அம்பலவாணனை பற்றி கேட்கவே வேண்டாம்..!! ஏற்கனவே தளிர்
விடயத்திலேயே மனைவி மீது மனத்தாங்கல் கொண்டிருந்தவர் தன் பெண்ணை மகாராணியாக
நடத்திய குடும்பத்தில் அவள் மதிப்பை குறைத்ததோடு இப்போது பெரிய சம்பந்தியுடனான
உறவை கிட்டத்தட்ட முறித்து பிள்ளைகளை இங்கு வரவிடாமல் செய்ததில் மொத்தமாக மனைவியை
ஒதுக்கி வைத்துவிட்டார்...
ஜெகா கையால் தண்ணீர் கூட குடிப்பதில்லை உணவு பரிமாறுவது கூட
அன்னபூரணி தான்... அவரால் முடியாத நேரத்தில் அம்பலவாணனே பரிமாறிக்கொள்வரே தவிர
ஜெகாவை எதற்குமே அனுமதிக்கவில்லை. மற்றவர்கள் கண்களை உறுத்தக்கூடாது என்பதால்
ஜெகாவோடு ஒரே அறையில் இருக்கிறார் ஆனால் பேச்சு வார்த்தை என்பது சுத்தமாக இல்லை.
ஜெகாவும் அனைவரிடமும் எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டுவிட்டார்
ஆனால் யாருமே அவர் மறைத்ததை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. கண்ணீரோடு தொடங்கி
கண்ணீரோடு ஒவ்வொரு நாளையும் கடப்பவரின் தற்போதைய ஒரே ஆறுதல் மகன்
மட்டும் தான்..!!
அதுவும் நாளை தளிர் வீட்டிற்கு கிளம்பும் முடிவை மாமனார்
எடுத்திருக்கும் நிலையில் தளிர் அவன் மனைவியாக இந்த வீட்டிற்கு வந்த பின்னர் மகன்
ஆதரவும் இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே..!!
******************
“நிஜமாவா அண்ணி சொல்றீங்க..?” என்று தென்றல் மட்டற்ற மகிழ்ச்சியோடு தளிரை பார்த்தவாறே கேட்க,
“ஆமா தென்றல் நான் முன்னாடியே சொன்னேன் ஆனா நீ
தான் நம்பலை... தாத்தா அண்ணா அண்ணியோட கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டார் அப்பாக்கு
ஏதோ முக்கியமான மீட் இருக்கிறதால இன்னைக்கு சாயந்திரம் நாங்க எல்லாருமே உங்க
வீட்டுக்கு வரோம்... அப்பா அத்தைக்கிட்ட பேசறேன்னு சொல்லியிருக்காங்க இப்போ
நம்பறியா..?”
“நம்பறோம் அண்ணி எத்தனை மணிக்கு வரீங்க..?”
என்று கேட்டவள் பள்ளிக்கு தயாராகி கொண்டிருந்த தளிரிடம் விஷயத்தை
சொல்லி குதுகலிக்க அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை.
“அக்கா நான் எவ்ளோ ஹாப்பியா இருக்கேன்
தெரியுமா..?” என்று தளிரை கட்டிக்கொண்டு முத்தமிட்டவள்,
“ம்மா எனக்கு லஞ்ச் வேண்டாம் முக்கியமான இன்டர்னல்ஸ் இருக்கு
முடிஞ்சதும் மதியம் வந்துடுவேன்” என்றவள் கல்லூரிக்கு கிளம்ப பெரும் யோசனையோடு
அமர்ந்திருந்த தளிர் அன்று பள்ளிக்கு விடுப்பு சொல்லிவிட்டு அடுத்த அரைமணி
நேரத்தில் உதய்யின் முன் இருந்தாள்.
ஆனால் அறையினுள் வந்தவள் ஆவேசமாக பேசிய பேச்சில் என்ன
நடக்கிறது என்று புரியாமல் திகைத்து போய் அமர்ந்திருந்தான் உதய்.
“ச்சை உங்களுக்குள்ள இவ்வளவு அழுக்கா..?
என்னமோ நம்பிக்கை, கூடாரம் அது இதுன்னு பேசினீங்களே அது எல்லாமே
இந்த சர்டிபிக்கேட் கொடுத்த தைரியத்துல தானா..? ரியலி ஷேம்
ஆன் யூ!! என்ன ஒரு சீப் மென்டாலிட்டி... நல்லவேளை உங்களோட இன்னொரு முகம் இப்பவாவது
தெரிஞ்சதே இல்ல இன்னும் மோசமா நான் ஏமாந்து போயிருப்பேன்...”
“தளிர்” என்று அவன் அடிக்குரலில் சீற தளிரின்
குரல் இன்னுமே உயர்ந்தது.
“நீங்க இல்லைன்னா ஊருக்குள்ள வேற மாப்பிள்ளையே
எனக்கு கிடைக்க மாட்டான்னு நினைச்சுட்டீங்களா..?” என்றவள்
அடுத்தடுத்து வரைமுறை இன்றி பேசிக்கொண்டே செல்ல,
“வாயை மூடுடி” என்றவன் வார்த்தையை தளிர்
கேட்பதாக இல்லை.
“அதை சொல்ல நீங்க யார்..?” என்றதில் உதய் பதிலின்றி அவளை வெறித்து பார்த்தான்.
“சரி அதை விடுங்க எனக்கு இப்போ இதுக்கு பதில்
தெரியனும்.. சொல்லுங்க” என்று வெர்ஜினிட்டி சர்டிஃபிகேட்டை காட்டி தளிர் கேட்க,
“இதை நான் கேட்டிருப்பேன்னு நீ நம்பறியா
தளிர்..?” என்றவனின் மனம் இன்னும் அவள் கேட்ட கேள்வியில்
இருந்து வெளிவரமுடியாதளவு அதிர்வு கொண்டிருந்தது..
“ஏன் இல்லாம..? ஒன்னு
நீங்க கேட்டு இதை எங்கம்மா எடுத்திருக்கணும் இல்ல உங்களுக்காக எடுத்திருக்கணும்
எப்படி பார்த்தாலும் இதை எடுத்ததுக்கான காரணம் உங்களை தவிர வேற யாரும் இருக்க
முடியாது” என்ற மறுகணமே சீதாவிற்கு அழைத்தவன்,
“அத்தை எதுக்கு தளிருக்கு வெர்ஜினிட்டி டெஸ்ட்
எடுத்தீங்க..?” என்று கேட்டவனுக்கு இன்று வரையிலுமே சீதா இதை
எடுத்தது பற்றி தெரியாது. அன்று அலரிடம் அழைத்து சென்ற ராகவனுக்கு கூட தெரியாது.
முதலில் பதில் சொல்ல தயங்கிய சீதா உதய்யின் கோபத்தில் “அது..
அதுவந்து.. உங்களுக்காக தான் மாப்பிள்ளை.. நாளைக்கு என் பொண்ணை” என்று அவர்
முழுதாக சொல்லி முடிக்கும் முன்னமே அவன் கையிலிருந்த கைபேசி நழுவியது.
“போதுமா..?” என்று
எள்ளலாக அவனை பார்த்தவள், “நான் ஒரு பைத்தியக்காரி நீங்க
சொன்ன எல்லாமே நம்பினேன்.. அதுவும் என் அப்பா மாதிரின்னு சொல்லவும் எதையுமே
யோசிக்கலை... எப்படிடா நாம சொன்னதை அப்படியே நம்பினார்னு எவ்ளோ நாள் மண்டையை
பிச்சுக்கிட்டேன் ஆனா இப்போதானே உங்க நோக்கமே புரியுது...?”
“என்னடி நோக்கம்..?” என்றவனின்
வார்த்தைகள் பற்களில் அரைபட்டது.
“அதுதான் கேஸ் நடக்கற வரைக்கும் லவ் பண்ணலாம்னு
சொன்னீங்களே உங்களோட லவ் எப்படி பட்டதுன்னு இப்போதானே தெரியுது..”
“என்னடி தெரிஞ்சது..?”
“அதுதான் எப்போ எல்லாம் வாய்ப்பு கிடைக்குது
அப்போ எல்லாம் அத்துமீறுறீங்களே அதுதானே உங்க காதல்..!! ஒரு பெண்ணை அடைய முதலில்
அவ மனசை தொடணும் ஆனா நீங்க என்ன செய்தீங்க...? என்னமோ
நிச்சயம் நடந்துட்டதாலேயே நான் உங்க ப்ராப்பர்டி மாதிரி தானே என்கிட்டே நடந்துகிட்டீங்க..
கொஞ்சமும் என்னோட உணர்வை மதிக்கவே இல்லையே” என்றிட உதய் தாடை இறுக நின்றான்.
“அப்போ நான் உன் மனசை தொடலையாடி..?” என்ற ஒருநொடி தயங்கியவள் பின் குரலை செருமி,
“இல்லை!” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவள்,
“போதும் ஸார் வெளுத்தது எல்லாமே பால் என்று
நினைச்சு நான் ஏமாந்த வரை போதும்.. இனியும் யாரையும் நம்பறதா இல்லை... சின்ன வயசுல
இருந்து கூட வளர்ந்தவனே என் மனசை பொருட்படுத்தலை நீங்களா என்னை பற்றி என் மனசை
பற்றி யோசிச்சிட போறீங்க..? உங்களுக்கு உங்களோட ஸோ கால்ட்
காதல் தானே முக்கியம்!!” என்று தன் பேச்சை ஒருகணம் நிறுத்தியவள்,
“நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறைக்கு காதல்னு
பேர் வைக்காதீங்க” என்று ஆவேசத்தோடு சொல்ல பேச்சின்றி நின்றிருந்த உதய்யின் மனம்
வெகுவாக காயம் கொள்ள தன்னை திடபடுத்த முயன்று தோற்று அவள் பேச்சில் முற்றிலுமாக
ஸ்தம்பித்து போனான்.
பின்னே! அவள் தான் டெஸ்ட் எடுக்க கேட்டிருக்ககூடும் என்று
நம்புவதோடு தன் காதலை கேள்விக்குறியாக்கியதில் எங்குமே தன் காதலை அவள்
உணரவில்லையா..? எப்படி தான் இப்படிப்பட்ட செயலை செய்திருக்க கூடும் என்று
நம்பினாள்..? தன் மீதான அவள் புரிதல் அவ்வளவு தானா..?
என்று முற்றிலுமாக நொறுங்கி போனான்.
கலங்கிய கண்களுடன் உதய் தளிரை பார்த்திருக்க, “அப்பா
இல்லாத பொண்ணு அதுவும் ஏற்கனவே ஒருத்தன் கிட்ட ஏமாந்தவ தானே எப்ப கூப்பிட்டாலும்
வருவான்னு கணக்கு போட்டுட்டு அதை ரொம்ப பாலிஷ்டா ஒரு வருஷம் லவ் பண்ணலாம்
வான்னு கூப்பிட்ட உங்களு...” என்று அவள் முடிக்கும் முன்னமே உதய்யின் கரம்
அவள் கன்னத்தில் இடியென இறங்கியது.
தீயென எரிந்த கன்னத்தை பிடித்துக்கொண்டு மிரட்சியுடன் தளிர்
உதய்யை பார்க்க, “இன்... இன்னொரு வார்த்தை பேசின கொன்னுடுவேன்டி..” என்று
சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவன் கோபம் எல்லை கடந்திருந்தது.
“என்னை டெஸ்ட் எடுக்க வச்சு அசிங்கபடுத்துவீங்க
நான் எதுவும் கேட்க கூடாதா..? அப்படி என்ன ஆட்டிடியூட்
உங்களுக்கு..?”
“போடி வெளியே..” என்றவனின் வலியை கண்டு தளிரின்
கண்ணீர் உடைப்பெடுக்க அதற்கு அணை போட்டவள்,
“இனியும் காதல்னு சொல்லிகிட்டோ இல்ல என்னை
பொண்டாட்டின்னு சொல்லிகிட்டோ என்னை தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்க நினைச்சீங்க
உங்களுக்கு மரியாதை இரு...” என்றவளின் பேச்சு உதய்யின் செய்கையில் பாதியிலேயே
நின்று போனது.
ஆம் “ஐ சே கெட் அவுட்..” என்ற கர்ஜனையோடு மேஜையில் இருந்த
கண்ணாடி குடுவையை தரையில் ஓங்கி அடிக்க உதயாதித்தனின் மனம் போலவே அதுவும் சில்லுசில்லாக
உடைந்து நொறுங்கியது.
அதுநேரம் வரை வெளியே நின்றிருந்த ராகவனும் நிவியும் தளிரின்
பேச்சில் உறைந்து போயிருந்தனர். அவர்களை கண்டவள் ஒருநொடி நிதானித்து பின் அவர்களை
கண்டுகொள்ளாமல் கடந்து சென்றாள்.
எரிமலையின் சீற்றத்தோடு ரத்தமென சிவந்திருந்த விழிகளோடு தளிரை
பார்த்திருந்த உதய்யின் கோலம் கண்டு ராகவனும் நிவியும் அவனை நெருங்கவே தயங்கினர்.
“வாங்க” என்று நிவி அவனை இழுத்து செல்லவும்,
இருகைளையும் மேஜை மீது கோர்த்து அதில் தலை கவிழ்ந்திருந்த உதய்யை
“மச்சான்..” என்று ராகவன் தோளை தொட்டதும் தான் தாமதம் “வெளியே போ” என்று ஆவேசமாக
கத்திவிட்டான்.
அதில் இருவருமே திடுக்கிட்டு உதய்யை பார்த்தவாறே
வெளியேற கண்களில்திரண்டுவிட்ட நீரோடு கணவனை பார்த்தவள்,
பொறுமையா இரு நிவி என்றவன் பேச்சை காது கொடுத்தும் கேட்காது, “எங்கண்ணனை
அழ வச்ச அவங்களை நான் சும்மா விடமாட்டேன்” என்று ஆவேசமாக தென்றலுக்கு
அழைக்க பரீட்சை எழுதி கொண்டிருந்தவள் எடுக்கவில்லை.
“க்கா எப்படி அண்ணனை இந்தளவு மோசமா பேச
முடிஞ்சது..? அவ்ளோ ஈஸியா போயிட்டாரா..? அவங்களுக்காக அண்ணா எவ்ளோ தூரம் கஷ்டபட்டார் கொஞ்சமும் எதையும் நினைச்சு
பார்க்காம இப்படி எடுத்தெறிஞ்சு பேசறாங்க தெரியுமாக்கா..?” என்று
கண்ணீரோடு சொல்ல,
“என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாத
அவங்களுக்குள்ள ஏதாவது மிஸ்அண்டர்ஸடான்டிங்கா இருக்கும்
அவங்களே பேசி தீர்த்துப்பாங்க..”
“க்கா அவங்க பேசின வார்த்தையால அண்ணா எந்தளவு
உடைஞ்சு போயிட்டாருன்னு நீ பார்த்திருந்தா இப்படி பேசமாட்ட..?”
“புரியுது நிவி ஆனா நீ அவசரபடாத நான் வெளியில
இருக்கேன் உங்க மாமா கிட்ட கேட்டுட்டு வரேன் அதுவரை கொஞ்சம் அமைதியா இரு நாம
விசாரிக்கலாம்... அப்பா தாத்தா கிட்ட எதுவும் உளறி வச்சுடாத”
“சரிக்கா ஆனா நீ முதல்ல கிளம்பி
வா அவங்களை இரண்டு வார்த்தையாவது கேட்டே ஆகணும்..” என்று சுஜியிடம் ஆற்றாமையோடு
பேசியவள் மீண்டும் தென்றலுக்கு அழைத்து விஷயத்தை கட்டமாகவே கூற
அவள் பதறிக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.
*********************
சீதா வேலைக்கு கிளம்பி சென்றிருக்க மேலறையில் இருந்த தளிரை
தேடி சென்ற தென்றல்...
“தாயும் ஆனவனே…
என் நெற்றி பாதையில் ஊற்றை திறந்து…
காதல்…”
என்ற வரிகள் கைபேசியில் ஒலித்து கொண்டிருக்க அறையினுள் தளிர்
அமர்ந்திருந்த கோலம் கண்டு அதிர்ந்து போனாள்.
பின்னே அறை முழுக்க இறைந்து கிடந்த புத்தகங்களும் பொருட்களும்
அதற்கு நடுவே தொடர்ந்து அழுததில் கண்கள் சிவக்க முகம் வீங்கி கண்ணீரும்
வற்றிப்போய் வெறுமையோடு விழிகள் எங்கோ நிலைக்க விரக்தியோடு அமர்ந்திருந்த தளிரை
கண்டவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
எதற்காக கிளம்பி அவசரமாக வந்தோம் என்பதை மறந்து பதற்றத்தோடு
தளிரை நெருங்கி, “க்கா என்னக்கா ஆச்சு..?” என்றிட
தென்றலை பார்த்தவளிடம் கனத்த மௌனம்.
“அக்கா உன்னை தான் கேட்கிறேன் ஏன் இப்படியிருக்க...?”
என்று அவளை பிடித்து உலுக்க,
“நானெல்லாம் ஏன் உயிரோடு இருக்கேன்னு எனக்கே
கோபமா வருது தென்றல்....” என்று தொண்டையை செருமி மெல்லியக்குரலில் சொன்னவளின்
கண்களில் இருந்து கண்ணீர் தடையின்றி வெளியேறியது.
“க்கா....”
“ஆமா! அத்தனை வருஷமா ஒருத்தன் என்னை எப்படி
பார்க்கிறான், என்னோட எப்படி பழகறான், அவனோட
நோக்கம் என்ன எதுவுமே தெரியாம அப்படி என்ன கண்மூடித்தனமான நம்பிக்கை எனக்கு..?
இதோ நான் வச்ச அந்த கண்மூடித்தனமான நம்பிக்கை தானே இப்போ ஒரு
குடும்பத்தையே இந்த நிலையில நிறுத்தி இருக்கு...”
“இதுக்கு முழுக்க முழுக்கக் காரணம் நான்
மட்டுமே..! என்னதான் நான் காரணம் இல்லைன்னு சொல்லி உதய், மாமா
எல்லாரும் சொன்னாலும் என் மனசாட்சிக்கு தெரியும் நான் மட்டுமே தான் காரணம்...”
என்று சொல்ல உதய் பேசியது சுஜி நிவி மூலமாக அவர்களுக்கு தெரியவந்திருந்தது.
“அக்கா ஏன்க்கா முடிஞ்சு போனதை பேசற..? மாமா , தாத்தா எல்லாரும் கல்யாணம் பேச வரப்போறாங்க
இப்போ போய் எதுக்கு இந்த பேச்சு பேசிட்டு இருக்க..? எந்திரிச்சு
வந்து குளிச்சிட்டு ரெடி ஆகுக்கா நான் போய் ஸ்நேக்ஸ் செய்யறேன்..”
“என்ன தென்றல் பேசற..? உனக்கு
நிஜமாவே என்னோட முட்டாள்தனமும் நான் பண்ணின தப்பு புரியவே இல்லையா..? எவ்ளோ சாதாரணமா கல்யாணம் பேச தயாராக சொல்லிட்ட..?”
“நீ என்னக்கா தப்பு பண்ணின..? ப்ச் ஏன்க்கா இப்படியெல்லாம் பேசற எனக்கு ரொம்ப பயமா இருக்கு ப்ளீஸ் வா”
“சரத்தை மறந்தது நான் செய்த தப்பு கிடையாதா..?”
என்று அழுத்தமான குரலில் தளிர் கேட்க,
“....”
“என்னோட அந்த தப்பு இப்போ ஒரு குடும்பத்தோட
சந்தோஷம், நிம்மதி, சிரிப்பு
எல்லாத்தையும் பறிச்சிருக்கறது உனக்கு புரியலையா..?”
“அக்கா அத்தானே அதையெல்லாம் பெருசா எடுத்துகல
நீ ஏன் இப்படி..?”
“அது அவரோட பெருந்தன்மை ஆனா அது நிஜமில்லை...
நான் ஒரு பாவி!! வாழவே தகுதி இல்லாத பாவி” என்று தளிர் வீரிட்டு அழ தென்றல் பயந்து
போனாள்.
பின்னே பல வருடங்களுக்கு முன் குற்ற உணர்வால் தான் சரியான
பெண் கிடையாது என் தங்கைக்கு நல்ல அக்கா கிடையாது என்ற தாழ்வு மனப்பான்மையால் மன
அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தவள் இப்போதும் கிட்டதட்ட அந்நிலைக்கு தள்ளப்பட்டு
இருக்கிறாள்.
உதய்க்கும் அவன் குடும்பத்துக்கும் ஏற்பட்ட அவமானம் அவளை
அனுதினமும் கொன்று கூறு போட்டுக்கொண்டு இருப்பதை அவள் மட்டுமே அறிவாள்.
‘எங்கே தாய்க்கும் தங்கைக்கும் தெரியவந்தால்
தன்னால் அவர்கள் இன்னும் வேதனை கொள்வார்களோ..!’ என்று அத்தனையையும் தனக்குள்
போட்டு புதைத்து மருகி கொண்டிருந்தவளின் ரணம் நீறுபூத்த நெருப்பாக கனன்று
கொண்டிருந்தது.
இப்போது உதய்யை பேசியவிட்டு வந்த பின்னர் மொத்தமாக வெடித்து
சிதறி அதில் அவளே எரிந்து கொண்டு இருக்கிறாள்.
“நான் காலையில கிளம்பும் போதுகூட நல்லா இருந்த
இப்போ என்னக்கா ஆச்சு உனக்கு..? ப்ளீஸ் அழாத என் அக்கா ரொம்ப
தைரியசாலி எதுக்கு அழற..? ப்ளீஸ் க்கா கண்ணை துடை” என்று
தேம்பிக்கொண்டே தளிரை நிமிர்த்தியவள் ரத்தமென சிவந்திருந்த அவள் கண்களையும் முகம்
முழுக்க வியாபித்து இருந்த கண்ணீரின் ஈரத்தையும் கண்டு அதிர்ந்து போனாள்.
“நான் நல்லா இல்லடி..!! இத்தனை மாசமா நான் நானா
இல்லை..!! எங்க நான் என்னோட வலி வேதனையை காண்பிச்சா அம்மாவும் நீயும்
பயந்துடுவீங்களோன்னு அதை வாய்விட்டு சொல்லி அழக்கூட முடியாம இத்தனை நாளும்
உள்ளுக்குள் வெந்து நொந்து ஒவ்வொரு நிமிஷமும் செத்துகிட்டு இருந்தேன்..
“என்னக்கா என்னென்னமோ பேசற...?” என்றதும் கசந்த முறுவலோடு தங்கையை பார்த்தவள்,
“எனக்கே என்னை பிடிக்கலை தென்றல் அதைவிட இப்போ
நான் வாழற வாழ்க்கையை வெறுக்கிறேன்.. ஆனா அன்னைக்கு டாக்டர் சொன்னது போல என்னோட
வாழ்க்கையை யாருக்காகவும் விட்டுகொடுக்காம வாழ்ந்து தான் ஆகணும் தற்கொலை எதற்குமே
தீர்வு கிடையாது..” என்று விரக்தியாக சொன்னதுமே அவளை இறுக கட்டிக்கொண்ட தென்றல்
தளிரின் முதுகை நீவிவிட்டவாறே,
“அக்கா ப்ளீஸ் நீ கொஞ்சம் அமைதியாகு எனக்கு
ரொம்ப பயமா இருக்கு..” என்றாள் இளந்தென்றல்.
Comments
Post a Comment