தீராத காதல் தொல்லையோ - 4.2
அன்றைய விடியல் ரிஷிக்கு அத்தனை இனிமையானதாக இருக்க நேற்று போல் ஆர்பரிக்காமல் அவன் மனமும் இப்போது ஒரு கட்டுக்குள் வந்திருந்தது.
கண் விழித்ததுமே மனைவியை தான் அவன் விழிகள் தேடியது.
மகா குளியலறையில் இருக்கவும் அவளுக்காக வாங்கிய பரிசோடு காத்திருந்தவன், குளித்து விட்டு வந்தவளை, “ஹாப்பி ஆனிவெர்சரி லச்சு” என்றபடி தூக்கி சுற்றினான்.
இதை எதிர்பாராதவள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு, “என்ன இது இவ்ளோ வேகமா சுத்துறீங்க? முதல்ல என்னை கீழ விடுங்க..” என்றாள்.
மெதுவாக இறக்கி விட்டவன் மீண்டும் வாழ்த்து தெரிவித்து அவள் உச்சியில் முத்தமிட மகாவும் அவனுக்காக வாங்கியிருந்த உடையை கொண்டு வந்து கொடுத்தாள்.
“ஆமா ரூம் எப்போ எக்ஸ்டென்ட் பண்ணீங்க? எனக்கு சொல்லவே இல்ல.. குழந்தைங்க கலெக்ஷன்ஸ் ரொம்ப அழகா இருக்கு.”
“உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு..”
“எனக்கா?”
“ஆமா, வா..” என்று அவளை அழைத்து கொண்டு மாடிக்கு சென்றவன் கேட்டை திறந்து விட்டு அவள் கண்களை மூடினான்.
“என்ன பண்றீங்க?..”
“கொஞ்சம் வைட் பண்ணு..” என்றவன் விளக்குகளை எரிய விட்டு கையை விலக்க தன் முன்னே விரிந்திருந்த நீச்சல் குளத்தை கண்ட மகாவின் கண்கள் அழகாய் விரிந்து கொண்டது.
“இது எப்போ ரிஷி?”
“கன்ஸ்ட்ரக்ட் பண்ணி எப்படியும் த்ரீ மந்த்ஸ் இருக்கும். இன்னைக்கு தான் முதல்முறையா யூஸ் பண்ண போற..”
“நானா?”
“ஆமா, உனக்காக கட்டினதுல நீ தான் முதல்ல இறங்கனும்…”
“இப்போவா? வேண்டாமே!!”
“ஏன்?”
“உங்களுக்கே தெரியாதா? இப்போ இறங்கினா ஏறி வரவே மனசு இருக்காது ரிஷி. குழந்தைகள் முழுச்சுடும், கோவிலுக்கு போகணும், இன்னொரு நாள் லீவ்ல பார்த்துக்கலாம்..” என்றாள் மனமே இல்லாமல்.
“அதை பற்றி நீ ஏன் கவலை படற? அப்பா பார்த்துப்பார் நான் சொல்றேன்..”
“என்னன்னு சொல்லுவீங்க?”
“உங்க மருமகளுக்கு வெட்டிங் டே சர்ப்ரைஸ் கொடுக்க மாடிக்கு வந்திருக்கேன் ப்பா, குழந்தைகளை பார்த்துக்கோங்க. நாங்க வர நேரமாகும் கோவிலுக்கு சாயந்திரம் போகலாம்” என்று தந்தை அழைத்து அவளுக்கான பதிலை சொன்னான்.
பின் அவள் முன் வந்து நின்று இரு கரங்களையும் விரித்து, “இறங்கு” என்றதும் போட்டு கொண்டிருந்த நைட் வியரோடு நீச்சல் குளத்தில் பாய்ந்தாள் மகா.
மகிழ்ச்சியோடு நீந்த தொடங்கியவள் அப்போது தான் ரிஷி உடன் வராததை கவனித்து, “அங்க உட்கார்ந்துட்டு என்ன பண்றீங்க? வாங்க..” என்றாள் முகத்தில் இருந்த நீரை வழித்து விட்டு.
“ரசிக்கிறேன்..”
“ஹான்!!”
“என் பொண்டாட்டியை ரசிக்கிறேன்..” என்றிட மகாவின் வதனம் குங்குமமாய் குழைந்து போனது.
“அதுக்கு இதுவா நேரம்?! காலாங்கார்த்தால என்னதிது? உங்களுக்கு விவஸ்த்தையே இல்லை..” என்றவள் அதற்கு மேல் தாமதிக்காமல் மேலே ஏற அவளை தடை செய்தான் ரிஷி.
“என்ன?”
“என் பொண்டாட்டியை ரசிக்க நேரம் காலம் பார்க்கனுமா என்ன?” என்றதில் மகா அவனை இமைக்காமல் பார்த்தாள்.
‘என்ன?’ என்று ரிஷி புருவம் உயர்த்த, “நார்மல் ஆகிட்டீங்களா?” என்றாள்.
“அப்படியா தெரியுது உனக்கு?” என்று ரிஷி மகாவின் கரத்தை எடுத்து தன் வெற்று மார்பில் வைக்க அங்கே வெப்பத்தின் சாரல்!!
கணவனின் பார்வையில் பந்தாடப்பட்ட மகா அவனின் அதீத நெருக்கத்தில் பின்னே நகர தானும் மனைவியோடு குளத்தில் இறங்கினான்.
“வெளியே கிளம்பனும், என்ன பண்றீங்க?” என்றாள் சிணுங்கலோடு.
“பார்த்தா தெரியலை, என் பொண்டாட்டியை ரசிக்கிறேன். ஏதோ என் ரசனையில் குறை இருக்கிறதா சொன்னியே இப்பவும் அப்படி இருக்கா?” என்றவன் குரலில் குறும்பு கூத்தாடியது.
“நான் அப்படி சொன்னேனா?!” என்றவளிடம் வெட்க சிரிப்பு.
“சொல்லிடுவியா?!” என்றவனின் விழி வீச்சில் தத்தளித்த மகா மீதான ரிஷியின் ரசனை நொடிக்கு நொடி கூடி கொண்டே போக இருவருக்குமான இடைவெளி முற்றிலுமாக அற்று போனது.
நேரம் காலம் மறந்து மனைவியின் சிணுங்களில் சிக்கி திளைத்த ரிஷி மகாவை முழுதாக ரசித்து ருசித்து முடித்த போது சூரியன் உச்சிக்கு வந்திருந்தான்.
அவர்கள் இருந்தது இன்டோர் ஸ்விம்மிங் பூல் என்பதால் அதில் இருந்த குளியலறையில் குளித்து விட்டு வந்த மகாவுக்கு நைட்டியை கொண்டு வந்து கொடுத்திருந்தான் ரிஷி.
வெளியில் வந்து பார்த்தவள் நம்ப முடியாமல் நேரத்தை பார்த்து, “அச்சோ இவ்ளோ நேரமாவா? என்ன பண்ணி வச்சுருக்கீங்க நீங்க?!” என்று தத்தளித்தாள்.
“பொண்டாட்டியை ரசிக்க குறிப்பிட்ட கால அளவு இருக்கா என்ன? எனக்கு தெரியாதேடி” என்று ரிஷி கண்சிமிட்ட அவன் புஜத்தில் ஓங்கி குத்தியவள்,
“விளையாடாதீங்க காலையிலேயே கோவிலுக்கு போகணும்னு மாமா சொன்னாங்க.. குழந்தைங்க என்ன பண்றாங்களோ தெரியலையே..”
“அதெல்லாம் அப்பா அவங்களை குளிக்க வச்சு டிஃபனும் ஆர்டர் போட்டு ஊட்டி விட்டுட்டார்.. பக்கத்து வீட்டு குழந்தைங்களோடு பசங்க விளையாடிட்டு இருக்காங்க, யாருமே உன்னை இதுவரை தேடலையாம்..”
“உடம்புக்கு முடியலைன்னா மட்டுமே அவங்க என்னை யாருன்னு கேட்கிறவங்க.. இப்போ மட்டும் தேடிடவா போறாங்க? ஆனா மாமா!! எப்படி நான் மாமா முன்னாடி.. ப்ச் அம்மாப்பா வேற வீட்டுக்கு வர சொல்லி இருந்தாங்க…”
“ஹே, ரிலாக்ஸ் லச்சு!! நான் கீழே போகவும் அப்பா வெளியே கிளம்பிட்டார். நீ வந்து ரெடியாகு நாம மாமா வீட்டுக்கு கிளம்பலாம்..” என்றிட வேகமாக கீழே சென்றாள்.
ரிஷி பரிசளித்த பட்டு புடவையை மகா கட்ட தொடங்க வெளியில் குழந்தைகளுக்கு உடை மாற்றி விட்டு வந்த ரிஷி வழக்கம் போல அவள் முன் மண்டியிட்டு ஃப்ளீட்ஸ் சரி செய்து விட்டு தானும் தயாரானான்.
சிவபாலன் வரவும் கிளம்பி மகாவின் வீட்டிற்கு சென்றவர்கள் வீடு திரும்ப இரவு ஏழரை மணியாகி விட்டது.
குழந்தைகள் இன்றைய அலைச்சலில் வரும் வழியிலேயே உறங்கி விட்டிருக்க அவர்களை படுக்க வைத்த ரிஷியை பிடித்து தன் அருகே அமர்த்தியவள்,
“ஆமா, ஆன்சைட் போயிட்டு வந்த பிறகு உங்களோட ஹைக், ப்ரோமோஷன் பெனிஃபிட்ஸ் எதையும் பாதர் பண்ணாம யாரை கேட்டு வேலையை விடும் முடிவுக்கு வந்தீங்க?”
“நீயே இல்லாதப்போ யாருக்காக இதெல்லாம்னு தோனுச்சு.. உன்னை சங்கடப்படுத்த இந்த முடிவுக்கு வரலை, இப்பவும் என்னோட முடிவுல மாற்றம் கிடையாது.. நீ ஓகே சொல்ல வேண்டியது தான் பாக்கி”
“எனக்கு ஓகே இல்லை. என்னுடைய தேவை, தேடல் என்னென்ன சரியா புரிஞ்சுக்கிட்ட பிறகு எதுக்கு உங்க பொசிஷன் விடனும்?.. அங்கேயே கன்டினியூ பண்ணுங்க..”
“ஆனா உனக்கு அவ்ளோ தூரம் போயிட்டு வருவது அலைச்சல் தானே லச்சு?! எனக்கு ப்ராப்ளம் இல்லை நான் அங்கே ஜாயின் பண்ணிக்கிறேன், ஈஎம்ஐ போட்டு கார் எடுத்துடுறேன். நம்ம ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து போயிட்டு வரலாம்..”
“என்னோட முடிவில் மாற்றம் இல்லை நீங்க அங்க தான் கண்டினியூ பண்றீங்க..” என்று உறுதியாக சொன்னவள்,
“ஆமா நேத்து தானே குழந்தைகளுக்கு கடன் இல்லாத வாழ்க்கையை கொடுக்கணும்னு சொன்னீங்க?” என்று கணவனை பார்க்க அவனும் தலையசைத்தான்.
“அப்புறம் இப்ப என்ன மறுபடியும் ஈஎம்ஐ போடுறேன்னு சொல்றீங்க.. ஏன் என்னோட சேவிங்க்ஸ்ல இருந்து கார் வாங்க கூடாதா?” என்றிட ரிஷியிடம் மௌனம்.
“என்ன அமைதியாகிட்டீங்க? சொல்லுங்க, எதுக்காக திரும்ப லோன் எடுக்கணும் என்னோட சேவிங்ஸ் இருக்கே.. அதுல நமக்கு கார் வாங்கிக்கலாம்…”
“இல்ல லச்சு இனி உன்னோட சம்பள பணம் வைத்து எதுவும் செய்ய வேண்டாமே.. உங்க மூணு பேரையும் பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு..”
“அப்போ என் புருஷன் என்னோட பொறுப்பு கிடையாதா?” என்றதில் ஆனந்த அதிர்வோடு மனைவியை பார்த்தான்.
“சொல்லுங்க என் புருஷனோட நிம்மதி, சந்தோஷம் என் பொறுப்பு தானே?! தேவை இல்லாம ஈஎம்ஐ வாங்கி அதை அடைக்க அவர் கஷ்டப்படுறதை எப்படி என்னால பாத்துட்டு இருக்க முடியும்?”
“நீங்க என்கிட்ட மனசு விட்டு பேசலை.. என்னை பொண்டாட்டியா மதிக்கல என்பது தான் மிகப்பெரிய குறையே! அது இப்போ நிவர்த்தி ஆகிட்ட பிறகு உங்க பணம் என் பணம்னு ஏன் பிரித்து பார்க்கறீங்க?”
“நம்ம குழந்தைகளுடைய எதிர்காலத்துக்கு நம்ம ரெண்டு பேரோட பணமும் அவசியம். அதை தனித்தனியா பிரிச்சு பார்க்க வேண்டாம் ரிஷி…”
“இல்லை லச்சு, பணத்தை வச்சு தான் நமக்குள்ள..” என்றவன் மனைவியின் பார்வையில், “ஸாரி, ஸாரி கண்டிப்பா அது.. ப்ச், சரி நான் எதுவும் சொல்லலை” என்றவன் முழுதாக மனைவியிடம் சரண்டர் ஆனான்.
“அப்புறம், உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?”
“என்ன?”
“எங்க கம்பெனி நம்ம ஏரியாவில் புது பிரான்ச் ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க.. அதுக்கு என்னை சார்ஜ் எடுத்துக்க சொல்லிட்டு இருந்தாங்க.. நான் தான் இனி எனக்கு இங்க என்ன வேலைன்னு சம்மதிக்கலை..”
“...”
“இப்போ ஓகே சொல்லிட்டு தான் வந்திருக்கேன். இனி இங்கிருந்து எனக்கு ஜஸ்ட் 20 மினிட்ஸ் தான் ஆஃபீஸ்! பஸ் மெட்ரோ என்ற அலைச்சல் இருக்காது..”
“இந்த சந்தோஷமான விஷயத்தை ஏன் முதல்லையே சொல்லலை?!”
“இதுல என்ன சந்தோஷம்?” என்றாள் புரியாமல்.
“உனக்கு எப்படியோ தெரியாது பட் நீ தினமும் ஒன்றரை மணி நேரம் ட்ராவல் பண்ணனுமே உன்னை வேலையை விட சொல்லலாமா, உனக்கு சம்மதம் இருக்குமான்னு நிறைய யோசனை..”
“நம்மை புரிஞ்சுகிட்டு, அனுசரித்து, வேலை செய்யறதுக்கான சூழல் உண்டாக்கி உதவும் உறவுகள் இருக்கும் போது எதுக்கு வேலையை விடனும்? எனக்கு விடுற எண்ணமில்லை..” என்றவள்,
“ஒரு நிமிஷம்..” என்று தன் ஏடிஎம் கார்டை கொண்டு வந்து ரிஷியிடம் கொடுத்தாள்.
“எதுக்கு என் கிட்ட கொடுக்கிற?” என்றான் புரியாமல்.
“அதுவா?!” என்று அவனை ஆழ்ந்து பார்த்தவள்,
“என் புருஷனுக்கு தண்ணி, தம்மு, பார்ட்டி கல்சர், கேர்ள் ஃப்ரெண்ட்ஸ், பெஸ்டின்னு எந்த நல்ல பழக்கமும் கிடையாது. அந்தளவு அக்மார்க் சமத்து பையன்!! அதுதான் கொஞ்சமே கொஞ்சம் கெட்டுப் போகட்டுமேன்னு கொடுத்தேன்..” என்றதில் அதிர்ந்து போனான் ரிஷி.
அவன் முகம் சென்ற பாவத்தில் சட்டென சிரித்து விட்ட மகாவின் சப்தம் அடங்க சில நிமிடங்கள் பிடித்தது. அதன் பிறகே அவள் பேச்சை முழுதாக உள்வாங்கியவன் முகத்திலும் சிரிப்பு மலர்ந்தது.
குறையாத சிரிப்போடு கேலியாக தன்னை பார்த்திருந்த மகாவின் கன்னத்தை பிடித்து, “எவ்ளோ சேட்டை!! ஒரு நிமிஷம் எனக்கு தூக்கி வாரி போட்டுடுச்சுடி..” என்று அழுத்தமாக முத்தமிட்டான்.
“பின்னே என்ன?! கல்யாணமான பிறகு உங்க கிட்ட தானே ஏடிஎம் கார்ட் இருக்கும். இப்போவும் உங்க கிட்டயே இருக்கட்டும்..” என்றதன் மூலம் கணவன் மீதான தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினாள் மகாலட்சுமி.
அன்று தன்னை நம்பாமல் பணம் நகை சொத்து பத்திரம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்றவளா இவள்!! என்று வாயடைத்துப் போனான் ரிஷி.
“என்ன பார்க்கறீங்க?! அன்னைக்கு உங்களை நம்பாமல் எல்லாத்தையும் எடுத்துட்டு போனவ இப்போ திருப்பி கொடுக்கிறேன் என்றா?” என்று கணவனை பார்க்க, ‘ஆம்’ என்று தலையசைத்தான்.
“உத்தியோகம் புருஷ லட்சணம்னு சொல்லுவாங்க, அதுவும் உங்களோட வேலை உங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு எனக்கு தெரியும் ரிஷி!!”
“என்னால அப்படி பட்ட வேலையை மறந்து அதை பற்றிய என்னுடைய முடிவுக்காக காத்திருப்பவர் இனி எந்த விஷயத்துக்கும் என்னோடு ஆலோசிக்க மறக்க மாட்டார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு..”
“எப்பவும் போல இது உங்ககிட்டயே இருக்கட்டும். எப்படி இருந்தாலும் நாம சேர்ந்து போய் தானே பணத்தை கொண்டு வர போறோம் அப்புறம் என்ன? இதோ இது சொத்து பத்திரம் இதுவும் உங்ககிட்ட இருக்கட்டும்..”
“வேண்டாம், உன் கிட்டயே இருக்கட்டும்..”
“நான் வேற நீங்க வேற இல்லைன்னு நம்புறீங்களா?”
“நிச்சயமா!!”
“அப்போ இதை நீங்க வாங்கலனா உங்களை நான் நம்பும் அளவுக்கு நீங்க என்னை நம்பலைன்னு அர்த்தமாகும்” என்றதும் தான் தாமதம் அமைதியாக வாங்கிக் கொண்டான்.
ஆனால் அடுத்த நிமிடமே அவள் கொடுத்த கார்ட் பத்திரத்தோடு தன்னுடைய கார்ட் வீட்டு பத்திரம் அனைத்தையும் மகாவிடம் கொடுத்தான்.
மகா புரியாமல் பார்க்கவும், “பத்திரமா எடுத்து வை..” என்றதில் தன்னை மீறி சிரித்துவிட்டாள்.
“என்ன?”
“இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்..” என்றதில் சட்டென சிரித்த ரிஷி “இரண்டு பேரோடதும் ஒரே குடோன்னு மறந்துட்டியா?” என்றான்.
கணவன் பேச்சை சிரிப்போடு ஆமோதித்தவள், “பொதுவாவே ஒரு பொண்ணுக்கு ‘கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி வானை கூட வளைக்கலாம்’னு சொல்லுவாங்க. எந்த சூழலிலும் நீங்க என்னோடு இருப்பீங்க என்ற நம்பிக்கை இருக்கிறப்போ எதுக்காக பிரிச்சு பார்க்கணும்?!”
“ஒரே ஒரு வாழ்க்கை தான் ரிஷி!! நமக்கு இரண்டாவதா ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு. அதை இனியாவது பரஸ்பர நம்பிக்கை, புரிதலோடு, சந்தோஷமா, நிம்மதியா, நமக்கு பிடிச்ச மாதிரி திகட்ட திகட்ட திருப்தியா அனுபவிச்சு வாழலாமே!! என்ன சொல்றீங்க?”
“வாழ்க்கை எல்லாருக்கும் இரண்டாவது வாய்ப்பு கொடுக்கிறதில்லை. ஒருவேளை துணையை புரிஞ்சுகிட்டு, என்னை நான் அதற்கு தகுதி படுத்திக்கிட்டதால தான் உன்னை திருப்பி கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன்…”
“வாழ்க்கைத்துணை என்பது வெறும் உறவு இல்லை அது நம்பிக்கை, ஆதரவு, வாழ்வின் அர்த்தம்!! சத்தியமா என் உயிரே போனாலும் இன்னொருமுறை உன்னை இழக்க மாட்டேன் லச்சு..” என்று ததும்பும் மனதோடு சொல்ல அதை மகிழ்வோடு ஆமோதித்தாள் அவனின் சரிபாதி.
இரவு எபிலாக் வரும்....
nice
ReplyDelete