தீராத காதல் தொல்லையோ - 4.2
மகளின் பேச்சில் சிவபாலன் அதிர்ந்து நின்ற போது தான் ராம் அங்கு வந்து சேர்ந்தான்.
“ரிஷிக்கு பயப்படுற மாதிரி எதுவும் இல்லையே? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்றவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
அவர்கள் உள்ளே வரவும் எதிர்பட்ட நர்ஸ் “உங்களைத்தான் தேடிட்டு இருக்கேன் ஸார், பணம் கட்டிட்டீங்களா? டாக்டர் இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவார்..” என்ற மறு நொடியே, “எவ்வளவு கட்டனும் சிஸ்டர்?” என்றான் ராம்.
“50000 ஸார்..” என்றதும் கேஷ் கவுண்டருக்கு சென்று பணத்தை செலுத்தி விட்டு வந்தவனை கண் கலங்க பார்த்துக் கொண்டிருந்த சிவபாலனுக்கு பேச்சே எழவில்லை.
“கவலைப்படாதீங்க ப்பா எல்லாம் சரியாகிவிடும்..” என்றவன் முன் இரு கரங்களையும் கண்ணீரோடு கூப்பினார்.
“என்னப்பா இது, ப்ச் முதல்ல கையை இறக்குங்க… ரிஷிக்கு நல்லபடியா சர்ஜரி முடியட்டும். எவ்வளவு செலவு ஆனாலும் நான் பாத்துக்கிறேன்.. ரிஷி நல்லபடியா வந்தா போதும். மகாவுக்கு சொல்லிட்டீங்களா?” என்றான்.
“இன்னும் இல்லப்பா..” என்றிட அங்கு வந்து சேர்ந்தார் இந்திரா.
“சிந்து இப்படி ஒரு காரியத்தை பண்ணுவான்னு அவ எதிர்பார்க்கலைங்க.. நம்பளை நம்பி தானே அவ அங்க தைரியமா இருந்தா. ஆனா இப்படியானதுல எல்லா அம்மாவுக்கும் இருக்கிற ஆதங்கம் தானே அவளுக்கும்!!”
“அதுல தான் கண்டபடி பேசிட்டா.. மத்தபடி அவ நம்ம ரிஷிக்கு கெடுதல் நினைப்பாளா? ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க?” என்ற இந்திராவை மறு நொடியே யோசிக்காமல் கைநீட்டி விட்டார்.
“ப்பா இது ஹாஸ்பிட்டல்!! என்ன பண்றீங்க? எதுக்கு அம்மாவை அடிக்கிறீங்க?” என்றிட அதற்கு மேலும் கட்டுப்படுத்த முடியாமல் ராமை கட்டிக்கொண்டு கதறிவிட்டார் சிவபாலன்.
“இந்த சத்தம் போடக்கூடாது எதுவா இருந்தாலும் வெளியில போய் பேசுங்க…” என்று சிஸ்டர் சொல்ல அவரை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
கண்ணீரை துடைத்தபடி உடன் நடந்த வரை டீக்கடைக்கு அழைத்து சென்றவன், “தயவு செய்து அழாதீங்க, முதல்ல இந்த டீயை குடிங்க.. குடிச்சிட்டு என்ன நடந்ததுன்னு நிதானமா பேசுங்க..” என்றான்.
ஒரு வழியாக தன்னை நிதானப்படுத்தி சிவபாலன் அனைத்தையும் சொல்லி முடிக்க அவர்களை தேடி மற்றவர்கள் அங்கே வந்தனர்.
“என்னக்கா ரிஷியை விட பணமா முக்கியம்? அவன் நல்லபடியா திரும்ப வந்தா இதைவிட லட்சக்கணக்குல சம்பாதிச்சு உங்க பொண்ணுக்கு நகை போட மாட்டானா என்ன?”
“அதைவிட பொய் சொல்லி அவனை ஏமாற்றி ப்ச் எப்படி இந்த மாதிரி எல்லாம் யோசிங்க?” என்றான் வேதனையோடு.
“செய்வதையும் செய்துட்டு அம்மாவும் மகளும் அதை நியாயப்படுத்திட்டு இருக்காங்க… நான் இப்ப இருக்கிற மனநிலைக்கு ஏதாவது பண்ணிட போறேன்.. தயவுசெய்து இவங்க ரெண்டு பேரையும் போக சொல்லு ராம்..” என்றார் தாள முடியாத வேதனையோடும் வெறுப்போடும்.
“அம்மா நீங்க இங்க இருக்கும்போது உங்க மேல கோபம் அதிகமாகும்.. பிரச்சனையும் தீராது இப்போ ரிஷி முக்கியம் அவனை மட்டும் பாருங்கள் ப்ளீஸ்…” என்று அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றான் ராம்.
மீண்டும் திரும்பி வந்தவனிடம் “இது முதல் தவணை தான் ராம். இந்த ஹாஸ்பத்திரியில இலட்சக்கணக்கில் செலவாகும் போல, உனக்கு கஷ்டம் வேண்டாம்..”
“என்னப்பா பேசுறீங்க இந்த நேரத்தில் உதவாத பணம் வேறு எந்த நேரத்துல உதவ போகுது? எனக்கு எந்த கஷ்டமும் இல்லை..”
“இது உன்னோட பெருந்தன்மை! ஆனா உனக்கும் குடும்பம் இருக்கு.. நீயும் என் பையன் மாதிரி தான்! உனக்கு எந்த சிக்கலும் வேண்டாம்.. ஏற்கனவே ரிஷி வீட்டை அடமானம் போட்டு இருக்க இடத்துல இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து கொடுப்பாங்களான்னு கேட்டு பாருப்பா..”
“எதுக்குப்பா?”
“தயவு செஞ்சு ரிஷியோட சூழ்நிலையை சொல்லி கேட்டு பாருப்பா.. அவங்க கொடுத்தாங்கன்னா உதவியாய் இருக்கும்..”
“ஏற்கனவே வீடு கட்டிட்டு இருந்த போது என் அண்ணன் தம்பி கிட்ட கடன் கேட்டு அவமானப்பட்டதால எதுக்கும் அவங்க கையை எதிர்பார்க்கக் கூடாதுன்னு ரிஷி சொல்லி இருக்கான்.. அதனால தான் அவங்க கிட்ட கேட்கனுமான்னு யோசிக்கிறேன்…”
“ரிஷிக்கு பிடிக்காததை செய்ய வேண்டாம் பா. உங்களுக்கே தெரியும் என்னோட அப்பா அம்மா ஆக்சிடன்ட்ல இறந்துட்டாங்க.. நாங்க மூணு பேர் மட்டும் தான். என்னோட வைஃப்பும் நல்லா சம்பாதிக்கிறா..”
“தேவைக்கு அதிகமாவே இருக்கு.. சங்கீதா கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன் எவ்வளவு செலவானாலும் பார்க்க சொல்லித்தான் அனுப்பினா.. ரிஷிக்கு பார்க்கிற அளவு என்கிட்ட இருக்கு..”
“உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் ராம். இப்போ நீ செய்ததே பெரிய உதவி! ஆனா இதுக்கு மேல செலவு பண்றதுக்கான பணத்தை கடன் வாங்கி கொடு…” என்றிட அன்று மாலையே 5 லட்சத்தோடு வந்து சேர்ந்தான் ராம்.
அதிலிருந்து 50,000 எடுத்து அவனுக்கு கொடுத்தார்.
“எனக்கு என்னப்பா அவசரம்? முதல்ல ரிஷிக்கு பாருங்க, ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆக்கிட்டா அதோடுன்னு கிடையாது… ஃபிசியோதெரஃபி மாத்திரை மருந்துன்னு நிறைய இருக்கு. அவன் நல்லபடியா எந்திரிச்சு நடக்கட்டும்.. அதுக்கப்புறம் வாங்கிக்கிறேன்..”
“ஒருவேளை எனக்கு முன்கூட்டியே தேவைப்பட்டாலும் தயங்காம கேட்டு வாங்கிக்கிறேன். தயவு செஞ்சு இப்போ உள்ள வைங்கப்பா..” என்றவன் விடுப்பு எடுத்துக்கொண்டு அன்று முழுக்க அவருடனே இருந்தான்.
முகத்திலும் உடலிலும் இருந்த சிராய்ப்புகள், கை கால்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவு, நாக்கில் ஏற்பட்ட காயம் என்று ஒவ்வொன்றுக்குமான சிகிச்சை முடிந்து அவன் அறைக்கு திரும்பும் வரை ராம் உடன் இருந்தான்.
“உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல ராம்.. உன்னை மாதிரி ஒரு ஃப்ரெண்ட் கிடைக்க என் பையன் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்” என்று அவன் கைகளை பிடித்து கண்களில் ஒற்றி கொண்டார்.
அடுத்த நாளும் இந்திரா மருத்துவமனைக்கு வர “உன்னை இங்கே வர வேண்டான்னு சொன்னேன் தானேடி.. எதுக்கு வந்த? உன் முகத்தை பார்க்க பார்க்க என்னை நானே செருப்பால அடிச்சுக்க தோணுது..”
“என் புள்ளை எப்படி இருக்கான்? அவனை ஒரே ஒரு முறை பார்க்கனும்..” என்றார் கண்ணீரோடு.
“எதுக்கு இப்போ இந்த நடிப்பு? இப்போன்னு இல்லை எப்பவுமே நீ அவனை பார்த்துடாத அதுதான் அவனுக்கு நல்லது.. உன்னை நான் இனி அந்த வீட்டில் பார்க்க கூடாது எப்ப உனக்கு உன் பொண்ணு முக்கியமா போயிட்டாலோ அவளோடவே கெளம்புடி.. என்னையும் என் பிள்ளையையும் நிம்மதியா வாழ விடுங்க..”
“ஒருவேளை நான் என் மகனோடு வீட்டுக்கு வரும் போது நீ அங்க இருந்த நான் கண்டிப்பா நான் அந்த வீட்டுக்குள்ள நுழைய மாட்டேன் என்..” என்று அவர் ஆரம்பிக்கவுமே கண்ணீரோடு இந்திரா அங்கிருந்து கிளம்பி விட்டார்.
இத்தனையும் ராம் முன்னிலையில் நடந்தேற “வாங்க ம்மா..” என்று இந்திராவை அழைத்துக் கொண்டு பத்திரமாக வீட்டிற்கு சென்றவன்,
“அவரோட கோபம் குறையற வரைக்கும் கொஞ்சம் தள்ளி இருங்கம்மா.. அதோட சிந்து இப்போ இங்க இருக்கிறதை விட பெங்களூரில் அவ அம்மாவோட இருக்குறது தான் சரி! நீங்க கூட்டிட்டு கிளம்புங்க..” என்றான்.
“இனியும் என் மகளை இங்க விட்டு வைக்க நான் கேணைச்சி இல்ல, கிளம்புடி..” என்றதில் அழுது ஆர்பாட்டம் செய்த மகளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு இந்திராவோடு பெங்களூருக்கு கிளம்பி விட்டாள் வனிதா.
நினைவில் மூழ்கி இருந்த சிவபாலன், “அப்பா பத்திரம் கேட்டிருந்தேனே..” என்றவனின் குரலில் மீண்டார்.
“இதோ இங்க இருக்கு ரிஷி..” என்று மேஜை டிராயரில் வைத்திருந்த அவர்கள் வீட்டு பத்திரத்தை கொண்டு வந்து கொடுத்தார்.
ஆம் அடமானம் வைத்திருந்த அவர்கள் வீட்டு பத்திரத்தை தன் உழைப்பில் மீட்டு எடுத்துவிட்டான். இது கூட அவன் மனைவி குழந்தைகளுக்காக தான்!! இல்லையென்றால் அன்று அவன் இருந்த விரக்தி மனநிலைக்கு இதெல்லாம் சாத்தியம் இல்லை.
தாய், தமக்கையின் துரோகம் அவனை வெகுவாவே சாய்த்து விட்டிருந்தது. உடலில் ஏற்பட்டிருந்த காயத்தை விட உள்ளத்தில் ஏற்பட்டிருந்த காயம் ஆற வெகு காலம் பிடித்தது.
ஆனால் அவன் படுக்கையில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கை அதன் தாத்பரியத்தை மட்டுமல்ல துணையின் அவசியத்தையும் அவனுக்கு நன்கு புரிய வைத்தது.
ஒருபுறம் துரோகம், மறுபுறம் மனைவியின் பேரன்பு!
இரண்டுமே அவன் கண்களில் நீர் நிறைய செய்தது. மெல்ல துரோகத்தில் இருந்து மீண்டவன் மனைவிக்காகவே புது மனிதனாக புனர்ஜென்மம் கொண்டான்.
அவளுக்காக வீட்டை மீட்க முடிவு செய்தவன் மனைவி குழந்தைகளோடு வீட்டிற்கு வரும் போது முன்பு போல எதற்காகவும் மனைவியை சார்ந்திருக்காமல் அவள் வருமானத்தை எதிர்பார்க்காமல் அவர்களை தன் பொறுப்பில் எடுக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் திடமாக இருக்க வேண்டும் என்ற உறுதி கொண்டான்.
இத்தனை வருடங்கள் அன்னையை பிரிய வேண்டும், தான் இல்லாமல் குடும்பம் எப்படி இருக்கும் என்று கிடைத்த வாய்ப்புகளை மறுத்து வந்தவன் இம்முறை ஆன்சைட் ஆஃபருக்கு ஒப்புக்கொண்டான்.
மாதம் மூன்றரை முதல் ஐந்து லட்சம் வரை அவனுக்கு சம்பளம். ப்ராஜெக்ட்டை நல்ல படியாக முடித்து வந்தால் இரண்டு லட்சத்திற்கு குறையாமல் இந்தியாவிலேயே அவன் வேலை பார்க்கும் வாய்ப்பு.
ரிஷிக்கு இருக்கும் கடன் சுமைக்கு எப்படி நழுவ விடுவான்?
முடிவு எடுத்ததுமே நண்பனிடம் தெரிவித்து அலுவலகத்திலும் பேசி இருந்தான்.
கம்பெனியின் முதல் சாய்ஸ்ஸும் ரிஷி தான்! ஆனால் அவனுக்கு விபத்து நடந்து மெடிக்கல் லீவில் இருப்பதால் வேறு ஒருவருக்கு வழங்க இருந்த வாய்ப்பை சரியான நேரத்தில் ராம் ரிஷிக்கு பெற்று கொடுத்தான்.
“லட்சுமி கண்டிப்பா வீட்டுக்கு வந்துடும் தானே ரிஷி?” என்றார் சிவபாலன்.
“கண்டிப்பா வருவாப்பா. ஒருவேளை வர மாட்டேன்னு சொன்னா உங்க மருமக கையில கால்ல விழுந்தாவது கூட்டிட்டு வருவேனே தவிர்த்து என் பொண்டாட்டி பிள்ளைகளை இல்லாமல் திரும்ப இங்க வர மாட்டேன்..”
“அதுக்கு முன்னாடி வீட்டுக்காக வாங்கி இருந்த ஈஎம்ஐ க்ளோஸ் பண்ணிட்டு வரேன்..” என்று கிளம்பி சென்றவன் வங்கியில் வேலையை முடித்துக் கொண்டு நேராக புடவை கடைக்கு சென்றான்.
திருமணம் ஆனதில் இருந்தே மனைவிக்காக அவன் புடவை தேர்ந்தெடுப்பது இதுதான் முதல்முறை!!
அவன் தேர்ந்தெடுப்பது என்பதை விட திருமணம் ஆனதில் இருந்தே மகாவிற்கு அவன் எடுத்து கொடுக்க போகும் முதல் புடவை இதுதான்! என்பது ஏனோ அந்நேரம் நினைவு வர தன்னை நினைத்து ரிஷிக்கே வெட்கமாக இருந்தது.
கணவனுடனான நேரம், அவனது அன்பு, அரவணைப்பு தவிர்த்து புடவை, நகை என்று எதற்கும் ஆசைப்படாதவள் தான் மகாலட்சுமி.
அப்படி பட்டவளுக்கு தேனிலவு தவிர்த்து வேறு எங்குமே அவன் பரிசு கொடுக்கும் வாய்ப்பு பெரிதாக அமைந்ததில்லை.
“இவ்ளோ வருஷம் கழிச்சு புடவையை கொண்டு போனா மகா உடனே வாங்கிட்டு உன்னை கொஞ்சுவான்னு நினைக்கிறா ராசா?” என்று அவன் மனசாட்சியே அவனை கிழித்தது.
“நல்லதா நினைக்கவே மாட்டியா? மகா கொஞ்சலனாலும் பரவால்ல என்னை மன்னிச்சா போதும்.. எனக்கு என் பொண்டாட்டி வேணும், அதுக்கு உதவி செய்யறதா இருந்தா பேசு இல்லை வாயை மூடுட்டு இரு..” என்று மனசாட்சியை தட்டி வைத்து விட்டு புடவைகளை பார்வையிட்டான்.
அவள் நிறத்திற்கு பொருத்தமாக இருக்க வேண்டும் அவளுக்கு பிடிக்க வேண்டும் என்று பல வேண்டுதல்களோடு நாற்பது நிமிடங்களை செலவழித்து பட்டுப் புடவையை எடுத்தவன் அதே நிறத்தில் மகளுக்கு பாவாடை சட்டை, மகனுக்கு வேட்டி சட்டை எடுத்துக் கொண்டார்.
அடுத்து நகை கடைக்கு சென்றவன் மகாவிற்கு தோடும் ஏற்கனவே இருவரின் முதல் எழுத்தை பதித்த லேட்டஸ்ட் டிசைனில் “எம்.ஆர்” என்று பொறிக்கப்பட்டிருந்த நீண்ட செயினை வாங்கிக் கொண்டு வழியில் நான்கு முழம் பூ, ஸ்வீட், பழங்கள் என்று கைக்கொள்ளா பைகளோடு மகாவின் வீட்டிற்கு கிளம்பினான்.
itheyllam avakkita ipovavathu sollitu onsite poi irukkalam
ReplyDelete