வாழ்க்கைத்துணை - 20.3
“அதெல்லாம் ஒன்னும் இல்ல, அதே டேட் தான்! வாட்டர் லெவல்லும் கரெக்ட்டா இருக்கு, என்னோட பிபி, சுகர் லெவல் எல்லாமே பக்கா.. அதனால ஒரு பிரச்சனையும் இல்லைன்னு சொல்லிட்டாங்க.. வலி வந்ததுனா கிளம்பி போக வேண்டியது தான்..”
“உங்களால தூங்க முடியுதா அண்ணி?”
“அப்பப்போ கொஞ்சம் முடியாம போகும். மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்லை.. உனக்கு ரெண்டு பேர் இருக்காங்களே, தூங்க விடறாங்களா? இல்லை சண்டை போட்டு உன்னை எழுப்பி உட்காத்தி வச்சுடுறாங்களா?” என்றாள் புன்னகையோடு.
“தூக்கம் இப்போ ஓரளவுக்கு பரவால்ல சரியா சாப்பிட முடியலை, வாமிட்க்கு டேப்லெட் கொடுத்திருக்காங்க..” என்று டாக்டர் சொன்னதை சொல்ல,
“அதுவே போதும், என் ஃப்ரெண்ட் ஒருத்திக்கும் இப்படி தான் இருந்தது, கடைசியில டேப்லெட் தான் கை கொடுத்தது. கண்டிப்பா வாமிட் சென்சேஷன் குறையும், டோன்ட் வொரி…” என்று இருவரும் பேசிக் கொண்டிருக்க சுமதி அவளுக்கு ஜடை பின்னி பூ தைத்து விட்டார்.
ஒப்பனை முடித்த காயூ, “அண்ணா எங்கே ஆளையே காணோம்? அவரையும் பட்டு வேட்டி சட்டை போட்டுக்க சொல்லு மஹா, மாமா விசேஷத்தை கேப்சர் பண்ண கேமரா மேன் அரேஞ்ச் பண்ணி இருக்கார்..” என்றவளுக்கு சட்டென பதில் சொல்ல முடியாத நிலை மகாவுக்கு.
“வெளியே இருப்பார்னு நினைக்கிறேன் அண்ணி..”
“சரி, நான் போய் அண்ணாவை அனுப்பி வைக்கிறேன்..” என்று காயத்ரி சொல்ல கலங்கிய மனதோடு தன் புடவைக்கு ஏற்ற நிறத்தில் ரிஷிக்கு வேஷ்டி சட்டையை எடுத்து வைத்தாள்.
“சரி நாங்க வெளியே இருக்கோம் சீக்கிரம் வாங்க..” என்று அவர்கள் கிளம்பிய சில நிமிடங்களில் உள்ளே வந்தவன் குளியலறைக்கு சென்று முகத்தை துடைத்தபடி திரும்பினான்.
அவன் உடை தேடுவதை கண்டு, “ரிஷி உங்களுக்கு ஆல்ரெடி எடுத்து வச்சுருக்கேன். வேஷ்டி சட்டை போட்டுக்கோங்க..” என்றாள் மெல்லிய குரலில்.
நிச்சயம் இதற்கு அவனிடமிருந்து பதில் வராது என்று தெரிந்தாலும் குறைந்தபட்சம் எடுத்து வைத்திருக்கும் ஆடையை அணிந்து கொள்வான் என்று எதிர்பார்த்திருந்தாள்.
ஆனால் அவள் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக வேறொரு பேண்ட் சட்டையை அணியத் தொடங்கினான்.
“ரிஷி, ப்ளீஸ் ஃபங்ஷனப்போ வேஷ்டி சட்டை போடுங்க..” என்றதை அவன் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.
“இதெல்லாம் லைஃப்ல ஒரு முறை தான். மிஸ் பண்ண வேண்டாமே..” என்றிட அவனோ அவள் புறம் திரும்பாமல் ஆடையை அணிந்து கொண்டு தலை சீவ தொடங்கினான்.
மகாலட்சுமிக்கு கண்கள் வெகுவாகவே கலங்கி போனது. டிஷ்யூவை எடுத்து மேக் அப் அழியாத வண்ணம் கண்களைத் துடைத்துக் கொண்டவள் அறையில் இருந்து வெளியேறிய கணவனை செயற்கை புன்னகையோடு தொடர்ந்தாள்.
“நல்ல நேரத்துல ஆரம்பிக்கணும் ரெண்டு பேரும் கும்பிட்டுட்டு உட்காருங்க..” என்று பெரியவர் சொல்ல ரிஷி மகா இருவரும் அப்படியே செய்து அமர்ந்தனர்.
முதலில் வந்த பாக்கியலட்சுமி மகள் மருமகன் இருவருக்கும் சந்தனம் குங்குமம் வைத்து மகாவிற்கு பூ வைத்து, கொண்டு வந்த சாதத்தை ஊட்டி விட்டார்.
மகாவின் இதழ்கள் பெரிதாக விரிந்தாலும் அதில் உயிர்பில்லாததை கண்டு கொண்ட பாக்கியலட்சுமி உடனே மருமகனை பார்க்க அவன் முகம் இறுகி கிடப்பதில் ‘ஏதோ சரி இல்லை’ என்பதை புரிந்து கொண்டார்.
அடுத்து வயதில் பெரியவர்கள் நலங்கிட்டு முடிக்க சுமதி, காயத்ரி என்று ஒவ்வொருவராக நலங்கிட்டு வளையல் அணிவித்து சாதம் ஊட்டி விட்டனர்.
ஆனால் வனிதா மட்டும் இதில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றிருந்தாள்.
“என்ன வனி இங்க நின்னுட்ட? போ, போய் நலங்கு வை..” என்றார் சிவபாலன் மகளிடம்.
“நான் எதுக்கு ப்பா? உங்க மருமகளுக்கு என் பொண்ணு முக்கியம் இல்லாதப்போ எனக்கும் அவ முக்கியமில்லை..” என்றாள் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.
‘மகள் எதை சொல்கிறாள்?’ என்பது சாதாரண நேரமாக இருந்திருந்தால் அவருக்குமே புரிந்திருக்காது ஆனால் பேத்தி அவரின் கைபேசியை வாங்கி சென்று 'வனிதாவிற்கு அழைத்தது எதற்காக?' என்று இப்போது நன்கு புரிந்தது.
“வனிதா என்ன பேச்சு இது? அதுவும் நல்ல விசேஷம் நடக்கும் போது. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்..” என்றார் கண்டிப்பான குரலில்.
“என் மகளுக்கு ஒரு தோசைக்கு கூட இந்த வீட்ல வக்கில்லாதப்போ எனக்கு மட்டும் எதுக்கு உறவு?” என்றாள் வீம்போடு.
“நீ பேசுறது கொஞ்சமா சரியில்ல. இது உன் தம்பிக்கான விசேஷம் அதுல கலந்துக்காம நீ ஒதுங்கி நிக்கிறது ரொம்ப தப்பு. இப்படியே பண்ணிட்டு இருந்தேன்னா அப்புறம் ஆனது ஆச்சுன்னு நான் வேற மாதிரி முடிவு எடுக்க வேண்டியதா இருக்கும்..” என்றவரின் மிரட்டலில் தான் சற்று அடங்கியவள்,
“வச்சு தொலைக்கிறேன்..” என்ற முணுமுணுப்போடு சென்றவள், வேண்டா வெறுப்பாக சந்தனத்தை அள்ளிப் ரிஷி மகாவிற்கு பூசி பூ வைத்து விட்டு சாதம் கூட ஊட்டி விடாமல் திரும்பி விட்டாள்.
“தம்பி நீங்களும் வைங்க..” என்று பாக்கியலட்சுமி ரிஷியை அழைத்தார்
அது நேரம் வரை புன்னகையோடு அமர்ந்திருந்த மகா, ‘என்ன செய்வானோ? ஏது சொல்வானோ..’ என்று பரிதவிப்போடு கணவனை பார்க்க நல்லவேளை எதுவும் மறுத்து பேசாமல் சந்தனத்தை அள்ளிக்கொண்டவன் அவள் கன்னங்களில் பூசி நெற்றியில் திலகமிட்டான்.
“அண்ணா மகாவுக்கு பிடிச்ச சாதம் கொடுங்க..” என்று காயத்ரி சொல்லவும் அதையும் ஊட்டி விட்டவன் வெளியில் கிளம்பினான்.
“ஒரு நிமிஷம் இருங்க தம்பி ஆரத்தி எடுக்கனும்..” என்று இருவருக்கும் ஆலம் எடுத்து முடிக்க அங்கு வந்தவர்களுக்காக ஆர்டர் கொடுத்திருந்த உணவுகள் வந்து சேர்ந்தது.
கதிர் ஏற்கனவே மாடியில் டேபிள் சேர் போட்டு தண்ணீர் முதற்கொண்டு அனைத்தையும் சரி பார்த்து வந்திருந்த உணவுகளை மேலே ஏற்றிக் கொண்டிருந்தான்.
ரிஷியும் அவனோடு இணைந்து கொள்ள உணவு பரிமாற பட்டது.
அறையினுள் அமர்ந்திருந்த மகாவின் முகத்தில் கலவையான உணர்வுகள். அவளது கலக்கம் ஓரளவு குறைந்திருந்தாலும் முழுதாக மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை
“நீங்க போய் சாப்பிடுங்க..” என்று மருமகள்களை அனுப்பி வைத்த பாக்கியலட்சுமி மகளை தேடி சென்றார்.
“ஏன் மஹா உன் முகமும் மாப்பிள்ளையோட முகமும் ஒரு மாதிரி இருந்தது. ஏதாவது பிரச்சனையா?” என்றவருக்கு மருத்துவர் மகளின் உடல்நிலை அல்லது குழந்தைகள் பற்றி ஏதேனும் சொல்லி இருக்கிறாரோ என்ற தவிப்பு.
மகாலட்சுமிக்கு தந்தை மீது மரியாதை கலந்து பயம் உண்டு அதேநேரம் பாக்கியலட்சுயிடம் அவளுக்கு எப்போதும் எந்த ஒளிவு மறைவும் இருந்தது கிடையாது.
பள்ளி காலம் தொட்டே எதையும் அன்னையிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்பவளுக்கு ரிஷி அவள் பயந்த அளவு இல்லாததில் இப்போது இதை பெரிது படுத்தவோ அவர்களை கலவரப்படுத்தவோ விருப்பம் இல்லை.
மெதுவாக அவனிடம் பேசி புரிய வைக்கலாம் என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.
“சொல்லு மஹா குழந்தைக்கு ஏதாவது பிரச்சனைன்னு சொன்னாங்களா?”
“ம்மா.. என்னம்மா நீங்க? அப்படி எதுவும் இல்லை. குழந்தைகள் ரொம்பவே ஆரோக்கியமா இருக்காங்க எனக்கு தான் கொஞ்சம் முடியலை..”
“அப்போ மாப்பிள்ளை முகம் ஏன் ஒரு மாதிரி இருந்தது..”
“தெரியலையே ம்மா, ஏதாவது ஆஃபிஸ் டென்ஷனா இருக்கும் நான் பேசிக்கிறேன்.. நீங்க கவலையை விடுங்க.. முதல்ல சாப்பிடுவீங்க வாங்க..” என்று அன்னையை சாப்பிட அனுப்பி வைத்தாள்.
மீண்டும் அறைக்கு திரும்பி உடை மாற்றிக்கொண்டு நகைகளை கழற்றி வைத்து ஒப்பனை களைத்து சாதாரண சுடிதாரில் வர அனைவரும் கிளம்புவதற்காக காத்திருந்தனர்.
அவர்களை வழி அனுப்பிவிட்டு வீட்டினுள் திரும்பியவளுக்கு அத்தனை அசதியாக இருந்தது.
சற்று நேரம் படுத்து நன்றாக தூங்கி எழுந்தால் தான் அடுத்து அவளால் எது ஒன்றும் செய்ய முடியும் என்ற நிலை.
“சாப்பாடு மீந்து இருக்கு பாரு, அதையெல்லாம் வேற பாத்திரத்துக்கு மாத்திட்டு இதை கழுவி வச்சுடு.. எடுத்துட்டு போக ஆளுங்க வந்துடுவாங்களாம்..” என்றார் இந்திரா அதிகாரமாக.
adi pavingala
ReplyDelete