தன் காலில் விழுந்து கதறிய சரத்தை சட்டென ஆவேசத்தோடு உதறிவிட்டு தள்ளி நின்றுகொண்டாள் தளிர்.
சில நொடிகள் அவளை வெறித்து பார்த்தவன் கண்ணீரை துடைத்துக்கொண்டு, “நீ என்னோட வரலைன்னாலும் நான் உன்னை விட மாட்டேன் இத்தனை நாள் நீ எங்க இருக்கன்னு தெரியாம இருந்தேன் இனி நீ எங்க போனாலும் உன்னை விட மாட்டேன் பின்னாடியே வருவேன்” என்றான்.
“அப்படியா..!”
“ஆமா எனக்கு நீ வேணும் தளிர்!”
“என் பின்னாடி வருவியா..?”
“கண்டிப்பா வருவேன் நீ இல்லாம வாழமுடியாது, புரிஞ்சுக்கோ தளிர்” என்று கண்ணீரோடு வாய்விட்டு கதறியிருந்தான்.
அடுத்த நிமிடமே அங்கே இருந்த கூர்மையான கத்தியை தன் கழுத்தில்
வைத்தவள்,
“இன்னொருமுறை என்னை தேடி என் முன்னாடி வந்த அதுதான் நீ என்னை
பார்க்கிற கடைசி நொடி...” என்று உறுதியாக சொல்லவும் துடிதுடித்து போனான் சரத்.
“தளிர்.. என்ன பண்ற தளிர்..? ப்ளீஸ் ப்ளீஸ் அதை கீழ போடு உனக்கு வலிக்கும்” என்று கத்தியவனுக்கு அவளை
நெருங்கும் தைரியம் இல்லாததால் உடல் உதறல் எடுக்க மீண்டும் மீண்டும் கத்தியை கீழே
போடுமாறு இரைந்து கொண்டிருந்தான்.
“முடியாது” என்று அவள் உறுதியாக நிற்கவும்,
“ப்ளீஸ் தளிர் சொன்னா கேளு முதல்ல கத்தியை
இறக்கு! உனக்கு என்மேல கோபமிருந்தா நீ எவ்ளோ வேணுமானாலும் என்னை அடி..! விளங்காத
குமார் பேச்சை கேட்டு உன்னை அசிங்கபடுத்துவேன்னு ஏதேதோ பேசிட்டேன் அதெல்லாம் தப்பு
தான் என்னை மன்னிச்சிடு” என்று அவள் காலில் விழவும் அருவெறுப்போடு ஒதுங்கி நின்று
கொண்டாள்.
“ப்ளீஸ் தளிர் இது மட்டும் வேண்டாம்..! என்னால
உன்னை பார்க்காம இருக்க முடியாது, உனக்கு என்னை புரியலையா
தளிர்..?” என்றபோதும் அவள் முகத்தில் மருந்துக்கும்
இளக்கமில்லை.
'இனி என் முன் வந்தால் நிச்சயம் என்னை
அழித்துக்கொள்வேன்' என்ற திடத்தோடு அவனை கட்டுபடுத்த தன்
உயிரையே பணயம் வைத்து நின்றிருந்தாள்.
‘ஆம் அன்று உதய் நண்பனுக்கு எதிரான அம்பை
எப்போது எய்த போகிறாய்..?’ என்று கேட்டதற்கான பதில் இது
தான்...!!
சிறுவயதில் இருந்து பழகும் சரத்தின் பலம் பலகீனம் பற்றி ஆராய
தொடங்கியவளுக்கு ‘அன்று தளிரை கடத்தி சென்றபோது அவள் காரில் இருந்து குதிப்பேன்
என்று சொன்னபோது அவன் பதறியதையும் அவளுக்காக துடித்ததையும் நினைவு படுத்தியவளுக்கு
நிச்சயம் அவள் உயிர் மட்டுமே அவனுக்கு எதிராக அவள் பிரயோகிக்க கூடிய
பிரம்மாஸ்த்திரம்..! அவளே அவன் பலகீனம் என்பதை கண்டுகொண்டாள்.’
*********************
என்ன செய்தேனும் அவளை அடைய நினைப்பவன் அவளை
இழக்க எப்போதுமே துணிய மாட்டான். எந்த எல்லைக்கு சென்றேனும் தளிரை தன்னோடு தக்க
வைத்துக்கொள்ள நினைப்பானே தவிர தளிர் இல்லாத வாழ்க்கையை அவனால் நினைத்துகூட
பார்க்க முடியாது.
ஆனால் தளிரை துரத்திக்கொண்டு இருப்பவனுக்கு இப்போது அவளே
இல்லையென்றால் நிச்சயம் அவன் உலகமே இருண்டு போகும். தளிர் இல்லாத உலகை அவனால் நினைத்து கூட பார்க்க முடியாது.
“உனக்காக நான் எதையும் இழக்க தயாரா இருக்கேன்
தளிர் ஆனா உன்னை எக்காரணம் கொண்டும் இழக்க மாட்டேன்.. ஏன் உனக்கு என்னோட லவ்
புரியவே மாட்டேங்குது... நான் அவனை மாதிரி உன்னை கட்டிபிடிக்க மாட்டேன் முத்தம்
கூட கொடுக்க மாட்டேன், அது ஏதோ கோபத்துல சொன்னது ப்ளீஸ்
மன்னிச்சுடு தளிர்” என்று அவள் முன் மண்டியிட்டு கெஞ்சியவனின் கண்களில் இருந்து
கண்ணீர் ஏகத்திற்கும் வழிந்தது.
“நீ சுத்தமான வைரம் தளிர்! இல்ல இல்ல வைரம்
இல்ல அதுக்குகூட ஒரு விலை இருக்கு ஆனா உனக்கு ஈடு இந்த உலகத்துல எதுவுமே இல்ல....
என்னை தவிர யாருமே உன்னை பத்திரமா பார்த்துக்க முடியாது உன்னை ராணி மாதிரி
வச்சுப்பேன். உனக்கே தெரியும் எனக்கு எங்கம்மாவை எவ்வளவு பிடிக்கும்னு நீ எங்க
அம்மாவுக்கும் மேல தளிர்..!”
“எனக்கு உன்னை தினமும் பார்த்துட்டு இருந்தா
மட்டும் போதும் தளிர் ப்ளீஸ் நீ என்கூட வந்துடு தளிர்... ப்ளீஸ் தளிர் என்னை
வேண்டாம் சொல்லாத நீ இல்லன்னா நிச்சயம் நான் செத்துடுவேன்” என்று சொல்ல,
“அதை செய் முதல்ல...!” என்ற தளிரின் குரலில்
அத்தனை கடினம்.
“என்ன பேசுற தளிர்..? நான்
போனதும் அவனோட கொஞ்சி குலாவனும் அதுக்குதானே அப்படி சொல்ற..? ஆனா அதுக்கு நான் விடமாட்டேன், நான் உன் முன்னாடி
வரமாட்டேன் ஆனா நீ என்னோட வந்துடு அவன் வேண்டாம்”
“ப்ச் டேய் நீ என்ன பைத்தியமா பேசினதையே
பேசிட்டு இருக்க..?” என்று கத்தியை கீழே எறிந்தவள்,
“இதோபார் இதுதான் நீ என்னை பார்க்கிற கடைசி
சந்திப்பு..! இனி என்னை தொடர்ந்து வந்து என் முன்னாடி நிற்க நினைச்ச
அதுதான் நீ என்னை உயிரோட பார்க்கிற கடைசி நொடியா இருக்கும்..”
“தளிர் ப்ளீஸ் எனக்கு உன்னை பார்க்காம...”
என்றவனை அழுத்தமாக பார்த்தவள்,
“நான் சொன்னதை செய்வேன்னு உனக்கு தெரியும்
தானே..!” என்று எச்சரிக்கை குரலில் கேட்கவும்,
“ஆம்” என்பதாக மேலும் கீழும் தலையசைத்தவன்
பெரும் கேவலோடு முகம் பொத்தி மடங்கி அமர்ந்துவிட்டான்.
தளிர் திரும்பி நடக்க அவள் காலில் தட்டுபட்டது கைப்பேசியின்
பாகங்கள்.. ஒருநொடி நிதானித்து அவனெதிரில் வந்து குனிந்திருந்தவனை சொடக்கிட்டு
அழைத்தாள்.
சரத் கண்ணீரோடு அவளை பார்க்கவும், “என்
புருஷனுக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு அவர் என்னை கட்டிபிடிக்கிறதையும்
முத்தம் கொடுக்கறதையும் கேள்வி கேட்க நீ யாருடா..?” என்று
பல்லைகடித்துக்கொண்டு அடிக்குரலில் சீற அதிர்ந்து போனான் சரத்.
அதேநேரம் தளிர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த உதய்யின்
அதரங்களில் அழகிய மந்தகாச புன்னகை மலர்ந்து அவன் முகத்தோடு அகத்தையும் நிறைத்தது.
“என்ன பார்க்கிற..? நீ
நினைக்கிற மாதிரி மஞ்சகயிறை கட்டினாத்தான் புருஷன்னு இல்ல, எப்போ
என் மனசை ஜெயிச்சாரோ அப்போயிருந்தே அவர்தான் என் புருஷன் இதை யாராலயும் மாத்த
முடியாது”
“ஆ... ஆனா... அப்போ அவர வேண்டாம்னு பொய் சொல்லி
என்னை ஏமாத்த பார்த்தியா தளிர்..?” என்று சரத் ஆவேசமாக கேட்க,
“ஏய் அடங்குடா..!” என்று எரிச்சலோடு பார்த்தவள், “உன்கிட்ட
பொய் சொல்லி நான் எதை சாதிக்க போறேன்..?”
“அப்... அப்போ ஏன் அப்படி சொன்ன...?”
“உண்மையை தான்டா சொன்னேன்”
“....”
“இதோபார் நீ வேணும்னு சொல்லிட்டு
இருக்கிறதால நான் உன் பொண்டாட்டி ஆகிடமாட்டேன் அதேபோல நான்
வேண்டாம்னு சொல்றதால அவர் என் புருஷன் இல்லைன்னு ஆகிட மாட்டார்... வித்யாசம் புரியுதா..?”
“தளிர் அவன...” என்று சரத் கோபமாக
ஆரம்பிக்கவும் மற்றொரு சலைன் பாட்டிலை எடுத்து தளிர் வேகமாக விட்டெரிய அது அவன்
வாயோடு சேர்த்து மூக்கையும் உடைத்திருந்தது.
“அவரை இன்னொருமுறை மரியாதை இல்லாம பேசின
தொலைச்சு கட்டிடுவேன் நாயே..!” என்று விழிகள் சிவக்க கடுமையான குரலில்
எச்சரித்தவள் தாடையை தாண்டி வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டே அவளை பார்த்தவனிடம்,
“டேய் தாலி கயிறு, மேரேஜ்
சர்டிபிகேட், ஃபோட்டோஸ், வீடியோஸ்னு நீ
எவ்வளவு கொண்டு வந்தாலும் நான் உன் பொண்டாட்டி இல்லைங்கிறது எந்தளவு நிஜமோ அதைவிட
லட்சம் மடங்கு கோடி மடங்கு நிஜம் இது எதுவுமே இல்லைன்னாலும் அவர் என்
புருஷங்கிறது!!"
"இந்த ஜென்மம் மட்டுமில்ல இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவர்
மட்டும் தான் எனக்கு புருஷனா இருக்க முடியும்!..” என்றவளின் பார்வையும் குரலில்
இருந்த உறுதியும் அவனை மிரள செய்ய கதவை திறந்து கொண்டு வெளியேறிய தளிர் ராகவனோடு
கிளம்பி சென்றாள்.
*************
“வணக்கம் நேயர்களே! இப்போ நாம பரபரப்பா
பேசப்பட்டு கொண்டிருக்கும் இளந்தளிரின் வழக்கை எடுத்து நடத்தவிருக்கும் லாயர்
அலர்விழி அகனெழிலன் அவர்களிடம் பேசப்போகிறோம்” என்று கேமராவை பார்த்து
சொல்லிக்கொண்டிருந்தவரிடம் “ஒரு நிமிஷம்” என்று தடுத்து நிறுத்தினாள் அலர்விழி.
“சொல்லுங்க மேடம்”
“லாயர் இல்லை அட்வகேட் அலர்விழி அகனெழிலன்..!!”
என்று அலர் திருத்தம் செய்ய புரியாமல் பார்த்தார் நேர்காணல் செய்ய வந்தவர்.
“இரண்டும் ஒன்னு தானே மேடம்..?”
“இல்லை. இரண்டுக்கும் வித்யாசம் இருக்கு..”
“....”
“சட்டக்கல்லூரிக்கு போய் லா படிச்சவங்களை லாயர்
அதாவது வழக்கறிஞர் சொல்லுவோம் அவங்க பல்வேறு வழக்குகளுக்கு உண்டான ஐபிசி செக்ஷன்ஸ்,
தண்டனைகள் பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள் அதனால் வழக்கறிஞர்”
“ஆனால் லா முடிச்சு AIBE பாஸ்
பண்ணிட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்து வழக்குகளை வாதாடக்கூடியவர்களை
அட்வகேட் சொல்லுவோம் அதாவது வழக்குரைஞர்..! உங்களுடைய வழக்கை
நீதிமன்றத்தில் எடுத்து உரைத்து உங்களுக்காக உங்கள் சார்பில் வாதாடக்கூடியவர் தான்
வழக்குரைஞர் ஆனா காலப்போக்கில் இரண்டுக்குமான வித்யாசம் மறைஞ்சு ஒன்றாகி
போய்டுச்சு...”
“In simple terms every Advocate is a Lawyer but not a
Lawyer an Advocate..” என்று புன்னகையோடு சொல்ல,
“ஸாரி மேடம் இத்தனை நாள் ஒண்ணுன்னு
நினைச்சுட்டு இருந்தேன்” என்றவர் தன்னை திருத்திக்கொண்டு பேட்டியை ஆரம்பிக்க
அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டு வந்தாள்.
“மேடம் இந்த கேஸ்ல பாதிக்கப்பட்ட சரத்துக்கு
எதிரா இளந்தளிர் சார்பா ஆஜராகும் முடிவை ஏன் எடுத்தீங்க..?”
“தளிர் பக்கம் நியாயம் இருப்பதால்..!”
“என்ன மேடம் சரத்தும் தளிரும் ஸ்கூல் டேஸ்ல
இருந்தே உயிருக்கு உயிரா லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்காங்க.. அப்படி
இருக்கிறப்போ உண்மையா நேசிச்சவரை ஏமாத்திட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க
இருந்த பொண்ணு பக்கம் என்ன நியாயம் இருந்திட போகுது..? இப்போயெல்லாம்
பெண்களால் பாதிக்கப்படும் ஆண்கள் எண்ணிக்கை தான் மேடம் அதிகம்... ஆனா எங்களுக்காக
யார் பேசுறா..? பெண்ணா இருந்தா சரி தப்புக்கூட பார்க்காம
சப்போர்ட் பண்றாங்க..”
“பெண் என்பதற்காகவே தளிர் செய்ததை நியாயபடுத்த
முடியாதே..? அதோட உங்களை மாதிரி பிரபலமான ஆள்கள்
அநியாயத்துக்கு துணை போனா சரத் மாதிரி அப்பாவிகள் பாதிக்கபடுவாங்களே..! அதைவிடுங்க
மக்களுக்கு சட்டத்தின் மீதான நம்பிக்கை குறையும் தானே...! ஆயிரம் நிரபராதிகள்
தப்பிக்கலாம் ஆனா ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்பட கூடாதுன்னு சட்டமே சொல்லுது
மேடம்..!”
“தண்ணி குடிங்க” என்று டம்பளரை அவன் புறம்
நகர்த்தியவள்,
“தம்பி நிறைய தமிழ் சினிமா பார்ப்பீங்களோ..?
இன்டர்வியூ வரும் முன்ன எத்தனை படம் பார்த்தீங்க..?” என்று கேட்க அவனுக்கு குடித்துக்கொண்டிருந்த தண்ணீர் புரைக்கேரியது.
“உங்களுக்கு எப்படி மேடம் தெரியும்..?” என்றதற்கு சன்ன சிரிப்பு மட்டுமே அவளிடம்.
“உங்க பேர் என்ன தம்பி..?”
“மதன்குமார் மேடம்..”
“மதன் கண்ணால் காண்பது காதால் கேட்பது எல்லாமே
நிஜமா மட்டும் தான் இருக்கும்னு நம்பக்கூடிய ஆளா நீங்க..?”
“அது... அது வந்து மேடம்....”
“தீர விசாரிக்காம எதையும் முடிவு
செய்ய கூடாதுன்னு தம்பிக்கு தெரியாதா..?”
“மேடம் அதுதான் அவ்ளோ போட்டோஸ் வீடியோஸ்
பார்த்தோமே எல்லாத்துலயும் தளிர் சிரிச்சு பேசி சந்தோஷமா
சரத் கூட போயிட்டு இருக்காங்களே இதுக்கு மேல என்ன வேணும்..?”
“ஓஒ.. ஒரு பொண்ணு சிரிச்சு பேசினா லவ் பண்றதா
அர்த்தமா..?”
“அப்.. அப்படியில்ல மேடம்! ஆனா...” என்றவன்
அடுத்து தொடர முடியாமல் விழிக்க,
“சரி சொல்லுங்க, தம்பிக்கு
நல்ல வேலை, சம்பளம், பார்க்க ஹான்ட்ஸமா
இருக்கீங்க எப்படியும் இந்நேரத்துக்கு குறைஞ்சது பத்து பொண்ணாவது ப்ரொபோஸ் பண்ணி
இருக்கணுமே..? உங்களுக்கு எத்தனை லவ்..?”
“என்னது பத்து பொண்ணா..? நல்ல
சம்பளமா..? லவ்வா..? ஏன் மேடம் ஆங்கரா
இருந்து நம்ம மூஞ்சு டிவியில வந்துட்டா நாங்க என்னமோ ராஜ வாழ்க்கை வாழற மாதிரி நீங்களா
கற்பனை பண்ணிக்கிறீங்க..?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. மீடியா ஃபீல்ட் பற்றி
தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன். இது மத்த ஜாப் மாதிரி கிடையாது மேடம்.. நேரம்
காலமே பார்க்காம அலையறேன் இதுல லவ் பண்ண எங்கிருந்து நேரமிருக்கு..?”
“....”
“நான் வாங்கற சம்பளம் பெட்ரோலுக்கே
கட்டுபடியாகலை அதைவிட வீட்ல இரண்டு வருஷமா பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க
ஒன்னும் செட் ஆகலை. சரி கூட வேலை செய்யற இடத்துல யாரையாவது கரெக்ட் பண்ணி செட்டில்
ஆகலாம்னா ஒரு பொண்ணு கூட திரும்பி பார்க்க மாட்டேங்குது.. இதுல பத்து பொண்ணா..?”
என்று சலிப்போடு கூறி முடிக்கவும்.
“ஏன் தம்பி உங்க பக்கமே இவ்வளவு நியாயம்
இருக்கிறப்போ தளிர் பக்கம் இருக்காதா...? அது எப்படி தம்பி
எதையும் ஆராயாம கண்ணில் பட்ட ஆதாரங்களை மட்டும் வச்சு தளிர் தப்புன்னு
நீங்களே ஜட்ஜ் பண்ணிக்கறீங்க..?” என்று கேட்க ஆர்வக்கோளாறால்
பதில் சொல்ல முடியவில்லை.
Comments
Post a Comment