வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

மனசெல்லாம் மழையே - 20

 



"உன் பேர் என்ன..?" என்று சட்டையை பிடித்து ராகவன் அப்புதியவனை கேட்க இங்கே மேடையில் உதய்யின் அருகே அமர்ந்திருந்த  தளிரின் இதழ்கள் "சரத்" என்று அன்னிச்சையாக அவன் பெயரை உச்சரித்தது.

"தளிர் கண்ட்ரோல் யுவர்செல்ஃப்" என்று உதய் சொல்லி கொண்டிருக்கும் போதே இத்தனை பேர் பார்க்க இந்நிலையில் உதயாதித்தனை நிறுத்தி விட்டோமே..! என்ற எண்ணமே தளிரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக செய்தது.

"ஸாரி உதய் நான் இதை எதிர்பார்க்கல ப்ராமிஸ்..! அவன் ஏன் இப்படி பண்றான்னு எனக்கு தெரி..யா.." என்று குரல் உடைய தழுதழுத்தவளின் வார்த்தைகள் எத்தனை நிஜம் என்பதை உதய் நன்கு அறிவான்.

பின்னே நேற்று இரவு அவனிடம் சரத் பற்றி கூறிய போது கூட திடமாக இருந்த தளிருக்கு இன்று அவன் இங்கு வந்து கலகம் செய்வான் என்ற அனுமானம் சுத்தமாக இல்லை. தளிர் எதிர்பார்க்கவில்லையே தவிர உதயாதித்தன் இப்படி ஒரு நிகழ்வை எதிர்பார்த்தான்.

அதுவும் நேற்று அவர்களின் வரவேற்பில் ஆறு நீண்ட வருடங்களுக்கு பிறகு தளிரின் பள்ளி மற்றும் கல்லூரி தோழியான  சந்தியா பேசியதை தளிர் பகிர்ந்த போதே இதற்கு தயாராகிய உதய்  நேற்றிரவே சரத்தின் புகைப்படத்தை தளிரின் தோழி மூலமாக வாங்கிக் கொண்டவன் உடனே அம்பலவாணனுக்கும் பேசியிருந்தான்.

சென்னையில் இருந்து ஆறு வருடங்களுக்கு முன்பாக வேலூரில் தஞ்சமடைந்து விட்ட தளிர் ஏழு பேர் கொண்ட அவர்கள் குழுவில் ஒருத்தியான அவள் நெருங்கிய  தோழியை நேற்று வரவேற்பில் தான் சந்தித்தாள். சந்தியாவை கண்ட தளிரின் விழிகளில் முதலில் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி பின் மகிழ்ச்சி என்று கலவையான உணர்வுகள்.

லேஹெங்காவை சரி செய்வதற்காக தளிர் அறைக்கு திரும்பிய நொடி அவள் பின்னே வந்தவள் தளிருக்கு உதவிக்கொண்டே

"எப்படிடி இருக்க..? உனக்கு யார் மேல என்ன கோபம் தளிர் க்ளோஸ் ஃபிரெண்ட்ஸான எங்க எல்லாரோடவும் இத்தனை வருஷம் டச்ல இல்லாம போயிட்டல... ஏன் தளிர் சொல்லாம கொள்ளாம காலேஜ் விட்டு நின்ன? நான் ஆன்டிகிட்ட உன்னை பற்றி கேட்டதுக்கும் அவங்க சரியாவே பதில் சொல்லல, நாங்க எல்லாருமே உன்னை ரொம்ப மிஸ் பண்ணினோம்.."

"லேகா கல்யாணத்துக்கும் உன்னை ரீச் பண்ண முடியலை என் கல்யாணத்துக்கு கூட உனக்கு பத்திரிகை அனுப்ப முடியல.. ஆனா நீ கூப்பிடாமயே நான் உன் கல்யாணத்துக்கு வந்துட்டேன் பார்த்தியா..?'

அவளின் எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பாதவள், 'எப்படி இருக்க சந்தியா..? நீ  இங்க என் கல்யாணத்துல ஐ மீன் உனக்கு நான் இங்க இருக்கிறது எப்படி தெரியும்..?' என்றதும்

'நான் கல்யாணம் பண்ணி இங்க தான்டி செட்டில் ஆகியிருக்கேன்.. ஒன்றரை வருஷமாச்சு' என்று தன் நாத்தனாரை அழைத்த சந்தியா,

'இவங்க என்னோட அண்ணி இவங்களோட ஹஸ்பன்ட் உன் வீட்டுக்காரரோட ஷோரூம்ல தான் வேலை பார்க்கிறார்.. நீங்க  அவங்களுக்கு கொடுத்திருந்த பத்திரிகையில உன் ஃபோட்டோ பார்த்துட்டு வந்தேன்' என்று சொல்லவும் அவர்களிடம் பேசிவிட்டு மேடைக்கு சென்றாள்.

தளிரின் பின்னே வந்த சந்தியா அப்படியே கிளம்பியிருந்தால்  பிரச்சனையில்லை.. அவள் அடுத்து கேட்ட கேள்வி தான் தளிரின் தலைவலிக்கு காரணமாகி போனது.

'ஹே சரத்கூட வேலூர் வந்திருக்கான்டி.. போன வருஷம் எங்கயோ நார்த்ல வேலை பார்க்கிறதா சொன்னவன் அப்புறம் யாரோடவும் காண்டாக்ட்ல இல்லை, நான் அஷோக் மூலமா என் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணேன் அவன் வரவே இல்லை தெரியுமா..?'

'என்ன சொல்ற சரத்தா..?' என்ற தளிர் முகத்தில் அத்தனை திகைப்பு.

'ஆமா தளிர் சரத் இங்க வந்திருக்கான் காலையில உனக்கு கிஃப்ட் வாங்க கடைக்கு போயிருந்தேன் அப்போதான் அவனை எதிர்கடையில பார்த்தேன் நான் கூப்பிடறதுக்குள்ள போயிட்டான்.. அஷோக் கிட்ட வாங்கின நம்பர்ல அவனுக்கு கூப்பிட்டா  ஸ்விட்ச் ஆஃப்ன்னு வந்தது..' என்றவள் கூட்டம் வருவதை கண்டு,

'சரி அதைவிடு இது என்னோட நம்பர்' என்று தளிரின் கைபேசியை வாங்கி பதித்து கொடுத்தவள்

'கண்டிப்பா இனி அடிக்கடி பேசுடி உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.. ஸ்கூல் காலேஜ் டேஸ்ல நாம எப்படி ஃபன் பண்ணிட்டு இருப்போம் இப்போ ஒரே ஊர்ல இருந்துட்டு மீட் பண்ணலைன்னா எப்படி..? நான் லேகா, அஜய் நம்ம கேங் எல்லாரையும் கூட்டிட்டு உன் வீட்டுக்கு வரேன்.. என்ன வரலாம் தானே..?' என்று அவள் சம்மதம் பெற்று சென்றாள்.

இத்தனை வருடங்களாக அவனை கடந்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதியில் இருந்து மீண்டு அதை  மறந்து புது ஜனனம் கொண்டவளாக மாறியிருந்த தளிருக்கு இப்போது சந்தியா சொல்லவும் தான் அவன் நினைவே வந்தது கூடவே அவன் தனக்கு தாலி கட்டிய அந்த தினமும்..!

சரத் குறித்த நினைவு அறவே இல்லாது இத்தனை வருடங்களாக தன் வாழ்வை எதிர்கொண்டு தன் திருமணத்தில் மகிழ்வோடு பங்கேற்று வந்தவளுக்கு இப்போது அப்படி இருக்க முடியவில்லை. இன்று இந்நிலையில் இது சரியோ? தவறோ? எதுவாகினும் உதயாதித்தனிடம் பேசிவிடுவது உத்தமம் என்ற முடிவிற்கு வந்தவள் நலங்கிட்டு முடிக்கவும் அவனை மாடியில் சந்திக்க கிளம்பிவிட்டாள்.

அதாவது அக்னியில் பிரவேசம் செய்ய கிளம்பிவிட்டாள்..!!

*************************

மீனாக்ஷிக்கு செய்த சத்தியத்தை மீறி சீதாலக்ஷ்மியிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் உதயாதித்தனிடம் தன் வாழ்வின் கருப்பு பக்கங்களை தளிர் பகிர்வது என்பது நிச்சயம் அக்னி பிரவேசமே தான்..!!

ஆனால் இதுநாள் வரை சரத் குறித்த நினைவு இல்லாமல் இருந்தவளுக்கு இப்போது  சந்தியாவினால் அவை கிளறப்பட்ட பிறகும் பேசாமல் இருப்பது சரியில்லை என்று தோன்ற திடமான முடிவோடு மாடிக்கு வந்துவிட்டாள்.

உதய் கொடுத்த காஃபியை குடித்து முடித்துவிட்டு  கிட்டத்தட்ட ஒருமணி நேரம் தங்கு தடையின்றி தளிர் பேச அவள் பேச்சை குறுக்கிடாமல் பொறுமையாக கேட்டுக்கொண்ட உதயாதித்தன் இறுதியாக அவன் முடிவு என்னவென்று தெரிந்துகொள்ள தன்னை கேள்வியாக பார்த்தவளிடம், 'சரி டைமாச்சு போய் படுடி.  நமக்கு வேற எர்லி முகூர்த்தம் இப்பவே கண்ணை சுழட்டிட்டு வருது.. காலையில சீக்கிரம் எந்திரிக்கனும்..' என்று சொல்ல தளிர் அதிர்வோடு அவனை பார்த்தாள்.

'என்ன பார்க்கிற..?" என்று சிறு கிளிப்பில் விரித்துவிடபட்டிருந்த கூந்தலை வருடியவன், "இவ்ளோநேரம் சில்லுன்னு காத்துல நின்னுட்ட தலைமுடியும் இன்னும் ஆறல போல மறக்காம ட்ரையர் போட்டுட்டு படு இல்ல தலைவலி அதிகமாகிடும்.. என்னை கேட்டா இது தேவையில்லாத தலைவலி! காஃபி குடிச்சாச்சு ட்ரையர் போட்டுக்கோ நல்லா தூங்கு அப்பதான்டி காலையில ஃப்ரெஷ்ஷா இருப்ப..' என்று திரும்பவும் சொல்லி 'யாரடா நீ..? எங்கிருந்து வந்தாய்..?' என்று அவளை அதிசயிக்க வைத்தான்.

"ப்ச் நாளைக்கு நைட் தூங்க முடியாதுடி இப்போவே நல்லா தூங்கிக்கோ என்னையும் தூங்க விடுன்னு சொல்றேன்.. ஏன்டி புரியாத மாதிரியே பார்க்கிற..?" என்று இளநகையோடு உதய் கண்சிமிட்ட இன்னுமே அவன் மீதான அவள் பார்வையில் மாற்றமில்லை.

எத்தனை நேரம் பிரமிப்புடன் அவனை பார்த்திருந்தாளோ தெரியாது ஆனால் உதய் "தளிர்" என்று அவள் முன் சொடக்கிட்டு நினைவுலகிற்கு கொண்டு வந்தவன், "தேவையில்லாத தலைவலியை பற்றி அதிகமா யோசிக்காத தளிர்.. நான் பார்த்துக்கறேன் நீ போய் தூங்கு" என்று மீண்டும் சொல்ல பலநிமிட மௌனத்தை அக்கணம் உடைத்த தளிர்,

"நீங்க சொன்ன மாதிரி நாம இரண்டு பேரும் பெருசா மனசு விட்டு பேசலை.. என்னோட விருப்பு வெறுப்பு உங்களுக்கு தெரியாது அதேபோல எனக்கும் ஆனா நான் நாளைக்கு கல்யாணத்தை வச்சுட்டு இவ்ளோ பெரிய விஷயத்தை சொல்லியிருக்கேன் எப்படி உங்களால இவ்ளோ சாதாரணமா இருக்க முடியுது..? என்மேல கோபமில்லையா..?" என்று கேட்டவளுக்கே உதய்யிடம் சரத் குறித்து பேச வரும் முடிவை எடுத்த போது கலவையான சிந்தனைகள்.

அவள் பேசி முடித்த பின் உதய் நிச்சயம் இத்திருமணத்தை நிறுத்தவும் வாய்ப்பு உண்டு என்று தெரிந்தே தான் வந்தாள். திருமணத்தை நிறுத்தும் அளவு இல்லையென்றாலும் குறைந்தபட்சம் இத்தனை நாள்களாக ஏன் இதை பற்றி தன்னிடம் சொல்லவில்லை.. என்று ஆரம்பித்து அவளை கேள்விகளால் துளைத்தெடுப்பான் என்ற அவன் மீதான அவள் எண்ணத்தை சுக்குநூறாக உடைத்து நிற்பவனை ஒருவித பிரமிப்போடு பார்த்தாள்.

'எங்கிருந்து அவனுக்கு தன்மீது இத்தனை நம்பிக்கை வந்தது..?' என்ற கேள்வியே அவள் மனதை குடைந்து கொண்டிருந்தது. கையில் இருந்த வளையல்களை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி கொண்டிருந்தவளுக்கு 'அவனிடம் கேட்பதா..? வேண்டாமா..?' என்ற தடுமாற்றம்... தனக்குள்ளாகவே போராடி களைத்தவள் இறுதியில் "எப்படி இவ்ளோ நம்பிக்கை..?" அதை வாய்விட்டு அவனிடம் கேட்டும் விட்டாள்.

"என்ன கேட்ட..?"  என்று இத்தனை நேரம் அவள் முகத்தில் ஊர்வலம் கொண்டிருந்த உணர்வுகளை அவதானித்திருந்தவன் அவள் குரலில் தான் மீண்டிருந்தான்.

"இல்ல உங்களுக்கு எப்படி..?" என்று குரலை செருமியவள், "ஐ மீன் என்னோட சிச்சுவேஷன் அண்ட் மை  ஸ்டேட் ஆஃப் மைன்ட் வாஸ் நாட் ஃபீசிபில்(My situation and my state of mind was not feasible) ஸோ உங்களுக்கு என்னை புரிஞ்சுக்க நேரமே நான் கொடுக்கலை அஃப்கோர்ஸ் நானுமே அப்படி இருந்துட்டேன் ஐ'ம் ரியலி ஸாரி ஐ ஷுட்ன்ட் ஹாவ் டன் தட் (I am really sorry I shouldn't have done that)" என்றவளுக்கே ஒருவேளை இத்தனை நாள்களில் அவனுடன் நேரம் செலவிட்டு இருந்தால் ஏதேனும் ஒரு தருணத்தில் சரத் குறித்து முன்கூட்டியே சொல்லியிருப்போமோ அதன் மூலம் இன்றைய சங்கடத்தை தவிர்த்திருக்கலாமோ? என்ற எண்ணமே மேலோங்கியது.

"ஏற்கனவே சொல்லிட்டேன் உதய் இட் வாஸ் நாட் இன்டென்ஷனல்! பட் ஸ்டில் நான் அப்படி செய்திருக்க கூடாது அப்படியிருந்தும் என்மேல எப்படி இவ்ளோ நம்பிக்கை..? நான் சொன்னது சாதாரண விஷயமில்ல பட் நீங்க என்னை இதுவரை ஒருகேள்வி கூட கேட்கலை" என்று அவனிடம் கேட்ட நொடி தான் சரத் செய்த செய்கையால் 'காதல்' என்ற வார்த்தையின் மீது இத்தனை நாள்கள் நம்பிக்கை அற்று போயிருந்த இளந்தளிருக்கு உதய் மீது காதல் பிறந்த தருணம்.

பின்னே அவன் பெயரை கைகளில் எழுதியதும் அவன் கையால் வளையலிட்டு கொண்டதும் உதய் அவளிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக தானே தவிர காதலாகவா..? என்று கேட்டிருந்தால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லியிருப்பாள்.

அதுமட்டுமா..? கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக புது ஜனனம் கொண்டு வாழ தொடங்கிவிட்ட தளிருக்கு கடந்த சிலநொடிகள் வரை யார் மீதும் காதல் பிறக்கவில்லை இனி பிறக்கப் போவதுமில்லை என்று திடமாக நம்பி இருந்தவளுக்கு அவனிடம் கேள்வி கேட்ட அக்கணம் அவன் மீது கொள்ளை காதல் பொங்கியது. இன்னும் உதய் அவள் கேள்விக்கு பதில் கூட அளிக்கவில்லை ஆனால் ஏனோ மனம் அவன்பால் வேகமாக சரிந்து கொண்டே இருந்தது.

அவள் வார்த்தைகளில் உதய்யின் முகத்தில் ஆச்சர்யபாவம் தோன்ற உயர்த்திய புருவங்களுடன் அதரங்களில் உறைந்த புன்னகையோடு மெளனமாக அவளை பார்த்திருந்தான். அவன் பார்வையோடு கலந்தவளின் விழிகளும் இப்போது அவன் மீது தான் மையல்கொண்டது.

இருவரின் ஜோடி பொருத்தத்தை நிச்சயதார்த்த புகைப்படத்தை கொண்டே பலரும்  சிலாகித்திருந்தாலும் இப்போது தான் முதல்முறையாக அவன் அகஅழகில் கட்டுண்டவள் புறஅழகையும் கூர்ந்து பார்த்து இருவரின் ஜோடி பொருத்தத்தை எண்ணி சிலிர்த்தாள்.

'பின்னே காதல் கொண்ட மனம் அதை அறிந்து கொண்டபின் சும்மா இருக்குமா என்ன..?'

நலங்கு முடிந்து குளித்திருந்தவன் உறங்குவதற்கு ஏதுவாக மெரூன் வர்ண ஆர்ம்கட் டீஷர்ட் கருப்பு நிற ஷார்ட்ஸில் இருந்தான். பெரும்பாலும் அவனை ஃபார்மலில் மட்டுமே பார்த்திருந்தாலும் அவள் பார்வை உரிமை கொண்டு ரசித்ததில்லை.. ஏனோ இன்றைய இலகுவான தோற்றம் அவளை வசீகரீத்ததில் பெண்ணின் விழிகள் அவனில் புதிதாய் நிலைகொண்டு விட்டது.

நிச்சயம் அழகன் தான்..! மறுப்பதற்கில்லை.. அதிலும் பெண்கள் ஒரு முறைக்கு இருமுறை திரும்பி பார்க்க வைக்கும் அழகும் கம்பீரமும் ஒருங்கே கொண்டிருப்பவன் என்பதையே இப்போது தான் உணர்கிறாள். என் கணவன் என்ற உரிமையோடு அவனை ரசித்திருந்தவள் விழிகளில் அவன் தலையை சரியாக துவட்டாது போனதில் கழுத்தோரம் நீர்த்திவலைகள் உருண்டோடுவது விழவும்

"என்னதிது சரியா துவட்டாம ஏன் அவசரமா கிளம்பி வந்தீங்க..?" என்று கேட்டுக்கொண்டே தன் துப்பட்டாவால் அவன் தலையை துவட்ட துவங்கி விட்டாள்.

இப்போது உதய் தளிரை அதிசயித்து பார்க்க அவளோ, "கொஞ்சம் குனிங்க உதய் எனக்கு சரியா எட்ட மாட்டேங்குது.." என்று குதிகாலில் எம்பி நின்றிருந்தவள் சொல்ல அவனும் அவள் உயரத்திற்கு ஈடாக குனியவும் பின்னந்தலையையும் துவட்டி முடித்து அவன் முன்னுச்சியில் விரல்களை நுழைத்து ஈரத்தை ஆராயவும்

"இப்படியே இன்னும் கொஞ்ச நேரம் நின்னுட்டு இருந்த நாளைக்கு நடக்க வேண்டிய சாந்தி முகூர்த்தம் இப்போ, இங்கயே நடந்துடும்டி போதும் சோதிக்காத.." என்ற உதய்யின் குரலில் மீண்டவள் அப்போது தான் இருவருக்கும் இடையிலான நெருக்கமும் அவளிடையோடு கோர்த்திருந்த அவன் கரங்களின் அழுத்தமும் உணர்ந்தாள்.

"உதய்" என்று அவன் கையை விலக்க அவனோ தன்னோடு சேர்ந்திருந்த அவள் வலக்கரத்தில் முத்தமிட்டு "தேங்க்ஸ்" என்றான்.

"ஸா... எங்கப்பாக்கும் இப்படி தான்.. ஐ மீன் ஸாரி நீங்க சரியா துவட்டாம விட்டுட்டீங்க.." என்று உடனே விலகி நின்றவள் தன்னை நிலைபடுத்த கைபிடியின் சுவரில் சாய்ந்து இருகரங்களையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டாள்.

"ப்ச் நான் சரியாவே துவட்டி இருந்தாலும் என் பொண்டாட்டி இன்னொருமுறை துவட்டினா தப்பில்லை.., அதுக்காக இவ்ளோ தள்ளி இருக்கனுமாடி..?" என்று உதய் இருவருக்கும் இடையிலான இடைவெளியை கண்களால் சுட்டிக்காட்டி கேட்க அவளிடம் எந்த பதிலும் இல்லை..

அவளையே பார்த்திருந்தவன் "ஓகே ஃபைன்.., எப்படி இந்த நம்பிக்கை..!! இது தானே உன் கேள்வி..?" என்று கேட்டுக்கொண்டே மெல்ல தளிரை நெருங்கி  அவள் முகத்தை கைகளில் அள்ளிக்கொண்டவன், "என் இடத்துல உங்கப்பா இருந்திருந்தாலும் இந்த கேள்வியை கேட்டிருப்பியா..?" என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்ட நொடி அவள் உடல் சிலிர்த்து அடங்கியது.

சத்தியமாக அவன் கேள்வியை எதிர்பாராதவள் மனம் தந்தையை எண்ணி பார்க்க அவள் விழிகளில் சட்டென நீர்மணி கோர்த்துவிட்டது.., நிச்சயம் தன் மீது நிபந்தனையற்ற அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த ரகுபதி இந்நேரம் இருந்திருந்தால் உதயாதித்தனை போவே தளிரை ஒரு கேள்வி கேட்டிருக்க மாட்டார்.. அத்தனை நம்பிக்கை அவருக்கு தன் மகள்கள் மீது.. , ஊரே அவர்களுக்கு எதிராக வந்து நின்றாலும் 'என் வளர்ப்பு பொய்க்காது' என்ற கர்வத்தோடு மகள்களுக்காக நிற்பார்.

'அப்படியென்றால்..? தந்தை போலவே தன் மீது..' என்று பரபரத்தவளுக்கு விம்மும் மனதை கட்டுபடுத்த முடியாது போக கலங்கிய விழிகளுடன்  தளிர் உதய்யை பார்க்க அவனோ புன்னகையோடு அவளை தன் அணைப்பில் கொண்டு வந்தான்.

"உதய்" என்று கலக்கத்தோடு அவளழைக்க "ஷ்ஷ் என்னோட தளிர் பிரேவ் கேர்ள்..!! எதுக்காகவும் உடைய கூடாது.., நீ  இப்படி அழறது என் மாமனாருக்கு மட்டுமில்ல எனக்குமே பிடிக்காதுடி" என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே தளிரின் கண்ணீர் உதய்யின் டிஷர்ட்டை நனைத்து அவன் நெஞ்சை சுட அவள் கேவலும் அதிகரித்தது.

"ப்ச் என்னடி பண்ற..? இப்படி அழுது முகம் சிவந்து போச்சுன்னா நாளைக்கு நம்ம கல்யாண ஆல்பம் பார்க்க போற நம்ம பசங்க நான்தான் உன்னை அழ வச்சேன்னு என்கிட்டே சண்டை பிடிப்பாங்க.. நீ அழற அளவுக்கு எதுவுமில்ல கொஞ்சம் அமைதியா இருடி"  என்று உதய் மீண்டும் அவள் முகத்தை அள்ளிக்கொண்டு சொல்ல தளிரின் முகத்தில் மகிழ்ச்சியும் அழுகையும் ஒருசேர வர்ணஜாலம் நிகழ்த்தி கொண்டிருந்தது.

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1