தீராத காதல் தொல்லையோ - 4.2
மகாவும் ரிஷியும் வெளியில் நின்று பேசிக்கொண்டு இருக்கவும்
இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றாள் ஜெய்சித்ரா.
“ஜெய்..” என்று மகா
பார்க்கவும், “மாடிக்கு இந்த சைட்..” என்று வழியை காண்பிக்க கணவனை அழைத்து கொண்டு மாடிக்கு
சென்றாள்.
“லச்சு எதுக்காக இப்படி அடுத்தவங்க வீட்ல? எதுவா இருந்தாலும் நம்ம வீட்ல போய் பேசிக்கலாம் வா..” என்றான்.
“நான் கீழ சொன்னது உங்களுக்கு புரியலையா ரிஷி?”
“நான் தான்..” என்று ரிஷி ஆரம்பிக்கவுமே,
“எனக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு நினைக்கிறியா?” என்றாள்.
“உன்னை இனி என் உயிரா பார்த்துக்க நினைக்கிறேன்
லச்சு.. இதை விட நல்லது என்னன்னு எனக்கு தெரியலை..”
“சரி நானே சொல்றேன், எனக்கு நீ செய்யக்கூடிய ஒரே நல்லது என்னை தனியா விடுவது
தான்! எனக்கு உன்னோடு வாழ விருப்பமில்ல…” என்றதில் ரிஷி
பதறிக்கொண்டு மனைவியை நெருங்க.,
“ப்ளீஸ் ஸ்டாப் ரிஷி!! எந்த எமோஷனல் ட்ராமாவுக்கும்
நான் ரெடியா இல்லை. நான் தான் சொன்னேனே, உன்னால என் மனசு
மரத்து போச்சுன்னு. இனி நீ எத்தனை சமாதானம் சொன்னாலும் எதையும் ஏத்துக்க நான் தயாராக
இல்லை..”
“லச்சு ஏன் இப்படி ஒரு முடிவு? ப்ளீஸ் இனி கண்டிப்பா உனக்கு
எந்த ஏமாற்றமும் கொடுக்க மாட்டேன்..”
“போதும் ரிஷி!! இதுக்கு மேல நம்ம ரெண்டு பேரும்
சேர்ந்து இருந்தா அது யாருக்குமே சந்தோஷத்தை கொடுக்காது. உங்களோட வழியை நீங்க
பார்த்துக்கோங்க என் வழியை நான் பார்த்துக்குறேன்..”
“உனக்கு இன்னுமா என்மேல நம்பிக்கை வரலை? சத்தியமா உனக்கு பிடிச்ச புருஷனா இருப்பேன் என்னை நம்பு” என்றான்.
“நீ எனக்கு பிடிச்ச புருஷனா இருக்கணும்னு
விரும்புகிறாயா?” என்றாள் அழுத்தமான குரலில்.
“ஆமா, நீ என்ன
சொன்னாலும் செய்றேன். கண்டிப்பா என்னோட ஈகோவை முன்னிறுத்த மாட்டேன். எப்போ நீதான் நான்னு உணர்ந்தேனோ
அப்பவே என்னோட அகம்பாவம் அழிஞ்சுடுச்சு..”
“ரொம்ப சந்தோஷம்!! அப்போ என்னையும் என் குழந்தைகளையும்
தனியாக விட்டுடு ரிஷி..”
“லச்சு!!”
“ஒன்னு இல்லை இரண்டு குழந்தைகள்! ஒருத்தர் மாத்தி
இன்னொருத்தருக்கு பால் கொடுக்கிறது எவ்வளவு பெரிய கஷ்டம்னு தெரியுமா உனக்கு? என் அம்மா, சித்தி, அண்ணி, அப்பா, அண்ணன்னு அத்தனை பேர் கூட இருந்தாலும் முதல் ஆறு மாசம்
குழந்தைகளுக்கான உணவை நான் தான் கொடுத்தாகணும்…”
“பொதுவாக குழந்தைகள் நைட்ல என்னை தொந்தரவு செய்யாமல்
தூங்கி காலையில் மத்தவங்க கூட இருந்துக்கிட்டாலும் உடம்பு சரியில்லாமல் போகும்
போது என்னை விட்டு நகர மாட்டாங்க.. ஒருத்தர் படுத்தா உடனே இன்னொருத்தரும்
படுத்திருவாங்க. அப்போ என்னை சுத்தி அத்தனை பேர் இருந்தாலும் நான் உன்னை எவ்வளவு
தேடினேன் தெரியுமா?”
“சாப்பாட்டுக்கு, எங்களை
பார்த்துக்க அத்தனை பேர் இருந்தாங்க ஆனா என் மனசு உன்னை தான் தேடுச்சு. என்ன தான்
எங்க அண்ணியும் அம்மாவும் என்னை ரொம்பவே நல்லபடியா கவனிச்சுக்கிட்டாலும் அவங்க
யாருமே உன்னுடைய அருகாமைக்கு ஈடாக மாட்டாங்கன்னு நான் உணர்ந்த தருணம் அது ரிஷி..” என்ற மனைவியின் பேச்சில் ரிஷி விழிகளில் கண்ணீர் நிறைந்து
விட்டது.
“நீ இந்தளவு என்னை தேடுவன்னு எனக்கு தெரியாது லச்சு..
என்மேல கோபமா இருக்கிறதா தான் நினைச்சேன்..” என்றான்
கண்ணீரோடு.
“நான் தான் சொன்னேனே அந்த நேரம் உன்னை வெறுக்க முடியாம
மறக்கவும் முடியாம எவ்ளோ
அவஸ்த்தை பட்டேன்னு.. ப்ச் உன்னை சொல்லி என்ன ஆக போகுது எல்லாம் என்னை சொல்லணும்…” என்று தன்னையே அறைந்து கொண்டவள்,
“என்ன செய்ய அந்தளவு உன்னை காதலிச்சு தொலைச்சுட்டேன்!!
எல்லாம் என் தப்பு தான்!!” என்றவளிடம்
மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தது.
“உன்னை மறக்க விடாதளவு குழந்தைகள் எனக்கு
ஞாபகப்படுத்திட்டே இருந்தாங்க.. ஆனா அதுவும் நல்லதுக்கு தான்! ஒருவேளை நான்
கஷ்டப்பட்ட போதெல்லாம் எனக்கு உன் ஞாபகம் இல்லாம போயிருந்தா இன்னிக்கி எங்க அம்மா
சொல்ற மாதிரி எல்லாத்தையும் மறந்துட்டு உன் கூட சந்தோஷமா வாழ்ந்து இருப்பேனோ
என்னவோ… ஆனா உன்னோட ஞாபகங்கள் தான் நீ எந்த அளவுக்கு கொடூரமானவன் என்பதை எனக்கு
புரிய வச்சது…”
“சரி ‘நான் தான் வந்து
பார்க்கல ஒரு ஃபோன் பண்ணி நீயாவது என்னோடு பேசி இருக்கலாமேன்னு உனக்கு தோணலாம்..
ஆனால் நீ ஒன்னும் மூணாவது மனுஷன் கிடையாது ரிஷி என் குழந்தைகளோட அப்பா!! இவர் தான்
அப்பானு நான் அறிமுகபடுத்தி குழந்தைகள் தெரிஞ்சுக்கறது உனக்கு பெருமை ஆனா உன்
குழந்தைகளை வந்து பாருன்னு நான் உன்னை கூப்பிட்டு காட்டுவது உனக்கு தான் அசிங்கம்…”
“இழந்த காலங்களை எந்த ஆறுதல் வார்த்தையும் திரும்ப கொடுத்துடாது
ரிஷி. பொதுவாக ஒரு பொண்ணுக்கு அவளோட கல்யாணத்தின் முதல் இரண்டு வருடங்கள் ரொம்பவே
முக்கியமானதுன்னு சொல்லுவாங்க..”
“அந்த ரெண்டு வருஷத்துக்குள்ள தான் புருஷன் வீட்டில்
அவளுக்கான இடம், முக்கியத்துவம், பிள்ளை பேரு
எல்லாமே நடக்கும்.. அந்த காலகட்டத்தில் ஒரு புருஷன் அவ கிட்ட எப்படி
நடந்துக்கிறானோ அதை பொறுத்து தான் அவர்களுடைய பந்தம் காலம் முழுமைக்கும் நீடித்து
இருக்கும்…”
“ஆனா இந்த ரெண்டு வருஷத்துல வலியை தவிர்த்து நீ
எதுவுமே எனக்கு கொடுக்கலை…”
“அவ்ளோதானா மகா அப்போ நீ என்னை மன்னிக்க மாட்டியா?” என்றான் குரல் தழுதழுக்க.
மகா அமைதியாக நிற்கவும் “நான் உன்னை புரிஞ்சுக்காத போது என்னை அனுசரிச்சு, விட்டுக் கொடுத்து எனக்காக எல்லாமே செய்த நீ இப்ப நான்
உன்னை புரிஞ்சு உனக்காகவே புது மனுஷனா வந்திருக்கும் போது விலகி போற.. இதை விட
பெரிய தண்டனை எனக்கு இருந்திட முடியாது..” என்றவனின்
கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
“நீயும் குழந்தைகளும் மட்டும் தான் இனி என்னோட
வாழ்க்கைன்னு முடிவு பண்ணி இருந்தேன். ப்ளீஸ் இப்படி ஒரு தண்டனையை எனக்கு
கொடுக்காத நிச்சயமா நீ இல்லாமல் நான் என்னாவேன்னு எனக்கே தெரியல லச்சு..” என்றான் உளமாற.
“நீ இப்படி பிளாக்மெயில் பண்றதால என் முடிவு மாறிடாது
ரிஷி..” என்றாள் கடுமையான குரலில்.
“நான் பிளாக்மெயில் பண்ணல, எனக்கு இப்போ அப்படியே பைத்தியம் பிடிக்கிற மாதிரி
இருக்கு.. உங்க மூணு பேரோடு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க போறேன்னு எவ்ளோ ஆசையோடு
நான் கிளம்பி வந்தேன் உனக்கு தெரியுமா?”
“உன்னை எப்படி சமாதானப்படுத்தணும்னு என்னென்னமோ
யோசிச்சேன் ஆனா நீ சொன்னதை எல்லாம் கேட்ட பிறகு எனக்கு என்ன சொல்லி எப்படி என்னை
நியாயப்படுத்த இல்லல்ல உனக்கு புரிய வைக்கணும்னு புரியாம நிற்கிறேன் லச்சு..”
“என்னால உங்களை பார்க்காம இருக்க முடியாது ஒரே ஒருமுறை
குழந்தைகளுக்காகவாது உன் முடிவை மாத்திக்க முயற்சி பண்ணலாமே..” என்ற போதும் அவள் அசைந்து கொடுத்தாள் இல்லை.
“கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணிட்டு இருக்க
ரிஷி, அதனால உபயோகம் இருக்கான்னு நீயே யோசிச்சு பாரு…”
“என்னை விட்டு உன்னால இருந்துட முடியுமா?” என்று இறுதி முயற்சியாக மனைவியின் மனதை மாற்ற முயன்றான்.
“உன் கூட கல்யாணமான இந்த ரெண்டரை வருஷத்துல
கிட்டத்தட்ட ஒரு ஆறு ஏழு மாசம் தான் உன் கூட வாழ்ந்தேன். ரெண்டு வருஷமா தனியாக
தான் இருக்கிறேன் என்பதை மறந்துட்டு பேசுற…”
“எத்தனையோ பேருக்கு கர்ப்ப காலம் ரொம்ப சுலபமானதாய்
இருந்த போதும் சரியா சாப்பிட முடியாதளவு அதிகளவிலான வாந்தி, தலை சுற்றல், மயக்கம்னு
எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு உனக்கு சம்பாதிச்சு கொடுத்தேன் உனக்கு நியாபகம் இருக்கா
ரிஷி?” என்றிட அவனும் குற்ற உணர்வோடு தலையசைத்தான்.
“அப்படி நான் சம்பாதிச்ச பணமும் இப்போ நீ வட்டி போட்டு
கொண்டு வந்த பணமும் ஒண்ணுன்னு நினைக்கிறியா?” என்றிட அதிர்வோடு
மனைவியை பார்த்தான்.
“உன் குழந்தைகளை சுமந்துகிட்டு அத்தனை கஷ்டத்துக்கு
இடையிலும் நான் சம்பாதிச்சது என் புருஷனுக்காக அவர் மேல வச்சிருந்த பாசத்துக்காக, அவரோட கஷ்டத்தை புரிஞ்சுகிட்டு அவர் பாரத்தை
குறைக்கிறதுக்காக.. அவர் முகத்துல சந்தோஷத்தையும் சிரிப்பையும் பார்க்கிறதுக்காக
அந்த அன்புக்கு உன்னால வட்டி போட்டுட முடியும்னு நினைக்கிறியா ரிஷி?”
“உட்காரும் போதா, எந்திரிக்கும்
போதா, ட்ரைன் விட்டு இறங்கும் போதா, லிப்ட்ல ஏறும் போதா, எப்போ? எந்த நிமிஷம் மயக்கம் வரும்னே தெரியாது ரிஷி. நான் பேப்பர்
போட நீ ஒத்துக்கலை என்றதும் அதற்கு மாற்று என்னன்னு யோசிச்சு என்னோடு வேலை செய்யற
மிதுனை துணைக்கு வச்சுட்டு ட்ராவல் பண்ணின வலிக்கு வட்டி எவ்ளோன்னு உன்னால கணக்கு போட்டுட முடியுமா?”
“உடம்பு முடியாம, இரண்டு
குழந்தைகளை சுமந்துட்டு மூச்சு வாங்க சரியா நடக்க முடியாமல், தூங்க முடியாமல் இருந்த போதும் நம்ம புருஷன் கஷ்டத்தை பங்கு
போடணும்னு தான் என் அப்பா மகள் சீக்கிரம் வளைகாப்பு பண்ணுங்கன்னு சொல்லி
அங்கிருந்து வேலைக்கு போய் உனக்கு சம்பாதித்து கொடுக்க நினைச்சேன்..”
“எல்லா நேரத்துலயுமே உன்னோட நிலையிலிருந்து யோசிச்சு
உனக்காக விட்டுக் கொடுத்து, உனக்காக என்
வலியை தாங்கிக்கிட்டு எல்லாத்தையும் செஞ்சேன்.. அப்படி நான் சம்பாதிச்ச பணத்துக்கு வட்டி போட்டு அஞ்சு
லட்சத்தை எண்ணி வச்சியே இப்போ உன்னால சரியான வட்டி போட முடிஞ்சா போட்டு கொடு ரிஷி
நான் வாங்கிக்கிறேன்..” என்றிட ரிஷி
பதிலின்றி வலியோடு மனைவியை பார்த்தான்.
“இப்போ நான் இவ்வளவும் பேசறது உன்னை குத்தி காட்டவோ, பழி வாங்கவோ கிடையாது ரிஷி! நான் கன்சீவ் ஆன போது தான்
என்னோட கலீக்கும் கன்சீவ் ஆகியிருந்தா பட் டெஸ்ட் கன்ஃபார்ம் ஆனதுமே அவளோட
ஹஸ்பண்ட் அவளை வேலையை விட சொல்லிட்டார். அப்புறம் ஒருமுறை என்னை பார்த்தவள், ட்வின்ஸ் வச்சுட்டு நான் வேலைக்கு வருவதை பார்த்து ரொம்பவே
ஃபீல் பண்ணினா..”
“தேவையில்லாத டென்ஷன் எடுத்து ப்ரெக்னேன்சியில் ரிஸ்க்
எடுக்காத மகான்னு சொன்னா.. ஆனாலும் உனக்காக என் உயிரை பணயம் வச்சு என் உடம்பை
உருக்கி குழந்தைகளை பெத்து கொடுத்த என்னை ஒரே ஒரு முறை நீ தேடி கூட வந்திருக்க
வேண்டாம்..”
“உன்னை விட்டு பிரிந்து வந்த பிறகு அட்லீஸ்ட் ஒரு கால்
பண்ணி உனக்கு இப்போ தல சுத்தல் எப்படி இருக்கு? வாந்தி பரவால்லையா? சாப்பிட
முடியுதான்னு ஒரே ஒரு வார்த்தை கேட்டிருந்தால் கூட போதும் ரிஷி.. நீ என்னோட
பிரசவத்துக்கு அப்புறம் வரலைங்கறது கூட எனக்கு பெருசா தெரிஞ்சு இருக்காது…”
“தப்பு தான் லச்சு! பட் இதுக்கு மேல உனக்காக எல்லா
விதத்துலயும் நான் பக்க பலமா இருப்பேன் லச்சு! முன்னாடி மாதிரி நிச்சயமா உன்னை
தனியா தவிக்க விட மாட்டேன். இப்போ வீட்ல என் அம்மா கூட கிடையாது அப்பா அவங்களை
மொத்தமா ஒதுக்கி வச்சுட்டாங்க இப்ப அவங்க இருக்கிறது பெங்களூர்ல தான்…”
“இதெல்லாம் எனக்கு தேவையில்லாத டீடைல் ரிஷி. உன்னை
ஏமாத்த மாட்டேன் நல்லபடியா பார்த்துப்பேன்னு இப்போ நீ ஈஸியா சொல்ற ஆனா அதெல்லாம் சாத்தியமான்னு உன்னை நீயே கேட்டு பாரு..”
Super
ReplyDelete