வாழ்க்கைத்துணை - 20.3
எப்போதுமே அவளிடம் அத்தனை எளிதாக எதையும் பகிர்ந்து விட மாட்டான்.
“நான் தான் ஆதி கால கதையில் இருந்து எல்லாமே சொல்லிட்டு இருக்கேன் நீங்க ஏன் எதையும் அதிகம் டிஸ்கஸ் பண்ண மாட்டேங்கறீங்க?” என்று கேட்டால் “உனக்கு என்ன வேணும் கேளு பதில் சொல்றேன்..” என்பானே தவிர்த்து அவனுடைய குழந்தை பருவம், கல்லூரி என்று எதையும் அவனாக முன்வந்து பகிர்ந்தது கிடையாது.
அதனால் கணவனின் தற்போதைய நடவடிக்கைகள் அவளை நிலை கொள்ள விடாமல் தவிக்க விட்டது.
ஒருவேளை ‘தான் வேலையை விடுகிறோம் என்றதால் இப்படி இருக்கிறானோ!’ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.
பெண் பார்த்து சென்ற பின்னர் அவள் அலைபேசி எண்ணை வாங்கி பேசியவன் முதலில் கேட்டது என்னவோ அவளின் வேலை மற்றும் சம்பளம் குறித்து தான்.
“இப்போ வரைக்கும் என்னுடைய சம்பளத்தை அப்பா கிட்ட தான் கொடுத்துட்டு இருக்கேன் ரிஷி. அவர் அம்மா கிட்ட கொடுத்து என்னோட கல்யாணத்துக்காக என்று தனியா சேமிக்க சொல்லிட்டார். கல்யாணத்துக்கு பிறகு உங்க கிட்ட கொடுக்கிறது தானே முறை அம்மாவும் அப்படி தான் சொன்னாங்க..”
“இதுல மாற்றம் இல்லையே?!” என்று அவன் மீண்டும் கேட்க “ஏன் இப்படி கேட்கறீங்க?” என்றாள்.
“இல்ல சிலர் அவர்களுடைய சம்பாத்தியம் கட்டின புருஷனாவே இருந்தாலும் அவங்களுக்கு உரிமை கிடையாதுன்னு சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன் ஒருவேளை நீயும் அப்படித்தானோன்னு கேட்டேன்…”
“என்னோட கலீக்ஸ் சிலரும் அப்படி சொல்லுவாங்க ஆனா அப்பா நீ வேற ரிஷி வேற இல்லை. அவரோட இன்ப, துன்பம், கஷ்ட, நஷ்டம் எல்லாம் உன்னையும் சேர்ந்தது. இனிமேல் மாப்பிள்ளைக்கு துணையா தான் இருக்கணும். அவர்கிட்ட சம்பள பணம் கொடுக்கிறது தான் முறைன்னு சொல்லி இருக்காங்க ரிஷி..” என்றாள்.
அதன் பிறகு தான் குழந்தை அதை தொடர்ந்து பிரசவ விடுமுறை என்று அனைத்தையும் அவர்கள் பேசியது.
இப்போது ‘அவள் வேலையை விட்டு நின்று விட்டால் வருவாய் குறைந்து போகும் என்ற எண்ணம் கணவனை அழுத்துகிறதா? அல்லது நேற்றைய பிரச்சனையா? இல்லை வேறேதும் புதிதாகவா?’ எதுவென்று அவளுக்கு புரியவில்லை.
ரிஷி ‘மனிதர்களை விடவும் பணத்திற்கு மதிப்பளிப்பவனா? அவளை விடவும் பணம் தனக்கு பிரதானம் என்று நினைப்பவனா?’ என்று கேட்டால் அவள் பார்த்த வரையில் அப்படி கிடையாது.
நல்ல மனிதன், பொறுப்பான மகன். வீட்டு செலவுகள், பெற்றோரின் மருத்துவ செலவுகள், அவளுக்கானது, அவர்களுக்கானது என்று எதிலுமே அவசியத்தை பின்பற்றுவானே தவிர்த்து ஆடம்பரம் இருந்தது கிடையாது.
சொல்லப்போனால் இப்போது வரையிலும் அவனிடம் பைக் மட்டும் தான். மற்றவர்களைப் போல கார் வாங்க வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் அவன் இருந்தது கிடையாது.
ஆனால் எப்போது மகா கருவுற்றாளோ அப்போதே குழந்தை பிறப்பதற்குள் கார் வாங்கி விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
இப்போது அவளை வண்டியில் அழைத்து செல்லும் போது கூட மிகவும் கவனத்தோடு மெதுவாக தான் ஓட்டுவான்.
தன்னுடைய சம்பளம் பணத்தை அவன் என்ன செய்கிறான் என்று இதுவரையிலும் அவள் கேட்டது கிடையாது.கேட்க வேண்டிய அவசியமும் வந்தது கிடையாது.
பெரும்பாலும் இருவரும் ஒன்றாக சென்று தான் அவளின் பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுப்பது. மொத்தமாக எடுக்காமல் ஐம்பதாயிரம் மட்டும் எடுக்க சொல்பவன் மீதி அவளுக்கான அவசர தேவைக்கு அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விடுவான்.
அவனைப் பொறுத்தவரையில் அதுவும் ஒருவித சேமிப்பு தான்.
மகாவிற்கு என்று தனியாக எந்த செலவும் பெரிதாக இருந்தது கிடையாது. வார இறுதியில் அவளை வெளியில் அழைத்து சென்று என்று அனைத்துமே ரிஷி பார்த்துக் கொள்வான்.
அதோடு மாதம் அவளிடம் தனியாக ஐந்தாயிரம் கொடுத்து விடுவதால் இதுவரை அவளுடைய கார்டை பெரிதாக அவள் உபயோகிக்கும் நிலை வந்தது கிடையாது.
இப்போது அவன் போட்டு வைத்திருக்கும் திட்டப்படி கார் வாங்க முடியாது என்ற கோபத்தை தான் தன் மீது காண்பிக்கிறானோ?! என்று குழப்பத்துடன் கணவனை பார்த்திருந்தாள்.
சாதாரண நாட்களிலேயே அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அவளால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. இப்போது ஊடல் கொண்டிருக்கும் நிலையில் எது காரணம் என்று எப்படி முடியும்?!
ரிஷியின் தாடையில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை புன்னகையோடு எடுக்க அவள் ஸ்பரிசத்தில் அவனிடம் சிறு அசைவு.
உடனே சமையல் அறைக்கு சென்ற மகா காஃபியோடு திரும்ப குளியலறைக்கு சென்று வந்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக வாங்கிக் கொண்டான்.
“என்ன பிரச்சனை ரிஷி என்கிட்ட சொல்லுங்க..” என்று அவள் கேட்ட போதும் ‘பழைய குருடி கதவை திறடி’ என்று மௌன கவசத்தை அணிந்து கொண்டவன் அவள் புறம் திரும்பாமல் காஃபி அருந்துவதை கண்டவளின் கோபம் கிளறப்பட்டது.
“நேத்து நைட் நீங்க பார்த்து ரசிச்ச அதே மகாலட்சுமி தான் நான்! இப்போ பார்த்தா ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டீங்க..” என்றதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.
“உங்களுக்கு என்ன செலக்ட்டிவ் அம்னீேஷியாவா? நேத்து நைட் மட்டும் என்னைக்கும் இல்லாத அளவு எத்தனை லச்சு! எத்தனை இச்சு! என்னை பேசவே விடலை நீங்க..” என்றிட அவனோ கப்போர்டில் எதையோ தேடிக்கொண்டு இருந்தான்.
“இப்போ ஒன்னுக்கு கூட பஞ்சமா இருக்கு.. ப்ச் ஏன் ரிஷி இப்படி பண்றீங்க? என் கூட சண்டை போட்டது மறந்து போச்சா?” என்றதையும் அவன் கண்டு கொண்டது போலவே தெரியவில்லை.
நேரம் செல்வதை கண்டவள் இதற்கு மேல் பேசிக்கொண்டிருந்தால் ‘அவள் தான் அரக்க பறக்க ஓட வேண்டும்’ என்பதால் அமைதியாக உடை மாற்ற தொடங்கினாள்.
அவள் தயாராகி வர இந்திரா முகத்தை உர்ரென்று வைத்த படி அமர்ந்திருந்தார்.
"என்னைக்கோ ஒரு நாள் வர நாத்தனாருக்கு ருசியா சமைச்சு போடக்கூட மனசு இல்ல. எங்கயாவது இந்த கூத்து நடக்குமா? எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம். வேற என்ன சொல்ல?.." என்று முகத்தை தோளில் இடித்தாள் வனிதா.
மகா பதில் சொல்லி தீரக்கூடிய பிரச்சனை இல்லை இது. எப்படியும் மாமனார் அவர்களை பார்த்துக் கொள்வார் என்பதால் அவர்களை பொருட்படுத்தாமல் அமைதியாக வெளியில் செல்ல அங்கு ரிஷி காத்திருந்தான்.
‘என்ன அதிசயம்?!’ என்று அகலாத ஆச்சரியத்தோடு கணவனை பார்த்திருந்தவள் ரிஷியின் தோளை பிடித்துக்கொண்டு அமர்ந்தாள்.
“எனக்கு மனசு சரியில்லை. நான் அம்மா வீட்டுக்கு போயிட்டு அதுக்கு அப்புறம் ஆஃபீஸ் போறேன் ரிஷி..” என்றதற்கு சின்ன தலையசைப்பு கூட கிடையாது அவனிடம்.
நிச்சயம் கூடல் அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடையாது என்று அவளுக்கு தெரியும். நேற்றைய நிகழ்வால் அவளோடு பழையபடி இழையாமல் போனாலும் குறைந்தபட்சம் சமாதான பேச்சு வார்த்தைக்கு வருவான் என்று நினைத்திருந்தாள்.
ஆனால் அவள் நினைப்பை பொய்யாக்கி இருந்தான் ரிஷிவரதன். இப்போதும் அவள் தொடங்கியதை அவளே தான் முடிவுக்கு கொண்டு வந்தாக வேண்டிய நிர்பந்தத்தில் அவளை நிறுத்தி இருக்கிறான் என்று நன்கு புரிந்தது.
கண்ணாடியில் ரிஷியை பார்த்திருந்தவளுக்கு அவன் முகத்தில் இருந்து எதையும் கணிக்க முடியவில்லை.
தன் இச்சை தீர்க்கும் கருவியாக என்றுமே மனைவியை அவன் நடத்தியது இல்லை. ‘ஆனால் நேற்று மட்டும் ஏன்? அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணாமல், சமாதானம் செய்யாமல் ஏன் தன்னை அத்தனை தேடினான்?’ என்ற கேள்வி தான் மனமெங்கும்.
“ப்ச்..” என்று சலிப்போடு சொல்லிக்கொண்டவள், எப்போதும் அவனிடம் விடைபெற்று தான் கிளம்புவாள்.
ஆனால் இன்று அப்படி தோன்றவில்லை.
மெளனமாக இறங்கி சென்று ட்ரெயினில் ஏறியவள் அமர்வதற்கு இடம் கிடைக்கவும் அமர்ந்து கொண்டவள் முதலில் அழைத்தது பாக்கியலட்சுமிக்கு தான்.
“சொல்லு மகா..”
“அம்மா நான் வீட்டுக்கு வரேன்..” என்ற மறுநொடியே,
“அப்படியா?” என்று சந்தோஷத்தில் ஆர்பரித்தவர், “என்ன வேணும் சொல்லு, சமைச்சு வைக்கிறேன்” என்றார்.
“எனக்கு நல்லா காரசாரமா தக்காளி தொக்கு சாப்பிடனும் போல இருக்கு கூட பூரியும் வேணும் ம்மா..”
“இன்னுமா நீ டிஃபன் சாப்பிடல..”
“ஆமாம்மா, இன்னைக்கு எந்திரிச்சது லேட்.. சப்பாத்தி பன்னீர் செய்ய முடியலை இட்லி தான் பண்ணினேன். ஆனா இட்லி சாப்பிட பிடிக்கல..”
“சரி சரி பண்ணிடுறேன்.. மதியத்துக்கு என்ன வேணும்?” என்றதும் சில நொடிகள் யோசித்தவள்,
“பிரியாணி செய்ய முடியுமா ம்மா?” என்று கேட்டுக் கொண்டிருக்க அங்கே வந்த கதிர்,
“சொல்லு மகா மட்டன் வேணுமா? சிக்கன் வேணுமா? இப்பவே எடுத்துட்டு வந்துடறேன்” என்றான்.
“மட்டன் பிரியாணி நாட்டுக்கோழி வறுவல் சாப்பிட ஆசையா இருக்கு ண்ணா” என்றதும் தான் தாமதம், “அவ்வளவு தானா இல்லை ஃபிஷ்ஷும் சேர்த்து வாங்கட்டுமா?” என்றான்.
“இல்ல ண்ணா இதுவே போதும். ஃபிஷ் வேண்டாம். ஐஸ்க்ரீம் வாங்கிக்கோங்க..” என்று சொல்ல கதிர் உடனே வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
“இன்னைக்கு முழுக்க இங்க தான் இருக்க போறியா மகா? முன்னாடியே சொல்லி இருந்தா உன் அப்பாவையும் லீவ் போட சொல்லி இருப்பேனே?!” என்றார் கனிவோடு.
“இல்லம்மா மதியம் லஞ்ச் முடிச்சுட்டு கிளம்பிடுவேன். வேலை இருக்கு..” என்றவள் மேலும் அவரிடம் பேசிவிட்டு கண்களை மூடிக்கொண்டு சீட்டில் தலையை சாய்த்தாள்.
மகாவை விட்டுவிட்டு ரிஷி வீடு திரும்ப மூவருமே அவனுக்காக காத்திருந்தனர்.
“ரிஷி ஒரு நிமிஷம் நில்லு பா, பேசணும்..” என்றார் சிவபாலன்
“இப்போவா? என்னப்பா விஷயம்? அதுவும் இவ்ளோ காலையில பேசியாகணும் என்கிற அளவுக்கு முக்கியமா?” என்றவன் நேரத்தை பார்க்க அவனுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது.
ஏற்கனவே குளித்து விட்டதால் சாப்பிட்டு, உடைமற்றிக் கொண்டு கிளம்பினால் போதும் என்பதால் அவர்கள் எதிரில் அமர்ந்து “என்ன விஷயம்?” என்றான்.
சிவபாலனோ, “நீயே சொல்லு..” என்றார் மகளிடம். அவர் குரலே மகள் பேசிய விஷயத்தின் மீதான தனது பிடித்தமின்மையை காட்டியது.
“சொல்லுக்கா..”
“ஒன்னுமில்ல ரிஷி சிந்து இன்னைக்கோ நாளைக்கோ வயசுக்கு வர நிலைமையில இருக்கா.. அப்படி வந்தா பங்க்ஷன் பண்ணனும். அதோட அவளுக்கு பத்து சவரன் நகை போடணும். அதை பற்றி பேசிட்டு வர சொல்லி உன் மாமா சொல்லி அனுப்பினார்…”
“என்னது பத்து சவரனா? தங்கம் விக்கிற விலை என்னன்னு தெரியுமா உனக்கு?” என்றான் எடுத்ததும்.
“என்ன தம்பி இப்படி பேசற? சிந்துவை கட்டிக் கொடுக்கும் போது குறைஞ்சபட்சம் முப்பது சவரனாவது போட்டா தானே கௌரவம். இப்பவே தங்கம் விலை உச்சாணிக்கொம்புல இருக்கு இன்னும் பத்து வருஷம் கழிச்சு சவரன் மூணு லட்சம் போக கூட வாய்ப்பு இருக்கு..”
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?”
“என் மகளுக்கு எல்லாமே நீ தானே பண்ணனும்.. அதான் சொல்றேன்..” என்றிட ரிஷி குழப்பத்தோடு வனிதாவை பார்த்தான்.
“கல்யாணத்தப்போ ஓட்டுக்கா முப்பது சவரன் செய்யும் போது உனக்கு தானே ரிஷி கஷ்டமா இருக்கும். அதனால தான் இப்போ வயசுக்கு வரும் போதே பத்து சவரன் செஞ்சுட்டா மீதியை பொறுமையா செய்யலாமே..” என்று சொல்ல ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை.
ரிஷி பெற்றோரை பார்க்க சிவபாலனும் இந்திராவும் கைகளை பிசைந்த படி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்.
pulla iva pethukkuva aduthavan naga podanuma supera irukke
ReplyDelete