“ஆறு வருஷமா நான் பொறுமையா காத்திருந்ததே இந்த
நாளுக்காக தான்..! ஒருவேளை அன்னைக்கே நீ செருப்பால அடிச்ச பிறகும் நான் உன்னை
தூக்கிட்டு போயிருந்தா போலீஸ் கேஸ்ன்னு நிச்சயம் தப்பு என்மேலன்னு ஆகிடும்,
நீ எனக்கு கிடைக்க மாட்ட ஆனா இப்போ ஊரே நீ என்னை ஏமாத்திட்டதா
நம்புது சட்டத்துல இருந்து சாமானிய மக்கள் வரை எல்லாரும் எனக்கு சாதகமா
இருக்காங்க..” என்றவன் தன் கைபேசியில் காணொளியை ஓட விட அதில் அப்பாவி சரத்திற்கு
நியாயம் கிடைக்க வேண்டும் என்று சொல்லி JUSTICE FOR SARATH என்று
ஒரு கும்பல் சமூக ஊடகங்களில் கிளம்பியிருந்தது.
“அன்னைக்கு நான் உன்னை விடாம துரத்தி
தூக்கியிருந்தா பத்தோட பதினொன்னா இரண்டு நிமிஷம் வாசிச்சிட்டு போற செய்தியா
இருந்திருக்கும் எனக்கு நீ கிடைச்சிருக்க மாட்டா.. ஆனா இப்போ நாம தான் ஹாட் ஆஃப்
தி டவுன்!!"
"எல்லாரும் உன்னை தூக்கி போட்டுட்டு வேற பெண்ணை
கல்யாணம் செய்துக்கணும் உனக்கு தண்டனை வாங்கி கொடுக்கணும்னு சொல்றாங்க ஆனா நான்
அப்படி செய்ய மாட்டேன்.. எனக்கு அப்பவும் இப்பவும் எப்பவும் நீ வேணும்..”
என்றவனின் விழிகளில் அவளை அடையும் தீவிரம் கொழுந்துவிட்டு எரிந்தது.
“இப்போ நீ சட்டபூர்வமா என் பொண்டாட்டின்னு இந்த
மேரேஜ் சர்டிஃபிகேட் சொல்லும் நான் உன்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கலைன்னு இந்த
ஃபோட்டோ சொல்லும்... இனி ஒரு பய உன்னை சீண்ட மாட்டான் அப்படியே
எவனாவது இதுக்கும் மேல உன்னை கட்டிக்க வந்தா அதை எப்படி தடுக்கணும்னு எனக்கு
தெரியும்டி..” என்றவன் தன் கைபேசியில் மற்றொரு காணொளியை ஓடவிட்டு,
“நீ என்னோட வாழ்ந்ததுக்கான ஆதாரமா இந்த வீடியோ
பேசும்” என்றிட அதை கண்ட தளிர் திகைப்பின் உச்சிக்கே சென்றிருந்தாள். பின்னே அதில்
தளிரும் சரத்தும் ஒன்றாக படியேறி ஒரு அபார்ட்மெண்டில் நுழைவது போன்ற காணொளி
இருந்தது.
‘இது எப்போது எடுத்தது..?’ என்று தளிர் நினைவடுக்கில் தேட அப்போது தான் இது அவர்களின் பேராசிரியர்
ஒருவரின் அப்பார்ட்மென்ட் என்றும் இங்கு நண்பர்கள் அனைவருமே புது
வருடத்திற்கும், தீபாவளி பொங்கலுக்கு ஒரு சிலமுறை சென்று
வந்ததும் நினைவு வந்தது.
எங்கு சென்றாலும் நண்பர்கள் வீடியோவும் புகைப்படமும் எடுப்பது
சர்வசாதாரணம் என்பதால் அன்று அப்பார்ட்மென்ட் வாயிலினுள் நுழைந்ததில் தொடங்கி
லிஃப்ட்டை பயன்படுத்தாது படிகளில் அவர்கள் ஏறியது வரை தீனா படம் பிடித்ததை யாருமே
பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
வழக்கம் போல துள்ளலும் சிரிப்புமாக சென்றிருந்த நண்பர்கள்
பட்டாளத்தில் அஜய்யும் லேகாவும் காதலர்கள் என்பதால் அவர்கள் இருவரும் ஒன்றாக
முன்னே செல்ல அவர்கள் பின்னே தளிரும் சந்தியாவும் வந்து கொண்டிருந்தனர்.
இடையில்
சந்தியாவிடம் ஏதோ சந்தேகம் கேட்பது போல அசோக் அவளோடு பின்தங்கி பேசிக்கொண்டு வர
தனியாக இருந்த தளிரோடு சேர்ந்து சரத் படியேருவதை தீனா கட்சிதமாக வீடியோ
எடுத்திருந்தான். அதுமட்டுமல்ல அப்பார்மென்ட்டில் நுழைந்ததில் தொடங்கி அங்கிருந்த
நொடிகளில் எல்லாம் அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்திருப்பது போல புகைப்படங்கள்
எடுத்திருந்தான்.
“என்ன? இது எதுக்குன்னு
புரியலையா..?” என்று தளிரை எள்ளலாக பார்த்தவன்,
“கல்யாணமாகி இரண்டு மாசம் நாம சேர்ந்து
வாழ்ந்தோம்னு சொன்னதை நம்பாம ஹீரோயிஸம் காட்டினானே அந்த நாய் அவன்கிட்ட இப்போ
கல்யாணத்துக்கு முன்னாடியே நீ என்னோட இந்த அப்பார்ட்மென்ட்க்கு அடிக்கடி ஸ்பெஷல்
கிளாஸ், க்ரூப் ஸ்டடின்னு சொல்லி சேர்ந்து வாழ்ந்திருக்கன்னு
சொல்லுவேன்டி.."
"அதுமட்டுமில்ல முதல் வருஷம் முடியறதுகுள்ளவே
மூணு முறை அபார்ஷன் பண்ணினன்னு சொல்லி ஆதாரமா இந்த ஃபோட்டோஸ், வீடியோஸ் காட்டுவேன் இதுக்கு அப்புறமும் அவன் உன்னை திரும்பி பார்ப்பான்னு
நினைக்கிறியா..?” என்று அலட்சியமாக இதழ் வளைக்க அவனை உறுத்து
விழித்தாள் தளிர்.
பின்னே நண்பர்கள் அனைவரும் மூன்று நான்கு முறை
அப்பார்ட்மென்ட்டிற்கு சென்றிருந்ததால் வெவ்வேறு உடைகளில் இருப்பதை கொண்டு சரத்
சொன்ன குற்றச்சாட்டு ஊர்ஜிதபடுத்தபட்டு தளிர் உண்டாகாத கருவை கலைத்ததையும்
உறுதிபடுத்தி இன்னுமே அவளை கலங்கபடுத்துவான் என்பது புரிய தளிரின் முகத்தில்
சொல்லெனா உணர்வுகளின் படையெடுப்பு.
“ம்ப்ச்.. ம்ப்ச்.. நிச்சயமா மானமுள்ள எவனும்
உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டான்.. ஒன்னு என்னோட சேர்ந்து வாழு நீ
செய்ததெல்லாம் மன்னிச்சு உனக்கு ஊரறிய தாலி காட்டி அந்தஸ்த்து கொடுத்து ராணி
மாதிரி பார்த்துக்கறேன் இல்லை காலம் முழுக்க கன்னியாவே கிடந்து சாகுடி.. எனக்கு
கிடைக்காதவ யாருக்கும் கிடைக்க கூடாது” என்ற சரத்தை இழுத்து நிறுத்திய தென்றல் அவனை
ஓங்கி அறைந்ததில் தடுமாறிய சரத்தின் இதழ்க்கடையோரம் கிழிந்து குருதி வழிந்தது.
“ஏய் யாரடி அடிக்கிற..?” என்றவன்
உதய் அடித்த அடியில் சரியாக நிற்க முடியாமல் தள்ளாடி சுவரை பிடித்து தன்னை
நிலைபடுத்தினான்.
“ஏன்டா ஏன்..? எங்கக்காவை
இப்படி அலைக்கழிக்கிற.. தப்பே பண்ணாம அவ வாழ்க்கையை அழிக்க பார்க்கிற..?” என்றவள் ஆத்திரத்தோடு அவனை மீண்டும் அறைந்திட அவள் கண்ணில்
தேங்காய் உரிக்கும் கூர்மையான ஆயுதம் விழ அதை எடுத்துகொண்டவள் ஆவேசமாக அவனை
நெருங்கி இருந்தாள்.
“ஏய் என்ன பண்ற..? பைத்தியம்
அதை கீழ போடு எனக்கு ஏதாவது ஆச்சு உங்கக்காக்கு வாழ்க்கையே இல்ல புரியுதா..?”
என்று கத்தியவன் ஓரடி பின்னே வைத்தான்.
“நீ என்னடா எங்கக்காக்கு வாழ்க்கை கொடுக்கறது..?
உன்னை விட்டாதானே நீ எங்கக்காவை வாழவிடாம செய்வ நீயெல்லாம் உயிரோடவே
இருக்ககூடாது” என்றவள் ஓங்கி அவன் தலையில் அடிக்க அதை தடுத்து பிடித்த சரத்தின்
கையில் பலமான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
“என்னையாடி அடிச்ச..? இதுக்கும்
சேர்த்து அனுபவிப்பீங்க” என்றவன் அவள் கையில் இருந்த கருவியை பிடித்து இழுத்து
சிலையென அமர்ந்திருத்த தளிரின் முன் சொடக்கிட்டு,
“இதோபார் ஒருவேளை நீ என்னை டைவர்ஸ் பண்ணனும்னு
சொல்லி கோர்ட்க்கு போனா எனக்கு பொண்டாட்டி கூட சேர்ந்து வாழனும் எங்களை
பிரிச்சிடாதீங்கன்னு சொல்லி வாய்தா மேல வாய்தா வாங்கி உனக்கு
டைவர்ஸ் கொடுக்காம இழுத்தடிப்பேனே தவிர வேற எவனோடவும் உன்னை வாழ விடமாட்டேன்டி..
ஏன்டா இவன் கட்டின தாலியை கழட்டினோம் அடிச்சோம்னு தினம் தினம் நீ அணு அணுவா
துடிக்கனும்..” என்று உறுமியவன் பித்து பிடித்தவாறு நின்றிருந்த சீதாவிடம்
கையிலிருந்த தாலி கயிறை கழற்றி கொடுத்து,
“இப்போவரை உங்க பொண்ணு மேல என் விரல் நுனி கூட
தப்பா பட்டதில்லை ஆனா என் தாலியை இந்த முறை ஏத்துக்க மாட்டேன்னு தளிர் சொன்னா,
நிச்சயம் நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல இரக்கமே இல்லாம அவ
சந்தோஷத்துக்காக இரண்டு மாசம், மூணு மாசம் கூட முடியாத
சிசுவை கொன்னான்னு சொல்லுவேன் ஊரே நான் சொல்றதை தான் நம்பும்.. அப்புறம் உங்க
பொண்ணு நிலைமை என்னாகும்னு யோசிச்சு பார்த்தாலே இந்த
தாலி தான் உங்க பொண்ணுக்கு வேலின்னு புரியும் அத்தை..” என்று
நக்கலாக பார்த்தவன்,
“இன்னும் இரண்டு நாளுல திரும்ப வருவேன்
இதெல்லாம் நடக்க கூடாதுன்னா அவளுக்கு புத்தி சொல்லி கல்யாணத்துக்கு தயாராக
சொல்லுங்க.. முக்கியமா என் மேல கையை வச்சவளுக்கு அக்கா புருஷனுக்கு எப்படி மரியாதை
செய்யணும்னு சொல்லி வைங்க இல்ல அவ தலையெழுத்தையும் நான் மாத்தி எழுத வேண்டி
இருக்கும்..” என்று எச்சரிக்க அவனை ஓங்கி அறைந்த தென்றல்,
“பொறுக்கிநாயே உன்னால முடிஞ்சதை பாருடா.. ஆனா
உன் உயிரை எடுக்கும் முன்னாடி இங்கிருந்து போறது உனக்கு நல்லது” என்று ஆவேசமாக
கருவியை எடுத்து அவன் மண்டையில் வீச அதற்குள் வேகமாக
கதவை திறந்து நடக்க முடியாமல் வெளியேறினான்.
**********
ராகவன், நிவேதா, சரவணன், சுஜி என்று அனைவரும் சுற்றி அமர்ந்திருக்க தன் எதிரில் அமர்ந்திருந்த தென்றல் சொன்னதை கேட்டு தணியாத கோபத்தோடு அமர்ந்திருந்தான் உதயாதித்தன்.
“ஏன் தென்றல் ஏற்கனவே சொன்னேனே ஏதாவது அவசரம்ன்னா எனக்கு உடனே கால் பண்ண சொல்லி, நேற்றே ஏன் பண்ணல” என்றான் நண்பனின் முகம் பார்த்துக்கொண்டே
“அண்ணா நான் அத்தானுக்கு கால் பண்றதுக்காக ஃபோன் எடுத்ததும் அந்த சைக்கோ பிடுங்கி உடைச்சுட்டான் அவன் அடுத்தடுத்து பேசின ஷாக்ல எனக்கு என்ன செய்யறதுன்னே புரியலை..”
“அத்தை எப்படி இருக்காங்க தென்றல் வைஷுவை சமாளிக்க முடியலை இன்னைக்கு தான் ஒருவழியா அக்கா தம்பியை ஸ்கூல் அனுப்பிட்டு தாத்தாவை பார்த்துட்டு வீட்டுக்கு வரலாம்னு இருந்தேன்” என்று சுஜி சொல்ல,
“நான் என்ன சொல்ல அண்ணி அக்கா அபார்ஷன் பண்ணினான்னு அவன் ஆதாராத்தோட சொல்லி டிவோர்ஸ் கொடுக்கமாட்டேன் சொன்னதை கேட்டு அம்மா அரண்டு போயிட்டாங்க.... ரொம்ப நேரம் எதுவுமே பேசலை அப்புறம் என்னென்னமோ சொல்லி அழுதுட்டே இருந்தாவங்களை சமாளிச்சு தூங்க வச்சேன்”
“ஏன் தென்றல் அப்புறமும் எங்களுக்கு தகவல் கொடுக்கலை” என்று நிவி கோபத்தோடு கேட்க,
“ஏற்கனவே தாத்தா இப்படி இருக்கப்போ அந்த நேரத்துல உங்களை டிஸ்டர்ப் பண்ணனுமான்னு தான் கூப்பிடலை அண்ணி”
“ப்ச் என்ன தென்றல் நீ..? எங்க யாருக்காவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே” என்று சுஜியும் கடிய,
“சரி விடுங்க அவ மட்டும் என்ன செய்வா..? இப்போ நடக்க வேண்டியது என்னன்னு பார்ப்போம்” என்று சரவணன், “தளிர் இப்போ எப்படிம்மா இருக்கா, அம்மா எங்கே..?”
“அண்ணா அம்மா அவங்க ஒனரை பார்க்க போயிருக்காங்க ஆனா அக்கா நேற்று ராத்திரியில இருந்தே ரொம்ப அமைதியா இருக்கா..? எனக்கு அதுதான் பயமா இருக்கு”
“நான் ஏதாவது கேட்டா இன்னும் நான் பத்தொன்பது வயசு இளந்தளிர் இல்லை எனக்கு எப்பவும் நீங்க முக்கியம்னு சொல்லி எங்களை கட்டிபிடிச்சுகிட்டா... அவ எதையும் சொல்லி அழலை, அவனை திட்டலை, போலீஸ்க்கும் போகலை, என்ன சொல்ல..?” என்றவள் முகத்தில் அத்தனை கலக்கம்.., அதை கண்ட தண்ணீர் எடுத்து கொடுத்த சுஜி அவளை அணைத்து ஆறுதல்படுத்த..,
“அவனால தான் எங்கக்கா சியூசைட் வரையிலும் போனா த்தான்.. இப்போ அவளை...” என்றவளை இடையிட்டு,
“என்னது சியூஸைடா இது எப்போ நடந்தது..?” என்று உதய் அதிர்வோடு தென்றலை பார்த்தான்.
“என்ன தென்றல் சொல்ற..? இது எப்போ..?” என்ற மற்றவர்களின் குரலிலும் அத்தனை பதட்டம்.
“ஏன் த்தான் உங்களுக்கு தெரியாதா..? ஆனா நீங்க அக்காக்கு அந்த பொறுக்கி தாலி கட்டினது தெரியும்னு சொன்னீங்களே..” என்று யோசனையாக பார்த்தாள்.
“ஆமா என்கிட்டே தளிர் அவன் தாலி கட்டினது அதை தூக்கி போட்டுட்டு வந்தது பற்றி தான் சொன்னா இதெல்லாம் சொல்லல ப்ரீஸீ” என்றவனிடம் தளிர் தான் நண்பர்களை கண்மூடித்தனமாக நம்பியது அவர்களால் தனக்கு இழைக்க பட்ட துரோகம் பற்றி சொன்னவள் அதன் தொடர்ச்சியாக தான் மேற்கொண்ட தற்கொலை முயற்சி, சிகிச்சை என்று எதை பற்றியும் சொல்லவில்லை.
அப்படி சொல்லி தன் தரப்பை நியாயப்படுத்தி உதய்யிடம் அனுதாபம் தேடவோ அவனை திருமணம் செய்துகொள்ளவோ அவள் விரும்பவில்லை. அழுகையோ ஆர்பாட்டமோ இன்றி நிமிர்வோடு தன் தரப்பை எடுத்து வைத்துவிட்டு உதய்யின் பதிலுக்காக காத்திருந்தாள்.
“இல்ல த்தான் அத்தை மட்டும் இல்லன்னா இன்னைக்கு எங்கக்கா உயிரோட இருந்திருக்க முடியாது.. அதுக்கப்பறம் ஓரளவு பழையபடி திரும்பி தன்னோட படிப்புல ஃபோகஸ் பண்ண அவளுக்கு கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகியிருக்கு..” என்றவள் தளிர் கொண்ட மனவுளைச்சலை எடுத்து சொல்ல உதய்யின் முகம் செந்தணலாக மாறியிருந்தது.
புருவம் நெறிபட தாடை இறுக மெளனமாக அமர்ந்திருந்தவனுக்கு இப்போதே சரத்தை கொன்று கூறு போடும் வெறி கிளம்பினாலும், சில நொடிகளில் தன்னை மீட்டு நிதானித்தவனின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தது.
ஆனால் அதற்கு நேர்மாறாக, “மச்சான் இன்னும் ஏன் டா அமைதியா இருக்க.. நம்ம *** ஏரியா பசங்களுக்கு சொன்னா நைட்டோட நைட்டா ஆதாரமே இல்லாம அவனை அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு போட்டுடுவாங்க” என்ற ராகவன் கைபேசியை எடுத்தான்.
“கொஞ்சம் அடங்கு” என்று வேகமாக கைபேசியை பறித்த உதய்,
“ஏன்டா இதை செய்யறதா இருந்தா நான் அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்ததுமே செய்திருக்க மாட்டேனா..? எனக்கு தளிர் முக்கியம்., அவமேல அநியாயமா சுமத்தபட்டு இருக்கும் குற்றச்சாட்டை இல்லைன்னு நிருபிக்கணும், அவன் செய்த தப்பெல்லாம் அவன் வாயாலேயே ஒத்துகிட்டு தளிர் கிட்ட மன்னிப்பு கேட்கணும்..”
“மன்னிப்பு கேட்டு அவனை மகாத்மாவா மாத்த போறியா..?” என்ற ராகவன் நேற்றிரவே தான் செய்த தவறு புரிபட நண்பன் சொல்லும் முன்னமே தளிர் வீட்டிற்கு ஷேடோ போட்டுவிட்டான்.
“ப்ச் பொறுமையா இரு மச்சான்.. அவனை அவன் வழியில போய் தான் மடக்கனும்... இவ்வளவு தூரம் ப்ளான் பண்ணி செய்திருக்கவனை பழிவாங்கிறன்னு அவசரப்பட்டு தளிரை இன்னும் ஆபத்துல சிக்க வச்சுடகூடாது.. நம்மோட அவசரம் தளிருக்கு பாதகமா தான் முடியும்”
“அதுக்காக அவனை சும்மா விட்டுடனுமா அத்தான்” என்று தென்றல் ஆவேசமாக பார்க்க,
“ஆமா ண்ணா தென்றல் சொல்றது தான் சரி, தென்றல் இடத்துல நான் இருந்திருந்தா நேத்தே அந்த டேஷை கொன்னிருப்பேன்..” என்ற நிவியை பார்த்தவன்..
“உங்களை விட அதிகமானளவு கோபம் எனக்கு இருக்குடா.. இப்போவே அவசரபட்டா தளிர் கொண்டிருந்த தூயநட்புக்கும் அவன் மேல வச்சிருந்த நம்பிக்கைக்கும் துரோகம் செய்து தப்பே செய்யாதவளை கட்டாயபடுத்தி, கண்காணிச்சு, அசிங்கபடுத்தினதுன்னு அவன் செய்த எதுவுமே மன்னிக்க கூடிய தப்பு கிடையாது... ஆனா அவனோட அய்யோக்கியதனத்தை நிருபிச்சு தளிரை அவன் சிக்க வச்சிருக்க கல்யாண வலையில் இருந்து முதல்ல அவளை விடுவிக்கணும் மற்றதை அதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்..” என்றவன்,
“ஏன் ப்ரீஸீ நீ தனியா வந்த..? இன்னைக்கு நான்... இல்ல இப்பவே நீ நிவி கூட அவங்க வீட்டுக்கு கிளம்பு” என்றான்.
“இப்பவே எப்படி த்தான்..? தாத்தாவை பார்த்துட்டு கிளம்பட்டுமா”
“ப்ச் சொன்னதை செய் தாத்தாவை இன்னொரு நாள் பார்த்துக்கலாம்... நீ நிவியோட கிளம்பு அத்தை தளிரை நான் கூட்டிட்டு வரேன்”
“மச்சான் நீ எப்படிடா மாமா தான்..” என்றவனை உதய் தீயாய் முறைக்க உடனே வார்த்தையை விழுங்கி கொண்டான்.
Comments
Post a Comment