வாழ்க்கைத்துணை - 20.3
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான்.
“எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..”
“ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?”
“இது என்னை கேட்க வேண்டிய கேள்வி”
“யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..”
“ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?”
“ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது.
“அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
“இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..”
“தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...”
“வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில்.
“ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?! இது தற்கால பிரிவு தான் நிரந்தரமானது இல்லை.. இருக்காதுன்னு நானும் நம்பறேன் பட்..” என்றவளை இடையிட்டு,
“அப்போ நீ வீட்டுக்கு வர மாட்ட அப்படி தானே!!” என்று கேட்க முதல்முறை மகாவிடம் மௌனம்.
“உன்னை தான் கேட்கிறேன் மகாலட்சுமி..”
“இப்போவும் வர மாட்டியான்னு கேட்கறீங்களே தவிர்த்து வான்னு சொல்லலையே ரிஷி..” என்று கரகரத்த சொல்ல அமைதியாக அவள் முகத்தை பார்த்திருந்தவன்,
“சரி இன்னும் கொஞ்ச நேரம் உட்காருரியா இல்லை நடக்கலாமா?” என்றான்.
கசந்த புன்னகையோடு ரிஷியை பார்க்க அவன் கரம் இன்னுமே அவள் வயிற்றை விட்டு அகலவில்லை.
“நோ இஷூஸ், ஐ’ம் ஓகே. நடக்கலாம்.. ஆனா நீங்க இப்படி என்னை பிடிச்சு வச்சுருந்தா எப்படி நடக்க முடியும்..” என்றிட எழுந்து கொண்டவன் அவளுக்கு கை கொடுத்து எழுப்பி நிறுத்தினான்.
“ரொம்ப மிஸ் பண்றீங்களா ரிஷி?” என்ற மகாவின் கை கோர்த்து அவளோடு இணைந்து நடந்த ரிஷி எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
ஆனால் மகாவுக்கு தான் இந்த நொடிகளை நழுவ விட மனமில்லை.
ஏற்கனவே அக்கா, அம்மாவால் இந்தளவு கடன் பட்டிருப்பவன் மேலும் கடனாளி ஆவதை அவள் விரும்பவில்லை. அதனால் எப்படியாவது அவனுக்கு புரிய வைத்துவிட முடிவு செய்தவள்,
“மாமா சொன்னாங்க ரிஷி, ஆனா ஏன் நீங்க அவசரபட்டீங்க? கொஞ்சம் நிதானிச்சு இருக்கலாமே..” என்று ஆரம்பிக்கவுமே,
“ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன் எதை பற்றியும் நீ பேசாம இருக்கிறது நல்லது..” என்று அவளை தடுத்தான்.
“நான் பேசாம வேற யார் பேசணும்னு எதிர்பார்க்கறீங்க ரிஷி. ஒரு லட்சமா இரண்டு லட்சமா? யாராவது குடி இருக்கிற வீட்டை அடமானம் போட்டு விசேஷம் நடத்துவாங்களா? அப்படி என்ன உங்க அக்காவுக்கு தம்பியை விட நகை முக்கியமா போச்சு?!”
“எனக்கும் அண்ணன்கள் இருக்காங்க. என்ன தான் அவங்களுக்கு என்மேல அளவில்லா பாசம் இருந்தாலும் அதை மிஸ்யூஸ் பண்ற மாதிரி நடந்துக்க மாட்டேன்…”
“அதுவும் அவங்க முடியாத சூழல்ல இருக்கிறப்போ ஒருநாளும் அவங்களை கஷ்டபடுத்தி சீர் செய்ய சொல்ல மாட்டேன். பட் உங்க அம்மாவும் அக்காவும் எமோஷனலா ப்ளாக்மெயில் பண்ணினா நினைச்சதை நடத்திடலாம்னு நினைக்கிறாங்க அது உங்களுக்கு புரியுதா இல்லையா?”
“வாயை மூடுடி! என் மேல பாசம் இல்லாதவளுக்கு அவங்களை பற்றி பேச தகுதி இல்லை…”
“எப்படி ப்ளாக்மெயில் பண்ணி காரியம் சாதிக்கிறதுக்கு பேர் தான் உங்க ஊருல பாசமா? நானும் அப்படி செய்திருந்தா என்னையும் பாசமானவள்ன்னு ஒத்துப்பீங்களா?”
“அதிகமா பேசாத மகாலட்சுமி. அவங்களுக்கு என்மேல இருக்கிறது பாசம் அது உனக்கு கொஞ்சமாவது இருந்திருந்தா கஷ்டமான சூழல்ல இப்படி என்னை தனியா விட்டுட்டு போயிருப்பியா?”
“நான் போக காரணம் நீங்க தான் என்பதை உங்க வசதிக்கு மறந்துட்டு பேசாதீங்க ரிஷி…”
“நீதானேடி விட்டுட்டு போன என்னமோ நான் உன்னை வீட்டை விட்டு துரத்தின மாதிரி பேசற.. இத்தனைக்கும் நான் உன்னை போக கூடாதுன்னு சொன்னதை துளி கூட மதிக்கலை நீ..”
“ப்ளீஸ் முடிஞ்சதை வச்சு நாம பேசிட்டு இருக்கிற பிரச்சனையை டைவேர்ட் பண்ணாதீங்க ரிஷி. எனக்கு உங்க மேல அக்கறை இருக்கிறதால தான் சொல்றேன்.. கண்மூடித்தனமான பாசத்துனால தப்பு செய்யாதீங்க..”
“அப்படி என்னடி தப்பு செய்துட்டேன்? என் அக்காவுக்கு என்கிட்டே எல்லா உரிமையும் இருக்கு என்னை கேட்காம வேற யாரை கேட்க முடியும்?”
“கேட்கலாம் ஆனா அதுக்கு ஒரு அளவிருக்கு..”
“அதை முடிவு பண்ண நீ யாருடி. என் அக்காவுக்கு என்ன செய்யணும்னு நான் முடிவு பண்ணனும் நீ இல்லை” என்றதில் மகாவின் நடை தடைபட வெறுமையோடு கணவனை பார்த்தாள்.
“இன்னும் நீங்க மாறலையா ரிஷி? திரும்ப அதே கேள்வி தான் கேட்கறீங்க..” என்றவளின் கண்ணீர் அவள் இமை மீற துடித்தது.
“ஆரம்பத்துலயே உன்னை எதுவும் பேசாதன்னு சொன்னேன் கேட்டியாடி நீ! என் நிம்மதியை கெடுக்க சும்மா இருந்தவன் வாயை பிடுங்கினது நீ தான்.. ஆனா என்னை மாறலையான்னு கேட்கிற..”
“ரிஷி நான் உங்க நல்லதுக்காக தான் சொல்றேன். இத்தனை லட்சம் தம்பியை கடன் பட வச்சு அப்படி என்ன விசேஷத்தை நடத்தனும் உங்க அக்காவுக்கு. அதுதான் நீங்க கல்யாணத்துக்கு செய்யறேன்னு சொன்னீங்களே, அப்படி என்ன உங்க மேல நம்பிக்கை இல்லாம போச்சு?”
இதெல்லாம் அவனுக்கும் தோன்றாமல் இல்லை. ஆனாலும் தன் உடன் பிறந்தவளை மனைவி பேசுவதை தாங்க முடியாதவன்,
“என் அக்காவை இன்னொரு வார்த்தை பேசின நடக்கிறதே வேற, உனக்கு அவங்களை பற்றி என்னடி தெரியும்? சின்ன வயசுல என்னை தூக்கி வளர்த்ததே அவங்க தான். இனியும் அக்காவை பேசின நல்லா இருக்காது..”
“ரிஷி நான் அவங்களை தப்பா சொல்லலை ஆனா உங்களுக்கு குழந்தைகள் பிறக்க இருக்கிற இந்த நேரத்துல இப்படி நெருக்கடி கொடுக்கிறதை தான் தப்புன்னு சொல்றேன்..”
“உங்க அக்கா தான் புரிஞ்சுக்காம பேசினாங்கன்னு நினைச்சா அத்தை அதுக்கு மேல உங்களை வீட்டை அடமானம் போட நிர்பந்திச்சு இருக்கிறதை கேள்வி பட்டு எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு..”
“அவ்ளோ கஷ்டபடறவ நான் கேட்ட போதே சொத்து பத்திரத்தை கொடுத்திருக்கணும் அதை விட்டுட்டு வியாக்கியானம் பேசக்கூடாது. ஒருவிதத்துல பார்த்தா உன்னை விட என் அக்காவும் அம்மாவும் எவ்வளவோ பரவால்ல. இந்த நிமிஷம் வரை என் கூட தான் இருக்காங்க உன்னை மாதிரி சுயநலமா இல்லை…”
“ரிஷி!!”
“என்னடி சத்தம் ஜாஸ்தியா இருக்கு.. அது தானே உண்மை. அவங்களை பேசற உனக்கும் என்னை விட பணம் சொத்து தான் முக்கியமா போச்சு. அதை காப்பாத்திக்க தானே அத்தனையும் எடுத்துட்டு என்னை விட்டுட்டு போன..” என்றவனுக்கு இனியும் சொல்லி புரிய வைக்க முடியாது என்பதை உணர்ந்தவள்,
“இப்போ சொல்றது உங்களுக்கு கஷ்டமா இருக்கலாம் ரிஷி ஆனா ஒருநாள் உங்களுக்கு உண்மை புரியும். அப்போ என்னையும் புரியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா கடைசியா ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லணும்..”
“இதை நீங்க கேட்டாலும் சரி கேட்காமல் போனாலும் சரி ஒரு மனைவியா இதை சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு..” என்றவள் ரிஷியின் பார்வை அவள் மீது படியவும்,
“அவங்க அவங்க பிள்ளைங்க அவங்கவங்களோடு இருக்கிறது தான் சரி…” என்றாள்.
“இது என்ன புதுசா? யார் பிள்ளை யாரோடு? யாரை சொல்ற?”
“சிந்துவை தான் சொல்றேன். அவ என்னை மதிக்கலை என்பதற்காக இதை சொல்லலை பட் இவ்ளோ நாள் சின்ன பெண்ணா இருந்தவ இப்போ பெரிய மனுஷியாகி இருக்கா.. ஹார்மோனல் சேஞ்சஸ் இருக்கும் அம்மாவோட வழிகாட்டுதலிலும் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்க வேண்டியது அவசியம்..”
“அவளுக்குள்ள எவ்வளவோ கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும் அதை உங்களால புரிஞ்சுக்க முடியாது. அவ டென்த் முடிச்சதும் அவங்க அம்மாவோட சேர்த்துடுங்க..”
“இப்போ எதுக்குடி இதெல்லாம் பேசற? என் பிள்ளைகளை என்கிட்டே இருந்து பிரிச்ச உனக்கு இதை பேசற தகுதி கிடையாது..”
“...”
“எங்கே அவ இங்கேயே இருந்தா கல்யாண செலவு பண்ணனுமேன்னு சொல்றியா அப்போவே எங்கம்மா சொன்னாங்க..” என்றவனை இடையிட்டு,
“ப்ளீஸ் ரிஷி நமக்குள்ள இருக்கிற ப்ராப்ளம் இதுல கொண்டு வராதீங்க. ஒரு பெண்ணா நானும் சிந்துவோட வயசை க்ராஸ் பண்ணி வந்திருக்கேன் என் அம்மா கிட்ட எதையும் மறைக்காமல் சொல்லிடுவேன். தயக்கம் இல்லாமல் அவங்க கிட்ட என்னோட சந்தேகங்களை கேட்டிருக்கேன்…”
“அதனால தான் சொல்றேன். என்ன தான் மாமா, பாட்டி, தாத்தான்னு இருந்தாலும் அம்மாவுக்கு ஈடா யாரும் வர முடியாது. அவளுக்கு இந்த வயசுல சரியான கைடன்ஸ் (Guidance) தேவை…”
“ஒருவேளை அவ என்னோடு சகஜமா இருந்தா நானே கூட அதை கொடுக்க தயாரா தான் இருந்தேன் ஆனா இப்போ சூழலே மாறிடுச்சு என்னோட பேச்சை கேட்க அவளும் தயாரா இல்லை அவளை வழி நடத்தும் நிலையில் நானும் இல்லை..”
“தேவையில்லாத சஞ்சலங்கள் உங்களுக்கு இருக்க கூடாது. நீங்க சொல்ற பாசமே நாளைக்கு உங்க கழுத்தை நெறிக்க கூடிய பாசக்கயிறா மாறிடக்கூடாதுன்னு தான் சொல்றேன். தயவுசெய்து இதுக்கு மேலயாவது கொஞ்சம் யோசிச்சு செயல்படுங்க இல்லைன்னா ரொம்ப கஷ்டம்…”
“அவ சின்ன பொண்ணுடி! எதுக்காக கண்டதையும் பேசிட்டு இருக்கிற? உனக்கான பொறுப்பை சரியா செய்ய முடியாதவ எதுக்கு என் குடும்ப விஷயத்துல தலையிடற? அவ என் பொண்ணு!”
“நீ வரதுக்கு முன்னாடி இருந்து அவளை நாங்க தான் பார்த்துக்கிறோம் இனியும் எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும்”
“ரிஷி!!”
“உன்னோட லிமிட் எதுன்னு தெரிஞ்சு நடந்துக்கோ.. என்னை உன் கைக்குள்ள போட்டுக்கிட்டு நீ நினைச்சபடி எல்லாம் ஆட்டி வைக்கலாம்னு நினைக்காத. அதுக்கு நான் ஆள் இல்லை..” என்றவன் விறுவிறுவென கீழே சென்றுவிட்டான்.
தளர்ந்து போய் அமர்ந்துவிட்ட மகா அவன் சென்ற வழியையே பார்த்திருந்தாள்.

Comments
Post a Comment