
“என் வேதனை உங்களுக்கு சிரிப்பா இருக்கா..? எனக்கு லேகாவோட தனியா பேசணும் அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க..”
“என்ன ஏற்பாடு..?”
“ப்ச் கோவிலுக்கு போறதை சொல்றேன்டா.. நாம ப்ளான் பண்ணினபடி கிளம்பினா போதும் பாதி வழியிலேயே எப்படியாவது அவளை நான் தனியா கூட்டிட்டு போயிடுவேன் நீங்க கோவில்ல இருந்து வீட்டுக்கு திரும்ப வரப்போ அவளை வீட்ல விட்டுடுவேன் புரிஞ்சுக்கோங்கடா..” என்று தத்தளித்து போனான்.
“சரிடா ஆனா லேகாவை கூட்டிட்டு போறது உன் சாமர்த்தியம்... நாங்க அதுக்கு ஹெல்ப் பண்ண மாட்டோம்” என்ற சரத்திற்கு பழம் நழுவி பாலில் விழுந்த மகிழ்ச்சி.. பின்னே எப்படியும் கோவிலுக்கு தங்களுடன் வரும் அவர்களை சமாதானபடுத்தி தன் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டிருக்கையில் இப்போது அஜய் பாதி வழியிலேயே லேகாவோடு இறங்கி கொள்கிறேன் என்றதில் அவர்களிடம் சொல்லி சம்மதிக்க வைக்கும் வேலை அவனுக்கு மிச்சமாகி போனதே..
அதோடு எத்தனை தூரம் அஜய்யும் லேகாவும் அவன் தாலி கட்டியது தெரிந்ததும் அதை ஒப்பு கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கே இல்லை.. ஒருவேளை ஏதேனும் சண்டித்தனம் செய்தால் அவர்களுக்கும் மயக்க மருந்து கொடுக்க திட்டமிட்டானே தவிர யாருக்காகவும் தளிரை இழக்க அவன் தயாராக இல்லை.
“எல்லாம் சரி மச்சான் ஆனா சந்தியாவை விட்டுட்டு எப்படிடா போறது...” என்று அசோக் யோசனையாக மற்றவர்களை பார்த்தான்.
“டேய் அவளுக்காக காத்திருந்தா நம்ம பையனை ஐசியூ ல அட்மிட் பண்ண வேண்டிய நிலைமை வந்தாலும் வரலாம்..” என்று சிரித்த தீனா,
“கவலைபடாத அஜய் நாங்க சந்தியா கிட்ட பேசுறோம் அவ புரிஞ்சுப்பா” என்றவர்கள் அஜய் லேகாவின் ஊடலை சந்தியாவிடம் பகிர்ந்து படிக்க முடியாமல் அவஸ்த்தைபடுபவனின் அவசரத்தை சொல்லவும் புரிந்து கொண்டவள் அடுத்த நாளே கல்லூரியில் சந்தித்த போது தன் முடிவை தெளிவாக தெரிவித்துவிட்டாள்.
“கைஸ் நான் வரலன்னா என்ன, எனக்காக நீங்க வேண்டிக்க மாட்டீங்களா..? என்னோட தான் போகணும்னா அதுக்கு எப்படியும் இன்னும் ஐந்து நாளாவது ஆகிடும். அதுக்கு அடுத்த இரண்டாவது நாள் நமக்கு செமெஸ்டர் ஆரம்பிச்சுடும்.. ஸோ நோ இஷ்யூஸ் நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க” என்றதும் அவர்கள் கோவிலுக்கு செல்லும் நாள் உறுதிபடுத்த பட்டது.
அன்று நண்பர்களுடன் கோவிலுக்கு செல்வதற்காக மஞ்சள் வர்ண மென்பட்டில் அளவான ஒப்பனையோடு அலங்காரத்தை முடித்துகொண்ட இளந்தளிர் ஹால்டிக்கட்டை எடுத்து கைப்பையில் வைத்துக்கொண்டு ஹாலிற்கு வர அவளுக்கான மல்லிகைப்பூவோடு காத்திருந்த மீனாக்ஷி,
“சீதா புள்ள கோவிலுக்கு போயி திரும்ப வந்ததும் திருஷ்டி சுத்தி போட மறந்துடாத” என்று தளிரை நெட்டிமுறித்து தானே அவளுக்கு பூவை சூட்டினார்.
“ஏன் அத்தை எப்பவும் போல தானே இருக்கேன் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்..?” என்று சிரிப்போடு தளிர் அவரை கட்டிக்கொள்ளவும்,
“நீ சடங்கானப்போ உன்னை புடவையில பார்த்தது அப்போ சின்ன புள்ளையா இருந்த அனா இப்போ இந்த மஞ்சபட்டுல அப்படியே அம்மன் கணக்கா இருக்க தாயீ என் கண்ணே எடுக்கமுடியல...” என்று தளிரின் உச்சியில் முத்தமிடவும்,
“பொங்கல் தீபாவளி செலிப்ரேஷனுக்கு காலேஜ்ல போய் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கட்டியிருக்கேன் த்தை வீட்டுக்கு வரப்போ சுடி மாத்திட்டு வந்துடுவேன்.. இன்னைக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் புடவை வேஷ்டி சட்டை ட்ரெஸ் கோட் சொல்லிட்டாங்க.. அதனால உங்களுக்கு பார்க்கிற பாக்கியம் கிடைச்சது இதுக்கு நீங்க என் ஃப்ரெண்ட்ஸ்க்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் த்தை” என்றாள் சிரிக்க அவளோடு கலந்தது மீனாக்ஷியின் மனம் நிறைந்த சிரிப்பும்.
"நான் நன்றி சொன்னேன்னு சொல்லிடு.. ஆனா
இனி அடிக்கடி புடவை கட்டு உனக்கு அம்சமா இருக்கு” என்று தம்பி மகளின் அழகை
சிலகணங்கள் உள்வாங்கியவர், “பத்திரமா போயிட்டு வா தாயீ"
என்றார்.
“ம்மா நேரமாச்சு நான் கிளம்பறேன்” என்றாள் சமையலறையில்
இருந்த சீதாவிடம்.
“வெறும் வயித்தோடு கிளம்பாத அம்மூ இட்லி
எடுத்துட்டேன் ஒரு வாய் சாப்பிட்டு கிளம்பு” என்றதில் தளிர் மீனாக்ஷி அருகே
அமரவும்,
“அக்கா அடுத்த வாரம் எக்ஸாம் ஆரம்பிக்க போகுது
எனக்கும் சேர்த்து வேண்டிக்க மறந்துடாத..” என்ற தென்றல் பள்ளிசீருடையில் தலையை
பின்னிக்கொண்டே சொல்ல மகள்களுக்கு தட்டில் இட்லியை வைத்து கொண்டு வந்தார் சீதா.
“நீ கொடு சீதா நான் ஊட்டிவிடறேன் உனக்கு
வேலைக்கு நேரமாச்சு நீயும் போய் சாப்பிடு” என்று மீனாக்ஷி சொல்லவும் தனக்கும்
போட்டுகொண்டு அவசரமாக உண்ண தொடங்கினார்.
“எப்படி சிட்டு மறப்பேன்..? சக்தி வாய்ந்த அம்மனாம்..! தீனாவோட அத்தை ஹஸ்பன்ட் வழியில இருக்க
குலதெய்வம் அங்க நாம வைக்கிற வேண்டுதல் எதுவும் நிறைவேறாம போனதே இல்லன்னு சொன்னான்
கண்டிப்பா உனக்கும் சேர்த்து வேண்டிக்கிறேன்..”
“எல்லாரும் பஸ்ல தானே போறீங்க..? எவ்வளவு நேரமாகும் அம்மூ”
“பஸ் இல்லம்மா சரத் அவங்க அப்பாகிட்ட கார்
கேட்டு இருக்கான் டிரைவர் தான் வரப்போறாரு அதனால பயம் இல்லை.. அரக்கோணத்துக்கு
முன்னாடியே ஏதோ கிராமம், ட்ராபிக் முன்ன கிளம்பிட்டா
இங்கிருந்து ஒரு ஒன்றரை மணி நேரம் தான் ஆகும்னு சொன்னான் கோவிலுக்கு போயிட்டு அப்படியே
அவங்க அத்தை வீட்டுக்கும் போயிட்டு வருவோம் அவங்க எங்களுக்காகவே லஞ்ச் சமைச்சு
வைக்கிறேன் சொல்லியிருக்காங்க ம்மா”
நண்பர்கள் அனைவரும் புத்தகம் வாங்குவதற்காக எக்ஸிபிஷன் உட்பட
இன்னபிற இடங்களுக்கு தவிர்க்க முடியாமல் அவ்வப்போது காரில் சென்று இருப்பதால்
சீதாவும் அதுகுறித்து மேலும் கேள்வி கேட்காது, “சந்தியாவும்
லேகாவும் எங்க காணோம்..?” என்றார்.
பின்னே தளிரின் வீட்டிற்கு வருவதற்கான அனுமதி லேகா மற்றும்
சந்தியாவிற்கு மட்டுமே கொடுக்கபட்டிருந்தது. ஆம் ரகுபதி இருந்த போது நண்பர்கள்
சிலமுறை அவள் வீட்டிற்கு வந்திருந்தாலும் ரகுபதியின் மறைவிற்கு பின் அது வெகுவாக
குறைந்துவிட்டது.
அவர் மறைந்த போது வாரிசு சான்றிதழ் வங்கி கணக்கு
மாற்றத்திற்காக சீதா வெகுவாக திண்டாடிய போது அஜய்யும் சந்தியாவும் தங்கள் தந்தையர்
மூலம் அவர்களுக்கு உதவ நண்பர்களோடு அவ்வப்போது வீட்டிற்கு வந்திருந்தனர்.
அதை கவனித்த மீனாக்ஷி சீதாவிடம் ‘பொட்டபுள்ளைங்க வீட்டுக்கு
வருறது சரி, ஆனா ஏன் ஆம்பள பசங்க வராங்க..? அதுவும்
என் தம்பி இல்லாதப்போ..! என்று கேட்க, அவங்க எல்லாரும்
ப்ரெண்ட்ஸ் நமக்கு உதவத்தான் வராங்க சித்தி என்றார்.
‘கூட்டாளிகளா இருந்தா என்ன..? யார் யாரை எங்க நிறுத்தனும்ன்னு சொல்லி கொடுக்க தெரியாதா..? வயசு
புள்ளைங்க இருக்க வீட்டுக்கு கண்ட நேரத்துல ஆம்பள பசங்க வந்தா ஊர் என்ன பேசும்னு
உனக்கு தெரியாதா..? ஏன் அடுத்தவங்க வாய்க்கு நாமலே அவலை
கொடுக்கணும்’ என்று சற்று கடுமையாகவே காய்ந்தார் மீனாக்ஷி.
‘எனக்கு புரியுது சித்தி ஆனா அவங்கப்பா
இருந்தவரை இப்படி அடிக்கடி வருவாங்க தளிரும் அவங்க வீட்டுக்கு போயிருக்கா இப்போ
நான் அதை வேண்டாம்னு சொன்னா தளிர் எப்படி எடுத்துப்பான்னு தெரியலை’ என்று அவர்
மென்று விழுங்க..,
“எப்படி எடுத்துப்பாளா..? என்ன பேச்சு பேசுற? சின்னபுள்ளையா இருந்தாலும் நீ
என் தம்பி பொண்ணு எடுத்து சொன்னா எதிர்த்து பேசுற ரகம் இல்ல...
பெரியவங்க சொல்ற வார்த்தையில இருக்க நல்லது கெட்டது பிரிச்சு பார்க்க தெரிஞ்சவ,
புள்ள கிட்ட நானே பேசிக்கிறேன்” என்றவர் தளிரை அழைத்து இனி
நட்பெல்லாம் பள்ளியோடு முடித்துக்கொள்ள வேண்டும் ஆண் நண்பர்கள் யாரும் வீட்டுக்கு
வரக்கூடாது என்று தீர்மானமாக சொல்லிவிட்டார்.
கடந்த சில நாட்களாகவே தந்தை இல்லாத போது வீட்டிற்கு
வந்தவர்களிடம் சரியாக பேச முடியாது அனைவரிடமும் நிலவிய ஒருவித சங்கடமான நிலையை
உணர்ந்தவள் மீனாக்ஷி சொல்லவும் நண்பர்களிடம் பேசிட அவர்களும்
புரிந்துகொண்டனர்.
“எல்லாரும் இல்லமா சந்தியாக்கு இன்னைக்கு
பீரியட்ஸ் செகண்ட் டே அவ மட்டும் வரல.. அவளுக்கும் சேர்த்து எங்களை வேண்டிக்க
சொல்லி இருக்கா” என்றபோதே தளிருக்கு அழைத்திருந்தாள் சந்தியா.
பேசிமுடித்த தளிரிடம், “சரி அம்மூ ரொம்ப லேட்
பண்ணாம நேரத்தோடு வந்துருங்க” என்று மகளை வழி அனுப்பி
வைத்தார்.
“சரிம்மா” என்ற தளிர் மீனாக்ஷி மற்றும்
சீதாவிடம் சொல்லிக்கொண்டு லேகா வீட்டிற்கு செல்ல அங்கே அவள் தந்தை ஏற்பாடு
செய்திருந்த காலை உணவை முடித்துக்கொண்டு நண்பர்கள் அனைவரும் தளிருக்காக
காத்திருந்தனர்.
“பை அங்கிள், ஆன்ட்டி”
என்று கையசைத்ததும் சந்தியா தவிர்த்து மற்றவர்களோடு கார் கிளம்பியது.
முன்னே சரத் அமர்ந்திருக்க அடுத்த இருக்கையில் ஜன்னலோரம்
லேகாவும் அஜய்யும் ஆக்கிரமித்து கொள்ள அவர்களுக்கு நடுவில் தளிர்
அமர்ந்திருந்தாள். பின் சீட்டை அசோக்கும் தீனாவும் ஆக்கிரமித்து இருந்தனர்.
“ஹெல் (hel) முடிச்சிட்டியா
தளிர்..?” என்று அவள்புறம் திரும்பி பேசிக்கொண்டு வந்தாலும் இறைஞ்சுதலோடு
தன்னையே தொடர்ந்த அஜய்யின் பார்வையை லேகா சட்டை செய்யவே இல்லை.
“hel ல கூட தாக்கு பிடிச்சிடலாம் ஆனா she
ரொம்ப கஷ்டமா இருக்கு தளிர்” என்று அஜய்
காதலியை பார்த்தவாறு புலம்ப அதை புரிந்து கொண்ட நண்பர்கள் கூட்டத்தில் சிரிப்பலை.
“அஜய் நீ social history of england தானே சொன்ன..?” என்று தளிர் சந்தேகமாக பார்க்க
தளிரோடு சேர்த்து லேகாவோடு செல்ஃபி எடுத்து கொண்டிருந்த அஜய் சிறு தடுமாற்றத்தோடு,
“ஆமா ஆமா.. இப்போதைக்கு she யோட போராடன்னும்னு என் கட்டத்துல இருக்கு” என்று
சொன்னவனை முறைத்த லேகாவை கண்டு மற்றவர்கள் சிரிக்க அதன்பின் நகர்ந்த
நிமிடங்கள் முழுக்க பேச்சு சிரிப்பு என்று குறைவில்லாத மகிழ்ச்சியை தன்னகத்தே
கொண்டிருந்தது.
அனைவரும் அரட்டை அடித்து கொண்டு செல்ல வழியில் இரு முக்கிய
கோவில்களையும் தரிசித்துவிட்டு செல்லலாம் என்று சொல்லி சரத் தீனாவின் அத்தை
வீட்டிற்கு செல்லும் நேரத்தை தாமதபடுத்த அதற்கேற்ப ட்ராபிக்கில் நத்தையாய் ஊர்ந்து
அவர்கள் சென்னையை விட்டு வெளியில் வர மேலும் மூன்று மணி நேரமாகி இருந்தது.
அதேநேரம் லேகாவை சமாதானம் செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்த
தொடங்கினான் அஜய்.
“மச்சி அத்தை வீட்டுக்கு ஃப்ரூட்ஸ் வாங்கிட்டு
போகலாம்டா” என்ற அருகே இருந்த பழக்கடையில் நிறுத்த சொல்லியவன்
திரும்பிய போது இரண்டு பை நிறைய பழங்களை வாங்கி வந்து.. ஒன்றை தளிரிடம் இது அத்தை
வீட்டுக்கு என்று கொடுத்தவன் அடுத்ததை திறந்து, ஆரஞ்சு,
மாதுளை, தர்பூசிணி, திராட்சை
என்று ஒவ்வொருவருக்கும் பிடித்ததை கொடுத்தவன் லேகாவிற்கு கொடுக்காமல் போனதை
கவனித்த தளிர்,
“அஜய் லேகாக்கு எதுவும் வாங்கலையா..?”
“வாங்கியிருக்கேன் ஒருநிமிஷம்” என்றவன் ஆப்பிளை எடுத்து அதை இரண்டாக நறுக்கும் போது ஆப்பிளோடு சேர்த்து
கத்தியை தன் உள்ளங்கையிலும் இறக்கி இருந்தான்.. அவன் உள்ளங்கையில் இருந்து ரத்தம்
பீறிட்ட மறுநொடியே “அஜய்” என்ற லேகாவின் அலறலில் காரை நிறுத்தியிருந்தார் டிரைவர்.
லேகாவின் பதற்றம் மற்றவர்களையும் தொற்றிக்கொள்ள உடனே தன்
கைக்குட்டையை எடுத்த தளிர், “என்ன அஜய் கவனமா செய்யமாட்டியா..? அவ என்ன சின்ன குழந்தையா கட் பண்ணி கொடுத்ததா தான் சாப்பிட..?” என்று திட்டிக்கொண்டே அவன் உள்ளங்கையில் கைக்குட்டையை வைத்து அழுத்தி
பிடித்தவள்,
“சரத் பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிட்டல் இருக்கா
பாரு ப்ளீடிங் ஜாஸ்த்தியா இருக்கு” என்று சொல்லவும்,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் தளிர் லேசா
கீறியிருக்கும் நமக்கு டைம் ஆகுது.. ஹாஸ்பிட்டல் போனா லேட் ஆகிடும் அப்புறம்
கோவில் நடை சார்த்தியிருந்தா என்ன செய்ய அதுக்குள்ள போகனுமில்ல..” என்று
மறுத்தான்.
“அஜய் எவ்ளோ ரத்தம் போயிருக்கு இது லேசான
கீறலா..? கொஞ்சமாச்சும் அறிவோடு பேசு” என்றவள் பக்கத்தில்
இருந்த ஆட்டோக்காரரிடம் விசாரித்தாள்.
அடுத்த பத்துநிமிடத்தில் வாகனத்தை கிளினிக் முன் நிறுத்தவும் அஜய்யோடு
இறங்கிய தளிர் உள்ளே செல்ல முனைய, கண்ணீரோடு அவளருகே வந்த லேகா “தளிர் நான்
கூட்டிட்டு போகட்டா..?” என்றாள்.
“சரி” என்றவள் தன் கையை எடுத்துவிட்டு அஜய்
கையை லேகாவிடம் கொடுக்க, “தளிர் சொன்னா கேளுங்க இப்போவே
நமக்கு லேட் ஆகிடுச்சு ஹாஸ்பிட்டல்ல எவ்ளோ நேரமாகும்னு தெரியாது” என்றவனுக்கு
எங்கே அவர்களின் தனிமையை தளிர் கெடுத்துவிடுவாளோ என்ற அச்சம்.
“அதுக்காக உன்னை அப்படியே விட்டுட்டு போக
முடியாது மச்சி” என்றான் சரத் கண்களை எட்டாத புன்னகையோடு.
“ப்ச் அதுதான் லேகா என்னோட இருக்காளே நீங்க ஏன்
டைம் வேஸ்ட் பண்றீங்க..? அவ என்னை பார்த்துப்பா நீங்க
கிளம்புங்க நான் கட்டுபோட்டுட்டு டாக்டரை பார்த்துட்டு பஸ்ல வந்துடுறோம்” என்று
சொல்ல,
“தளிர் அதுதான் அஜய் லேகா பார்த்துப்பான்னு
சொல்றானே.. கோவில் நடை சாத்திட்டா அப்புறம் நாம போய் எந்த யூஸும் இருக்காது வா”
என்றான் தீனா.
“சரி அஜய் சீக்கிரம் வந்துடுங்க” என்ற தளிர்
ஏறி அமர கார் புறப்பட்டது. கோவிலுக்கு சென்ற பின் அத்தை வீட்டுக்கு
சென்றுகொள்ளலாம் என்று தளிர் சொல்லவும் அதுபோலவே செல்ல அங்கே கோவில்
பூட்டப்பட்டிருந்தது.
“ப்ச் நாம இவ்ளோ வேகமா வந்தும் யூஸ் இல்லாம
போச்சே” என்று சரத் போலியாக சலிக்க,
“ஒன்னும் பிரச்சனை இல்லடா எப்படியும் சாவி எங்க
மாமாகிட்ட தான் கொடுத்திருப்பாங்க நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன் நீங்க இங்கயே
இருங்க” என்ற தீனா டிரைவரோடு கிளம்பினான்.
அவன் கிளம்பவும் தன் கையில் இருந்த பழங்களை படியில்
வைத்துவிட்டு தளிர் அமர்ந்துகொள்ள, “ரொம்ப டையார்ட்டா தெரியுற தளிர்..ஏன்
பசிக்குதா..?” என்று அசோக் கேட்க,
“இல்ல அசோக் நல்லாத்தான் இருக்கேன் ஒருவேளை
இவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணி வந்ததால அப்படி இருக்கோ என்னமோ” என்று
சொல்லிக்கொண்டிருக்கையிலேயே மயக்க மருந்து கலக்கப்பட்ட ஜூஸோடு வந்தான் சரத்.
தன்னை சுற்றி பின்னபட்டிருக்கும் சதிவலை குறித்த அனுமானமே
இல்லாத தளிர் வெகு இயல்பாக நண்பனிடம் இருந்து பழச்சாறை வாங்கிகொண்டு அவர்களுடன்
பேசியவாறு குடிக்க தொடங்கினாள்.
“இங்கிருந்து தீனா அத்தை வீடு எவ்ளோ தூரம்
சரத்..?” என்று தளிர் கேட்க அவர்கள் முன்னே வந்த அசோக்
செல்ஃபி எடுக்கிறேன் என்ற பெயரில் இருவரையும் புகைப்படமாக எடுத்து
தள்ளிக்கொண்டிருந்தான். இடையிடையே போஸ் கொடுக்க சொல்லவும் தளிரும் விகல்பம்
இல்லாமல் புன்னகையோடு போஸ் கொடுத்தாள்.
“கார்ல போனா பத்து பதினைந்து நிமிஷம் தான்
இருக்கும்னு நினைக்கிறேன் தளிர்”
“நீங்க இதுக்கு முன்னாடியே வந்திருக்கீங்களா..?
ஒருமுறை எல்லாரும் வரலாம்னு ப்ளான் பண்ணி கேன்சல் ஆனது இவங்க வீடு
தானே..?”
“ஆமா..!! எங்களை திருவிழாக்கு ஒருமுறை
கூட்டிட்டு வந்திருக்கான், அப்போ தேர் பின்னாடி நடந்து
வந்தோம் ரொம்ப நேரமாச்சு, சீக்கிரம் வந்துடுவான்” என்று
சொல்லிக்கொண்டிருக்கும் போதே கார் வர அதிலிருந்து தீனா, சாந்தினி
மற்றும் சுனில் இறங்கினர்.
Comments
Post a Comment