தீராத காதல் தொல்லையோ - 4.2
மேலும் மூன்று வருடங்கள் கழிந்த நிலையில்:
அதிகாலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்க கணவனின் கைவளைவில் இருந்த மகாவின் கழுத்தில் முகம் புதைத்திருந்த ரிஷியின் புறம் புரண்டு அவனை கட்டிக்கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள் மகாலட்சுமி.
ஆனால் அலாரம் சப்தத்திலும் அவள் புரண்டதிலும் விழித்து விட்ட ரிஷி தன் மார்பில் முகம் புதைத்திருந்த மகாவின் உச்சியில் முத்தமிட்டு, “நேரமாச்சு லச்சு...” என்றான்.
“இன்னும் பைஃவ் மினிட்ஸ் ரிஷி!!” என்றாள் கண்களை திறக்காமல்.
மேலும் சில நிமிடங்கள் கழித்து “நேத்தே வாக்கிங் மிஸ் பண்ணிட்டோம்.. எழுந்துக்கோ டா..” என்று அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.
“அப்போ நேத்து நைட் என்னை சீக்கிரம் தூங்க விட்டிருக்கணும்.. நான் சொன்னதை கொஞ்சமும் கேட்கவே இல்லை.. பேட் பாய்!!” என்று சிணுங்கிய மகா இன்னும் அழுத்தமாக அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
சிரிப்போடு மனைவியை பார்த்தவன், “சரி, நீ தூங்கு…” என்று எழுந்து கொள்ள முயல மகாவின் கரங்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.
மேலும் பத்து நிமிடம் பொறுத்தவன் மெல்ல மகாவின் தலையை தன் நெஞ்சில் இருந்து தலையணைக்கு மாற்றிவிட்டு எழுந்து குளியலறைக்கு சென்றான்.
திரும்பி வந்தவன் மெல்லிய விளக்கொளியில் உறங்கி கொண்டிருந்த குழந்தைகளை பார்த்தான்.
அவங்களுக்காக அவன் வாங்கி வைத்திருந்த கட்டிலில் இருவருமே மேல் தளத்தில் உறங்கி கொண்டிருந்தனர். போர்வையை சரியாக போர்த்தி விட்டு திரும்ப “குட் மார்னிங் ரிஷி..” என்றாள் மகாலட்சுமி சோம்பலை முறித்தபடி.
“குட் மார்னிங் லச்சு!! இன்னைக்கு சாம்பார் தானே இல்லை வெஜ் ரைஸ்ஸா?” என்றான்.
“ஏன் கேட்கறீங்க? இன்னக்கு மண்டே ரொட்டீன் தானே?!”
“கௌஷி அவ ஃபிரெண்ட் கொண்டு வந்த மாதிரி வெஜ் ரைஸ் வேணும்னு கேட்டு இருந்தாளே.. ஸோ ஏதாவது சேஞ்சஸ் இருக்கான்னு கேட்டேன்..”
“நேத்து மட்டன் சிக்கன்னு வெளுத்து கட்டியிருக்காங்க.. ஸோ இன்னைக்கு வேண்டாம். அதோடு அவங்க கேட்டதும் உடனே செய்து கொடுத்துட்டா அதோட வேல்யூ தெரியாது..” என்றவளை புரியாமல் ரிஷி பார்க்க,
“மறந்துட்டீங்களா?! போன வாரம் உங்க பையன் சாம்பார் சாதம் கேட்டான்னு எவ்ளோ ஆசையா செய்து கொடுத்தோம்.. ஆனா அவனோட ஃப்ரெண்ட் கொண்டு வந்த பாஸ்தாவை சாப்ட்டுட்டு இதை அப்படியே திருப்பி கொண்டு வந்தான்…”
“அவன் ஆசை பட்டு கேட்டதோட மதிப்பு அவனுக்கு தெரியலை, தெரிஞ்சிருந்தா அட்லீஸ்ட் எல்லாருக்கும் ஷேர் பண்ணி இருப்பான்…”
“சின்ன குழந்தைங்க தானேடி?! அவங்களுக்கு என்ன தெரியும்?”
“இதுதான் தப்பு! ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது ரிஷி. இது குழந்தைகள் அதிகம் கத்துக்க கூடிய பருவம்! பார்க்கிற, கேட்கிற விஷயங்கள் அப்படியே மனசில் பதியும். ஸோ இப்போ தான் சொல்லி கொடுக்கணும்..” என்ற மனைவியின் பேச்சை ஏற்று கொண்டவன், “சீக்கிரம் வா..” என்று வெளியே சென்றான்.
மகா குளியலறைக்கு செல்ல.. சமையலறைக்கு வந்த ரிஷி, அரிசியை களைந்து ஊற வைத்து சமையலுக்கு தேவையான காய் கறிகள் மற்றும் பாலை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து வைத்து விட்டு வர மகா வாக்கிங் செல்ல தயாராகி வந்தாள்.
மகா இப்போது இங்கே தொடங்கி இருக்கும் அவர்களின் புதிய கிளைக்கு மாறிவிட்டதால் இனி அரக்கபரக்க ஒன்றரை மணி நேரம் மெட்ரோ, பஸ் என்று மாறி பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதுமட்டுமல்ல வீட்டு வேலைக்கு ரிஷி ஆளை நியமித்து இருந்ததால் காலை ஒரு முறையும் மாலை ஒருமுறையும் வந்து பாத்திரம் தேய்த்து, பிள்ளைகள் இருக்கும் வீடு என்பதால் சுத்தம் செய்து மாப் போட்டு துணிகளை துவைத்து விடுவார்.
அதனால் மகாலட்சுமி காலை வேளையில் சமையலை மட்டும் கவனித்து கொண்டால் போதும். அதையும் ரிஷியும் சிவபாலனும் பங்கு போட்டு கொள்வதால் அவளின் வேலை பாதியாக குறைந்துவிடும்.
அதோடு குழந்தைகளை தயார் படுத்தவும் மற்றவர்கள் உதவுதால் அவளின் காலை நேர பரபரப்பு இப்போது இல்லாமல் போனது.
மகா மற்றும் ரிஷி இருவரின் அலுவலகமும் ஒரே வளாகத்தில் அமைந்திருப்பதால் இருவரும் பெரும்பாலும் ஒன்றாக தான் கிளம்புவார்கள். அவர்களின் வேலையை பொறுத்து மாலை ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ திரும்புவார்கள்.
அன்று வீட்டிற்கு திரும்ப வந்த நாளில் இருந்து இந்த நிமிடம் வரை பழையதை பேசுவதோ, அக்கா அம்மாவிடம் ஏமாந்ததை பற்றியோ ஒரு வார்த்தை கூட மகா அவனை குத்தி காண்பிக்கவில்லை.
இருவரின் சம்பளத்தையும் வழக்கம் போல ரிஷி தான் கையாள்கிறான். ஆனால் மாதம் இரண்டு முறை மனைவியோடு அமர்ந்து கணக்கு வழக்கு சரி பார்த்து விடுவான்.
திட்டமிட்டு குடும்பம் நடத்துவதாலும் எக்காரணம் கொண்டும் ஈஎம்ஐ எடுக்க கூடாது என்று மகா சொல்லிவிட அவள் சேமிப்பில் மூன்று வருடங்களுக்கு முன்பே கார் வாங்கி விட்டார்கள்.
மகாலட்சுமி பணத்தின் அருமை புரிந்தவள் என்பதால் ரிஷியிடம் மாதத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என்று கறாராக சொல்லி அவர்களின் சம்பள பணத்தில் இருந்து முதலில் ஐம்பதாயிரத்தை சேமித்து விடுவாள்.
அடுத்து அவசர, மருத்துவ தேவை என்று அதற்கு தனியாக ஐம்பதாயிரம் எடுத்து வைத்து விடுவாள். அதனால் அவசர காலங்களில் யாரிடமும் உதவி கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.
மகா செலவாளி கிடையாது!! இருவரின் சம்பளமும் மாதம் ஐந்து லட்சத்திற்கும் மேல்! தேவைக்கு, அத்தியாவசியத்திற்கு பொருட்களை தரமாக வாங்குவாளே தவிர்த்து ஆடம்பரத்திற்காகவோ, அடுத்தவர்களோடு போட்டி போடவதற்கோ எதுவுமே செய்ய மாட்டாள்.
அதேபோல இருபக்க விசேஷங்களுக்கு, அத்தையாக மகா அண்ணன்களின் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டியது, அவள் பெற்றோரின் மருத்துவ செலவு என்று அனைத்திற்கும் சேர்த்து ஐம்பதாயிரத்தை தனியாக ஒதுக்கி சேமித்து விடுவாள்.
பணத்தை எங்கு, எதில் சேமிக்கலாம், என்பதில் தொடங்கி தங்கத்தில் முதலீடு செய்வது வரை அனைத்தும் இருவரும் கலந்தாலோசித்து செய்வது தான். சிவபாலனிடம் சொன்னால், “எனக்கு என்ன தெரியும்? உங்களுக்கு சரின்னு பட்டதை செய்ங்க..” என்று சொல்லி விடுவார்.
இருவரும் சேர்ந்து குடும்பத்தை நடத்துவதால் எந்த பிரச்னையும் இதுவரை வந்ததில்லை. இந்திரா வனிதா பற்றி நினைக்க கூட அவளுக்கு நேரமில்லை.
அவள் இங்கே திரும்ப வந்த போதே, “உனக்கு மாமனார் மட்டும் தான்! வேற யாரை பற்றியும் நீ யோசிக்க தேவையில்லை. அவங்களோட தலையீடும் இனி இங்கே இருக்காது..” என்று சொல்லி விட்டார்.
சொன்னதோடு நிற்காமல் ஆறு மாதத்தில் விவாகரத்தும் பெற்றுவிட்டார்.
வனிதாவிற்கு இங்கே உறவாட முடியாததில் பெரும் வருத்தம். ரிஷி மகளை காப்பாற்றி கொடுத்ததில் அவளிடம் சிறு மாற்றம் தென்பட்டாலும் அடிப்படை குணம் மாறவில்லை. மாறவும் மாறாது!!
சிவபாலனின் எச்சரிக்கையையும் மீறி ஒருமுறை மகா ரிஷி அலுவலகம் சென்றிருந்த போது உறவு பயிரை வளர்ப்பதற்காக அவள் இங்கே வந்துவிட தயவு தாட்சண்யமே பார்க்காமல் உடனே போலீசுக்கு அழைத்து விட்டார்.
அதன் பிறகு வனிதா இங்கே வருவதில்லை. ஆனால் இந்திராவோடு உறவாடி கொண்டு தான் இருக்கிறாள். ஒருமுறை பஸ்ஸில் இருந்து இறங்கும் போது இந்திரா தவறி விழுந்துவிட இடது கால் உடைந்து கட்டு போடப்பட்டது.
அப்போது அவரை பார்த்து கொள்ளவென்று இங்கே வந்தவள் ஜீவனாம்சமாக வந்த பணத்தையும் சிறுக சிறுக இந்திராவிடம் இருந்து கறந்துவிட இப்போது அவர் தன் வயிற்றுபாட்டிற்கு கோவிலில் பூ கட்டி விற்று கொண்டிருக்கிறார்.
சென்ற வாரத்தில் ஒருமுறை கோவிலுக்கு சென்ற போது சிவபாலனும் அவரை பார்த்தார் ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக வந்துவிட்டார். அதிலிருந்து மகன் மருமகள் யாரையும் அந்த பக்கம் போக விடுவதில்லை.
******
எக்காரணம் கொண்டும் ஓவர் டைம் செய்வதோ, அதிகளவிலான அழுத்தம் எடுத்துக்கொள்ளவோ கூடாது என்று மகா கண்டிப்பாக கணவனிடம் சொல்லி விட்டாள்.
அதனால் ஹைக், பதவி உயர்வு என்று எதன் பின்னாலும் ஓட வேண்டிய கட்டாயம் ரிஷிக்கு இருந்ததில்லை.
இவை அனைத்தையும் விட ரிஷியின் ஆரோக்கியம் தான் தனக்கு பிரதானம்!! அதை கெடுத்துக்கொண்டு சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.. என்று கணவனின் வயதிற்கு மீறி அவன் சுமந்த சுமைகளை நினைவு கூர்ந்தவள்,
“போதும் ரிஷி!! இனி எந்த டென்ஷனும் உங்களுக்கு வேண்டாம். நம்ம ரெண்டு பேரோட சம்பளமே ஐந்து பேர் கொண்ட நம்ம குடும்பத்தின் தேவைக்கு போதுமானது.. வருமானத்தை திட்டமிட்டு செலவு செய்தால் எந்த மனஉளைச்சலும் இல்லாமல் வாழ்வை ரசித்து வாழலாம்..” என்று சொன்னதோடு இப்போது வரை அவன் வாழ்வை ரசனையோடு வாழ வழி செய்திருக்கிறாள்.
இப்போது வரையிலும் தன் மகிழ்ச்சியை நிம்மதியை நிரந்தரமாக்கி இருக்கும் மனைவியிடம் அவன் நன்றி சொன்னதை விடவும் மன்னிப்பு கேட்டது தான் அதிகம்.
ஆனால் மறக்காமல் மகாலட்சுமியை தன் மனைவியாக்கிய கடவுளுக்கு தினம் தினம் நன்றி சொல்லிவிடுவான்.
காலை ஆறரை மணிக்கு பக்கத்தில் இருக்கும் பார்க்கில் வாக்கிங் முடித்து தம்பதியர் திரும்ப வரும் போது சிவபாலன் எழுந்து பேப்பர் வாசித்து கொண்டிருந்தார்.
குழந்தைகளுக்கு ஒன்பது மணி முதல் மூன்று மணி வரை பள்ளி என்பதால் அவர்களை ஏழு மணிக்கு எழுப்பினால் போதும்.
வழக்கம் போல வந்ததும் ரிஷி நேராக குளிக்க சென்று விட்டான்.
மகா காஃபியோடு வர மூவரும் சேர்ந்து குடித்து விட்டு சமையலில் இறங்கி விட்டனர். எப்போதுமே காய்கறி நறுக்கி கொடுக்கும் வேலை சிவபாலனை சேர்ந்தது.
மகா தடுத்தாலும் “இந்த வயசுல ஓடியாடி செய்யாட்டியும் ஓரளவு கை காலுக்கு அசைவு கொடுக்கணும் இல்லன்னா துரு பிடிச்சுரும் லட்சுமி..” என்ற சிவபாலன் காய்கறி பொறுப்பை எடுத்து கொள்வார்.
“ரிஷி பருப்பை கடைஞ்சுடுங்க.. நான் பொரியல் தாளிக்கிறேன்..” என்று தேங்காயை துருவி கொண்டிருந்தவனிடம் சொன்னாள் மகாலட்சுமி.
ஆம், சாதம் வடிப்பதில் தொடங்கி மற்ற சமையலிலும் ரிஷி மகாவுக்கு பக்கபலமாக சமையலறையில் இருப்பதால் ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் சமையல் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எட்டு மணிக்கெல்லாம் முடிந்து விடும்.
“சரி, நீ குக்கரை அப்படியே விடு நான் எடுத்துக்கிறேன். போன முறை மாதிரி எடுத்து கொடுக்கிறேன்னு கையை சுட்டுக்காத..” என்றவன் தேங்காயை மூடி வைத்துவிட்டு பருப்பை கடைய தொடங்கினான்.
“ரிஷி வெங்காயம் எடுத்துட்டு வா..” என்ற சிவபாலன் நறுக்கிய கேரட் பீன்ஸை மகனிடம் கொடுத்து அனுப்பினார்.
மகாவிடம் கொடுத்தவன் தோசை மாவை கரைத்து கொண்டிருக்க மகளின் அழு குரல்.
nice
ReplyDelete