..?"
என்று உதய் கேட்க தென்றலால் முன்பு போல எளிதாக பதில் சொல்ல
முடியவில்லை சிறு புன்னகையோடு நிவிக்கு கொடுத்தவள் உள்ளே சென்றுவிட்டாள்.
"அத்தை நான் அனுப்பின லேடீஸ் சமையல்
உங்களுக்கு பிடிச்சதா..? வேலையெல்லாம் சரியா செய்யறாங்களா..?
இன்னும் ஹெல்ப்க்கு யாராவது தேவைன்னா சொல்லுங்க"
"இல்ல மாப்பிள்ளை அவங்களே நல்லா
செய்யறாங்க.. நீங்க பழம் ஏதாவது சாப்பிடறீங்களா..?"
"இல்லத்தை இருக்கட்டும்.. நீங்க
பாருங்க டைமாச்சு நாங்க கிளப்புறோம்" என்று கிளம்பிவிட்டனர்.
நகைகளை கழற்றி வைத்து கொண்டிருந்த தளிர், "என்ன சொல்ற தென்றல்..? இப்படியா பேசினாரு அம்மா
எதுவும் சொல்லலையா..?"
"அம்மா அவங்க மன்னிப்பு கேட்டதில்லாம
என்னையும் கேட்க வச்சுட்டாங்க.."
மகளின் அறைக்குள் வந்தவர், "தளிர் அலங்காரம்
செய்யறதுக்கு முன்னாடி உங்க பெரியப்பா கிட்ட போய் ஆசிர்வாதம் வாங்கிட்டு
வந்துடுறியா..?" என்றார் சீதா.
"ம்மா என்னம்மா பேசுற நீ ..?அக்கா எப்படி இப்ப மண்டபத்துக்கு போக முடியும்? ஏம்மா
அந்த பெரியப்பாவுக்கு நீங்க இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கறீங்க எனக்கு சுத்தமா
பிடிக்கல. நீங்க தயவுசெய்து அந்த ஆளை அனுப்பிடுங்க.."
"எல்லா நிகழ்ச்சியும்
ஒரு ஆம்பள வந்து முன்னாடி செய்தா மரியாதைன்னு நீங்கதானே சொன்னீங்க, இப்போ அந்த ஆள் வந்து முன்னாடி நின்னாரா தேவையில்லாம எவ்ளோ பேச்சு! இது
உங்களுக்கு தேவையா..? இப்போ மாமா அத்தானுக்கு நீங்க தானே
தண்ணி கொடுத்தீங்க அவங்க அமைதியா குடிச்சாங்க ஆனா அந்தாளுக்கு கல்யாண பொண்ணு
வந்து கொடுக்கணுமாம்" என்று முகம் சிவந்தவள்,
"ஏன் கல்யாண பொண்ணு வந்து தண்ணி கொடுத்தா
தான் இவர் தொண்டைக்குள்ள இறங்குமா..? ஒருவேளை இறங்கலைனா
சொல்லுங்க நான் பொனலை வைத்து ஊத்திவிடறேன்" என்று தென்றல் கஜபதியை தாளிக்க
தொடங்கிவிட்டாள்.
"தென்றல் கொஞ்சம் அமைதியா இரு அவசரபட்டு
எதுவும் பேசாத கல்யாணம் நல்லபடியா நடக்கணும்.. தளிர் நீ
மண்டபத்துக்கு போனதுமே மறக்காம உங்க பெரியப்பாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு அப்புறமா
ஸ்டேஜ்க்கு போடா அப்பதான் அவரோட கோபம் கொஞ்சமாவது குறையும்"
"நீங்க ஏன்மா அந்தாளுக்கு சப்போர்ட்
பண்ணிட்டிருக்கீங்க..? அன்னைக்கு எத்தனை
முறை அந்த பெரியம்மாவோட அம்மா வீட்ல யாராச்சும் செய்வாங்களான்னு கேட்க ஃபோன்
பண்ணியிருப்பீங்க, கால் எடுக்காம இப்ப மட்டும் வந்து என்னவோ
தம்பிக்காக உயிரையே கொடுக்கற மாதிரி பேசறாங்க.. நாங்க பிறந்ததுல இருந்து
இதுவரைக்கும் ஒரு பைசா செலவு பண்ணல இதுல அவர்கிட்ட என்னை மன்னிப்பு கேட்க
சொல்றீங்க"
"அம்மா என்னம்மா இதெல்லாம்..? எதுக்காக உங்களை அவர் அனாவசியமா பேசணும்..?" என்று
தளிரும் தாங்க மாட்டாமல் கேட்டுவிட..
"விடு அம்மூ என்னைதானே பேசினார். அவருக்கு
நான் உங்கப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்ட நாளில் இருந்தே எந்த வாய்ப்பு கிடைச்சாலும்
இப்படிதான் பேசுவார்.."
"உங்களுக்க தெரியுது அப்புறம் ஏன்மா இந்த
மாதிரி ஆளுங்களெல்லாம் கிட்ட வச்சுக்கிட்டு..? வேண்டாம்
நமக்கு இப்படி ஒரு சொந்தம் இருக்குதுன்னு நாம எதுக்கு காமிச்சுக்கணும் அப்பாகூட
பிறந்தது அத்தை மட்டும்தான்னு சொல்லி இருக்கலாமே..!"
"நீங்க எதுக்காக நம்மளை
வேண்டாம்னு ஒதுக்குறவங்களை இறுக்கி பிடிக்க பார்க்கறீங்க.., உறவுகள்
கண்ணாடி பாத்திரம் மாதிரி பார்த்து கையாளனும்னு எங்களுக்கு சொல்லிட்டு இப்போ அதையே
நீங்க இறுக்கி பிடிக்கிறப்போ உடைஞ்சு நம்ம கையை குத்தி கிழிக்கும்னு உங்களுக்கு
ஏன் புரிய மாட்டேங்குது..?" என்ற தென்றலின் கோபம்
அத்தனை எளிதாக மட்டுப்படவில்லை.
ஒருவழியாக தென்றலை தளிர் சமாதானபடுத்த அழகுநிலைய பெண்கள்
தளிரை அலங்கரிக்க தொடங்கியிருந்தனர். அதன்பின் தென்றலுக்கும் அலங்கரித்துவிட
திருமணக்களையோடு நின்றிருந்த மகளை கண்ட சீதாவின் நெஞ்சம் நிறைந்து போக கணவரின்
முன் நின்றவர் மனமுருக வேண்டிக்கொண்டு பூஜையறையில் விளக்கேற்றி வணங்கி திருமண
மண்டபத்திற்கு கிளம்பினர்.
நகரின் மையத்தில் இருந்த மண்டபம் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி
வழிந்து கொண்டிருந்தது. அம்பலவாணினின் பள்ளி, தொழிற்சாலை, என்று
அத்தனை பேருக்கும் அழைப்பு விடுத்திருக்க உதய்யிடம் வேலை செய்பவர்களும் தங்கள்
முதலாளியின் திருமணத்தில் ஆர்வமாக கலந்து கொள்ள வந்திருந்தனர்.
ஆடம்பரமாக நடைபெறவிருக்கும் திருமணத்தில் மண்டபவாயில் அலங்காரத்தில்
தொடங்கி உணவு வரை ஒவ்வொன்றும் கூடியிருப்போரை பிரமிக்க
செய்து ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது. வான வேடிக்கை, ஊர்வலம்
லைட் மியூசிக் என்று அமர்க்களப்படுத்தி இருந்தார் அம்பலவாணன். வேலூரில் முக்கியபுள்ளி
என்பதால் அவரது மகன் திருமணத்தை கவர் செய்வதற்காக முக்கிய சேனலில் இருந்து
அம்பலவானனை கேட்டிருந்தனர் அவர்களோடு சேர்த்து லோக்கல் சேனலும் இணைந்து கொள்ள திரும்பும்
இடமெங்கும் கேமராக்களும் பெரிய வெள்ளை திரைகளுமாக இருந்தது.. ட்ரோன் கேமரா மூலமாக
மணமக்களை வாயிலில் இருந்து படம் பிடித்துக் கொண்டு வந்தனர்
*************************
ஊர்வலம் முடிந்து மணமக்கள் வாயிலில் நுழையும் போது
"மணமகளே மணமகளே வா.." என்ற பாடலில் தொடங்கி அவர்கள் திருமண
மண்டபத்திற்கு நுழைந்து மணமேடைக்கு செல்லவும்,
"ஏ தேசிங்கு ராஜா தான் உனக்கு இப்ப தேதி
வைக்க வந்தாரே ஏ தென்நாட்டு சூரியன் தான்
உனக்கு இப்ப மாலை இட வந்தாரே
அடி பச்சரிசி பதினாறே உன்ன இப்ப
பொங்க வைக்க போறாரே
உன் கன்னக்குழி ஓரத்தில
முத்தம் இட்டு கப்பல் விட போறாரே.."
என்று பாடத் தொடங்கிட கேமராக்கள் அவர்களை சுற்றி
வளைத்து புகைப்படமாக எடுத்து தள்ளியது.
லேஹங்காவில் இருந்த தளிர் கையிலிருந்த விளக்கோடு மெல்ல அடி
எடுத்து வைக்க அவளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இணைந்திருந்த உதய்யை பாடல் வரிகள்
ஈர்க்க அதை ரசித்துகொண்டே வந்தவன் மெல்ல தளிரின் புறமாக சாய்ந்து ஏதோ சொல்லவும்
சட்டென தளிரின் முகம் செந்தூரம் பூசிக்கொண்டது... துடித்த இதழ்களை மெல்ல
கடித்துக்கொண்டே உதய்யை பார்க்க அவனோ புருவமுயர்த்தி கண் சிமிட்டியிருந்தான்.
"ஷ்ஷ் என்னதிது" என்று வெட்கத்தோடு
முணுமுணுத்தவளின் மீதான பார்வையை அகற்றாமல் உதய் நடந்து வர, "மாப்பிள்ளை ஸார் கொஞ்சம் ஃபோட்டோக்கும் போஸ் கொடுங்க.." என்று ராகவன்
உதய் காதோடு சொல்லவும்,
"இவ்வளவு பேரை வச்சு கல்யாணம்
பண்ணனும்ன்னு யார்டா சொன்னா..? என் பொண்டாட்டியை நிம்மதியா
ரசிக்க விடாம ஒவ்வொருத்தரா வந்துடுறீங்க..?" என்று
ஊர்வலத்தில் அருகே அமர்ந்திருந்த தளிரை ரசிக்க முடியாமல் அவளிடம் எதுவும் பேசவிடாமல்
இத்தனை நேரம் தளிர் வைஷுவின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு வர
உதய்யும் கௌஷிக் கேள்விகளை சமாளித்து வந்திருந்தான்.
"கல்யாணத்தை முடிச்சுட்டு உட்காந்து ரசிடா
யார் தடுக்கபோறா..?" என்று சிரிப்போடு ராகவன் விலகவும்
மேடைக்கு செல்லும் வரை கேமராவை பார்த்தாலும் அவ்வப்போது உதயனின்
பார்வை தளிரை தழுவிக் கொண்டது. மணமகன் அறைக்கு சென்று தளிரிடம் கொடுக்கபட்ட
விளக்கை பத்திரமாக வைக்க அங்கே காத்திருந்தனர் உதயனின் தாத்தா
பாட்டி.
அண்ணாமலை அன்னபூரணி இருவரும் பல உடல் உபாதைகளால் அவதிபடுபவர்கள் என்பதால்
அவர்களை முதன்முதலில் தளிர் நிச்சயத்தில் சந்தித்ததோடு சரி அதன்பின் இப்போதுதான்
பார்க்கிறாள்.
"எப்படி இருக்கீங்க தாத்தா..? நல்லா இருக்கீங்களா பாட்டி..?" என்றவள்
உதய்யோடு அவர்களிடம் ஆசி பெற்றவள் மணமேடையில் வந்து நிற்கவும் வரவேற்பு வைபவம்
தொடங்கியது.
ராகவனும் சரவணனும் தொழிலதிபர்கள் கட்சி ஆட்கள் மற்றும்
நண்பர்கள் என்று அனைவரையும் வரவேற்று மேடைக்கு அழைத்து சென்றனர். தளிரோடு சேர்ந்து
மேடையில் நிற்பதில் அத்தனை பூரித்து போயிருந்தாள் வைஷ்ணவி.
மக்கள் வெள்ளத்தில் மேடைக்கு வரமுடியாமல் வைஷுவின் தோழிகள்
கீழே காத்திருப்பதை கண்டவள் ஓடி சென்று அவர்களை வரவேற்று அவளோடு படிக்கக்கூடிய ஆண்
நண்பர்களையும் மொத்தமாக மேடைக்கு அழைத்து வர "யு ஆர் வெரி பியூட்டிஃபுல்
மேம்" என்று பிள்ளைகள் தளிரை சூழ்ந்து கொள்ள மலர்ச்சியோடு புகைப்படம்
எடுத்துக்கொண்டாள்.
மேலும் மூன்று மணி நேரம் கடந்த நிலையில் கூட்டம் குறைந்து மணமக்கள்
இருவரையும் நிவி சாப்பிட அழைத்து சென்றாள். ஏதோ யோசனையில் இருந்த தளிர் சரியாக
சாப்பிடாமல் இருப்பதை கண்டவன், "என்னாச்சு தளிர் ஏன் சாப்பிடாம
இருக்க..?"
"லேசா தலைவலி" என்றவள் உண்டு முடிக்க
மேடையில் இருவருக்கும் நலங்கு வைப்பதற்கான ஏற்பாடுகளை அன்னபூரணியின்
மேற்பார்வையில் ஜெகாவும் சுஜியும் செய்து கொண்டிருந்தனர். ஏனோ தளிர் சுஜியின்
வீட்டில் செய்து வைத்த காரியத்திற்குபின் ராஜியால் முன்பு போல எதிலும் கலந்து
கொள்ள முடியவில்லை.
மெல்லிய மஞ்சள் நிற புடவையில் அழைத்து வரப்பட்ட தளிருக்கு
சுஜிதா மல்லிகை மாலை அணிவித்து மனையில் அமர்த்த முதலில் மாமியாராக ஜெகதீஸ்வரி
நலங்கு வைக்க அவரை தொடர்ந்து மகள்களும் வைத்தனர்.
"ம்மா மாமிக்கு நான் வைக்கட்டுமா..?"
என்று வைஷு மற்றவர்களை இடித்துக்கொண்டு முன்னே வந்தாள்.
"வாடி பெரிய மனுஷி வா.. முதல்ல நீ வை
அதுக்கப்புறம் நாங்க வைக்கிறோம்" என்று மூத்த பெண்மணி சிரிப்போடு சொல்ல
மற்றவர்களும் புன்னகையோடு வைஷுவை அழைத்தனர்.
உற்சாகத்தில் தளிர் அருகே வந்து
நின்று விட்டாளே தவிர என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.
"என்ன பண்ணனும்
சித்தி..?" என்று நிவியை கேட்க அவளும் வைஷூவுக்கு
பொறுமையாக சொல்லிக் கொடுத்ததில் நலங்கு வைத்து முடித்த
வைஷு பூரிப்போடு திரும்ப அவள் அருகே வந்து கௌஷிக்
"நானும் மாமிக்கு வைப்பேன்" என்று அடமாக நின்றான்.
"இதுல மட்டும் ஒத்துமையா இருக்கிறீங்கடா..
வா" என்று சிரிப்போடு நிவி அவனையும் நலங்கிட செய்திட தன் அறையில் இருந்த
உதயாதித்தன் அவள் வந்து அமர்ந்ததில் இருந்தே தளிரை ரசனையோடு புகைப்படம் எடுக்க
தொடங்கிவிட்டான்.
"மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்
வஞ்சிப்பூங்கொடி
கொஞ்சிப்பேசி கொஞ்சிப்பேசி கொஞ்சும் பைங்கிளி
வாசப்பூவின் தேனே வண்ண நிலாவே மானே
காவல் ஏது கட்டுக்கள் ஏது காட்டாறு பாயும்போது.."
என்ற பாடல் வரிகளை ஒன்றிணைத்த அவள் புகைப்படங்களோடு சேர்த்து
அனுப்பிவைத்தவன் மீண்டும் புன்னகையோடு தளிர் மீது அக்ஷதை தூவப்படுவதை படமெடுத்து
அடுத்த வரிகளை சேர்க்க தொடங்கிவிட்டான்.
ஆனால் இவை எதிலும் கலந்து கொள்ளாத தளிரின்
முகம் இயல்பை தொலைத்திருந்தது ஏதோ யோசனையில் இருந்தவளின் முகம் உதய்யை தேடிய
அதேநேரம் "அக்கா ஏன் ஒதுங்கி நிற்கிற..? வா க்கா நீ வந்து நலங்கு வை" என்று
ஜெகதீஸ்வரி அழைத்தார்.
"எனக்கு மனசே ஒப்பல ஜெகா நான் வரல.. என்
கை அவமேல
படுறதை நான் விரும்பல" என்று முகசுளிப்போடு ஒதுங்கிக்கொள்ள ஜெகாவை தவிர்த்து
வேறு யாருமே ராஜியை சீண்டவில்லை.
"சரிக்கா உன் இஷ்டம்" என்றவர்
மற்றவர்களை அழைக்க தளிருக்கு நலங்கிட்டு முடித்தனர்.
"குளிச்சிட்டு தலையை நல்லா ஆறவச்சுட்டு
படு தளிர்" என்று சீதா சொல்லியனுப்ப அறைக்கு திரும்பியவள் குளித்துவிட்டு அமர
அவள் முகத்தில் இன்னமும் குழப்பமேகங்களின் ஊர்வலம். அமைதியாக கண்களை மூடிக்கொண்டு
அமர்ந்தவள் பின் உதய்க்கு அழைப்பதற்காக பேசியை எடுத்தாள்.
அவன் அனுப்பிய வீடியோவை திறந்து பார்த்தவள் அவன் வரிகளில்
முன்பு போல நாணம் கொள்ளாது ஒருவித வெறுமையோடு பார்த்திருந்தாள்.
"அடியாத்தி ஆசை பார ம்மா இது என்ன
ஆடி மாசமா காவிரி கரையில் நிற்குமா வா சும்மா.."
என்று பாடலின் வரிகளை அவள் புகைப்படத்தோடு சேர்த்த உதய்யின்
உதட்டில் புன்னகை தவழ, வீடியோவை தளிருக்கு அனுப்பியவன் உடன் சில
கேள்விகளையும் கேட்டிருந்தான்.
"ஆதி வாப்பா உனக்கு வைக்கணும்" என்று
ஜெகா அழைக்கவும் "டூ மினிட்ஸ் ம்மா வந்துட்டேன்" என்றவன் மனையில் வந்து
அமரவும் அவனுக்கு நலங்கிடுவதற்காக தளிரின் பெரியம்மா வந்து நின்றார்.
முதன்முதலாக அவரை பார்ப்பவன் மணமகள் அறையின் ஓரத்தில் நின்று
கொண்டிருந்த சீதாவைக் கண்டு "அத்தை நீங்கதானே எனக்கு மாமியார்! நலங்க வைக்காம
அங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க வாங்க" என்று அழைத்தான்.
*************************
உதய் சீதாலக்ஷ்மியை அழைப்பதை கண்டு கஜபதியின் மனைவி முகம்
மாறிட உடனே கணவரைப் பார்த்தார்.. பார்ப்பதால் மட்டும் என்ன செய்துவிட முடியும்..? இன்று
அவர் சீதாவிடம் பேசிய பேச்சுக்களை அங்கே வேலை செய்பவர்கள் அம்பலவாணனிடம்
போட்டுக்கொடுத்ததில் திருமண மண்டபத்திற்கு வந்து தன் மதிப்பை காட்ட முயற்சித்த
கஜபதியை மதிக்க தான் யாருமில்லை.
அதோடு அவரிடம் ஆசி பெற வேண்டும் என்று தளிர்
சொல்ல 'கல்யாணம் முடிச்சுட்டு மொத்தமா வாங்கிக்கலாம் இப்போ
எல்லாரும் வைட் பண்றாங்க வா' என்று தளிரை அழைத்து
சென்றுவிட்டான்.
"இவங்க தளிரோட பெரியம்மா வீட்டுக்கு
மூத்தவங்க இருக்கப்போ அவங்க வைக்கிறது தான் வழக்கம் உதய் நிச்சயத்துல அக்கா தானே
செய்தாங்க" என்று ஜெகதீஸ்வரி கேட்க அவனும் நினைவு வந்தவனாக,
"சரிம்மா ஆனா அத்தை ஏன் அங்க
நிக்கிறாங்க.." என்ற உதய் மேலும் கேள்வி கேட்கும் முன் நிவி
"வாங்கத்தை" என்று சீதாவை கொண்டு வந்து நிறுத்திவிட்டாள்.
"மாப்பிள்ளை அக்கா வைக்கட்டும் அப்புறம்
நான் வைக்கிறேன்.." என்றவர் சொன்னது போலவே செய்ய அடுத்ததாக தென்றல் வந்தாள்.
"ஹேய் ப்ரீஸீ எங்க வந்ததுல
இருந்தே உன்ன ஆளையே காணோம் ரொம்ப சைலன்ட்டா இருக்க.. இப்படி இருக்க ஆள் கிடையாதே
நீ..? என்னாச்சு ஸ்டேஜ்ல நிற்காம அப்ஸ்கான்ட் ஆகிட்ட..?"
"கொஞ்சம் வேலையா இருந்தேன் த்தான்"
"சரி நலங்கு வை உன்கிட்ட அப்புறம்
பேசிக்கிறேன்.." என்ற உதயாதித்தனை மௌனமாக பார்த்த தென்றல் பட்டும் படாமல்
அவன் கன்னத்தில் தயக்கத்துடனே நலங்கிட்டாள்.
"என்னம்மா இது மச்சினிச்சி இப்படியா
பட்டுப்படாமல் வைப்ப..? நல்லா அள்ளி எடுத்து பூசு இன்னிக்கு
தான் நமக்கு வாய்ப்பு இன்னொருமுறை கிடைக்காது" என்று உதய்க்கு அத்தை முறையில்
இருந்தவர் சிரிப்போடு சொல்லவும் உடன் நின்றிருந்த பெண்களும் ஆமோதித்தனர்.
"ஆமா ஆமா இன்னைக்கு தான் சான்ஸ் எங்க
அத்தையே சொல்லிட்டாங்க அவங்க சொன்ன மாதிரியே செய் பிரீஸி" என்று உதய்
சிரிக்கவும் தென்றல் சங்கடத்துடன் அவன் நெற்றியில் குங்குமமிட போகவும் அவள் கையை
பிடித்து கொண்ட சுஜி,
"என்ன யோசிக்கிற தென்றல்..? யாரோ எதுவோ சொன்னா அதையே நினைச்சுட்டு இருப்பியா..? உன்
மனசு சுத்தமா இருக்கிறப்போ யாரோட வார்த்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவங்க
சொன்ன பொய்க்கு உயிர் கொடுத்துடாத..!" என்றாள்.
"எதுவும் நினைக்காத தென்றல் எங்க அக்கா
கல்யானத்துல நாங்க கசின்ஸ் மூணு பேர் சேர்ந்து நலங்கு வைக்கிறோம்னு எங்க மாமாக்கு
முகம் முழுக்க பூசினோம் ஆனா அவர் பனியனை கழட்டிட்டு 'ஹே நீ இங்க
பூசு நீ அங்க பூசுன்னு' எங்ககிட்ட காமெடி பண்ணி முதுகை
திருப்பி லெப்ட் ரைட்ன்னு காட்டிட்டு இருந்தார்.
"நாங்களும் கிடைச்ச சான்ஸ்ல அவரை
மஞ்சள் சந்தானத்துல குளிப்பாட்டிட்டோம் தெரியுமா..? செம
ஃபன்னா இருந்தது நீ என்ன இவ்வளவு யோசிக்கிற..? எங்க அண்ணன்
தப்பா எடுத்துக்க மாட்டாங்க அவருக்கு நாங்களும் நீயும் ஒண்ணுதான்.."
"பேசுறவங்க என்ன வேணுனாலும் பேசிட்டு போகட்டும் அவங்களுக்காக நம்மளோட
சந்தோஷத்தை விட்டுக்கொடுக்க முடியாது புரியுதா..? வச்சு
விடு" என்றதில் சற்று தெளிந்த தென்றலின் விழிகள் ராஜியை பார்க்க அவரோ முகம்
கடுகடுக்க நின்றிருந்தார்.
"என்ன மூணு பேரும் ஏதோ பெருசா ப்ளான் பண்ற
மாதிரி இருக்கு.." என்ற உதய்யிடம், "அண்ணா கண்ணை
மூடிக்கோங்க" என்று நிவி குரல் கொடுத்த அதேவேளை கைநிறைய மஞ்சளை அள்ளிகொண்ட
தென்றல் உதய்யின் முகமெங்கும் பூச
தொடங்கிட அவளோடு உதய்யின் அத்தையும் சேர்ந்து உதயாதித்தனை ஒருவழியாக்கி இருந்தார்.
உதய் சிரிப்போடு அவர்களை பார்த்திருக்க அங்கே வந்த சரவணன்
"நீ மட்டும் தப்பிக்கலாம்னு பார்க்கிறியா மாப்பிள்ளை..?" என்றவாறே உதய்யின் பனியனை கழற்றிவிட்டு,
"இப்ப பூசுங்க" என்று
அவனை பிடித்துகொள்ள வைஷுவும் கௌஷிக்கும் "அப்பா மாமாக்கு நாங்களும்
பூசுறோம்" என்று ஆளுக்கு ஒருபுறம் நின்றுகொண்டு உதய்யை குளிப்பாட்டி
இருந்தனர்.
Comments
Post a Comment