“வாயை மூடு அசோக் இனி ஒரு வார்த்தை பேசாத,
எனக்கு செய்த துரோகத்துக்கு பேர் நல்லதா..? இப்படி
ஒரு கேவலமான காரியத்தை செஞ்சுட்டு புரிஞ்சுக்கணும் சொன்னா என்ன அர்த்தம்..?”
என்று சீறிய இளந்தளிருக்கு இப்படியும் ஒரு நாள் தன் வாழ்வில்
வரக்கூடும் என்ற எண்ணமே இல்லாததில் இன்றைய நிகழ்வுகள் பேரதிர்ச்சியே..!!
அவர்களிடம் என்ன பேச, அடுத்து என்ன செய்ய என்று
புரியாத ஒரு நிலை..!
“தளிர்
அப்படி எல்லாம் பேசாத, சரத் விட உனக்கு ஒரு நல்ல லைஃப்
பார்ட்னர் கிடைக்க மாட்டாங்க அதனால தான் நாங்க அவனுக்கு உதவ நினைச்சோம்.. அவனோட
காதல் எவ்ளோ தெய்வீகமானதுன்னு உனக்கு தெரியுமா தளிர்..?” என்று
அசோக் முன்னே வர அவனை முந்திக்கொண்டு வந்த தீனா,
“அவன் உன்ன உயிருக்கு உயிரா விரும்புறான் தளிர்
அவனோட காதல் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்.. அவனோட வாழ்ந்தா உனக்கு எந்த
கஷ்டமும் இருக்காது.. செமெஸ்டர் பீஸ் கூட அவனே பார்த்துப்பான் நிச்சயமா உங்க
அப்பாவோட இடத்துல இருந்து உன்னை..” என்று தீனா தொடங்கும் பளார் என அவன் கன்னத்தில்
அறைந்தவள்..,
“ராஸ்கல் வாயை மூடு! என் வாழ்க்கையை டிசைட்
பண்ண நீங்க யாருடா..? யாரை யார் கூட கம்பேர் பண்ற..? இந்த
நாய் எங்க அப்பா இடத்தை நிரப்புவான்னு சொல்ற உனக்கு அசிங்கமா இல்ல” என்ற தளிருக்கு
நண்பர்கள் என்று நம்பி பழகியவர்களின் துரோகத்தை எதிர்பாராததில் கண்ணீர்
பெருகியது..
வாழ்க்கையில் அவள் பெற்ற முதல் அடி..! அதுவும் உயிர்
தோழர்களான அவர்கள் மீது வானளவு அவள் கொண்டிருந்த நம்பிக்கைக்கும் நட்புக்கும்
விழுந்த பேரிடி..!
சிறு தூறலாக இருந்த மழை இப்போது வேகமேடுக்கவும், “தளிர்
மழையில நனையாத உள்ள வா பேசிக்கலாம்” என்ற சரத்தை நம்பி மீண்டும் காரில் அமர அவள்
தயாராக இல்லை.
எத்தனை கெஞ்சியும் மீண்டும் காருக்கு வராதவளுக்கு எப்படி
தன்னை புரிய வைப்பது என்று அலமலந்து போன சரத், “தளிர்
உனக்கு லவ் பிடிக்காதுன்னு தான் இத்தனை வருஷமா நான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணல ஆனா
நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு தெரிஞ்சா நீ நிச்சயம் என்னை வேண்டாம்னு சொல்ல
மாட்ட தளிர்.. ப்ளீஸ் ஒரே ஒருநிமிஷம் இதோ வந்துடுறேன்” என்றவன் ஓடி சென்று காரின்
பின்புறத்தில் இருந்து ஒரு பையை எடுத்து வந்தவன் அதை வேகமாக திறந்து,
“இதோ பாரு தளிர் இது நான் போர்த்திக்கிற
பெட்ஷீட்” என்று ஒரு போர்வையை விரிக்க வெள்ளை நிறத்தில் இருந்த பெட்ஷீட்டில்
முழுக்க தளிரின் உருவம் பெரிதாக அச்சடிக்கபட்டிருந்தது.
“சரத் என்ன இது..?” என்று
நிலைகுத்திய விழிகளுடன் தளிர் திகைத்து நிற்க அடுத்ததாக மற்றொரு விரிப்பை எடுத்து,
“இது பார்த்தியா, இது என்னோட பெட் ஸ்ப்ரே
தளிர் இதுலயும் நீதான்” என்று விரித்து காண்பிக்க அதிலும் இளந்தளரின்
புகைப்படம் முழுதாக பிரிண்ட் செய்யபட்டிருந்தது..
“அடுத்து இதோ இதைப்பாரு இதுலயும் நீதான்..! நீ
மட்டும் தான்..! என்னோட எல்லாமே நீ தான்! இதுல இருக்க உன்னை பெட்ல விரிச்சு உன்
பக்கத்துல படுத்துகிட்டு இதுல இருக்கிற உன்னை போர்த்திகிட்டு உன்னோட பேசிட்டே தான்
தளிர் நான் தூங்குவேன் அதுமட்டுமில்ல இங்க பாரு..” என்று அவன் உபயோகிக்கும் டவல்
தலையணை உறை என்று ஒவ்வொன்றாக காட்டிக்கொண்டு வர கூடை தணலை தன் மீது கொட்டியது போல
துடித்து போன தளிருக்கு அவன் வார்த்தைகளில் குமட்டிக்கொண்டு வந்தது.
“அதுமட்டுமில்ல இங்க பாரு தளிர்” என்று தன்
சட்டையை கழற்றி காண்பிக்க அவன் பனியனிலும் தளிரின் முகமே..!! அதை
கண்டு தளிர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்ல,
சரத்தோ 'இது என்ன பிரமாதம் இன்னும் இருக்கிறது'
என்பது போல தன் பனியனை கழற்றிவிட்டு அவள் உருவப்படத்தை தன் மார்பில்,
புஜத்தில், முதுகில் என்று தன் தேகத்தில்
பச்சை குத்தியிருக்கும் இடங்களை காண்பிக்கவும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே
சென்றிருந்த இளந்தளிரின் தேகம் கூசி போனது.
“அதுமட்டுமில்ல தளிர் உனக்கு இன்னொரு
சர்ப்ரைஸ்ஸும் இருக்கு” என்றவன் தன் பேன்ட்டை அவிழ்க்க முயல “டேய் என்ன பண்ற..?”
என்று பதறிக்கொண்டு வந்தான் அசோக்.
“இல்ல மச்சி என்னோட இன்னர்ஸ்ல கூட தளிர்
தான்..! அவளை ஒருநிமிஷம் கூட என்னால பிரிய முடியாதுடா.. ப்ளீஸ் எப்படியாவது என்னோட
லவ்வை அவளுக்கு சொல்லி புரியவைங்க” என்றவன் உள்ளாடையிலும் தளிரின் முகம் இருப்பதை
கண்ட இளந்தளிருக்கு அதிர்ச்சி என்பதையும் தாண்டிய ஒருநிலை!
கண்களை மூடி கீழே மடங்கி அமர்ந்தவள் அமில மழையில் குளித்தது
போல துடிதுடித்து போக நெஞ்சில் ஏற்பட்ட நடுக்கம் வெகுவாக பரவி அவள் உடல் முழுக்க
ஆக்கிரமித்ததில் அவள் பதற்றம் குறையவே இல்லை.
“மச்சி முதல்ல சட்டையை போடு.. தளிருக்கு உன்னை
புரியும்” என்று அசோக் சொல்லவும் சட்டையை போட்டுகொண்டு வந்தவன் “ஒவ்வொரு நிமிஷமும்
நான் உன் கூடவே வாழ்ந்துட்டு இருக்கேன் தளிர்
ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்கோ... நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு இப்படி தாலியை கழட்டுறது
தப்பு.., இந்த தாலியை போட்டுக்கோ தளிர் உன்னோட ஆசையை எல்லாம்
நிறைவேற்றி நிச்சயமா நான் உன்னை ராணி மாதிரி பார்த்துப்பேன்” என்று தளிரின் முன்
மண்டியிட்டு காதல் பிச்சை கேட்ட சரத்தின் வார்த்தைகளில் இருந்த வலியை உணர்ந்த தீனா
அசோக்கிற்கு மனித காதலையும் மீறி புனிதமான நிலையில் எட்டி இருக்கும் நண்பனின்
காதலை புரிந்து கொள்ளாத தளிர் மேல் கோபம் வந்தது.
ஆனால் அமில மழையில் நனைந்து கொண்டிருந்த தளிரின் செவியை
அவனின் எந்த வார்த்தைகளும் சென்று சேரவே இல்லை. தளிரின் தளிர் மேனி வெகுவாக
வெடவெடத்து கொண்டிருக்க விழிகளோ இன்னுமே கண்ட காட்சியை நம்ப முடியாது திகைப்பில்
ஆழ்ந்திருக்க அவள் விழிகளில் இருந்து சூடான கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
“என்ன தளிர் நீ அவனுக்காக எத்தனை பொண்ணுங்க
காத்திருக்கப்போ நீ அவனோட காதலை புரிஞ்சுக்காம இருக்க.. இந்தளவு உன்னை வேற யாரால
காதலிக்க முடியும் சொல்லு” என்று தீனா நண்பனுக்காக பேச,
“ப்ளீஸ் தளிர் நீ இல்லன்னா நான் செத்துடுவேன்
என்னை ஏத்துக்கோ தளிர்” என்று அவள் கால்களை கட்டிக்கொண்டு
சரத் சொல்லவும் அப்போதுதான் ஸ்மரன் பெற்றவள் “விடுடா காலை” என்று கர்ஜித்தாள்.
“இல்ல முடியாது நீ தாலியை போட்டுப்பேன்னு
சொல்லு விடறேன்” என்றவனிடம் இருந்து தன்னை விடுவித்து கொள்ள தளிர் முயற்சிக்க அவனோ
அவள் காலை விடுவதாகவே இல்லை. ஒருகட்டத்தில் தள்ளாடிய தளிர் கீழே விழ அப்போதும்
அவள் காலை விடாமல்,
“ப்ளீஸ் ப்ளீஸ் தளிர்” என்று கெஞ்சியவனின் முகத்திலேயே ஓங்கி
உதைத்தவள் அவன் நிலை தடுமாறவும் காலில் இருந்த கழன்றிருந்த செருப்பை எடுத்துகொண்டு
சரத்தை நெருங்கிய தளிர் “இதுக்கு பேர் லவ்வாடா..?” என்று
கேட்டு கன்னம் கன்னமாக அறைந்து விளாசி தள்ளினாள்.
“தளிர் என்ன பண்ற அவனை விடு” என்று தடுக்க வந்த
தீனா அசோக்கின் வார்த்தைகளை காதிலேயே வாங்காதவள் செருப்பு பியிந்து போன நிலையில்
தான் அடிப்பதை நிறுத்தியிருந்தாள்.
“நீ இன்னும் கூட என்னை அடி தளிர் ஆனா தாலியை
போட்டுக்கோ அப்போதான் நாம ரெண்டு பேரையும் யாராலையும் பிரிக்க முடியாது” என்று
வந்த சரத்தின் முகம் வீங்கி போயிருக்க அவன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் வடிந்து
கொண்டிருந்தது.
“எதுக்கு தளிர் அவனை அடிச்ச..? ஒரு டாட்டூ போடாறேதே எவ்ளோ வலிக்கும் தெரியுமா ஆனா அவன் உனக்காக உடம்பு
முழுக்க போட்டிருக்கான் அவனோட லவ்வை புரிஞ்சுக்க ட்ரை பண்ணாம அவனை அடிக்கிற..?”
“இது கொஞ்சமும் நல்லா இல்ல தளிர் அவனுக்காக ஆயிரம் பொண்ணுங்க
காத்திருக்காங்க ஆனா நீ இல்லன்னா அவனுக்கு வாழ்க்கை இல்லன்னு சொல்ற ஒருத்தன்
உனக்கு கிடைக்கிறது கஷ்டம் அவனை ஏத்துக்கோ தளிர் உன் லைஃப் நல்லா இருக்கும்” என்று
அசோக் முன்னே வர கீழே கிடந்த மற்றொரு செருப்பை எடுத்து அவனையும் அறைந்தவள்,
“இன்னொரு வார்த்தை பேசின கொன்னுடுவேன்டா...
இதுக்கு பேர் லவ்வா..? அவன்தான் பைத்தியம் மாதிரி பேசிட்டு
இருக்கான்னா நீங்களும் அதுதான் லவ் அதை ஏத்துக்கணும்னு
சொல்றீங்களே உங்களுக்கு அசிங்கமா இல்ல.. ஆனா உங்களை எல்லாம் பிரெண்ட்ஸ்னு நம்பி
பழகின எனக்கு அசிங்கமா இருக்கு.. இவ்ளோ கொடூரமும் வன்மமும் இருக்க உங்களை எல்லாம்
ச்சை..” என்று தளிர் முகம் திருப்ப அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
“தளிர் நீ ஏன் இவ்ளோ கோபப்படற..? முதல்லா வா வண்டியில ஏறு நாம..” என்ற தீனா அழைக்க,
“இனியும் உங்களை நம்பி வர நான் முட்டாள் இல்ல..
இப்பவே போலீஸ்க்கு தகவல் கொடுத்து வரசொல்றேன்” என்று காரில் இருந்த தன்
ஹான்ட்பேக்கை எடுத்தவளுக்கு அப்போதுதான் கைபேசி எடுத்து வராதது நினைவு வந்தது.
இவர்களின் மறுமுகம் தெரியாமல் தனித்து பயணம் மேற்கொண்டு தான்
செய்திருப்பது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்பதே அவளுக்கு அப்போது தான்
புரிந்தது...
அஜய் லேகா இறங்கிய போதாவது இந்த ட்ரிப்பை அவள் கேன்சல்
செய்திருக்க வேண்டும் ஆனால் உடன் பயணிப்பவர்கள் தன் நண்பர்கள் எப்போது எங்கு
சென்றாலும் தங்களுக்கு அரணாக வருபவர்கள் அவர்களிடம் தனக்கு என்ன அச்சம் என்று
எத்தனை அசட்டையாக நினைத்துவிட்டாள்.
சிறுவயது முதலே மகள்களுக்கு முகம் தெரியாத நபர்களிடம் இருந்து
அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்துகள் அதில் இருந்து எப்படி தங்களை தற்காத்து கொள்வது
என்று கற்று கொடுத்திருந்தார் ரகுபதி.
அதனால் எப்போது தளிர் தனியாக பயணித்தாலும் பெப்பர் ஸ்ப்ரே
முதற்கொண்டு பேனா கத்தி வரை தன் பாதுகாப்பிற்காக எடுத்து செல்வது வழக்கம். ஆனால் விதிவிலக்காக
நான்கு ஆண்கள் துணை இருக்கையில் அப்படி என்ன தங்களுக்கு ஆபத்து வந்துவிடும்..?
அப்படியே வந்தாலும் அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்ற
நம்பிக்கையில் நண்பர்களுடன் செல்லும் போது பெரும்பாலும் எதையும் எடுத்து செல்ல
மாட்டாள்.
இப்போதும் வெறும் ஹால் டிக்கெட் சிறிதளவு பணத்தோடு
கிளம்பிவிட்டவள் நண்பர்களிடம் இருந்து பேசிக்கொள்ளலாம் என்று ரகுபதியின் கைபேசியை
கூட எடுத்துகொள்ளவில்லை. ஆனால் வேலியே பயிரை மேயக்கூடும் என்று அவள் கனவா
கண்டாள்..?
இத்தனை வருடங்களாக நண்பர்களாக இருந்தவர்களே துரோகிகளாக
மாறக்கூடும் என்ற சிறு சந்தேகம் முளைத்திருந்தாலும் அவள் இன்றைய பயணத்தையே
தவிர்த்திருப்பாளே..! ஆனால் யாருக்கும் சந்தேகம் வராத அளவு அல்லவா இருந்தது
மூவரின் நடிப்பும்.
“தளிர் என்ன பேசுற நாங்க உன்னோட பிரெண்ட்ஸ்...
போலீஸ்க்கு போவேன்னு சொல்றியே உனக்கு என்ன மூளை கெட்டுப்போச்சா..? அவங்க வந்தா எங்களோட லைஃப்பே போயிடும்” என்று தீனாவும் அசோக்கும்
பதறிக்கொண்டு அவளிடம் மன்றாட,
“தம்பி இதுக்கு மேல இவகிட்ட கெஞ்சிட்டு
இருக்காதீங்க அதோட நாம ரொம்ப நேரம் இங்க இருக்கிறது ஆபத்து.. அவளை இழுத்து உள்ள
போடுங்க நாம மகாபலிபுரத்துக்கு போய் பேசிக்கலாம்” என்று குமார் பேசவும் தான்
தளிருக்கு இப்போது தன் முன்னே இருப்பவர்கள் அவள் நலன் நாடக்கூடிய அவள் நண்பர்கள்
கிடையாது அத்தனை பேரும் சுயநலவாதிகள்..!!
அவர்கள் தவறை மறைக்க தங்களை காப்பாற்றிக்கொள்ள எதுவும்
செய்யகூடியவர்கள் என்பதே புரிபட அவர்களை தண்டிக்க வேண்டும் என்று ஆவேசத்தோடு
இருந்தவளின் மூளை வேகமாக பிறப்பித்த கட்டளையில் ஒருகணம் நிதானித்தவள் அப்போதுதான்
அங்கிருந்தவர்களின் முகத்தை உற்று பார்த்தாள்.
‘எங்கே தளிரால் தங்களின் எதிர்காலம்
முடிந்துவிடுமோ..?’ என்று தீனா மற்றும் அசோக்கின் முகத்தில் டன்
கணக்கில் அச்சம் மண்டிக்கிடந்தது. அதேநேரம் டிரைவரோ போலீஸ் கேஸாகி போனால் தங்கள்
குடும்பம் என்னாகுமோ என்ற கவலையோடு நின்றிருந்தான். ஆனால் கண்ணீரோடு தளிரை
பார்த்திருந்த சரத்திற்கு அவளை அடைந்துவிடும் வேகம் மட்டுமே..
இப்படி தங்களின் எதிர்காலத்தை முன்னிறுத்தி அவளை எதுவும்
செய்ய தயாராக இருக்கும் நான்கு பேரிடம் இருந்து தப்பித்து செல்வது அத்தனை எளிதான
காரியமில்லை என்பது புரிபட கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவள் கோபத்தை
விடுத்து சமயோஜிதமாக யோசிக்க தொடங்கினாள்.
“தளிர் நீ போலீஸ் கிட்ட போக மாட்ட தானே
அப்புறம் என் தம்பி தங்கச்சி, அப்பா..” என்று பயத்தில்
கண்ணீரோடு இருவரும் புலம்ப சரத்தோ குமார் சொல்லியதை பரிசீலிக்க தொடங்கினான்.
மெல்ல அவர்கள் புறம் திரும்பியவள், “இதோபாருங்க
நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகல உங்க யாரையும் காட்டிக்கொடுக்கல ஆனா இனி என்னோட
வழியில் குறுக்கிட்டீங்க நான் சும்மா இருக்க மாட்டேன்.. உங்களுக்கும் எனக்குமான
சம்பந்தம் இங்கயே முடிஞ்சது.. நீங்க செய்த அய்யோக்கியத்தனத்தை போலீஸ்க்கு சொல்லாம
விடறதுகூட இத்தனை வருஷம் பழகின தோஷத்துக்காக தான்.. போதும் இத்தோட நமக்குள்ள
எல்லாமே முடிஞ்சது தயவுசெய்து இனி என் முன்னாடி வந்துடாதீங்க” என்றவள்
திரும்பி நடக்க,
“ஸார் அந்த பெண்ணை போகவிடறது நமக்கு ஆபத்து
நிச்சயம் போலீஸ்கிட்ட மாட்டினோம் அவ்ளோதான்..., எனக்கு
குடும்பம் இருக்கு ஸார்” என்ற குமார் தளிர் பின்னே செல்ல முயன்றான்.
“இல்ல குமார் தளிர் போகட்டும் விடு” என்று
மூக்கில் இருந்து வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டே சொன்னான் சரத்.
“ஸார் பொண்ணு விஷயம் சாதாரணமானது இல்ல
புரிஞ்சுக்கோங்க” என்று குமாரிடம்,
“தளிர் ஒரு வார்த்தை சொன்னா அதை எப்பவும் மீறி
மாட்டா.. போலிஸ் கிட்ட சொல்லமாட்டன்னு சொன்னவ கண்டிப்பா நம்மளை காட்டிக்கொடுக்க
மாட்டா குமார்” என்ற சரத் மிரட்சியோடு நின்றிருந்த தீனா அசோக்கை தேற்றினான்.
ஆனால் அவன் கண்களோ வன்மமாக தளிரை பின் தொடர்ந்தது.
மெயின் ரோட்டிற்கு வந்துவிட்ட தளிரின் கால்கள் ஆள் அரவமற்ற
சாலையில் தன் போக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தாலும் எங்கே அவர்கள் பின்
தொடர்கிறார்களோ என்ற அச்சத்தோடு அவ்வப்போது பின்னே பார்த்துகொண்டு வந்தாள்.
எதிர்பாரா துரோகத்தில் துவண்டிருந்தவளின் கால்கள்
அதற்குமேலும் நடக்க முடியாது வலுவிழக்க ஏதேனும் வாகனம் கிடைக்குமா என்று தளிர்
சாலையை பார்த்திருக்க.. கிழக்கு கடற்கரை சாலையில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்த
கார்கள் அவளை மின்னல் வேகத்தில் கடந்து போக ஒரு கார் அவள் அருகே வந்து நின்றது.
செல்ல வேண்டிய இடத்தை கூறிவிட்டு காரில் அமர்ந்த இளந்தளிரின்
நெஞ்சம் அப்போதும் சமன்படாது வேகமாக துடித்து கொண்டிருந்தது. எங்கே அவர்கள் தன்னை
பின்தொடர்ந்து வருகிறார்களோ என்று ஜன்னல் வழியே பார்த்து கொண்டு வந்தவளுக்கு
அடுத்த இருபது நிமிடத்தில் சென்னை உங்களை வரவேற்கிறது என்ற போர்டை கண்ட பின் தான்
மூச்சு சீரானது.
கண்களில் இருந்து வடிந்த நீரை துடைத்துக்கொண்டே நேரே
நிமிர்ந்து அமர்ந்தவளிடம் பலமுறை ‘என்ன ஆச்சு பாப்பா யாரை தேடுற..? யாராவது
வழியில ஏறுவாங்களா..? வண்டியை நிறுத்தனுமா..?’ என்ற ஓட்டுனரின் கேள்விக்கு பதிலளிக்காமல் வந்தவளுக்கு இறுதியாக பேசிய
குமாரின் விழிகளில் இருந்த ஆவேசமும் தீனா அசோக்கிடம் தென்பட்ட பதட்டமும் தான் எத்தகைய
ஆபத்தில் இருந்து மீண்டிருக்கிறோம் என்பதே புரிபட நம்பிக்கை துரோகத்தில் அவள்
அழுகை இரட்டிப்பானது.
நண்பர்களை முழுதாக நம்பிய தன் முட்டாள்தனத்தை எண்ணி தளிருக்கு
அப்படியொரு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. இருகரங்களால் வாயை பொத்திக்கொண்டு
அழுகையை விழுங்க முயற்சித்தவள் படுதோல்வி அடைய ‘அப்பாஆஆஅ...’ என்ற
பெருங்கேவல் அவளிடம் வெடித்து கிளம்பவும் உடனே காரை நிறுத்திவிட்ட டிரைவர்,
“பாப்பா ஏன்ம்மா அழற...என்ன ஆச்சு சொல்லு..?”
என்று கேட்க “அப்பாஆஆ...” என்ற தளிரின் கண்ணீர் இன்னும் வேகமாக இமை
மீறியது.
“பாப்பா உங்கப்பாக்கு ஏதாவது ஆகிடுச்சா ம்மா..?”
என்று கேட்க அவளோ “எனக்கு.. அப்... அப்பா... ப்ளீஸ் சீக்கிரம்
போ..ங்க அங்..கிள் ப்ளீஸ்” என்று தேம்பி அழவும், அவள்
தந்தைக்கு ஏதோ ஆபத்து என்று நினைத்துகொண்ட டிரைவர் அதற்கு மேல் எதுவும் கேட்காமல்
அவளை வீட்டில் கொண்டு விட கேட்டை திறந்து கொண்டு வேகமாக உள்ளே ஓடி சென்றாள்.
அவர்கள் இருந்தது பல குடித்தனங்கள் கொண்ட காலனி. இருபுறமும்
வீடுகள் வரிசையாக இருக்க அதில் இவர்கள் வீடு இறுதியில் சற்று தள்ளி தனித்து
இருக்கும்..
அவள் கேட்டை திறந்தபோதே “என்ன தளிர் கோவில்ல நல்ல தரிசனமா..? இப்படியா நனைஞ்சுட்டு வருவ..? அப்படியென்ன அவசரம்
நின்னு நிதானமா வரக்கூடாதா..?” என்று முதல் வீட்டில்
இருந்த பெண்மணி கேட்க அவளோ எதையும் காதில் வாங்காமல் வீட்டை நோக்கி ஓடியவள் ஹாலில்
இருந்த மீனாக்ஷியை கட்டிக்கொண்டு அழுகையை தொடர்ந்திருந்தாள்
Comments
Post a Comment