வாழ்க்கைத்துணை - 20.3
“அம்மா கிட்ட இப்படி தான் எதிர்த்து கிட்டே இருப்பியா? அம்மா மட்டும் இல்ல, என் அக்காவும் ரெண்டு குழந்தைங்க பெத்து இருக்காங்க. அவங்களும் பெங்களூர்ல கம்பெனியில தொடர்ந்து வேலை செஞ்சவங்க தான்!”
“புருஷனுக்கு துணையா இருக்கணும்னு நினைக்கிற எந்த பொண்டாட்டியும் அதை தான் செய்வா.. ஆனா உனக்கு அப்படி எந்த எண்ணமும் இருக்கிறதா தெரியல..”
“ரிஷி, ப்ளீஸ். எதுக்காக இவ்வளவு பெரிய வார்த்தை சொல்றீங்க? என்னைக்காவது அப்படி நினைத்திருப்பேனா நான்? அப்படி இருந்திருந்தா இந்த அஞ்சு மாசமா காலையில சீக்கிரம் எந்திரிச்சு எல்லா வேலையும் செஞ்சு முடிச்சுட்டு ஆஃபீஸ் போயிருக்க மாட்டேன்..”
“என்ன செஞ்சதெல்லாம் சொல்லி காட்டுறியா? உன்னால தான், நீ இந்த வீட்டுக்குள்ள அடி எடுத்து வச்ச காரணத்தால தான் நான் கையும் காலும் உடைஞ்சு மூலையில போய் உட்கார்ந்தேன். அந்த அளவுக்கு உன் ராசி என் குடும்பத்தையே ஆட்டி படைக்குது..”
“இந்திரா, நீ கொஞ்சம் அமைதியா இரு. அவங்க பிரச்சனையை அவங்களே தீர்த்துக்கட்டும்..” என்றார் சிவபாலன்.
“ஏங்க அவ செஞ்சதெல்லாம் சொல்லி காட்டிட்டு இருக்கா. அதை தட்டிக் கேட்காம என்னை அமைதியா இருக்க சொல்றீங்க?” என்று கணவரிடமும் காய்ந்தார்.
“அத்தை, சொல்லிக் காட்டற பழக்கம் என்னைக்குமே எனக்கு இருந்தது கிடையாது. என்னால முடிஞ்ச அளவுக்கு நான் செஞ்சுட்டு தான் இருக்கேன். வேலைக்கு ஒரு ஆள் போடுங்கன்னு சொன்னாலும் நீங்க அதை காதுல வாங்கல…”
“ஏய், என் வீட்டுக்குள்ள யார் வரணும், போகணும்னு நான் தான் முடிவு பண்ணனும். அதை சொல்ல நீ யாரு…அதுதான் என் புருஷனையும் புள்ளையையும் உனக்கு வேலைக்காரங்களா மாத்திட்டியே இனி எதுக்கு புதுசா ஆளு உனக்கு?!” என்றிட ரிஷி அவர்கள் அறைக்கு சென்று எதையோ தேடிக்கொண்டு இருந்தான்.
“இன்னும் எதுக்கு மா இங்க நின்னுட்டு இருக்கிற உள்ள போ..” என்று சிவபாலன் இந்திராவின் வாயில் மகா அரைபடாமல் காக்க முயன்றார்.
“நான் பேசிட்டு இருக்கிறது தெரியலையா? எதுக்கு இப்போ அவளை போக சொல்றீங்க?” என்று கணவரிடம் சீறினார்.
“இந்திரா மகா வேலை விஷயத்தை பற்றி அவங்க பேசி முடிவு பண்ணட்டும். நீ கொஞ்சம் இதுல தலையிடாம இரு..”
“என்ன பேசறீங்க? என் பையன் மட்டும் எப்படி எல்லா சுமையும் தனியா சுமப்பான். இவ வேலைக்கு போற தைரியத்துல தானே..” என்றவரை கை நீட்டி தடுத்த சிவபாலன்,
“இந்த புத்தி பத்து என்ன பதினஞ்சு சவரன் கூட போடலாம்னு சொல்லும் போது எங்கடி போச்சு? மகா தனியா இருந்தா வேலையை விட்டு நிற்க போறேன்னு சொல்ல போறது இல்லை. ஆனா நம்ம குடும்ப வாரிசை சுமந்துட்டு இருக்கிற உடம்பும் மனசும் முக்கியம்.அதனால நீ எதுவும் பேசாத அவங்களா ஒரு முடிவுக்கு வரட்டும்…” என்று மனைவியை அடக்க முயன்றார்.
ஆனால் அவர் அடங்கினால் தானே!! உடனே மகளுக்கு ஃபோன் போட்டு பேச தொடங்கிவிட்டார்.
அதேநேரம், “பேசிட்டு இருக்கும் போதே வந்துட்டீங்க..” என்றபடி உள்ளே நுழைந்தவள் கணவன் பீரோவையே புரட்டி போட்டு இருப்பதைக் கண்டு,
“என்ன தேடிட்டு இருக்கீங்க? எதுக்காக எல்லாத்தையும் எடுத்து பெட்ல போட்டு வச்சிருக்கீங்க?” என்றாள்.
“உன் அப்பா உனக்கு அரை ஏக்கர்ல ஒரு இடம் கொடுத்தார்னு சொன்னியே, அதோட பத்திரம் எங்க வச்சிருக்க?” என்றான்.
“எதுக்கு கேட்கறீங்க?”
“தேவைப்படுது. எடுத்துக் கொடு..”
“தேவைப்படுதா? அப்படி எந்த பத்திரத்தை வச்சு நீங்க என்ன செய்யப் போறீங்க?”
“ஏய், தேவைப்படுதுன்னு சொல்றேன். எடுத்துக் கொடுத்துட்டு போறதை விட்டுட்டு எதுக்கு இப்ப கேள்வி கேட்டுட்டு இருக்க?”
“ஏங்க, அது அப்பா என்னோட, நம்ம குழந்தைகளோட எதிர்காலத்துக்காக கொடுத்தது. இந்த நேரத்துல அதை நீங்க கேட்டா எதுக்குன்னு கூடவா தெரிஞ்சுக்கக் கூடாது? சொல்லுங்க..”
“இதோபார் வேலையை விட்டு நிற்கிறதை என்கிட்ட சொல்லிட்டா செஞ்ச? என்னோட சம்மதத்தோடவா முடிவு எடுத்த? எதையும் என்கிட்டே கேட்காம நீ செய்யறப்போ நான் மட்டும் எதுக்கு உன் சம்மதத்தை எதிர்பார்க்கணும்?”
“என்ன பேசுறீங்க நீங்க? நான் வேலையை விடறது என்னால முடியாம. ஆனா எனக்கு கொடுத்த இடத்தோட பத்திரத்தை எதுக்கு கேட்கறீங்கன்னு கூட சொல்ல மாட்டீங்களா?” என்றாள் விண்டு போன மனதோடு.
“சிந்து ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டாடி அதுக்காக...”
“அப்படியா? என்ன சொல்றீங்க? இது எப்போ?”
“இன்னைக்கு காலையில தான். அக்கா ஃபோன் பண்ணி இருந்தா...”
“ஏன் என்கிட்ட உடனே சொல்லல?”
“ஏன்டி, நான் என்ன வெட்டியாவா இருந்தேன்? ஆயிரத்து எட்டு வேலை எனக்கு ஆஃபீஸ்ல. அதுதான் இப்ப சொல்றேனே.. பத்திரம் எங்க? எடு..” என்றான் அதிகாரமாக.
“என்னங்க பேசுறீங்க? ஆஃபீஸ்ல இருந்து சொல்லல சரி. வீட்டுக்கு வந்த பிறகு கூட ஒரு வார்த்தை எனக்கு இந்த விஷயத்தை சொல்லாம என்னை பேசுறதுலயும் அடக்குறதுலயும் தான் மும்முரமா இருந்தீங்க.."
“எப்போ சொன்னா என்னடி? எல்லாத்தையும் வச்சு பிரச்சனை பண்ணியே ஆகணுமா?” என்றான் சலிப்பான குரலில்.
“நான் சாதாரணமா பேசறதே உங்களுக்கு பிரச்சனை செய்யற மாதிரி இருக்கா ரிஷி? இவ்ளோ நேரமா சொல்லாம இப்ப பத்திரம் தேடும் போது தான் சொல்றீங்க..” என்று கலங்கிய குரலில் கேட்டவள் வெளியில் வந்து, “மாமா அவர் சொன்னது உண்மையா?” என்றாள்.
“எதை பற்றி லட்சுமி கேட்கிற?”
“சிந்து ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டாளாமே… உண்மையா?!”
“ஆமாம்மா..” என்றவரை இடையிட்டு,
“என் பேத்தி வயசுக்கு வந்திருக்க சந்தோஷத்தை கூட கொண்டாட விடாம வேலையை விடப்போறேன்னு ஏழரையை கூட்டி என் குடும்ப நிம்மதியை கெடுத்துட்டு குரலும் உயர்த்துவியா நீ?” என்றார் ஆவேசத்தோடு.
“என்ன பேசறீங்க அத்தை? நான் வந்து எவ்ளோ நேரமாச்சு இதுவரையிலும் யாருமே எனக்கு விஷயத்தை சொல்லவே இல்லை ஆனா…” என்று கண்ணீரை உள்ளிழுத்தவளுக்கு இந்திரா பதில் சொல்லும் முன்னமே,
“இன்னைக்கு காலையில தான் லட்சுமி வந்தா, உனக்கு சொல்லலாம்னு ஃபோன் போட்டேன். ஆனா நீ ஹாஸ்பிட்டல் போனதுல எடுக்கலை போல..”
“நீ மயக்கம் போட்டுட்டேன்னு சொன்னதுல இதை சொல்ல மறந்துட்டேன்..” என்றவரிடம் “அப்போ அவர் சீர் செய்ய இடப்பத்திரம் கேட்கிறாரே மாமா அது எதுக்கு?” என்றிட வேறு வழியில்லாமல் தாரணி பிறந்த பிறகு நடந்த பிரச்சனைகள் சிந்துவின் பொறுப்பை அவர்கள் ஏற்றது என்று அனைத்தையும் சொல்லி முடித்தார்.
“இந்தளவு செய்யணுமான்னு உனக்கு தோணலாம், ஆனா எங்களுக்கு ஒரே பெண்! எங்க சூழல் புரிஞ்சுக்காம பேசற அவளோட ஆசை அதிகமானது தான் லட்சுமி இல்லைன்னு சொல்லலை. ஆனா அவளுக்கு எங்களை விட்டா வேற யாரும் இல்லையே..” என்றார்.
தான் வாழும் வீட்டில் இத்தனை நடந்த போதும் தனக்கு எதுவுமே தெரியாமல் இருக்கிறதே.. மற்றவர்களை அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் கணவன் எதையுமே தன்னிடம் பகிராமல் இப்போது திடீரென சொல்லும் போது உள்ளே எதுவோ உடைய மனமெங்கும் சொல்லில் அடங்கா வலி படர்ந்தது.
அதற்கு மேலும் கேள்வி கேட்க விரும்பாதவளாக உள்ளே நுழைந்தவள் மெளனமாக அமர்ந்தாள்.
“பத்திரம் எங்கடி?” என்று மீண்டும் வந்தான் ரிஷி.
மகா அவனை வெறுமையாக பார்க்க மூச்சை இழுத்து விட்டவன் இடையில் கரம் பதித்து, “என் பொறுமையை சோதிக்காத..” என்றான்.
இதற்கு மேலும் பேசாமல் இருத்தல் தவறு என்று உணர்ந்தவள் வெளியில் சென்று தண்ணீரை குடித்துவிட்டு சற்று தெம்பான குரலில் பேச தொடங்கினாள்.
அவன் பத்திரம் தேடுவது எதற்கு என்று ஓரளவு அவள் யூகித்து விட்டாலும் அதை ஏற்க அவள் மனமே தயாராக இல்லை. இருந்தாலும் கணவன் வாய் மொழியாக கேட்ட பின்னரே தன் உள்ளுணர்வை நம்ப வேண்டும் என்ற முடிவோடு ரிஷியை பார்த்தாள்.
“சிந்து ஏஜ் அட்டென்ட் பண்ணதுக்கும் நீங்க பத்திரத்தை தேடுறதுக்கும் என்ன சம்பந்தம்?”
“ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கேனே, சிந்துவோட எல்லா பொறுப்பும் நம்மோடது தான் என்று. அப்புறம் இது என்னடி கேள்வி?” என்றான் காட்டமாக.
“எனக்கு அது ஞாபகம் இருக்கு. ஆனா பத்திரத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் என்று இதுவரைக்கும் நீங்க சொல்லல.”
“இதோ பார், ஏற்கனவே சிந்து ஏஜ் அட்டென்ட் பண்ணினா பத்து சவரன் போட்டு பங்க்ஷன் நடத்துறதா அப்பா அம்மா முடிவு எடுத்திருந்தாங்க. இப்போ அவ அக்கா வீட்ல இருந்தாலும் செய்ய வேண்டிய பொறுப்பு நம்மளோடது தான்!!”
“நகை, புடவை, சீர் செய்யறதுன்னு மொத்தமாக கணக்கு போட்டப்போ 15 லட்சம் வரைக்கும் தேவைப்படுது... இப்போதைக்கு என்னால ஈஎம்ஐ போட முடியாது.. ”
“அதேநேரம் எனக்கு உன் நகைகளை எடுக்க விருப்பம் இல்லை. அதனால தான் சும்மா இருக்கிற இடம் இந்த சமயத்துல நமக்கு உதவட்டும்னு தான் கேட்கிறேன் அதை வச்சு பணம் வாங்கி விசேஷத்தை நடத்த முடிவு பண்ணி இருக்கேன்..” என்ற மறுநொடியே,
“யாரைக் கேட்டு இந்த முடிவை எடுத்தீங்க?” என்றாள் காட்டமாக.
Nice
ReplyDelete