தளிர் ஜெகாவிற்கு கொடுத்த வாக்கின் படி அடுத்த வாரம் விடுமுறை
முடிந்து வகுப்பிற்கு வந்திருந்த வைஷ்ணவியை தளிர் எதுவுமே கேட்டு கொள்ளவில்லை.
பொதுவாக மாணவ மாணவிகளிடம் விளையாடும் போது குழுவா சேர்ந்து
விளையாட வேண்டும், புது இடங்களில் கவனமாக இருக்க வேண்டும், பெற்றோரின்
கண்பார்வையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தாள்.
“இப்போ சொல்லுங்க பாட்டி எங்க மேம் அந்த
அங்கிள் அவங்களுக்கு தாலி கட்டினதை மறைச்சது தப்புன்னா நீங்க மறைச்சதும் தப்பு
தானே..?”
“.....”
“சீதா பாட்டி சொல்லி மேம் மறந்தது தப்புன்னா
நீங்களும் ராஜி பாட்டியும் சொல்லி நான் மறந்ததும் தப்பு தானே..!” என்று கேட்க
யாரிடமும் பதிலில்லை.
“இந்த விஷயம் யாருக்கும் தெரியாம இருந்தா தான்,
மத்தவங்க என்னை ஓமிட் பண்ண மாட்டாங்க என்னோட
ஃபிரெண்ட்லியா இருப்பாங்க நீங்க சொன்னதுக்காக நான் அந்த விஷயத்தை மறந்துட்டு அப்பா
அம்மாகிட்ட கூட சொல்லாம விட்டுட்டேன்...”
“அதே மாதிரி தானே எங்க மேமும் சொல்லாம
விட்டிருப்பாங்க என்னை திட்டாத நீங்க எதுக்காக எங்க மேம்மை மட்டும் திட்டறீங்க..?”
“அம்மா எவ்ளோ அழறாங்க அப்பாவும் இந்த விஷயம்
தெரிஞ்சு எவ்ளோ கோபப்படறார் இதுக்கெல்லாம் நான் தானே காரணம்..!! என்னை மட்டும்
எல்லாரும் சமாதனபடுத்தி, ஹக் பண்ணி அழுது, என்னை செல்லம் கொஞ்சறீங்க ஆனா ஏன் மேம்மை திட்டறீங்க..?”
“நான் தப்பில்லைன்னா அவங்களும் தப்பில்லை
தானே..?” என்று கேட்க அண்ணாமலையின் முகத்தில் ஈயாடவில்லை.
அவர் முன்னே சென்று நின்ற வைஷு “மேம் அந்த அங்கிள் பண்ணின
தப்பை உங்ககிட்ட இருந்து மறைச்சதால தான் உங்களுக்கு மேம் மேல கோபம்னு சித்தி
சொன்னாங்க பிக் தாத்து.... அப்போ நான் பிக் கேர்லான பிறகு மேம் மாதிரியே எனக்கும் கல்யாணம்
செய்யறப்போ அந்த தாத்தா பண்ணின தப்பை சொல்லுவீங்க தானே... நீங்க சொல்லாம
விட்டுட்டா அந்த கல்யாணத்துலயும் உங்களை மாதிரியே ஒரு தாத்தா இருந்து
அவர் ஏன் இதை மறைச்சீங்கன்னு கோபப்படுவாரா..?” என்று கேட்க அவரிடம் கனத்த அமைதி.
“அண்ணி மறைச்சது மறந்தது தப்பு என்று
சொல்றீங்களே இப்போ உங்க பேத்தி அவ கல்யாணத்துலயும் அவளுக்கு நடந்த கொடுமையை
மாப்பிள்ளை வீட்ல சொல்லிட்டு தான் கல்யாணம் பண்ணுவீங்களான்னு கேட்கிறா பதில்
சொல்லுங்க தாத்தா..” என்ற நிவியிடம்,
“அது எப்படி ஏதோ ஒரு அய்யோக்கிய நாய்
செஞ்சதுக்கு என் பேத்தி எப்படி பிணையாக முடியும்..?” என்று
அண்ணாமலை கேட்க,
“அப்போ உங்க பேத்திக்கு ஒரு நியாயம்
மத்தவங்களுக்கு ஒரு நியாயமா தாத்தா....?” என்ற நிவியிடம்
அத்தனை ஆவேசம்.
“மாமாவை கல்யாணம் பண்ணிக்க விடாம மேம்க்கு
பனிஷ்மென்ட் கொடுக்கற நீங்க அந்த டெவில் தாத்தா பண்ணினதை அப்பாம்மா
கிட்ட மறைச்சு நடந்ததை மறந்துட்ட எனக்கு என்ன பனிஷ்மென்ட் வச்சிருக்கீங்க
சொல்லுங்க தாத்து..?” என்று கேட்ட அதேசமயம் “சபாஷ் டா
வைஷுகுட்டி” என்ற உதய்யின் கரகோஷம் அனைவரின் பார்வையையும் திருப்பியது.
“மாமா” என்று அவனிடம் ஓடி செல்ல, அவளை தூக்கி
ஒரு சுற்று சுற்றி இறக்கி முத்தமிட்டவன்,
“நெத்தியடி கேள்வி கேட்ட ! உனக்கு என்ன வேணும்
சொல்லு தங்கம் மாமா ரொம்ப சந்தோஷமா இருக்கேன் வாங்கி கொடுக்கறேன்”
“எல்லாரும் மேம் மேல கோபமா இருக்காங்க அவங்க
எனக்கு மாமியா வர மாட்டாங்கன்னு அன்னைக்கு சித்தி சொன்னாங்க.... ப்ளீஸ் மாமா
எனக்கு மேம் மட்டும் தான் வேணும் வேற எதுவும் வேண்டாம்... எப்போ உங்களுக்கு
கல்யாணம் நடக்கும் மேம் என்னோட மாமியா வருவாங்க..?” என்று
உதய்யை கட்டிக்கொண்டவளிடம் மெல்லிய விசும்பல்.
“நீங்க என்ன காரணம் சொன்னாலும் பெத்தவங்க கிட்ட
இருந்து மறைச்சது ரொம்ப பெரிய தப்பு... அதுவும் இதை நீங்க என்
பெண்ணோட நல்லதுக்காகன்னு சொல்றதை சுத்தமா ஏத்துக்க முடியாதும்மா... இதுல உங்களோட
அக்கறை பாசத்தை விட நீங்க செஞ்ச தப்பை மறைக்கிறதுக்காக தான் என் பொண்ணுக்கு ஃபீவர்
வந்த விஷயத்தை கூட என்கிட்டே இருந்து மறைச்சிருக்கீங்க..” என்று ஆதங்கத்தோடு கேட்ட
சுஜியின் விழிகளில் இருந்து இன்னும் கண்ணீர் நின்றபாடில்லை.
ஆம் பார்ட்டியில் இருந்து வந்த அன்று இரவே வைஷுவிற்கு
காய்ச்சல் வந்துவிட ராஜி அறையில் வைத்து முதல் கட்டமாக வீட்டில் ஏற்கனவே
வைத்திருந்த காய்ச்சல் மருந்தை கொடுத்த ஜெகா அடுத்தநாள் கணவர் கிளம்பிய பிறகு
மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அடுத்த இரண்டு நாளில் வைஷுவிற்கு காய்ச்சல்
சரியாகியது.
ஆனால் அது இன்று வைஷ்ணவியை விசாரித்த பின்பே மற்றவர்களுக்கு
தெரியவந்தது.
இதற்கு மேலும் எதையும் கேட்க விரும்பாத சரவணன் ராஜி ஜெகாவின்
அத்தனை மன்னிப்புகளையும் அம்பலவாணன், அண்ணாமலையின் சமாதானங்கள் எதையும் ஏற்காமல்
மகளையும் மகனையும் அழைத்து கொண்டு கிளம்பிவிட்டார்.
“இதுல என் பொண்ணையும் எங்ககிட்ட இருந்து
உண்மையை மறைக்க வச்சு பொய் சொல்ல கத்துக்கொடுத்திருக்கீங்க... உங்களை யார் முதல்ல
வரமாட்டேன்னு சொன்னவளை கூட்டிட்டு போக சொன்னா..? கூட்டிட்டு
போன குழந்தையை ஒழுங்கா பார்த்துக்காம போனதுமில்லாம எவ்ளோ பெரிய விஷயத்தை எங்ககிட்ட
இருந்து எப்படிம்மா மறைக்க முடிஞ்சது..?”
“அன்னைக்கு தளிர் வராம போயிருந்தா இந்நேரம் என்
குழந்தை எங்களுக்கு இல்லைங்கிறது தான் நிஜம் அது உனக்கு புரியலையா..?”
ஆம் வைஷ்ணவியை காப்பாற்றிய தளிர் அவள் கொண்டிருந்த
அதிர்ச்சியில் இருந்து முதலில் வெளிகொணர்ந்து இது சின்ன விபத்து, கையில்
அடிபட்ட காயத்தின் வலி மருந்தால் குணமாவது போல இன்றைய விபத்தும் இன்னும் சில
நாளில் குணமாகிவிடும் இதை பெரிதாக நினைக்க கூடாது என்று குழந்தைக்கு புரியும்
வகையில் எடுத்து சொல்லி சமாதானபடுத்தியவள் நீச்சல் குளம் அருகே சிலர் வருவதை
கண்டதும் அவர்கள் கண்ணில் குழந்தை பட்டுவிடாமல் தூக்கி கொண்டு வரவும் தான் ஜெகா
எதிரில் வந்தது.
ஆனால் அதன் பின் ஜெகாவும் ராஜியும் இந்த விஷயத்தை மற்றவர்களிடம்
சொன்னால் உன்னை விளையாட விடமாட்டார்கள், பாட்டி வீட்டிற்கு அனுப்ப மாட்டார்கள்,
பிரெண்ட்ஸ் யாரும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்,
இப்போது போல நீ கேட்டது கிடைக்காது, விருப்பட்ட
இடத்திற்கு செல்ல முடியாது அது இது என்று குழந்தையை பயமுறுத்தி இருந்தனர்.
வைஷுவிற்கோ அப்போது தனக்கு நேர்ந்த பாதிப்பை விட அதனால் இனி
தான் இழக்க போவதை எண்ணி தான் அழுகை பெருகியது. இறுதியில்
பாட்டிமார் சொன்னது போல கேட்டு நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தவளுக்கு தளிர்
கூறிய அறிவுரைகளும் கைகொடுக்க ஒருவழியாக அன்றைய பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல
வெளிவந்து ஒருகட்டத்தில் அதை மறந்தே போயிருந்தாள்.
“ஏன் தளிர் இந்த நாலு வருஷத்துல எத்தனை முறை
உன்னை மீட் பண்ணியிருப்பேன் ஏன் நீயும் என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லாம மறைச்ச..?”
என்று தளிர்க்கு அழைத்த சுஜி அழுகையினூடே கேட்க,
“அச்சோ அண்ணி வேணும்னு மறைக்கலை அன்னைக்கு உங்க
அம்மா இது யாருக்கும் தெரியவேண்டாம்னு ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டுகிட்டாங்க
அதோட உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்”
“தெரியும்னு நினைச்சவ ஏன் அதை பற்றி ஒரு
வார்த்தை விசாரிக்கலை”
“அண்ணி அதுக்கு அப்புறம் வைஷுவை நான் கொஞ்ச
நாள் அப்சர்ப் பண்ணினேன், தேங்க் காட்! வைஷு இஸ் மெண்டலி
வெரி ஸ்ட்ராங்... அவ சீக்கிரமாவே நார்மலாகிட்டா அதுக்கப்புறம் அதைப்பற்றி பேசி
அந்த நினைவை கிளறிவிட்டு குழந்தையை இன்ஃபீரியரா, இன்செக்யோராக
ஃபீல் பண்ண வைக்ககூடாதுன்னு தான் அவகிட்டயும் எதுவும் கேட்டுக்கலை உங்ககிட்டயும்
எதையும் பேசலை..”
“ஆனா கல்யாண விஷயம் வந்தப்புறமாவது பேசி
இருக்கலாமே தளிர்” என்று குறையாத ஆதங்கத்தோடு கேட்க,
“அண்ணி இது ஒன்னும் நாம பேசி சந்தோஷமா சிரிச்சு
ரசிக்க கூடிய விஷயமில்லையே..! அப்படி அவ கிளாஸ்ல பண்ணின, பேசின
கியூட்டான விஷயமெல்லாம் உங்ககிட்ட ஷேர் பண்ணியிருக்கேன் தானே அப்புறம் ஏன்
திடீர்னு இதை கேட்கறீங்க..?”
“அண்ணி குழந்தைங்க மனசுல ஒரு விஷயம்
பதிஞ்சுட்டா அவ்ளோ சீக்கிரம் அதை அகற்ற முடியாது. பசுமரத்தாணி போல
நிலைச்சுடும்...!! நானுமே இப்படி ஒரு இன்சிடென்ட்க்கு அப்புறம் வைஷுவை எப்படி
பழையபடி பார்ப்போம்னு இருந்தேன் ஆனா ஷீ இஸ் வெரி
பிரேவ் அண்ட் ஸ்ட்ராங்..! எவ்ளோ அழகா ஸ்டடீஸ், ஸ்போர்ட்ஸ், கல்சுரல்ஸ்ன்னு ஆக்டிவாகிட்டா தெரியுமா உங்களுக்கு..?”
“ஆக்சுவலி அதுக்கப்புறம் அவளுக்கு அப்படி ஒரு
இன்சிடென்ட் நடந்ததையே நான் சுத்தமா மறந்துட்டேன் இப்போ நீங்க கேட்கவும் தான்
நியாபகம் வந்தது.. ஏன் அண்ணி திடீர்னு இந்த கேள்வி எல்லாம்..? நம்ம குழந்தை சேஃப்பா நம்ம கைக்கு வந்ததை நினைச்சு சந்தொஷபடாம எதுக்கு
இந்த அழுகை...? ப்ளீஸ் ஸ்டாப் க்ரையிங்” என்றவள் மேலும் ஏதோ
சொல்லி சுஜியை இயல்பாக்கிய பின்னரே அழைப்பை துண்டித்தாள்.
“அது எப்படிம்மா இத்தனை வருஷமா எதுவுமே நடக்காத
மாதிரி இருந்ததோட நம்ம குழந்தையை காப்பாற்றிய அண்ணியை மனசாட்சி இல்லாம பேசி
காயபடுத்த முடிஞ்சது... அதுவும் அண்ணி ஒரே ஒருமுறை பார்க்கணும்ன்னு கேட்டும்
அவங்களை பார்க்கவிடாம செய்தது எந்த விதத்துல நியாயம்..?”
“என்ன பேசற நிவி..? உங்கக்காவை
யோசிச்சு இரண்டு குடும்பத்துக்கும் எந்த பாதகமும் வந்துட கூடாதுன்னு ஜெகா செய்ததை
அந்த குடும்பம் பண்ணின துரோகத்தோட முடிச்சு போடறது கொஞ்சமும் நல்ல இல்ல” என்று
ராஜி தங்கைக்கு கொடி பிடித்தார்.
“முடிச்சு போடலை ராஜிம்மா.., உங்க முதுகுல இருக்க அழுக்கை பார்க்காம அடுத்தவங்களை பேசுறதை தான்
தப்புன்னு சொல்றேன்.. இப்போ உங்களுக்கு ஒரு நியாயம் இருக்கிற மாதிரி தானே
அவங்களுக்கு ஒரு நியாயம் இருக்கும். அதை கேட்கவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சு
அவங்க தப்புன்னு முத்திரை குத்தி அவங்களை காயபடுத்துறது எப்படி சரின்னு
சொல்றீங்க..?”
“இங்கபாரு நிவி உனக்கே தெரியும் பெரிய சம்பந்தி
வீட்டுக்கு வைஷு தான் ஒரே பெண் வாரிசு , எல்லாருமே அவமேல
உயிரா இருக்கிறவங்க எங்க இந்த விஷயம் தெரிஞ்சதுன்னா உங்க
அக்காக்கு அம்மா வீடு இல்லாம போயிடக்கூடாதுன்னு தான் ஜெகா அன்னைக்கு மறைச்சா...
இது நம்ம குடும்ப நல்லதுக்கு தான் ஆனா அவங்களால நம்ம குடும்பம் அசிங்கபட்டிருக்கு
ஆதிக்கு என்ன மாதிரியான பட்டம் எல்லாம் கொடுத்திருக்காங்கன்னு உனக்கே தெரியும்
தானே..” என்று பேச்சை திசை திருப்ப முயன்றார் ஆனால் நிவி விடுவதாக இல்லை.
ஓஒ அப்போ வரமாட்டேன்னு சொன்ன வைஷுவை கூட்டிட்டு போயிட்டு
அம்மா கவனிக்காம இருந்தது தப்பில்லை அது பெரிய மாமா அத்தைக்கு தெரிஞ்சு அவங்க
உங்களை கேள்வி கேட்கிறது நடந்திட கூடாதுன்னு மறைச்சதும் தப்பில்லை அப்படிதானே..!
ஆனா இப்போ மாமா மொத்தமா அக்காவை விட்டுட்டு
குழந்தைகளை மட்டும் கூட்டிட்டு போயிருக்காரே இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க..?
அடுத்து பெரிய மாமா அத்தை அவங்க குடும்பமே வந்து கேள்வி கேட்குமே
அதுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்க..? நீங்க சொன்ன குடும்ப
நல்லதை அவங்க கிட்ட சொல்லி பாருங்க அப்புறம் தெரியும் சேதி.
“இல்ல நிவி நிஜமாவே நான்..” என்று கண்ணீரோடு
தன்னை நியாயபடுத்த முயன்று கொண்டிருந்த ஜெகாவை கட்டுக்கடங்காத
கோபத்தோடு பார்த்திருந்தார் அம்பலவாணன்.
“அதைக்கூட விடும்மா வைஷு அந்த நேரத்துல அக்காவை
எவ்ளோ தேடி இருப்பா அதுக்கப்புறம் கூட அக்காகிட்ட சொல்லாம மறைச்சதை நினைச்சு
குழந்தை என்ன பாடு பட்டிருக்கும்..? உங்களோட அஜாக்கிரதை
மட்டுமே இதுக்கு காரணம்!”
“நல்லவேளை யார் செய்த புண்ணியமோ நம்ம குழந்தை
அதுக்கப்புறம் நம்ம வீட்டு ஆம்பளைகளை பார்த்து பயப்படாம வெறுத்திடாம அவங்கமேல
பாசமா இருக்கா ஒருவேளை அவளை இந்த இன்சிடென்ட் மனசளவுல ரொம்ப
காயபடுத்தி இருந்தா என்ன செய்திருப்பீங்க..? எங்கப்பா,
எங்கண்ணன், என் புருஷன் இவ்ளோ ஏன் அவளோட
அப்பாவை பார்த்தே கூட அவ பயந்திருக்கலாம் அப்போ என்ன செய்திருப்பீங்க..?” என்று கேட்க ஜெகாவிடம் பதிலில்லை.
“அதுதான் நடக்கலையே நிவி அதைப்பற்றி ஏன் பேசற..?”
என்று மனிதாபிமானமே இல்லாமல் பேசிய ராஜியை அற்பமாய் பார்த்தாள்
நிவி.
************************
அன்று கவின்மலர் பற்றிய பேச்சுக்கு பிறகு அண்ணாமலை பெரிதாக
உதயதித்தனிடம் பேசிக்கொள்ளவில்லை. அவன் கூறிய நிபந்தனைகளுக்கு எந்த பெண் தான்
ஒப்புக்கொள்வாள்..? அதோட இதை சொல்லி எப்படி பெண் வீட்டாரிடம் அவர் பேசுவது..?
அதை அம்பலவாணனிடமே கேட்க,
“அப்பா ஒருவிதத்துல உதய் நம்ம கட்டாயத்துக்காக
அந்த பெண்ணை திருமணம் செய்துகிட்டு யாருக்கும் தெரியாம இப்படி நடந்துக்க
நினைக்கலையேன்னு நிம்மதியா இருங்க.. அவனோட நிலைப்பாடு என்னன்னு சொல்லிட்டான்.. வேற
பெண்ணை அவன் வாழ்க்கையில கொண்டு வரதுக்கு பதில் கல்யாணமே வேண்டாம்னு சொன்னதுக்கு
அப்புறமும் இன்னொரு பெண்ணை கட்டி வைக்கிறதும் வைக்காததும் உங்க விருப்பம்
நேரமெடுத்து யோசிச்சு முடிவெடுங்க” என்றார்
ஆனால் இப்போது வைஷுவை தொட்டு பிரச்சனை தளிரிடம் நீளவும்
இருவரும் பேச வேண்டிய நிர்பந்தம் ஆகிவிட்டது.
“வைஷுகுட்டியால இன்னைக்கு...” என்ற உதய்யை
இடையிட்ட அண்ணாமலை,
“சின்ன புள்ள பேச்சையெல்லாம் ஒரு பேச்சுன்னு
எடுத்துட்டு வராத உதய்... நம்ம பாப்பாக்கு நடந்ததையும் தளிருக்கு நடந்ததையும் ஒரே
தராசுல பார்க்க கூடாது” என்றார் அண்ணாமலை.
“ஏன் பார்க்க கூடாது..?”
“இவ விவரமில்லாத புள்ள ஆனா தளிர் அப்படியில்ல
விவரம் தெரிஞ்சே தான் அந்த பையனோட பழகி இருக்கா... படிக்க போன இடத்துல
பொட்டபுள்ளைக்கு என்ன ஆம்பளைங்க சகவாசம்? போனமா
படிச்சோமான்னு வந்திருந்தா இந்த பிரச்சனை வந்திருக்குமா..?”
உங்கப்பன் எல்லாமே விசாரிச்சேன்னு சொன்னதால
நானும் ஒத்துகிட்டேன் அது எவ்வளவு தப்புன்னு இப்பதானே புரியுது.. ஆனா நாம பொண்ணு
கேட்டு போனப்போவாவது ஆனது ஆகிபோச்சுன்னு நம்ம கிட்ட
முதல்லையே விஷயத்தை சொல்லி இருக்கனுமா இல்லையா..?
ஆனா தாலி கட்டப்போற
நிமிஷம் வரையிலுமே அவங்க இதை பற்றி பேசாததோட அந்த சரத்கூட எடுத்துகிட்ட போட்டோ
வீடியோ, பதிவு கல்யாணம்ன்னு எல்லாமே தப்பு... அப்படி
ஏமாத்தின ஒருத்தனை இத்தனை வருஷமா எதுவும் செய்யாம விட்டுட்டு இப்போ வந்து
சப்பைகட்டு கட்டறது புத்திசாலித்தனமா அவங்க நினைக்கலாம் ஆனா அதை நம்ப நான்
முட்டாள் இல்லை..
சரி ஏன் மறைச்சீங்கன்னு கேட்டதுக்கு
மறந்துட்டோம்னு சொல்றது என்ன மாதிரியான பதில்...? நம்மை
பார்த்தா முட்டாளா இருக்கா இல்ல அந்தஸ்த்து பார்க்காம வலிய அவங்க வீட்டு படி ஏறி
போனதால மணமேடை வரை வந்துட்டதால அதுக்கப்புறம் என்ன நடந்தாலும் அவங்க வீட்டு பெண்ணை
கட்டுவோம்னு கணக்கு போட்டுடாங்களா?
“இத்தனை நடந்த பிறகும் நம்ம குடும்ப கௌரவம்
உன்னோட பேர், புகழ், நம்ம சொத்து
எல்லாமே அவங்களால நஷ்டப்பட்ட போதும் ஒரு வார்த்தை மன்னிப்பு கேட்காதவங்களையும்
வைஷுவையும் ஒண்ணா பேசுறதை ஏற்றுக்க முடியாது அதைவிட அந்த பொண்ணுக்காக இன்னொரு பெண்ணோட
வாழ்க்கையை வீணடிப்பேன்னு சொல்ற உன்னோட முட்டாள்தனத்தை என்னால ஏத்துக்கவே
முடியாது..” என்றார் தீர்க்கமாக.
Comments
Post a Comment