வாழ்க்கைத்துணை - 20.3
அதிகாலையே விழித்து விட்ட மகாலட்சுமி தன் அறையில் மாட்டப்பட்டிருந்த அவர்களின் திருமண புகைப்படத்தில் வெறுமையுடன் பார்வையை பதித்திருந்தாள்.
அவளே ஒதுக்க நினைத்தாலும் முடியாதளவு அவர்கள் இருவரும் ஒன்றாக செலவழித்த நிமிடங்கள் அவள் கண் முன் வலம் வந்தது.
அதிலும் அவர்களின் தேனிலவின் போது அவன் எந்த அளவு அவளை கொண்டாடினான்?! நிச்சயம் வாழ்க்கை முழுக்க இப்படியே இருவரும் பயணிக்க வேண்டும், பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை கொண்டிருந்தாள்.
தேனிலவில் மகாவிடம் அவன் பெரிதாக மனம் விட்டு பேசவில்லை என்றாலும் அவளை ஒரு பொழுதும் பிரியவில்லை. அதற்காக 'அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தார்களா?' என்று கேட்டால் அதுவும் இல்லை.
வெளியிடங்களில் சுற்றி திரிகையில் ஒவ்வொரு சிறு அசைவிலும் சிறு செயலிலும் அவள் மீதான அவன் நேசம் வெளிப்படும். அதை அனுபவித்தவள் மசக்கையின் போதும் எதிர்பார்ப்பதில் தவறு இல்லையே!!
இன்னும் படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளாமல் அவர்கள் புகைப்படத்தை பார்த்திருந்தாள்.
‘எங்கே எல்லாம் மாறிப்போனது’ என்ற கேள்விக்கான தேடலில் மகா. ஒருவேளை இந்திரா கீழே விழாமல் போயிருந்தால் தேனிலவில் இருந்தது போலவே அவர்களின் இணக்கம் இருந்திருக்குமோ என்னவோ?!
ஆனால் இங்கு வந்த பிறகு அப்படி இருந்ததில்லை. தேனிலவில் இருந்து திரும்பிய முதல் இரண்டு வாரங்கள் பாக்கியலட்சுமியோடு மருத்துவமனையில் கழிந்தது. அதன் பிறகு அவரின் பொறுப்பை இருவரில் யாராவது ஒருவர் ஏற்றுக்கொண்டு மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைய வேண்டியதாகி போயிருந்தது.
இருவருமே ஏதோ ஒரு வகையிலான கட்டாய ஓட்டத்தில் தான் இருந்தனர். அவள் கருவுற்ற செய்தி கிடைத்த பின்னர் அவளை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு இந்திராவை வாரம் ஒரு முறை செக்கப்பிற்கு இவன் அழைத்து செல்வது வழக்கமாக இருந்தது.
அப்போது கூட அவர்களுக்கான தனிப்பட்ட நேரம் குறைந்து போனாலும் எல்லாம் சுமூகமாக தான் இருந்தது ஆனால் வேலை விட வேண்டிய சூழலுக்கு அவள் தள்ளப்பட அது தொடர்ந்து இருவர் இடையே நல வாக்குவாதம் அடுத்து சிந்துவின் பிரச்சனை இறுதியாக வனிதாவின் பேராசை என்று அவர்களுக்கு இடையில் தானாகவே ஒரு திரை தோன்றிவிட்டது.
எத்தனை ஆசையோடு அவனை மணம் புரிந்தாள் ஆனால் அதன் ஆயுட்காலம் வெறும் சில மாதங்கள் தானா?! இப்படி சிலரின் வாழ்வு வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் முடிவுக்கு வந்ததை அவளுமே கேள்வி பட்டிருக்கிறாள்.
அதிலும் சில காதல் திருமணம். உருகி உருகி பல வருடங்கள் காதலித்தவர்களால் சில மாதங்கள் கூட சேர்ந்திருக்க முடியாத நிலையில் பிரிந்து சென்றனர்.
அதனாலேயே திருமணத்திற்கு முன்பான காதலில் நம்பிக்கை இல்லாதவள் திருமணத்திற்கு பிறகு ஒருவரின் பலம் பலகீனம் என்று அனைத்தும் அறிந்து புரிதலுடன் வரக்கூடிய காதலுக்காக காத்திருந்தாள்.
என்ன தான் தாலி கயிறு கொடுத்த உறவும் உரிமையும் தாம்பத்தியத்திற்கு வழி வகுத்து உடலளவில் அவர்களை இணைத்திருந்தாலும் மனதளவில் இணைத்து இருக்கிறார்களா? என்று கேட்டால் தனியாக விடை தேட வேண்டியதில்லை.
ரிஷியின் புறக்கணிப்பும் அவர்களுக்கு இடையிலான தற்போதைய பிரிவும் விடை கொடுக்கிறதே!!
நிச்சயம் காதலின் உன்னத நிலையை அடைய அவர்கள் பல படி நிலைகளை கடக்க வேண்டும் என்று அவளுக்கு தெரியும். அதன் பிறகே அவன் அவளாகவும் அவள் அவனாகவும் முழுமை பெற முடியும்.
ஆனால் இப்படி ஆரம்பமே அவர்களின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு போகும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
மெதுவாக எழுந்து காலைக்கடன் முடித்து யோகா எக்ஸர்சைஸ் செய்து முடித்து வந்தவளுக்கு சுட சுட கஞ்சி தயாராக இருந்தது. அதைத்தொடர்ந்து உணவு அவளுக்கு ஆற அமர உணவை முடித்துக் கொண்டு சமையலில் அவர்களுக்கு உதவியபடி கதை பேசுயவளுக்கு பெரிதாக ரிஷியின் நினைவு இல்லை.
ஆனால் அறையில் வந்து தன் குழந்தைகளோடு பேச தொடங்கும் போது மனம் தானாகவே கணவனின் இருப்பையும் எதிர்பார்க்கத் தொடங்கிவிடும்.
ஆனால் இப்போது ரிஷி இருக்கும் நிலைக்கு அவள் என்ன சமாதானம் செய்தாலும் அவன் ஏற்றுக்கொள்ள போவதில்லை. வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு நாம் பேசும் அனைத்தும்கேட்கவும் புரிந்து கொள்ளவும் முடியுமாமே.. அதனால் தாய் தந்தை இருவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
அவள் ஆசைப்பட்டால் போதுமா? நேரமும் காலமும் மட்டுமல்ல அவள் கணவனே அதற்கு எதிராக அல்லவா இருக்கிறான்.
அதனால் மனம் தளராமல் பிள்ளைகளுடனான பேச்சசில் அவர்களின் தந்தையைப் பற்றிய பேச்சையும் கொண்டு வந்து விடுவாள்.
இப்படியே நான்கு நாட்கள் கடந்த நிலையில் “அப்பா நான் வேலைக்கு கிளம்புறேன்..” என்றாள்.
“முடியுமா?” என்று ஒரே ஒரு வார்த்தை தான் கேட்டார் தினகரன்.
ஆண் பெண் இரு பிள்ளைகளும் அவருக்கு சமம் தான்! பெண் பிள்ளைகள் யாரையும் சாராமல் சுயமாக நிற்க வேண்டும் அவர்களின் படிப்பு, திறமை, உழைப்பு யாராலும் தடைப்பட்டு விடக்கூடாது என்று நினைப்பவர்.
சுமதிக்கு வேலைக்கு செல்வதில் விருப்பமில்லை அதே சமயம் காயத்ரி வேலைக்கு செல்கிறேன் என்ற போது முதலில் அதை வரவேற்றவரும் அவர்தான் கர்ப்ப காலத்தை ரசித்து அனுபவிக்க வேண்டும் என்று அவள் வேலையை உதறிய போதும் உடன் இருந்தது அவர் தான்!!
மருமகள்களை எதற்குமே கட்டாயப்படுத்தாதவர்.
இவ்வளவு ஏன்? தன் மனைவியையும் அப்போதே அவர் படித்த படிப்பு வீணாகி விடக்கூடாது என்பதால் அவரும் உடன் இல்லாத தனிமையில் தேவைப்பட்டால் வேலைக்கு செல் என்று அவர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி பாக்கியலட்சுமி வேலைக்கு அனுப்பியவர்.
இரட்டை குழந்தைகள் என்பதால் மகள் வேலை செய்ய முடியாமல் சிரமப்படுவதாக நினைத்திருந்தவர் எப்படியும் அவள் வேலையில் இருந்து நின்று விடுவாள் என்று தான் எதிர்பார்த்தார்.. ஆனால் இப்போது அவளே வேலைக்கு செல்கிறேன் என்றதில் அவருக்கு ஆச்சரியம்.
“முடியும் ப்பா இவ்வளவு நாள் இருந்த டென்ஷன் ஸ்டெரஸ் (Stress) இல்லாமல் இப்போ மனசே ரொம்ப லேசா இருக்கு.. இங்க இருந்து தூரமும் கிடையாது அவசரமா கிளம்ப வேண்டிய அவசியமும் இல்லை என்னோட மார்னிங் ரொட்டீன் முடிச்சுட்டு தான் வந்திருக்கேன்..”
“ஆனா அன்னைக்கு போல தலைசுற்றல் இருந்தா என்ன செய்வ?”
“ம்மா அதுதான் சொல்றேனே… இப்போ எனக்கு மனசு ரொம்ப ரிலாக்ஸா இருக்கு, என்னால ஃப்ரீ மைன்டெட்டா வொர்க் பண்ண முடியும்னு தோணுது..”
“பாக்கியா மகா இஷ்டம் போல செய்யட்டும் விடு எதுவும் தடுக்காத..” என்றிட மகாலட்சுமி கதிரோடு வேலைக்கு கிளம்பினாள்.
மகள் செல்லவும் தானும் அறைக்கு சென்று உடைமாற்றிக் கொண்டிருந்தவர் அங்கே வந்த மனைவியை கண்டு, “என்ன விஷயம் பாக்கியா?” என்றார்.
“என்னங்க நாம குறிச்ச தேதிக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்ல. வளைகாப்பு ஏற்பாடு எப்போ தொடங்குறதா இருக்கீங்க இல்ல மாப்பிள்ளை கிட்ட ஒரு வார்த்தை பேசி அங்கிருந்து வளைகாப்பு பண்ணி கூட்டிட்டு வரும் எண்ணம் ஏதாவது வச்சுருக்கீங்களா?”
“என்ன முடிவா இருந்தாலும் ரொம்ப தாமதிக்க வேண்டாம்.. மண்டபம், சாப்பாடு, தாம்பூலம்னு நமக்கு செய்ய நிறைய வேலை இருக்கு, சொந்த பந்தத்துக்கு சொல்லணும்..”
“பாக்கியா, தன் குழந்தைகளோட விசேஷத்தை விட அக்கா பொண்ணு விசேஷம் முக்கியமா இருக்கிறவர் கிட்ட என்னன்னு பேச சொல்ற? இது இன்னும் பிரச்சனையை அதிகப்படுத்தும்…”
“அதுக்காக வளைகாப்பு பண்ணாம இருக்க முடியுமா? நீங்க தானே பிரம்மாண்டமா செய்வேன்னு சொன்னீங்க, தலைச்சன் குழந்தைகள் மகாவுக்கும் எவ்வளவு ஆசை இருக்கும்..”
“ப்ச், வளைகாப்பு ஏற்பாடு பத்தி பேசுறதோ இல்ல அங்க செய்து கூட்டிட்டு வர்றதோ எனக்கு சரியா படல.. நான் முன்னாடி சொன்ன மாதிரி நானே ஏற்பாடு பண்றேன் ஆனா அவங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டாம்…”
“என்னங்க பேசுறீங்க? வர சொந்தமெல்லாம் மாப்பிள்ளையையும் அவங்க வீட்டாரையும் தேட மாட்டாங்களா? நம்ம பொண்ணோட விசேஷம் இது!! சில விஷயங்கள் விட்டுக் கொடுத்து தான் ஆகணும். இப்ப என்ன உங்க பொண்ண திரும்ப வாழ அனுப்புற திட்டத்துல இருக்கீங்களா? இல்லை காலம் முழுக்க உங்க கூடவே வச்சுக்க போறீங்களா? அதை சொல்லுங்க முதல்ல..”
“என்ன கேள்வி பாக்கியா இது?”
“இல்ல தானே!! அப்போ அவர் குழந்தைகளுக்காக ஒரு விசேஷத்தை செய்கிறப்போ அவரும் இருக்கிறது தானே முறை. விசேஷத்துக்கு வரவங்க உண்மை நிலவரம் தெரியாம நாலு விதமா பேசுறதுக்கு நாமளே வழி வகுத்திட கூடாது..” என்ற மனைவியின் பேச்சில் இருந்த நிதர்சனம் தினகரனுக்கும் புரியத்தான் செய்தது.
அதேநேரம் அலுவலகத்திற்கு வந்த மகாவை எதிர்கொண்ட ஜெயசித்ரா, “எப்போ பேப்பர் போட போற மகா?” என்றாள்.
“நிச்சயமா! நீ சொல்றது சரி தான் ஜெய். பார்ப்போம் லைஃப் எனக்காக என்ன வச்சு காத்திருக்குன்னு.. அப்போ வொர்க் ஃப்ரம் ஹோம் கிடைச்சுட்டா இன்னும் வசதியா இருக்கும்..”
“அதெல்லாம் கிடைக்கும்.. உன்னால பர்சனல் அன்ட் ப்ரொபஷனல் லைஃப் இரண்டிலுமே சக்சஸ் பண்ண முடியும்..” என்றபடி வேலையை தொடர்ந்தனர்.
****************
“மகா, குழந்தைகள் சந்தோஷத்திற்காக செய்கிற விசேஷம் அவளை கஷ்டப்படுத்த கூடாது, சங்கடத்தில் ஆழ்த்தக்கூடாது. மாப்பிள்ளை அடிச்சது, பத்திர பிரச்சனை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். யார் வீட்டில் தான் பிரச்சனை இல்ல? பிரச்சனையை மட்டுமே இழுத்து பிடிச்சு தொங்கிக்கிட்டு இருந்தா வாழ வேண்டிய வாழ்க்கையை வாழறது எப்போ?”
“இப்ப நாம மாப்பிள்ளையை அழைக்காமல் போறதும் அவங்களுக்கு இடையிலான விரிசலை அதிகமாக்க தான் செய்யும். ஒருவேளை நாளை பின்ன மகா எதிர்பார்க்கிற மாதிரி மாப்பிள்ளை அவளுக்கான மரியாதையோடு வந்து அழைச்சிட்டு போய் வாழ்ந்தாலும் அவர் மனசுல தன்னை விட்டுட்டு வளைகாப்பு பண்ணினாங்கன்னு சின்ன கசப்பு கூட வந்துடக்கூடாது.. அதைவிட அவளோட மாமியார் மகாவை இதை சொல்லி குத்தி காட்ட நாமலே வழி வகுப்பது ரொம்ப தப்புங்க..”
“புரியுது பாக்கியா ஆனா..” என்றவரை இடையிட்டு,
“வருஷம் கூட முடியல ஆனா நம்ம பொண்ணோட வாழ்க்கை விடை தெரியாத கேள்வி மாதிரி ஆயிடுச்சு. பிரச்சனைன்னு விலகி போறது ரொம்ப சுலபம் ஆனா காலம் முழுக்க கூட இருந்து வாழ்வதற்கு தான் நிறைய மெனக்கடனும். விட்டுக் கொடுக்கணும், அனுசரிச்சு போகணும், பொறுமையா இருக்கணும், இதெல்லாம் செய்ய முடியாதவங்க கல்யாணமே பண்ணிக்க கூடாது..”
“இது உன் மாப்பிள்ளைக்கும் பொருந்தும் பாக்கியா..”
“நான் இல்லைன்னு சொல்லலையேங்க, அதனால தான் என் பொண்ணோட சுயமரியாதையை விட்டு கொடுத்து அவளை அங்கே போய் வாழுன்னு சொல்ல மாட்டேன். ஆனா விசேஷத்துக்கு கூட அழைக்காம இருந்தா எப்படி?”
“நம்முடைய முறையை நாம சரியா செய்யலாம் அதுக்கு மேல ஆண்டவன் கிட்ட வழி. அதைவிட ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவத்தப்போ புருஷன் பக்கத்துல இருக்கிறது பெரிய பலம். இப்போ கோபமா இருக்கிற மாப்பிள்ளை நாளைக்கு அவளோட பிரசவத்துல கூட இருந்தா அதுவே அவளுக்கு யானை பலத்தை கொடுக்கும் பிரசவமும் சிக்கல் இல்லாமல் இருக்கும்…”
“அவர் வருவாரா?..” என்றவருக்குமே பாக்கிய அவரின் பிரசவத்தின் போது தினகரனை எத்தனை தேடினார் என்பதும் அவரிடம் பேசிய பிறகே பிரசவ அறைக்கு சென்றதும் இன்னுமே மனதில் நிழலாடியது.
அதனால் மனைவியின் வார்த்தைகள் எத்தனை நிஜம் என்பது புரிபட, தாயும் சேய்களும் எந்த சிக்கலும் இல்லாமல் நல்ல படியாக பிரிய வேண்டுமே என்ற எண்ணம்.
“நாளைக்கு மகாவுக்கு குழந்தைகள் பிறந்தால் மாபிள்ளைக்கு சொல்லாமல் போயிடுவீங்களா? சொல்லுங்க?”
“சரி பாக்கியா, சம்மந்தி வீட்டிற்கும் மாப்பிள்ளைக்கும் தகவல் கொடுத்துடலாம்..”
“அழைக்கலாம்னு சொல்லுங்க..”
“அது விசேஷத்துக்கு வரப்போறவங்களுக்கு எனக்கு தெரிஞ்சு இவங்க வருவாங்கன்னு நம்பிக்கை இல்லை அதிகபட்சம் சம்பந்தி வருவார், மாப்பிள்ளை நினைச்சாலும் அவங்க அம்மா விடுவாங்களான்னு தெரியலை..”
“என்னங்க இது? நீங்களாவே முடிவு பண்ணிட்டீங்க. அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மாப்பிள்ளை வருவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு, வாங்க முறைப்படி போய் அழைச்சுட்டு வந்துடலாம்..”
“போகலாம் ஆனால் மாப்பிள்ளையை வீட்ல போய் கூப்பிட வேண்டாம் அவரோட ஆபீஸ்ல சந்திச்சு அழைக்கலாம்..”
“ஏங்க..”
“இல்லம்மா அந்த அம்மா இருக்கும் போது அவர் கிட்ட எதையும் பேச முடியாது. நம்ம தொடங்கினாலே அந்த அம்மா இடையில வந்து பிரச்சனை பண்ணுவாங்க.. நீ சொல்ற மாதிரி ஒருவேளை மாப்பிள்ளை மகா மேல இருக்கிற கோபத்தை மறந்து குழந்தைகளுக்காக வரணும்னு நினைச்சா கூட இவங்க விட மாட்டாங்க.. அதனால முதல்ல மாப்பிள்ளை பார்த்து பேசிட்டு வந்துடலாம் அதுக்கப்புறம் அவங்க கிட்ட பேசிக்கலாம்…”
“சரிங்க…” என்றவரும் தயாராக தாமதிக்காமல் உடனே ரிஷியை சந்திக்க சென்றனர்.
nice
ReplyDeletemuraipadi poi adichittuvaralam nu irukku ana avangalukku athu correct tha but azhaikkanm thana