தீராத காதல் தொல்லையோ - 4.2
பேச்சும் சிரிப்புமாக ஒரே ஐஸ்க்ரீமை பகிர்ந்து கொண்டிருந்த சிந்துவும் மற்றொரு ஆடவனும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு கொண்டிருந்தனர்.
“உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா? லைக் ஸ்வீட்ஸ்..”
“ஸ்வீட்டா? உன்னை விட வேற எதுவும் ஸ்வீட்டா இருந்திடுமா ஹனி? அப்படி இருந்தா ஆர்டர் பண்ணு” என்று கேட்க சிந்துவிடம் அப்படி ஒரு சிரிப்பு.
“உன்னோட சிரிப்பு என்னை அவ்ளோ சீக்கிரம் தூங்க விடாது தெரியுமா ஹனி?..” என்றதில் அவளிடம் வெட்க சிரிப்பு.
“நீங்க என்னை எவ்ளோ லவ் பண்றீங்க?”
“என் உயிரை விட அதிகமா நான் உன்னை லவ் பண்றேன்… நீ இல்லைன்னா நான் இல்லை..”
“நிஜமா?”
“ஏன் நம்பிக்கை இல்லையா? இன்னும் மூணு வருஷம் பொறுத்திரு தேசிங்கு ராஜா மாதிரி யார் தடுத்தாலும் உன்னை தூக்கிட்டு போய் என் பொண்டாட்டியாக்கி காட்டுறேன்..” என்றவன் பேசிய காதல் மொழியில் அவன் மீதான சிந்துவின் மயக்கம் இன்னுமே கூடியது.
“சரி உனக்கு வேற ஏதாவது வேணுமா? என்னோட ப்ர்த்டே ட்ரீட் கேட்ட பிரெண்ட்ஸ் கிட்ட இன்னொரு நாள்னு சொல்லிட்டேன்.. இன்னைக்கு ஸ்பெஷலா உனக்கு மட்டும் நான்..” என்று கண் சிமிட்டியபடி அவளுக்கு ஐஸ்க்ரீமை ஊட்டிவிட்டான்.
சில்லென்ற ஐஸ்க்ரீமை சுவைத்தபடி, ‘வேற என்ன?’ என்ற யோசனையோடு கடையில் சுழன்ற சிந்துவின் விழிகள் வாசலில் இருந்த ரிஷியை கண்டதுமே அசைவற்று போக நொடியில் அவள் முகம் நிறம் இழந்து போனது.
“முதல்ல எனக்கு ஊட்டி விட்டுட்டு யோசி ஐஸ்க்ரீம் மெல்ட் ஆகுது ஹனி..” என்றவனின் குரல் அவளுக்கு எங்கே கேட்டது?! வெளிறிப்போன முகத்தோடு கையில் இருந்த ஸ்பூனை நழுவ விட்டவளாக சட்டென எழுந்து நின்றாள்.
“ஹே ஹனி எங்க எந்திரிச்சிட்ட? இப்போ நீதான்டி ஊட்டி விடணும்..” என்று ராஜ் அவள் கையைப் பிடிக்க “விடுங்க” என்றாள்.
“நாம என்ன டீல் போட்டோம்? மறந்துருச்சா? இல்லை ஏமாத்த பார்க்கிறியா? ஒழுங்கா ஊட்டி விடு இல்ல பப்ளிக்ன்னு எல்லாம் பார்க்க மாட்டேன் வேற மாதிரி ஊட்ட சொல்லுவேன்..” என்று சொல்ல நெஞ்சம் படபடக்க நின்றிருந்த சிந்துவின் இதழ்கள் “மாமா..” என்று சப்தமாக உச்சரித்தது.
அப்போது தான் அவள் பார்வை மாற்றத்தை உணர்த்தவன் அங்கு நின்றிருந்த ரிஷியைக் கண்டு தானுமே எழுந்து நின்றான்.
அதேநேரம் அன்று சிந்துவின் கண்காணிப்பு, கண்டிப்பு பற்றி பேசிய மகாவின் வார்த்தைகளே ரிஷியை ஆக்கிரமித்து இருந்தது.
‘சிந்து குழந்தைடி!! உன் சுயநலத்துக்காக அபாண்டமா பேசாத..’ என்று அன்று சொன்னவனுக்கு தன் மீதான மனைவியின் அக்கறையை புரிந்து கொள்ளாமல் முட்டாள்தனமாக புறக்கணித்து இன்று தோற்றுவிட்ட உணர்வு.
“உன் மாமா எப்படி இங்க வந்தாங்க?”
“எனக்..கு தெரி..யல..” என்று திணறியவளை ரிஷி நெருங்கவுமே “நான் கிளம்பறேன் ஹனி இங்கிருந்து ஏதாவது பிராப்ளம் ஆகிட போகுது.. உன் கிட்ட அப்புறம் பேசுறேன்..” என்றவன் அவசர அவசரமாக அங்கிருந்த பக்கவாட்டு வழியாக வெளியேறினான்.
‘காலம் முடிக்க உன்னோடு இருப்பேன்.. யார் வந்தாலும் எதிர்த்து நிற்பேன்..’ என்று எக்கச்சக்க வாக்குறுதிகளை கொடுத்தவன் இப்போது தன்னை தனியே விட்டுவிட்டு செல்லவும் சிந்து அதிர்வோடு அவனை பார்த்து நின்றாள்.
அவள் எதிரில் நின்ற ரிஷியின் பார்வை கூர்மையாக துளைக்கவும் கையும் களவுமாக பிடிபட்டதில் ‘என்ன செய்வது?’ என்று புரியாமல் சில நொடிகள் திகைத்து நின்றவள்.. ராஜ் செல்லவுமே “ஸாரி மாமா..” என்று விளக்கம் கொடுக்க முற்பட அவனோ சிவந்த விழிகளோடு அவளிடம் இருந்து விலகி வெளியேறி தன் வண்டியில் ஏறி அமர்ந்தான்.
சிந்து தன் பையை எடுத்துக்கொண்டு வேகமாக வந்து அவன் பின்னே அமர எதுவும் பேசாமல் வண்டியை கிளப்பினான்.
இன்றைய நாளை எதிர்பாராத சிந்துவின் மனது பலவாறு யோசித்து கொண்டிருக்க, எங்கே தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சம் அவளை வெகுவாக சூழ்ந்தது.
மாமனையும் மற்றவர்களையும் எப்படி சமாளித்து அவர்களுக்கு தங்களின் காதலை புரிய வைப்பது என்ற படபடப்போடு வீடு வந்து சேர்ந்தாள்.
அதுவரையில் ரிஷியும் அவளிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் ரிஷியை பார்த்தபடி வீட்டினுள் நுழைந்தது தான் தெரியும் சிந்துவிற்கு மறுநொடியே அவன் கொடுத்த அறையில் எப்படி போய் சிவபாலனின் காலடியில் விழுந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
“ரிஷி எதுக்குடா அவளை அடிக்கிற?” என்று பதறிக்கொண்டு சிவபாலன் எழ, “மாமா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க..” என்று கன்னத்தைப் பிடித்துக் கொண்டு எழுந்தாள் சிந்து.
“அதுதான் என் கண்ணால பார்த்தேனே இன்னும் புதுசா என்ன சொல்ல போற?” என்று அவளை மீண்டும் அறைந்தவன்,
“ஏய் என்ன வயசு உனக்கு? இந்த வயசுல பொய் சொல்லி எங்களை எல்லாம் முட்டாளாக்கி ஒருத்தன் கூட ஐஸ்கிரீம் சாப்பிடற அளவு உனக்கு எங்கிருந்த தைரியம் வந்தது?” என்றவன் மீண்டும் அவளை அறைய முற்பட,
“என்னப்பா பண்ற? எதுக்காக குழந்தையை அடிக்கிற?” என்று அவன் கையை பிடித்து தடுத்தார் சிவபாலன்.
“குழந்தையா? ப்ச் ப்பா விடுங்க, இந்த வயசுலேயே அவ என்ன வேலை செஞ்சிருக்கான்னு தெரியாம..”
“எதுவா இருந்தாலும் வயசு பெண்ணை அடிக்கிறது தப்பு ரிஷி.. கொஞ்சம் பொறுமையா பேசு..”
“தலைக்கு மேல வெள்ளம் போன பிறகு எப்படி பொறுமையா இருக்க சொல்றீங்க?”
“ரிஷி..”
“இவளை குழந்தையா நாம தான் நினைச்சுட்டு இருக்கோம் ஆனா இவ பார்த்திருக்க வேலை எதுவும் அப்படி இல்லை. இல்லாத ஸ்பெஷல் கிளாசை இருக்குன்னு நம்ம கிட்ட பொய் சொல்லிட்டு எவனோ ஒருத்தனுக்கு ஐஸ்க்ரீம் ஊட்டி விட்டுட்டு இருக்காப்பா இவ..”
“என்ன ரிஷி சொல்ற? சிந்துவா?”
“என்னை நம்பலைன்னா அவளையே கேளுங்க..” என்றவன் “ஏய் உன் இன்ஸ்டாகிராம் பாஸ்வோர்ட் கொடு..” என்றான்.
“மாமா..”
“சொன்னது புரியலையா? பாஸ்வோர்ட் சொல்லு”
“மாமா ப்ளீஸ்..” என்றவள் சிவபாலன் பின்னே பதுங்க,
“ஒழுங்கு மரியாதையா இப்போ பாஸ்வோர்ட் சொல்ல போறியா இல்லையா?” என்றவன் மீண்டும் அவளை அறைய அதற்குள் வெளியே சென்றிருந்த இந்திரா வந்து மகனை தடுத்தார்.
“எதுக்கு இப்போ வயசு பொண்ணை போட்டு இந்த அடி அடிக்கிற, மூளை கெட்டு போச்சாடா உனக்கு?” என்றார்.
“அவ பண்ணின காரியம்..” என்று தொடங்கியவன், “இவளை வளர்க்கிறேன்னு கூட்டிட்டு வந்து என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க? எங்க போறா வரா, என்ன பண்றான்னு எதுவும் பார்க்க மாட்டீங்களா? மொளைச்சு மூணு இலை விடலை இந்த வயசுலேயே இவளுக்கு லவ்வர் கேட்குது..”
“என்னடா பேசற? என் பேத்தியா? அவ அப்படி எல்லாம் இருக்க மாட்டா ரிஷி, உன் பொண்டாட்டி பேச்சை கேட்டுட்டு கண்டபடி பேசாத..”
“வாயை மூடுங்க ம்மா. என் பொண்டாட்டி சொன்னப்போ கூட இவ சின்ன குழந்தை எந்த சூதும் தெரியாதுன்னு அவளை திட்டினவன் நான்! ஆனா என் நம்பிக்கையை பொய்யாக்கி இருக்கா உன் பேத்தி..”
“என்னை மட்டுமில்லை கண்மூடித்தனமான உங்க பாசத்தையும் செல்லத்தையும் மிஸ்யூஸ் பண்ணி படிப்பை கெடுத்துகிட்டு இருக்கா.. நாம தான் குழந்தைன்னு நினைச்சுட்டு இருந்தோம் ஆனா இவ..” என்றவன் ஆத்திரத்தை பல்லை கடித்தபடி அவளை மீண்டும் அடித்தான்.
“ரிஷி கொஞ்சம் பொறுமையா இருடா..” என்று சிவபாலன் தான் மகனை பிடித்து இழுத்தார்.
“எதுக்குடா குழந்தையை அடிக்கிற போகும் போது கண்டதையும் பேசிட்டு போன இப்ப என்னடான்னா புள்ளையை போட்டு இந்த அடி அடிக்கிற.. என்ன நினைச்சுட்டு இருக்கிற வரதா?”
“இந்த லட்சணத்துல தான் அவளை வளர்த்து வச்சிருக்கீங்க.. இதுக்கு தான் அன்னைக்கு இவ பொறுப்பை ஏத்துக்கிறேன்னு வாக்கு கொடுத்தீர்களா?” என்றான் ரிஷி கோபம் குறையாமல்.
“என்னப்பா பேசுற எதுவுமே புரியல, கொஞ்சம் விளக்கமா சொல்லு..” என்று சிவபாலனிடம் நடந்த அத்தனையும் சொல்லி முடித்தவன், “இந்த வயதிலேயே திருட்டுத்தனம், பொய், பித்தலாட்டம், காதல்னு குட்டிச்சுவராகி போயிருக்கா..”
“தலைக்கு மேல இருக்கிற கடனை அடைக்க நான் தான் வேலை, ட்ரிப்ன்னு ஆயிரத்தெட்டு டென்ஷனோடு நேரம் காலம் இல்லாமல் சுத்திக்கிட்டு இருக்கேன்.. வீட்டோடு இருக்கிறவங்களுக்கு இவளை கண்காணிக்கிறது தவிர்த்து வேற என்ன வெட்டி முறிக்கிற வேலை?”
“எங்களை என்னடா சொல்ற? இதுக்கெல்லாம் காரணம் உன் பொண்டாட்டி தான்! அவ மட்டும் ஒழுங்கா இங்கே இருந்திருந்து சிந்துவுக்கு படிப்பு சொல்லி கொடுத்திருந்தா இவ ஏன்டா ஸ்பெஷல் கிளாஸ் போக போறா?”
“என்னடி உளறிட்டு இருக்கிற?” என்று சிவபாலன் கேட்க,
“உண்மையை சொல்றேன்ங்க.. வீட்டுக்கு வந்த மகராசிக்கு கட்டினவனை பற்றின அக்கறையே இல்லை இதுல எங்கிருந்து என் பேத்தி மேல மட்டும் அக்கறை இருந்திட போகுது..” என்றவரை இடையிட்டு,
“இப்போ எதுக்கு அவளை இழுக்கறீங்க? எடுத்துக்கிட்ட பொறுப்பை சரியாய் செய்ய வேண்டிய கடமை உங்களோடது. ஆனா பணத்தை என் மேலயும் படிப்பை என் பொண்டாட்டி மேலயும் போட்டுட்டு உங்களுக்கு என்னன்னு இருந்துட்டு இப்போ அவளையே பேசுவீங்களா?” என்றான் ஆவேசமாக.
“ரிஷி அவ ஏதோ உளறிட்டு இருக்கா அதையெல்லாம் பெருசா எடுத்துக்காதப்பா..” என்று இருவருக்கும் இடையில் வார்த்தை தடித்து விடாமல் இடை புகுந்தார் சிவபாலன்.
Comments
Post a Comment