“என்னப்பா இது பாதி சாப்பாட்டுல
நிறுத்திட்ட...” என்ற அன்னப்பூரணி தவிப்போடு மருமகளை பார்த்தார்.
“இத்தனை நேரம் நீங்கெல்லாம் கேட்ட கேள்வியில் மனசும் வயிறும் நிறைஞ்சு
போச்சும்மா” என்றார் மனைவியை பார்த்தபடி.
“ஏங்க..” என்ற ஜெகா அவர் தீப்பார்வையில்
வார்த்தையை மென்று விழுங்க,
“நமக்கு கல்யாணமான இத்தனை வருஷத்துல எப்போ
இருந்து இதுக்கு பழகின..?” என்று உணவு வேளையில் பேச்சு
கொடுப்பதை சுட்டி காட்டி காட்டமாக அவர் கேட்கவும்,
“அம்பலா ஏன் ப்பா கோபப்படற..?”
“ம்மா எனக்கென்ன கோபம் இருந்திட போகுது..?
சாப்பாட்டை முன்னாடி வச்சுக்கிட்டு எந்த பிரச்னையும்
பேசக்கூடாதுன்னு எனக்கு சொல்லி கொடுத்தது நீங்க..! இவ இந்த வீட்டுக்கு வந்த போது
சொல்லிக்கொடுத்ததும் நீங்க ஆனா இப்போ என்ன நடக்குது இங்க..? எதனால
இந்நேரத்துக்கு இந்த கேள்வி வந்தது..? இல்ல யார் சொல்லி
கேட்டீங்க..?” என்றவர் பார்வை ராஜியை தீண்ட பதறிய ஜெகா..,
“இல்லைங்க யாரும் சொல்லி கொடுக்கலை.. அக்காக்கு
மாமா வரை இந்த விஷயம் போயிடுச்சுன்னா உடம்பு சரியில்லாம இருக்கிறவருக்கு
என்னாகுமோன்னு கவலையா இருந்தது... அத்தைக்குமே இதுல கொஞ்சம் கஷ்டம், அதுதான்..!”
“என் அப்பா மேல எனக்கில்லாத அக்கறை உங்களுக்கு
என்ன திடீர்னு..?” என்று கேட்க ஜெகாவால் பதில் சொல்ல
முடியவில்லை.
“என்னமா மசமசன்னு பார்த்துட்டு நிக்கிற. வேற
தட்டு எடுத்து வச்சு சாப்பாடு வை” என்றவருக்கு 'எங்கே மகனின்
கோபம் இன்னும் அதிகரித்து போகுமோ..!' என்ற பதைபதைப்பு.
“இருக்கட்டும் மா எனக்கு பசியில்ல.. உங்களுக்கு
வேற ஏதாவது கேட்க வேண்டி இருந்தா கேட்டுடுங்க”
“இல்லப்பா ஆனா உதய்க்கு நல்ல சம்பந்தம்
வந்திருக்கு.. உடனே பேசி முடிச்சுட்டா அப்பாவுக்கும் ஆறுதலா இருக்கும் உனக்கும்
கடமை முடிஞ்சுட்ட நிம்மதி இருக்கும்” என்று சொல்ல கண்களை ஒரு நொடி மூடி திறந்தவர்
தாயின் கரங்களை பிடித்துக்கொண்டு,
“ம்மா எனக்கு அப்பா எவ்வளவு முக்கியம்னு
உங்களுக்கு நல்லா தெரியும்.. நிச்சயமா அவர் விருப்பத்துக்கு மாறா இந்த வீட்ல
எதுவும் நடக்காது, அதுவும் உதய் கல்யாணம் என் அப்பா
விருப்பத்தோடவும் ஆசிர்வாதத்தோடவும் தான் நடக்கும் அதுக்கு நான் பொறுப்பு...!
நீங்க தேவையில்லாததை யோசிச்சு மனசை குழப்பிக்காதீங்க” என்று சொல்ல அன்னபூரணிக்கு
வேறு என்ன வேண்டும்..!
நிறைந்த மனதுடனும் இதழ்களில் பூத்த புன்னகையுடனும் அவர் தன்
அறைக்கு செல்ல, “ஆதி இப்போல்லாம் நேரத்தோட வீட்டுக்கு வரது இல்லைங்க..
வந்தாலும் சரியா சாப்பிடறது தங்கறது இல்லை, நேரங்காலம் இல்லாமல்
கிளம்பிடுறான் எங்கன்னு என்கிட்டே எதுவும்...” என்று முடிக்கும் முன்னமே..,
“அவன் என் பையன்டி..! வேற என்ன தெரியனும்
உனக்கு..?” என்றவரின் சீற்றத்தில் ஜெகாவின் வாய் தன்னால்
மூடிக்கொண்டது.
“இப்போ என்ன உனக்கு பொண்ணையும் பேரனையும்
பார்க்கணுமா..?” என்றதில் ஜெகா பதிலின்றி நிற்க,
“சரி நாளைக்கு காலையில தயாரா இரு போய்
பார்த்துட்டு வந்துடலாம்” என்று அவர் எழுந்துகொள்ள ராஜி ஜெகாவிடம் வேண்டாம்
என்பதாக சைகை செய்தார்.
“இல்ல வேண்டாங்க. மாப்பிள்ளை எப்போ கூட்டிட்டு
வராரோ அப்பவே வரட்டும் எனக்கு ஒன்னும் அவசரமில்லை” என்றவருக்கு முதலில் தளிரை
பார்க்க விருப்பமில்லை அப்படியே அவளை பார்த்தாலும் கேட்பதற்கு கேள்விகள் பல
இருந்தாலும் அம்பலவாணன் உடன் வருகையில் அவர் என்ன பேசிவிட முடியும்..? என்பதால் அடுத்து கணவர் ஏதேனும் கேட்கும் முன்னமே பாத்திரங்களை
எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
*********************
அன்று ராகவனோடு வந்த தளிரிடம் தன் விசாரணையை தொடங்கி மேலும்
விபரங்களை சேகரித்த அலர் தளிரிடம் கையெழுத்து பெற்று வேகமாக தன் பணியை
தொடங்கியிருந்தாள்.
அன்றே சரத்தின் சென்னை விலாசத்திற்கும் போலீசாரிடம் அவன்
கொடுத்திருந்த வேலூர் விலாசத்திற்கும் கோர்ட் மூலமாக சம்மன் அனுப்பப்பட்டது.
தன்னிடம் அளிக்கப்பட்ட சம்மனை பார்த்த சரத்தின் கோபம் எல்லையை
கடந்திருந்தது. விவாகரத்து செய்ய நினைத்தால் என்ன செய்வான் என்பதை தெளிவாக சொன்ன
பின்னரும் தளிர் இப்படி செய்திருப்பதை எதிர்பாராதவன் ஏற்கனவே வேலூர் மற்றும்
சென்னையின் புகழ்பெற்ற வக்கீல்களுக்கு தளிரின் வழக்கை எடுக்ககூடாது என்பதற்காக
கணிசமான தொகையை முன்பணமாக கொடுத்திருந்தான்.
ஆனால் அவன் அலர்விழியை எதிர்பார்க்கவில்லை. அலர்விழி குறித்த
தகவல்களை கேட்டறிந்தவன் அவளை பற்றி முழுதாக தெரியாத நிலையில் முதலில் அவளை
விலைக்கு வாங்க முயன்றான். தன்னிடம் பேரம் பேசிய குமாரை ஓங்கி அறைந்ததோடு அல்லாமல்
அந்த நொடியே அவனை 'தக்க காரணங்களோடு கைது செய்ய வைப்பேன்' என்றதில் மிரண்டவன் அலறியடித்து ஓடியிருந்தான்.
அடுத்து சரத் ஆள்களை கொண்டு மிரட்ட முயல அப்போதே அவர்களை
அலுவலக அறையிலே பூட்டி சிசிடிவி ஃபுட்டேஜ் கொண்டு மித்ரன் மூலமாக உடனே தூக்கி
உள்ளேயே வைத்துவிட்டாள். இதை அறிந்த எழில் என்னதான் அவள் ஆபத்து நிறைந்த
வழக்குகளில் ஈடுபடும் போது ஷேடோ போட்டு அவள் உறுதியை பாதுகாத்தாலும், அவன்
உடனில்லாத மற்ற நேரங்களில், “அவி, சர்வா
இல்லை சித்துவை கூட கூப்பிட்டுக்கோடி பட்டு தனியா எங்கயும் போக வேண்டாம்”
என்றுவிடுவான்.
“டேய் மாமா இவனுங்களை மாதிரி எத்தனை பேரை
பார்த்திருப்பேன்.. என்மேல கை வைக்க உன்னை தவிர வேற எவனுக்கு தைரியம் இருக்கு..? எதுவந்தாலும்
நான் சமாளிச்சுப்பேன் நீ ஏன்டா இப்படியிருக்க..?” என்று
எப்போதும் போல அலட்சியமாக சொல்லிவிட அப்போதே அவள் அலுவலக அறையில் இருந்த பழைய
சிசிடிவியை மாற்றிவிட்டு வாய்ஸ் ரெக்கார்டிங்கோடு கூடிய
சிசிடிவி வைத்து அவ்வப்போது அவன் பார்த்துக்கொண்டாலும் முழுநேரமாக மனைவியை கண்காணிக்கும்
பொறுப்பை நாதனிடம் கொடுத்துவிட்டான்.
இப்போது அலர் ஈடுபட்டிருக்கும் வழக்கு குறித்து கேள்விப்பட்ட
வெற்றி தன் கட்சி ஆள்களை அலரின் பாதுகாப்பிற்காக தனியாக நியமித்துவிட்டான்.
“ண்ணா நான் என்ன சின்ன குழந்தையா..? எல்லாரையும் போக சொல்லுங்க” என்று கோபித்தபோதும் “இருக்கட்டும் அமலு!
உன்னை நெருங்க நினைக்கிறவங்களுக்கு மினிஸ்டர் தங்கச்சிங்கிற பயம் எப்பவும்
இருக்கணும்” என்றதில் வெற்றியின் அடிப்பொடிகள் எப்போதும் அலரின் அலுவலகம், வீடு நீதிமன்றம், வெளியிடங்கள் என்று எங்கு
சென்றாலும் அவளுக்கே தெரியாமல் அவளை பின்தொடர்ந்து பாதுகாப்பர்.
சரத்திற்கு சம்மன் அனுப்பிய பின் அலர்விழி தன் நகர்வுகளை
கச்சிதமாக தொடங்கியிருந்தாள்.
முதலில் அவனுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவரிடம் தன்
விசாரணையை தொடங்கியதில் அன்று உதயாதித்தனின் திருமணத்தின் போது அவனை
பரிசோதித்ததில் சரத் தளிரின் புகைப்படம் பதிக்கபட்டிருந்த உள்ளாடைகளை
அணிந்திருந்ததை உறுதி செய்தவர் அதை புகைப்படமும் எடுத்து சிவனேஷிற்கும்
அனுப்பியதாக சொல்லியிருந்தார்.
வழக்கின் தீவிரத்தை புரிந்துகொண்டு புகைப்படத்தை
அலர்விழிக்கும் பகிர்ந்திருந்தார்.
அடுத்து தளிருக்கு கவுன்ஸ்லிங் அளித்த மருத்தவரிடமிருந்து
சரத்தின் நடவடிக்கையால் அவள் கொண்ட உளரீதியான பாதிப்பு குறித்த விரிவான அறிக்கை
பெற்று அலர்விழி ஆவணம் தயாரிக்க மறுபுறம் சரத் தரப்பில் இருந்து அவன் சிகிச்சையில்
இருப்பதால் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று பதில் மனு தாக்கல்
செய்யபட்டிருந்தது.
நீதிபதியிடம் இளந்தளிர் வழக்கின் சாரம்சத்தை விளக்கி சரத்தால்
தளிரின் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியும் சூழ்ந்திருக்கும் ஆபத்து
குறித்தும் கோடிட்டவள் மருத்துவர் எடுத்திருந்த புகைப்படத்தையும் அவர்
வாக்குமூலத்தையும் காண்பிக்கவும் அதிர்ந்து போன பெண் நீதிபதி உடனே வழக்கை
விசாரணைக்கு எடுத்துகொண்டு சரத் கூடிய விரைவில் ஆஜராக வேண்டும் என்றும் அவன்
தரப்பு வக்கீலுக்கு ஆணையிட்டு இருந்தார்.
மருத்துவர் இளந்தளிரை அன்று அதிகாலையே அழைத்து வர சொல்லி
இருக்க சீதா தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி தளிரை அழைத்துக்கொண்டு
ராகவனோடு கிளம்பிவிட்டார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் அறைக்குள் நுழையும்
வரையிலும் தளிருக்கு தான் எதற்காக அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாது
மருத்துவரிடம் மகளை ஒப்படைத்து விட்டு சீதா வெளியேற முயலவும்
“ம்மா உங்களுக்கு உடம்பு முடியலன்னு சொன்னீங்க என்னை விட்டுட்டு எங்க போறீங்க
வாங்க” என்று தளிர் கதவின் குமிழை பிடித்து நின்ற தாயை அழைத்தாள்.
“எனக்கு இல்ல உனக்காக தான் வந்திருக்கோம்
டாக்டர் உனக்கு சொல்லுவாங்க அம்மூ அதன்படி செய்” என்றவர் கண்களில் வழிந்த கண்ணீரை
துடைத்துக்கொண்டே வெளியேறி விட்டார்.
மனதை கல்லாக்கி கொண்ட சீதாவிற்கு நிச்சயம் மகளை இத்தகைய
சோதனைக்கு உட்படுத்துவதில் உடன்பாடு கிடையாது என்றாலும் இப்போது திசை தெரியாமல்
தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் மகளைக் கரை ஏற்ற அவருக்கும் வேறு வழி
தெரியவில்லை
மருத்துவர் தளிரிடம் விஷயத்தை சொல்லவும் கிட்டத்தட்ட உறைந்த
நிலைக்கு சென்றிருந்தாள் இளந்தளிர்.
“சொல்லும்மா உனக்கு சம்மதமா..” என்றபோதும்
அசைவின்றி மருத்துவரை பார்த்திருந்தவளின் கண்களில் இருந்து சூடாக கண்ணீர் மட்டுமே
வெளியேறியது.
“தளிர் உனக்கு ஓகேவா மா” என்ற அவர் கேள்விக்கு
பதிலளிக்காமல் அமைதியாக சென்று அங்கே இருந்த படுக்கையில் படுத்துக்கொண்டவள் ‘என்ன
வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்’ என்ற பாவத்தோடு கண்களை மூடிக்கொண்டாள்.
அடுத்த சில நிமிடங்களில் அவளுக்கான சோதனை முடியவும் அறையில்
இருந்து வெளியேறியவள் முகத்தில் கண்ணீரின் தடம் முற்றிலுமாக
துடைக்கப்பட்டிருந்தது.
நெஞ்சம் படபடக்க பரிதவிப்போடு அறையின் வெளியே காத்திருந்த
சீதாவை ஒரே ஒரு பார்வை பார்த்தவள் அடுத்த நொடியே கைபேசியை எடுத்து “அண்ணா எங்க
இருக்கீங்க..?” என்று கேட்டவாறு வெளியேறிவிட்டாள்.
மகளின் ஒற்றை பார்வையில் உயிரோடு மரித்து தான் போனார் சீதா.
சீதா ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு வந்த போது காரில் நேரே
பார்த்தவாறு நிமிர்ந்து அமர்ந்திருந்தாள் தளிர். “அம்மூ” என்றிட பதிலில்லை..
கண்ணீரோடு தளிரின் கையை பிடிக்க முயல அவரிடம் இருந்து ஒதுங்கி அமர்ந்துகொண்டால்.
“அம்மூ அம்மா உன் நல்லதுக்காக தான்..” என்ற
போதும் அவரை பார்க்காது இருந்தவளின் ஒதுக்கத்தில் மனமுடைந்து போன சீதா “அம்மூ”
என்று ஆரம்பிக்கவும் காரில் வந்தமர்ந்த ராகவன் “கிளம்பலாமா ம்மா” என்று
கேட்டுக்கொண்டே காரை எடுத்திருந்தான்.
“டாக்டர் என்ன சொன்னாங்க அண்ணி அத்தைக்கு
ஏதாவது பிரச்சனையா..?” என்ற நிவியின் கேள்விக்கு பதில்
சொல்லாமல் தன்னிறைக்கு சென்று தளிர் கதவை அடைத்துக்கொள்ள சீதாவிற்கு இங்கே கண்ணீர்
பெருகியது.
“ம்மா என்னாச்சு ஏன் அழறீங்க..?” என்ற ராகவனின் கேள்வியில் முந்தானையால் வேகமாக கண்ணீரை துடைத்தவர்,
“ஒண்ணுமில்ல தம்பி தூசி” என்றார்.
“ம்மா உங்கள லாயர் இன்னைக்கு கூட்டிட்டு வர
சொல்லி இருக்காங்க உங்களால அவ்ளோதூரம் வர முடியுமா..? உடம்பு
முடியலன்னா இன்னொரு நாள் போகலாம்” என்றிட,
“இல்லப்பா இப்பவே போகலாம்” எனவும் நிவியிடம்
தளிரின் பொறுப்பை ஒப்படைத்த ராகவன் சீதாவை அழைத்துக்கொண்டு அலர்விழியை பார்க்க
சென்றிருந்தான்.
Comments
Post a Comment