தீராத காதல் தொல்லையோ - 4.2
மகாவின் சித்தி சௌந்தரி வந்ததுமே “மாப்பிள்ளை எங்கே காணோம்?” என்றார் பாக்கியாவிடம்.
“அவருக்கு முக்கியமான வேலை இருக்குடி. முடிச்சுட்டு வந்துடுவார்..” என்று சமாளிக்க மகாவை மருத்துவமனையில் சேர்த்து இத்தனை நேரமாகியும் ரிஷியிடம் இருந்து எந்த அழைப்புமே வராமல் போனதில்,
“அக்கா ஏதாவது பிரச்சனையா? நேரில் வர முடியாட்டியும் இதுவரை மாப்பிள்ளை மகாவுக்கு கூப்பிட்டு கூட பேசலையே, அவ மாமனார் மாமியார் கூட வரலை.. மகாவோட முகமும் சரியில்லையே..” என்று நேரடியாகவே கேட்டுவிட அவரிடம் எதையும் மறைக்க முடியாது நடந்த விஷயங்களை சொல்லிவிட்டார்.
“என்னக்கா இப்படி சொல்ற? மகா சின்ன பொண்ணு. ஏதோ கோபத்துல இப்படி வந்து இருந்தாலும் நீ எப்படி விட்ட?”
“இந்த நேரத்துல வேற என்ன தான்டி பண்ண சொல்ற? குழந்தைகள் பிறந்த பிறகு பார்த்துக்கலாம்னு இருக்கேன்..”
“அந்த தப்பு மட்டும் செய்திடாதக்கா.. கோபத்தால வாழ்க்கையை நான் இழந்த மாதிரி அவளும் இழந்துட வேண்டாம்..” என்றவர்களிடம் வந்த நர்ஸ்,
“உங்களை ஹெட் நர்ஸ் கூப்பிட்டாங்க..” என்றார் பாக்கியாவிடம்.
“வரேன் சிஸ்டர்..” என்று கிளம்பியவர் சிறிது நேரத்தில் சௌந்தரிக்கு அழைத்து, “மகாவுக்கு ஸ்கேன் எடுக்கணுமாம் தயாரா இருக்காளா? கதிரை அனுப்பறேன் கூட்டிட்டு வந்துடு..” என்றார்.
ஸ்கேன் முடித்து வந்த மகாவிற்கு சௌந்தரி உணவு கொடுக்க ஆயத்தமாக அங்கே வந்த தலைமை நர்ஸ், “என்ன மஹா குழந்தைகள் என்ன சொல்றாங்க?” என்று அவளின் ரத்த அழுத்தத்தை சோதித்தார்.
“ரொம்ப சமத்தா தூங்கிட்டு இருக்காங்க சிஸ்டர்..”
“பெயின் ஏதாவது இருக்கா?”
“இல்லை சிஸ்டர் வீட்ல இருந்து கிளம்பின கொஞ்ச நேரத்துல வந்தது தான். அதோட சரி, இதுவரைக்கும் பெயின் வரல..” என்ற மகா வீட்டில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் வலி வரவும் கடந்த நான்கு மணி நேரத்திற்கும் மேலாக லேபர் வார்டில் இருந்து பின் அறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறாள்.
“ஒன்னும் பிரச்சனை இல்லை.. பயப்பட வேண்டாம்”
“சிஸ்டர் வலி வருவதற்கு ஊசி போடறேன்னு சொன்னீங்களே?” என்று பாக்கியலட்சுமி கேட்க, “மகாவுக்கு பார்த்த டாக்டர் வந்துட்டாங்களா சிஸ்டர்?” என்றான் கதிர்.
“இல்லை டாக்டர் இன்னும் வரலை.. ஃப்ளைட் டிலே, ஈவ்னிங் ஏழு மணிக்குள்ள வந்துடுவாங்க” என்ற போதே அங்கே வந்தார் ஆண் மருத்துவர் ஒருவர்.
அவரிடம் மகாலாட்சுமியின் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டது.
அனைத்தையும் பார்த்து முடித்தவர் அடுத்து அவளுக்கு செலுத்த வேண்டிய மருந்துகளை எழுதிவிட்டு, “ஹவ் ஆர் யூ மகாலட்சுமி?” என்றார்.
“ஃபீலிங் குட் டாக்டர்..”
“எவ்ரிதிங் இஸ் நார்மல் ஸோ ஃபார்.. ஸ்டில் நீங்க உங்க டெலிவரிக்காக சீஃப் டாக்டரை ப்ரிஃபர் (Prefer) பண்ணி இருந்ததால அவங்க வரவரைக்கும் வெயிட் பண்ணி தான் ஆகணும்..” என்றார் புன்னகையோடு.
அவர் சொன்ன சீஃப் டாக்டரிடம் தான் மகாலட்சுமி இத்தனை மாதங்கள் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டு வந்திருந்தாள்.
பிரசவமும் அவரே பார்க்க வேண்டும் என்பது தான் அவள் விருப்பம். அதோடு அவளுக்கு இரட்டை குழந்தைகளும் சுகப்பிரசவமாக அதிக வாய்ப்பு உள்ளதால் அவர் மேற்பார்வை இன்றி பிரசவம் பார்ப்பது எளிதல்ல என்பதால் அவருக்காக காத்திருந்தனர்.
மருத்துவர் கிளம்பவுமே, “வாக் பண்ணு மகா அப்படியே நான் சொன்ன எக்ஸர்சைஸ்..” என்றவர் தன் பேச்சை நிறுத்தி, “எங்கே உங்க ஹஸ்பண்ட் வந்துட்டாரா? நான் பார்க்கவே இல்லையே! அவர் தான் உங்களுக்கு இதுல ஹெல்ப் பண்ண முடியும்.. எங்கே இருக்கார்? வர சொல்லுங்க..”
“இல்லை சிஸ்டர் அவர் இன்னும் வரலை.. வேலை அதிகம் அதோடு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு முடிச்சுட்டு வந்துடுவார்..” என்று பாக்கியலட்சுமி சமாளிக்க, “இல்லை சிஸ்டர் என் குழந்தைகளுக்கு நான் மட்டும் தான் அவர் வர மாட்டார்..” என்றாள்.
“குழந்தையில அவருக்கும் சரிசம பங்கு இருக்கு மஹா. அதுவும் இரட்டை குழந்தைகள்! இப்போ கூடவா உடன் இருக்க மாட்டார்.. என்ன பிரச்சனை இருந்தாலும் அப்புறம் பேசி தீர்த்துப்பீங்க முதல்ல அவரை வர சொல்லுங்க ம்மா..” என்று பாக்கியலட்சுமியிடம் சொல்லிவிட்டு சென்றார்.
“அக்கா பேசு..” என்று சௌந்தரி சொல்ல மகாவோ வாக்கிங் செல்வதற்காக மெத்தையில் இருந்து இறங்கினாள்.
“எங்க மகா போற?”
“வாக்கிங் ம்மா…”
“தனியா போகாத, எந்நேரமும் வலி வர வாய்ப்பு இருக்கு மாப்பிள்ளையை உடனே வர சொல்லு..” என்றதுமே தன் கைபேசியை எடுத்து கதிருக்கு அழைத்து அவனோடு வாக்கிங் சென்றாள்.
“என்னக்கா மாப்பிள்ளைக்கு ஒரு வார்த்தை சொல்லாம கிளம்பிட்டா? நம்ம மகாவா இது?”
“அதுதான் பார்க்கிறியே?! இவளுக்கு அப்பாவும் அண்ணனும் முழு சப்போர்ட் அதுதான் எதை பற்றியும் கவலை இல்லாம இருக்கா..”
“அக்கா நம்ம குடும்பத்துல இன்னொரு சௌந்திரி வேண்டாம். நான் படற கஷ்டத்தை மகாவும் படக்கூடாது. குழந்தைகள் பிறக்கிற நேரம் தான் எத்தனை மனக்கசப்பு இருந்தாலும் அத்தனையும் மறந்து அவங்க சேருவதற்க்கான வாய்ப்பு இருக்கு. இல்லை விரிசல் பெருசாகிடும் க்கா..”
“எனக்கு புரியாமல் இல்லடி. ஆனா இந்நேரத்துல அவகிட்ட பேசி எந்த டென்ஷனும் பண்ண வேண்டான்னு பார்க்கிறேன்..” என்றவர் கணவரை தேடி சென்றார்.
“தன் பிள்ளைகளை பற்றி இன்னொருத்தர் சொல்லி தெரிஞ்சுக்கிறது அவமானம் பாக்கியா? அவருக்கு அக்கறை இருந்தா வரட்டும் நான் கூப்பிட மாட்டேன்..” என்றார் தீர்மானமாக.
மகனிடம் பேசலாம் என்றால் அவன் கணவருக்கு மேலாக ரிஷி மீது கோபத்தோடு இருக்கிறான். நிச்சயம் பேச மாட்டேன் என்பது புரிய சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது நல்லது என்று மகளுக்காக காத்திருந்தார்.
“அண்ணா குழந்தைக்கு வாக்சீன் (Vaccine) பண்ணிட்டு வந்துட்டிங்களா?” என்ற மகாவின் பார்வை அவள் அனுமதிக்க பட்டிருக்கும் தளத்தில் பிரசவத்திற்காக அட்மிட்டாகி இருக்கும் பெண்களின் மீதும் அவர்களுடன் இருந்து கண்ணிமையாக மனைவிகளை பார்த்து கொள்ளும் கணவர்களின் மீதும் தான் இருந்தது.
ஏனோ அதை கண்டவளின் விழிகளில் வலி மிக தன்னையறியாமல் அன்று ரிஷி குழந்தைகளுக்கு முத்தமிட்டது, அவர்களுடன் பேசியது நினைவு வர மனம் தன் போக்கில் கணவனை தேடியது.
‘எதையும் நினைக்காதடி!! இனி உனக்கு குழந்தைகள் அவங்களுக்கு நீ! நீங்க மட்டும் தான் வேற யாரும் கிடையாது..’ என்று தனக்கு தானே சொல்லி கொண்டவளிடம்,
“இல்லை மகா உன் அண்ணியோட தம்பியை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக சொல்லி இருக்கேன்..” என்றான் கதிர்.
“ஹான், என்னண்ணா சொன்னீங்க?” என்றதும் மீண்டும் அவன் சொல்ல, “என்ன ண்ணா இது?! அண்ணி உங்களை எவ்ளோ எதிர்பார்த்து இருப்பாங்க போயிட்டு வந்திருக்கலாமே?!”
“உன்னை இங்க தனியா விட்டுட்டு எப்படி போக சொல்ற? குட்டீஸ் என் கைக்கு வரட்டும் போய் உன் அண்ணியையும் கூட்டிட்டு வரேன்..” என்றவன், “கொஞ்சம் நேரம் உட்கார்ந்துட்டு நடக்கறியா மகா?”
“அண்ணா அம்மா, அப்பா, சித்தி எல்லாரும் தானே இருக்காங்களே அவங்க என்னை பார்த்துக்க மாட்டாங்களா?... நீங்க அண்ணியை பார்த்துட்டு வாங்க பெயின் வந்ததும் அப்பாவை உங்களுக்கு கால் பண்ண சொல்றேன்..”
“இப்போ உன்னை விட வேற எதுவுமே எனக்கு முக்கியமில்லை மகா, மூணு உயிரும் நல்லபடியா பிரியனும் அது மட்டும் தான் என் மனசுல இருக்கு அங்க போனாலும் என் நினைப்பெல்லாம் இங்க தான் இருக்கும்..”
“ஆனாலும் அண்ணி..”
“ப்ச் இரண்டு குழந்தை பெத்தவளுக்கு உன்னோட புருஷன் உடன் இல்லாதப்போ நாங்க தான் பார்த்துக்கணும்னு தெரியாதா? நிச்சயம் காயூக்கு இதெல்லாம் புரியும்.. அவளை பற்றிய கவலையை விட்டுட்டு உங்களை பற்றி மட்டும் இப்போதைக்கு பார்..” என்றவன் அவளுக்கான பழங்களை கொண்டு வந்து கொடுத்தான்.
நடைபயிற்சியை முடித்து விட்டு அறைக்கு திரும்பிய மகாவின் மனம் முழுக்க அவள் கண்ட காட்சிகளே நிறைந்திருக்க மனதை பிசைந்தது.
ரிஷி மேல் ஒருபுறம் அளவிடா கோபம் இருந்தாலும் மறுபுறம் ஏதோ சொல்ல முடியா உணர்வு!! ‘ஏன் முக்கியமான தருணத்தில் தன்னோடு இல்லாமல் போனான்? குழந்தைகள் மீது கூடவா அவனுக்கு அக்கறை இல்லாமல் போனது?’ என்ற யோசனையில் இருந்தவள் பாலை ஆற்றி கொடுத்த தாயிடம்,
“ம்மா நான் ஏதாவது தப்பு செய்யறேனா?” என்றாள்.
“என்ன திடீர்னு கேட்கிற?”
“சொல்லுங்க ம்மா. எனக்கே தெரியாம நான் செய்யற தப்பு உங்களுக்கு தெரியாம போகாது அதனால தான் கேட்கிறேன் அப்படி இருந்தா சொல்லுங்க..”
“சொன்னா கேட்டுக்கவா போற?’
“எனக்கு மனசு ஒரு நிலையில இல்லை ஏதேதோ யோசனைகள், ப்ளீஸ் சொல்லுங்க ம்மா…”
“சரி, பாலை குடிச்சு முடி சொல்றேன்..” என்றதும் அப்படியே செய்து தாயின் முகம் பார்த்தாள்.
“வெட்டிக்கிட்டு போறது ரொம்ப சுலபம் மஹா ஆனா வாழ்ந்து காட்டுறது தான் ரொம்ப கஷ்டம்..” என்றவரின் வார்த்தைகளில், “ம்மா என்னம்மா பேசுறீங்க?” என்று பதறிப் போனாள்.
“நாட்டுல நடக்கிறதை தான் சொல்றேன்.. அதோடு என் மகளும் அப்படி ஒரு தப்பை செய்துட கூடாதுன்னு நினைக்கிறேன்..”
“ம்மா..”
“உன்னோட தப்பை நீதானே கேட்ட?” என்றதும் அவளிடம் ஆமோதிப்பான தலையசைப்பு.
“இதோ பார் மகா உன் அளவுக்கு நான் படிச்சவளும் கிடையாது உன்னளவு சம்பாதிக்கறவளும் கிடையாது. ஆனா மூணு குழந்தைகளை பெத்தெடுத்து கண்ணியமா வளர்த்து இன்னைக்கு அவங்களுக்கும் நல்லபடியா கல்யாணம் பண்ணி பேரன் பேத்தின்னு சந்தோஷமா இருக்கேன்..”
“ஆனா கல்யாணமாகி ஒரு வருஷம் கூட ஆகாமல் அம்மா வீட்டுல வந்து இருக்கிற நீ இந்த காலத்து பொண்ணுங்க மாதிரி பொறுமை இல்லாம விவாகாரத்துன்னு கோர்ட் படியில போய் நிற்க ரொம்ப நாள் எடுக்காது..” என்றதில் அதிர்ந்து போனாள் மகாலட்சுமி.
Comments
Post a Comment