“என்னை இரண்டாவதாக பார்த்ததாக சொன்னியே எங்கே? எப்போ?” என்றான் அபய் ஸ்ரீவத்ஸன்.
"அபய் ஆர் யூ சீரியஸ்?!” என்றாள்
புன்னகையோடு.
“ஏன் தெரிஞ்சுக்க கூடாதா?”
“தெரிஞ்சுக்கலாம். பட் நான் எவ்வளவு சீரியஸான விஷயம்
சொல்லிட்டு இருக்கேன் அதை பற்றி எதுவும் பேசாமல் அடுத்த மீட் பத்தி கேட்கிறது
கொஞ்சம் ஸர்ப்ரைஸிங்கா இருந்தது" என்ற நயனிக்குமே ஆச்சர்யம் தான்.
பின்னே இத்தகைய கொடுமையில் இருந்து மீண்டு வந்திருப்பவளை
ஆறுதலாக தோள் அணைக்காமல் போனாலும் வார்த்தைகளிலாவது தன்னை தேற்ற முற்படுவான் என்று
அவள் மனம் தன்னை மீறி எதிர்பார்த்தது.
ஆனால் அதற்கு நேர்மாறாக நம்முடைய கதைக்கு வா என்பவனை என்ன
சொல்ல? என்று புரியாமல் பார்த்தாள்.
அபய் அவளையே பார்த்திருக்க, "அபய் உங்க கிட்ட தான் கேட்கிறேன்"
"நயனி யூ ஆர் எ செல்ஃப்மேட் வுமன்! கிட்டத்தட்ட தானா
வளர்ந்த காட்டு மரம் மாதிரின்னு சஞ்சு அடிக்கடி சொல்லியிருக்கா... இன்ஃபாக்ட்
எங்களோட பேச்சுல அவளை பற்றி சொல்றதை விட உன்னை பற்றி தான் பெருமையா சொல்லிட்டு
இருப்பா…"
“அப்படியா?!”
"எஸ்! எவ்ளோ கஷ்டமான சூழலா இருந்தாலும் கலங்கி நிற்காமல்
அதுல இருந்து மீண்டு வந்து உன்னை நீயே செதுக்கிப்பன்னு உன்னோட பொறுமை, நிதானம் மட்டுமல்ல நீ எவ்ளோ ஸ்ட்ராங் பர்சனாலிட்டின்னு சொல்லி இருக்கா...
அதனால் இப்போ எனக்கு நிஜமா என்ன சொல்றதுன்னு தெரியவில்லை"
“ஏற்கனவே சொன்ன மாதிரி அவ்ளோ இக்கட்டான சூழலை எவ்ளோ அழகா
ஹாண்டில் பண்ணி அவனால பேச முடியாத படி சுடுதண்ணிலயே அபிஷேகம் செய்துட்டதை ஒரு வித
பிரம்பிப்போடு தான் நான் பார்க்கிறேன்..”
"இது ஒரு பக்கம் இருந்தாலும் அவனால நீ பட்ட கஷ்டம் அதனால
சென்னை வந்தது அங்க உனக்கு நடந்த அசம்பாவிதம் எல்லாம் என்னால அவ்ளோ ஈஸியா டைஜெஸ்ட்
பண்ண முடியலை. அது தான் வேற டாப்பிக் போகலாம்னு சொன்னேன்"
"ஏன் அப்படி?"
"நீ சொல்லும் போது என் சஞ்சு ஞாபகம் வருது.."
என்றான் கலங்கிய குரலில்.
"சஞ்சுவா? ஏன்?"
என்றிட அவனிடம் கனத்த மௌனம்!
“அபய் சொல்லுங்க ஏன்?”
"அன்னைக்கு கடவுளா பார்த்து என்னை அனுப்பினதா சொன்ன. அது
எந்தளவு நிஜம்னு எனக்கு தெரியாது ஆனா உன்னை காப்பாற்ற நான் வந்த மாதிரி என்
சஞ்சுவை காப்பாற்ற என்னால போக முடியலையே!” என்றவனின் ஆதங்கம் கோபமாக உருமாற கையில்
இருந்த ரிமோட்டை தூக்கி சுவரில் அடிக்க அது சில்லுசில்லாக நொறுங்கியது.
“அபய் ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ஃப்” என்ற போதும் அவன்
ஆத்திரம் அடங்க மறுக்க தலையை பிடித்து கொண்டவனிடம் இருந்து அப்படி ஒரு கதறல்
வெளியேறிட நயனிகாவே பயந்து போனாள்.
“அபய்.. டோன்ட் கெட் எமோஷனல். ப்ளீஸ் காம் டவுன்!” என்று அவன்
தோள்களை பிடிக்க,
"என் சஞ்சுவிற்கு இதை விட மோசமா வேன்ல நடந்தது நயனி.
அப்போ அந்த இடத்தில யாருமே அவளை காப்பாற்ற வராமல் போயிட்டாங்களே..” என்று
கண்ணீரோடு சொன்னவன் வேகமாக எழுந்து கொள்ள ‘எங்கே தன்னை காயப்படுத்தி கொள்வானோ?!’ என்று பதறிப்போனாள் நயனிகா.
அபய் அடுத்த அடி எடுத்து வைக்கும் முன்னமே அவனை கட்டிக்கொண்டு
நகர விடாமல் செய்ய, “என்னை விடு நயனி நா... நானெல்லாம்..
அன்னைக்கு என் சஞ்சு துடிச்சுட்டு இருந்தப்போ நான் கோவாவுல கல்யாணத்தை செலிபரேட்
பண்ணிட்டு இருந்ததை நினைச்சா எனக்கே அருவெறுப்பா இருக்கு” என்றவனை கட்டுபடுத்துவது
அவளுக்கு பெரும்பாடாகி போனது.
"அபய் அவளுக்கு ஆபத்துன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?! எதுக்கு உங்களுக்கு இந்த கில்ட்? அப்படி பார்க்க
போனா அன்னைக்கு நேரத்தோடு வராம போன நானும் தானே தப்பு!”
“கண்டதையும் யோசிக்காதீங்க.. அது உங்களோட மனநிலையை இன்னும்
மோசமாக்கும். அக்செப்ட் தி ட்ரூத், தட் வில்
ஹெல்ப் யூ டூ ஹீல் சூன்! (நிஜத்தை ஏத்துகிட்டலே
உங்களோட வலி மட்டுப்படும்)” என்றவளின் அணைப்பில் இருந்து திமிர முற்பட்டவனை
இழுத்து வந்து மெத்தையில் அமர்த்தியவள் மீண்டும் அவனை கட்டிக்கொண்டு,
“ப்ளீஸ் காம் டவுன் அபய்.. நான் இனி அந்த பேச்சு எடுக்கலை..”
என்றவள் அவனை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு முதுகை வருடி கொடுக்க அழுகை குறைந்து
மெல்ல அவள் கட்டுக்குள் வந்திருந்தான் அபய் ஸ்ரீவத்ஸன்.
மேலும் பல நிமிடங்களுக்கு பிறகே அவன் இருக்கும் நிலையை
உணர்ந்தவன், “ஸாரி!!” என்றபடி அவளிடமிருந்து விலகினான்.
“இட்ஸ் ஓகே!!” என்று அவன் உணர்வை புரிந்து கொண்டவள்,
"சரி லன்ச் டைம் ஆயிடுச்சு.. நான் இரண்டு பேருக்கும் சாப்பாடு
எடுத்துட்டு வரேன்” என்று கீழே இறங்கி சென்றாள்.
மேலும் சில நிமிடங்கள் கழிந்து நயனிகா உணவோடு வர அவன் முகம்
இப்போது சற்று தெளிந்திருந்தது.
"ரொம்ப எமோஷனலாகிட்டீங்க அபய்.." என்று புன்னகையோடு
சொன்னவள் அவன் எதிரில் அமர்ந்தாள்.
"ஹம்ம்.." என்று தலையசைத்தவன் விழிகள் நன்கு
சிவந்திருந்தது.
"நிச்சயமா அக்செப்ட் பண்றது கொஞ்சமில்லை ரொம்பவே கஷ்டம்
தான்! எனக்கே ரொம்ப நாளெடுத்தது. ஐ கேன் அண்டர்ஸ்டான்ட் பட் அதிலிருந்து முடிஞ்ச
வரைக்கும் சீக்கிரம் வெளில வாங்க.. நீங்க இப்படி இருக்கிறது சஞ்சுவுக்கு நிச்சயம்
சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்காது…"
"அவ நம்ம கூட இல்லாம போயிட்டாலும் இங்க தான் எங்கேயோ நாம
வாழப்போற சந்தோஷமான வாழ்க்கையை பார்க்க காத்திருக்கிற மாதிரி எனக்கு தோணும்..”
“இறந்த காலத்தில் இருக்குற சஞ்சுவை விட்டுட்டு எதிர் காலத்துல
வரப்போகும் சஞ்சுவை யோசிங்க.. இப்போ முதல்ல சாப்பிடுங்க" என்று உணவை
பரிமாறினாள்.
“இப்போவே சாப்பிடனுமா நயனி? எனக்கு
பசியில்லை..” என்றவனுக்கு துக்கம் தொண்டை வரை அடைத்து நின்றது. ஓவென்று கத்தி அழ
வேண்டும் போல அத்தனை அழுத்ததோடு இருந்தான்.
"சாப்பிட்டு தான் ஆகணும் அபய் டேப்லெட்ஸ் போடணுமே?!"
என்று உணவை கொடுக்க அபய் எந்த கேள்வியும் கேட்கவில்லை.
அவனுக்கு உணவை கொடுத்து முடித்த நயனிகா தானும் உணவை
முடிக்கும் வரை காத்திருந்த ஸ்ரீவத்ஸன், "இப்ப
சொல்லலாமே அடுத்து என்ன எப்போ பார்த்தாய் என்று?!”
“இல்லை வேண்டாம். அதுவும் ஒன்னும் அவளோ ப்ளீஸிங்கான
சிச்சுவேஷன் இல்லை அபய், ஸோ வேண்டாமே...”
“பரவால்ல சொல்லு நயனி. எனக்கு ஒரு சேன்ஜ் வேணும், எங்கேஜ்டா இருக்கணும் இல்லைனா மனசு திரும்ப திரும்ப அதே ஞாபகத்துல.. ப்ச்
ப்ளீஸ் ஹெல்ப் மீ!!” என்றிட ஒரு பெருமூச்சோடு அவன் எதிரில் அமர்ந்தவள்,
"நான் செகண்ட் டைம் உங்களை பார்த்தது உங்களோட
காலேஜ்ல" என்றாள்.
"வாட்? என்னோட காலேஜ்லையா?
நீ எப்படி அங்கே? அங்கேயா படிச்ச?"
"இல்ல நான் அப்போ ப்ளஸ் டூ படிச்சுட்டு இருந்தேன்.ம
உங்களுக்கு தெரியுமான்னு தெரியல நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர்..”
"ஹம்! சஞ்சு சொல்லி இருக்கா, அவ வெஸ்டர்ன் நீ கிளாசிக்கல் தானே?!”
"ஆமா ஒருநாள் காலேஜ்ல நடந்த ப்ரோக்ராம்கு வெல்கம் டான்ஸ்
கொடுக்க இன்னும் நாலு கேர்ல்ஸ் கூட
வந்திருந்தேன்.. அப்ப வாஷ்ரூம் எங்கேன்னு தெரியாம தேடிட்டு போன போது தான்
உங்களை பார்த்தேன்..”
"நீ தனியாவா வந்த? உன்னோட
வந்தவங்க எல்லாம் எங்கே போனாங்க?"
"அவங்க ஸ்கூல் முடிச்சுட்டு உங்க காலேஜ்ல தான் ஜாயின்
பண்ண இருந்தாங்க. ஸோ அவங்க ஃபிரெண்ட்ஸ் பார்க்க போயிட்டாங்க அதனால நான் தனியாக
வந்தேன்...”
" யாரோ சில பசங்களோடு நீங்க சண்டை போட்டுட்டு இருந்தீங்க
அப்போ அந்த வழியா போன என்மேல அந்த பசங்க அடிச்ச பால் வந்து விழுந்துடுச்சு..”
“மத்தவங்க எல்லாரும் அவங்களை துரத்திட்டு போன போது நீங்க தான்
எனக்கு அடிப்பட்டதை தெரிஞ்சுகிட்டு என்கிட்டே வந்தீங்க அப்போ தான் நான் உங்களை
இரண்டாம் முறையா பக்கத்துல சந்திச்சது..”
"பட் உங்களுக்கு என்னை அடையாளம் தெரியலை.."
"அப்போ நீ என்கிட்ட பேசினியா நயனி?"
"பேசினேன். நீங்க தான் எனக்கு கட்டு போட்டு பக்கத்துல
இருந்த கிளீனிக் கூட்டிட்டு போனீங்க ஆனா உங்களுக்கு என்னை அடையாளம் தெரியல.
ஒருவேளை மேக்கப் போட்டதால இருக்கும்னு நானே முடிவு பண்ணிட்டேன்.. ஆனா உங்களுக்கு
சென்னை இன்ஸிடென்ட் ஞாபகம் இருக்கு தானே?!”
"இருக்கு, ஆனா முகம்
மறந்துடுச்சு.. இன்ஃபாக்ட் உன்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனதும் நினைவில் இருக்கு
பட் நீ சொன்ன மாதிரி டேன்ஸ் மேக்கப் போட்ட முகம் தான் நினைவில் இருக்கு அது நீ
தான்னு நம்புறது கொஞ்சம் கஷ்டம் அவ்ளோ வித்யாசம்” என்றான் சன்ன சிரிப்போடு.
"தினம் எத்தனையோ பேரை பார்க்கிறோம் எல்லாரையுமா நியாபகம்
வச்சுக்கிறோம்?! அதோடு என்னை பார்த்து ரெண்டு வருஷத்துக்கு
மேலவாவது இருக்கும் எப்படி என்னை நினைவில் வச்சிருக்க முடியும்?!”
“ஆனா ஒன்னுக்கு ரெண்டு முறை காப்பாத்துன உங்களை என்னால மறக்க
முடியலை... ஆல்ரெடி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த வயசுல அது கிரஷ், இன்ஃபாக்சுவேஷன்னு எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்"
“ஆனால் ஏதோ ஒருவிதத்துல நீங்க என்கிட்டே தாக்கத்தை
ஏற்படுத்திட்டீங்க., இது காதல் தானான்னு என்னை நான்
கேட்டுக்கிட்டேன். ஆனா உங்க கிட்ட பேசற தைரியம் அப்போ எனக்கு சுத்தமா கிடையாது..”
“காலேஜ் படிக்கும் போதும் உங்களை மறக்க முடியாமல் அடிக்கடி
என் மனசு உங்களை தேடுச்சு. அப்போ தான் எனக்கு இது நிச்சயமா காதல் என்று புரிஞ்சது.
பட் என்னோட ஃபேமிலி சிச்சுவேஷன் உங்க கிட்ட நேரடியா பேச தைரியம் கொடுக்கல, அதனால அப்படியே தள்ளி போட்டுட்டு இருந்தேன்..”
“ஏன்?”
"நான் ஸ்கூல் படிக்கும் போதோ காலேஜ் படிக்கும் போதோ
ப்ரொபோஸ் பண்ணி இருந்தா அது வொர்க்கவுட் ஆகியிருக்குமான்னு தெரியாது. பட் காலேஜ்
முடிச்சு எனக்குன்னு ஒரு வேலை, என்னுடைய சுய அடையாளம்
இருக்கும்.. அப்போ பேசிக்கலாம்னு நினைச்சிருந்தேன்.."
"அப்படி என்னோட காதலை சொல்றப்போ என் ஃபேமிலி தொட்டு மற்ற
எதையும் மைண்ட் பண்ணிக்காம என்னை மேரேஜ் பண்ணிக்க வாய்ப்பு இருக்கும்னு
நினைச்சேன். பட் எல்லாமே எனக்கு பேக் ஃபையர் ஆயிடுச்சு"
"நாங்க பிஜி வந்து சேர்ந்த போது சஞ்சுவுக்கு ப்ரொபோஸ்
பண்ணிட்டீங்க... அவ்வளவு தான் என்னோட காதலுக்கு மூடு விழா நடத்திட்டு லைஃபை
பார்க்க ஆரம்பித்தேன்" என்று தோள்களை குலுக்கியபடி சொல்லியவளை வியப்போடு
பார்த்திருந்தான்.
அடுத்து வந்த நாட்களில் முழு ஓய்வு மற்றும் நயனியின்
கவனிப்பில் விரைவாகவே அபய் ஸ்ரீவத்சன் குணமடைந்திருந்தான். இத்தனை நாட்களில்
இருவருக்கும் இடையிலான இணக்கமும் அதிகரித்திருந்தது.
உரிமையோடு நயனி செய்யும் எதையும் அபய் மறுப்பதில்லை.
முடிந்தவரை அவளோடு நேரம் செலவிடவே அவன் மனம் விழைந்தது.
அதற்கு அவனுக்கு பெரிதாக காரணம் தேட தோன்றவில்லை. பின்னே இருவரும்
சேர்ந்திருந்தாலே பெரும்பாலான அவர்களின் பேச்சில் சஞ்சுவே நிறைந்திருப்பாள்.
ஏனோ அவளுடனான இனிய நினைவுகளை பகிர்வதன் மூலம் காயம்பட்ட
இதயத்தை ஆற்ற முனைந்திருந்தான். நயனியுமே அதை புரிந்து கொண்டு சஞ்சுவுடனான அவள்
இனிய நினைவுகளை பகிர்ந்து அவன் மீள உதவி புரிந்தாள்.
அன்று அபய் கல்லூரிக்கு கிளம்புகிறேன் என்ற போது அவனை வெளியே
செல்ல அனுமதிக்காத நயனி "இன்னும் இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு
கிளம்புங்க.." என்று சொல்லி அவள் மட்டும் கல்லூரிக்கு கிளம்ப தயாரானாள்.
'கிளம்புகிறேன்' என்று சொல்லி
விட்டாளே தவிர்த்து நயனிக்கு அவனை தனியே விட்டு செல்ல மனமே இல்லை.
“நீங்க சமாளிப்பீங்க தானே அபய்? நேரத்துக்கு
சாப்பிட்டு, டேப்லெட் போடணும்.. டாக்டர் சொன்ன எக்ஸர்சைஸ்
மறக்காமல் செய்ங்க.. அதிகமா நடக்க வேண்டாம்..”
"நான் என்ன குழந்தையா? இத்தனை
முறை நியாபகப்படுத்துற?..” என்று புன்னகைத்தவன்,
“ஏற்கனவே ஒன் வீக் லீவ் போட்டுட்ட நயனி. ஐ’ம் ஓகே நவ்! நான்
மேனேஜ் பண்ணிக்கிறேன் நீ கிளம்பு" என்று அபய் உறுதி அளித்த பிறகு தான்
கிளம்பினாள்.
அன்று மாலை நயனிகா வீடு வந்த போது அங்கு சேதுராமனும்
தனலட்சுமியும் வந்திருந்தனர்.
"எப்போ ம்மா வந்தீங்க?” என்று
புன்னகையோடு தாயை மட்டும் வரவேற்று நலம் விசாரித்தாள் நயனிகா வர்ஷி.
"இப்போ தான் வந்தோம் நயனி. நிதிஷா கல்யாண பத்திரிக்கை
கொடுக்கனும் ஆனா எங்கே மாப்பிள்ளையும் உங்க மாமனாரும் காணோம்?!”
"ம்மா அவரு ரெஸ்ட் எடுத்துட்டு இருப்பாரு, இருங்க நான் போயிட்டு கூட்டிட்டு வரேன்” என்று மேலே செல்ல அங்கே அபய்
சஞ்சு எழுதிய கடிதத்தை நெஞ்சோடு அணைத்தபடி கண்ணீரோடு அமர்ந்திருந்தான்.
முகம் இறுக கண்களை மூடி இருந்தவன் மறக்க நினைக்கும் நினைவுகள்
அவ்வப்போது அவனை ஆட்கொண்டு வதைக்க மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.
Comments
Post a Comment