“தீனா அசோக் பற்றி ஏதாவது தெரிஞ்சதா..?”
என்று தன் முன்னே அமர்ந்திருந்த அஜய் லேகா மற்றும் சந்தியாவிடம்
கேட்டிருந்தாள் அலர்விழி.
“இல்ல மேம் அசோக் சூரத்ல எங்கயுமே இல்ல அவனோட
ஃபேமிலி சர்கிள் பிரெண்ட்ஸ்னு எல்லா இடத்துலயும் விசாரிச்சுட்டோம் தளிர்
மேரேஜ்க்கு இரண்டு வாரத்துக்கு முன்னாடியே அவன் சூரத்ல இருந்து கிளம்பிட்டான்னு
சொன்னங்க ஆனா அவன் வீட்டுக்கும் வரலையாம்”
“வீட்டுக்கும் போகாதவன் வேற எங்க
போயிருப்பான்..?”
“தெரியல மேம்”
“சரி இவங்க செய்த ஃபோர்ஜரி அவங்க ஃபேமிலிக்கு
தெரியுமா..?”
“அசோக் வீட்டுக்கு நாங்க சொல்லித்தான்
தெரியும்... முதல்ல யாருமே நம்பலை அப்புறம் அவனோட அப்பாகிட்ட யூடியூப் சேனல் அவன்
நடத்திவர டேன்ஸ் ஸ்கூல்ன்னு எல்லாம் காண்பிக்கவும் தான் எங்க பக்கம் உண்மை
இருக்கும் என்று நம்பினார்..”
“தீனா”
“அதைப்பற்றி பேசத்தான் மேம் வந்தோம்”
“....”
“மேம் தீனா ஜப்பான்ல இருக்கான்”
“எப்படி கண்டுபிடிச்சீங்க..?”
“மேம் தளிர் ரிசெப்ஷன் அன்னைக்கு தான் நானும்
என் ஹஸ்பண்டும் ஜப்பானுக்கு பிஸினஸ் ட்ரிப் போயிருந்தோம்... அப்போ என் ஹஸ்பண்ட்
எடுத்த போட்டோஸ் பேக்கிரவுண்ட்ல சரத் இருக்கிறதை நேற்று தான் கண்டுபுடிச்சோம்..”
“அவர் உடனே அங்கிருக்க ஆள்களுக்கு கால் பண்ணி
அவனை பற்றி விசாரிக்க சொல்லியிருந்தார்.. அது அவனே தான்..! நாளைக்கு நாங்க மூணு
பெரும் ஜப்பான் கிளம்பறோம் மேம்..”
“வெரி குட்! தீனாவை பிடிச்சா அசோக் இருக்க இடம்
தெரிய வாய்ப்பு இருக்கு”
“ஆமா மேம் அடுத்தமுறை உங்களை சந்திக்க வரும்
போது கண்டிப்பா அவனுங்களை கூட்டிட்டு வரோம்”
“ஆல் தி பெஸ்ட்”
“மேம் கேஸ் எந்த அளவுல இருக்கு... சரத் உண்மையை
ஒத்துக்கிட்டானா..?”
“எந்த குற்றவாளி தன்னோட தப்பை ஒத்துகிட்டு
இருக்கான்... உதய் ப்ராபர்டீஸ் எரிச்சு, விபத்து
உண்டாக்கினதையே ஒத்துக்காதவன் இதையா ஒத்துக்க போறான்..?”
“மேம் அப்போ அவனுக்கு தண்டனை கிடைக்காதா..?”
“அப்படி இல்லம்மா.. நேரில் பார்த்த சாட்சியான
விஷ்வா, பைக்கர்ஸ், அப்ரூவர் குமார்,
ரவுடிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம்.. அவனுக்கு
எதிரா ஸ்ட்ராங்கான வீடியோ ஆடியோ அவனோட இன்ட்டென்ஷனை உறுதி படுத்திடுச்சு, அதோட உதய், தளிர், அம்பலவாணன்
ஸார் வாக்குமூலம், போலீஸ் கொடுத்த ஆதாரங்கள், உதய் மீதான அவனோட வன்மத்திற்கான முகாந்திரம் எல்லாமே ரொம்ப ஸ்ட்ராங்கா
இருந்ததால அவனோட பொய் நிலைக்கலை... ஜட்ஜ் அவனை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க
சொல்லிட்டார்.”
“நிஜமாவா மேம்”
“ஆமா இது திட்டமிட்டு நடத்தபட்ட கொலை முயற்சி
என்பது வீடியோ ஆடியோவின் உண்மை தன்மையில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில்
கண்டறியப்பட்டதால் இந்த வழக்கு ஃபாஸ்ட் ட்ராக்ல எடுத்து இரண்டு
தரப்பிலான ஆதாரங்கள், வாதங்கள் போயிட்டு இருக்கு உதய்
குடும்பத்துக்கு ஏற்படுத்தின இழப்புக்கு காம்ப்பேன்செஷன் கிடைச்சிடும் அதேசமயம்
இது non bailable அஃபென்ஸ் என்பதால் Section 307 படி கொலை முயற்சிக்கு குறைந்தது நான்கிலிருந்து பத்து வருஷம் ஜெயில்
தண்டனை கிடைக்கும் அதோட அவன் ஜாமீன்ல வெளியில வருவது கஷ்டம்..”
“வாவ்! தேங்க்ஸ் மேம்.. ஆனா தளிருக்கு செய்த
துரோகத்துக்கு இந்த தண்டனை போதாதே”
“தளிரோட கேஸும் இதோட தொடர்புடையது சேர்த்து விசாரிக்கணும்ன்னு
மனு தாக்கல் பண்ணியிருக்கேன்... நிச்சயம் தளிரோட கேஸ்க்கான தண்டனையும் அவனுக்கு
கிடைக்கும் அதுக்கான வேலைகளும் வேகமா நடந்துட்டு தான் இருக்கு”
“மேம் எங்களுக்கு ஒரு சந்தேகம்”
“சொல்லுங்க..”
“மேம் சரத் தளிர் கிட்ட அப்பார்ட்மென்ட்
ஃபோட்டோஸ் வச்சு அவளுக்கு அபார்ஷன் ஆச்சுன்னு சொல்லுவேன் சொன்னானே...! நான்
ஏற்கனவே எங்களோட ப்ரோஃபசர் பூர்வீக கிராமத்துக்கு போயிருந்தேன் ஆனா அவங்க கோர்ட்
சாட்சிக்கு எல்லாம் வரமாட்டோம் சொல்லிட்டாங்க.. அவங்க சாட்சி சொல்லாம நாம அதை
ப்ரூஃவ் பண்ண முடியுமா மேம்..?” என்றாள் சந்தியா.
“சந்தியா சரத் சொல்லியிருக்கற படியே தளிர்
அவனோட அப்பார்ட்மென்ட்க்கு போனது உண்மைன்னு வச்சுக்கிட்டாலும் அவன் கொடுத்திருக்கிறது எல்லாமே
வீடியோஸ் மற்றும் ஃபோட்டோஸ் தான் ஆனா அதை மட்டுமே ஆதரமா எடுத்துகிட்டு அவனோட
குற்றசாட்டை ஊர்ஜிதம் செய்திட முடியாது அதுக்கு நான் விடவும் மாட்டேன்..”
“....”
“அவங்க ரெண்டு பேருமே உயிருக்கு உயிரா
காதலிச்சதா அவனே சொல்லியிருக்கான். அப்போ காதலிச்சவங்க வெறும் ஃபோட்டோஸ் வீடியோஸ்
மட்டும் தான் எடுத்துப்பாங்களா..? ராத்திரி முழுக்க கால்
பேசியும் டெக்ஸ்ட்ல சாட் பண்ணி இருக்க மாட்டாங்களா..?”
“ஆமா மேம் நிச்சயம் பண்ணியிருப்பாங்க”
“எஸ் இந்த காலத்துல வாட்ஸ்ஆப் சேட், வாய்ஸ் நோட்ஸ் எல்லாம் சகஜம்! அப்போ அந்த ஆதாரங்களையும்
சப்மிட் பண்ண சொல்லி கேட்பேன்..”
“....”
“அவன்கிட்ட இருந்திருந்தா எப்பவோ அந்த Chats,
ஆடியோ எல்லாமே லீக் பண்ணியிருப்பான்... ஒருவேளை அப்படி அவன் ஏதாவது
பொய்யா செய்துட்டு வந்தாலும் அதை ப்ரூஃப் பண்றது எனக்கு கஷ்டமான விஷயமில்லை.
அவனுக்கு எதிரான பாயிண்ட்ஸ் எல்லாமே நான் ஸ்ட்ராங்கா எடுத்து வச்சுருக்கேன் டோன்ட்
வொரி...”
“ஆனா இதெல்லாம் கோர்ட் எடுத்துப்பாங்களா...?”
“ஏன் எடுத்துக்காம.., கோர்ட்டே
இப்போல்லாம் வாட்ஸ்ஆப் சாட் ஸ்க்ரீன்ஷாட்டை நம்பரோட இருந்தா ஆதாரமா
எடுக்கறாங்க...”
“அந்த முட்டாள் என்னமோ தான் அறிவுப்பூர்வமா
தளிரை அசிங்கபடுத்திட்டதா நினைச்சுட்டான்... ஒருவேளை இப்போ இருக்கிற டெக்னாலஜி
வச்சு அவன் தளிர் வாய்ஸ்ல ஏதாவது செய்ய நினைச்சாலும் அதை எப்படி உடைக்கணும்னு
எனக்கு தெரியும்... நீங்க எந்த கவலையும் இல்லாமல் தீனாவையும் அசோக்கையும்
கூட்டிட்டு வாங்க” என்றதும் அவர்கள் கிளம்பினர்.
தளிர் ராஜி ஜெகாவின் பேச்சை எளிதாக கடந்துவிட்டாலும் சீதா
மற்றும் தென்றலால் சுத்தமாக முடியவில்லை... சீதா அவ்வப்போது கணவரின்
புகைப்படத்தின் முன் அமர்ந்து மெளனமாக கண்ணீர் வடிக்க தென்றலோ 'தளிர்
அத்தனை விளக்கம் கொடுத்த போதும் மீண்டும் தளிரையும் சரத்தையும் எப்படி அவர்களால்
இணைத்து பேச முடிந்தது..?' என்று கொதித்து போனாள்.
“உங்க பெரிம்மா சரத்தை
ஹஸ்பண்ட்னு சொன்னது டூ மச்! அப்போ அக்காவோட முகத்தை நீங்க பார்க்கலை எனக்கு ரொம்ப
கஷ்டமாகிடுச்சு, ஆனா வீட்டுக்கு வரதுக்குள்ள அவ ஓரளவு
சரியாகிட்டா... என்னமோ இவங்க தலைமையில தாலி எடுத்து கொடுத்து அக்ஷதை தூவி கல்யாணம்
செய்து வச்ச மாதிரி நீங்க வரும் முன்னாடி எவ்ளோ பேச்சு தெரியுமா அண்ணி...?”
“எனக்கு தெரியலை தென்றல் ஆனா
நிச்சயம் மோசமா பேசி இருப்பாங்கன்னு மட்டும் புரிஞ்சுகிட்டேன்”
“கொஞ்சமும் மேனர்ஸ் இல்லாம அவ்ளோ
பேர் பார்க்க என் அக்காவை தொட்ட கையை கழுவனும் சொல்றாங்க அண்ணி... என் அக்கா என்ன
அவ்ளோ கீழ்த்தரமா போயிட்டாங்களா உங்க பெரிம்மாக்கு..? எனக்கு
வந்த கோபத்துக்கு அங்கேயே பிடிச்சு அவங்களை கன்னம் கன்னமா அறைஞ்சிருப்பேன் ஆனா என்
அக்காதான் தடுத்துட்டா...”
“நீங்க எனக்காக ஒரே ஒரு ஹெல்ப்
பண்றீங்களா அண்ணி..?”
“என்ன செய்யணும் தென்றல்..?”
“என் அக்காவை அடிச்ச உங்க
பெரிம்மா கையை அடுப்புல வச்சு கருக்கி விட்டுடுங்க போதும்” என்று ஆவேசமாக சொல்ல
நிவியின் முகத்தில் சிரிப்பு.
“செய்வீங்க தானே..?”
“நிச்சயம் எனக்காக செய்வீங்க
தானே..?”என்று மீண்டும் கேட்க,
“தென்றல் கேட்டு செய்ய
மாட்டேன்னு சொல்லிட முடியுமா..? அப்படியே செய்திடுறேன்..
ஹாப்பியா..?”
“நீங்க கேட்டதுலயே மனசு ரொம்ப
லேசாகிடுச்சு அண்ணி... ஏன் அவங்களுக்கு அக்கா மேல இவ்ளோ கோபம்..? இப்படியே இருந்தா எங்கக்கா எப்படி உங்க வீட்டுக்கு வந்து சந்தோஷமா இருக்க
முடியும்..? அதைவிட அகாடெமி, ஸ்கூல்,
டியூஷன்னு இருக்கிறவ தினம் தினம் இவங்களோட மல்லுக்கட்ட அவளுக்கு
முதல்ல நேரமிருக்கனுமே.. நீங்க பேசாம உங்க அம்மா பெரிம்மாக்கு சண்டை போடவே ஒரு ஆளை
அப்பாயின்ட் பண்ணிடுங்க”
“தனியா எதுக்கு இன்னொரு ஆள்
அதுதான் நீ இருக்கியே..? வந்து உன் அக்காக்காக சண்டை போடு”
“நான் என் அக்கா மாதிரி பொறுமையா
பேசிட்டு எல்லாம் இருக்க மாட்டேன் அண்ணி ஸ்ட்ரெயிட்டா ஆக்ஷன் தான்! அப்புறம்
உங்க அம்மா பெரிம்மாக்கு மண்டை, வாய், கை,
கால் எதுவுமே இருக்காது இருக்கிற கோபத்துக்கு எல்லாமே உடைச்சு
விட்டுடுவேன்” என்றவள் கோபமெல்லாம் நிவியுடனான பேச்சில் மெல்ல கரைந்து
கொண்டிருந்தது.
தென்றால் மெளனமாக
இருப்பதை கண்டு, “இப்போ கோபம் போயிடுச்சா..?”
“முழுசா போகலை ஆனா இப்போ ஓகே”
“சரி சொல்லு தென்றல் அண்ணி
எப்படி இருக்காங்க..?” என்ற நிவியின் குரல் குறைந்து ஒலிக்க,
“அக்கா அவங்க பேசினதை பெருசா
மைன்ட் பண்ணின மாதிரியே தெரியலை அண்ணி! ஆனா இவ்ளோ நாளா எப்போ அத்தானை பார்ப்போம்னு
தான் தவிச்சுட்டு இருக்கா..” என்று சொல்ல நிவிக்கு மனதில் பாரம் ஏறியது.
இரவு வந்த கணவனிடம், “அன்னைக்கு
நீங்க கூட வந்திருந்தா இப்படியாகி இருக்குமா..?” என்று
ஏழாவது முறையாக இதே கேள்வியை கேட்டு பேச்சை தொடங்கும் மனைவிக்கு பதிலளிக்க
முடியாமல் பாவமாக பார்த்த ராகவனை
கட்டிக்கொண்ட நிவி,
“நீங்க அன்னைக்கு அண்ணியோட முகத்தை பார்க்கலை,
அதுதான் நான் சொல்றதே புரிய மாட்டேங்குது.. ஒரே ஒருமுறை அண்ணனை
ஃபீல் பண்ணனும்னு சொன்ன போது அவங்க கண்ணுலயும் குரலுலையும் எவ்ளோ காதல் கொட்டி
கிடந்தது தெரியுமா..? அண்ணி மேல தப்பில்லாத போதும் திரும்ப
திரும்ப ஒரே விஷயத்தை பேசி எரிச்சலாக்கறாங்க, ப்ச் இதெல்லாம்
ஏன் அவங்களுக்கு புரிய மாட்டேங்குது?”
“அண்ணி ஒரே ஒருமுறைன்னு
கெஞ்சினதுல எனக்கு அன்னைக்கு முழுக்க தூங்க முடியலங்க” என்று ஒரு மூச்சு அழுது
தீர்க்க உடனே மருத்துவமனையில் இருந்த நண்பனுக்கு அழைத்த ராகவன்..,
“மச்சி ப்ளீஸ் டா உன்
கணக்கெல்லாம் அப்புறம் பார்த்துக்கோ தளிர் பாவம் ஒரே ஒருமுறை மீட் பண்ண ஓகே
சொல்லுடா”
“நான் எப்போடா வேண்டாம்
சொன்னேன்..? உன் தங்கச்சி கணக்கை தீர்ப்பதாக இருந்தால் இப்போ
கூட கூட்டிட்டு வா” என்று சொல்ல,
“மனசாட்சி இருக்காடா உனக்கு..?
தளிர் இருக்க நிலைமைக்கு இந்த நேரத்துல தான் விளையாடுவியா..?”
“மச்சான் விளையாடலை நான் ரொம்ப
ஸீரியஸா தான் சொல்லிட்டு இருக்கேன்.. அவ இஷ்டத்துக்கு எல்லாம் என்னால ஆடமுடியாது
என் வழிக்கு வர சொல்லு.. கணக்கை கழிச்ச பிறகு தான் பேசுவேன்னு சொல்லு” என்றான்
இளக்கமற்ற குரலில்.
“ப்பா
ஏன் என்னை இப்படி பேஷன்ட் மாதிரி ட்ரீட் பண்றீங்க..? எனக்கு
ஒண்ணுமில்லை” என்ற உதய்யின் வார்த்தையை கேளாமல் அரசு மருத்துவமனையில் இருந்து
டிஸ்சார்ஜ் ஆகியவனை உமாவின் மருத்துவமனையில் சேர்த்திருந்தார் அம்பலவாணன்.
“அண்ணி இப்போ எப்படி இருக்காரு..?” என்ற தளிர் கடந்த பத்து நாள்களாகவே உதய்யை சந்திக்க முயன்ற போதும் அதற்கு
வாய்ப்பு இல்லாத வகையில் ஒருபுறம் உதய் தடுத்திருந்தான் என்றால் மறுபுறம் எங்கே
தளிர் வந்துவிடுவாளோ என்று ராஜியும் ஜெகாவும் கூடாரமிட்டு மருத்துவமனையே கதியாக
கிடந்ததில் தினமும் சுஜியிடம் விசாரிப்பதை வழக்கமாக வைத்திருந்தாள்.
இடையில் ஒரே ஒருமுறை கிடைத்த இடைவெளியில் தென்றலையும்
சீதாவையும் உதய்யை பார்ப்பதற்கு அழைத்து செல்ல வந்திருந்தான் ராகவன்... ஆனால்
அவர்களோடு கிளம்பிய தளிரிடம் 'இப்போ அம்மாவையும் தென்றலை மட்டும் தான்
கூட்டிட்டு வர சொல்லியிருக்கான் உன்னை வரவேண்டாம் சொல்லிட்டான் ம்மா' என்று சொல்லவும் உடனே தளிர் உதய்க்கு அழைக்க அவனோ இத்தனை நாள்களாக அவள்
அழைப்புகளை ஏற்காமல் எப்படி மெளனமாக வதைத்தானோ அதேபோல இப்போதும் கையில் இருந்த
கைபேசியை அமைதியாக பார்த்திருந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக உதய்யை பார்க்காமல் போனதில்
ஏற்கனவே பசலை கண்டிருந்த தளிருக்கு விபத்திற்கு பின் ஒருமுறையேனும் பார்த்துவிட
வேண்டும் என்று துடிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. எத்தனை
மெசேஜ், வாய்ஸ் நோட் அனுப்பியிருப்பாள் ஆனால் அனைத்தையும்
பார்க்கிறான், கேட்கிறான் அனால் ஒற்றை வார்த்தை கூட
பதிலளிக்காமல் மௌனம் சாதித்து கொண்டிருந்தான்.
“எத்தனை முறை குழந்தைக்கு சொல்ற மாதிரி சரத்
பிரச்சனையை நான் பார்த்துக்கறேன்னு பொறுமையா எடுத்து சொல்லியிருப்பேன் தெரியுமா
ண்ணா ஆனா நான் சொன்ன எதையுமே காதில் வாங்காம அவர் இஷ்டத்துக்கு எல்லாமே பண்ணிட்டு
இப்போ என்னை பார்க்க விடாம ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கார்.. அப்படி என்ன
பிடிவாதம் உங்க ஃப்ரெண்ட்க்கு..?” என்று ராகவனை பிடித்து
கத்தி தீர்த்துவிட்டாள்.
ஆனால் உதயாதித்தனோ விடாக்கொண்டனாக கணக்கை தீர்ப்பதற்கு
இருந்தால் மட்டுமே அவனை பார்க்க வேண்டும் என்று கறாராக சொல்லிவிட்டான் ஆனால்
ராகவனுக்கு அதை எப்படி தளிரிடம் சொல்வது என்ற சங்கடம்.
“அவருக்கு என்ன தான் வேணுமாம் அதையாவது கேட்டு
சொல்லுங்க ண்ணா செய்யறேன்” என்று உதய் தன்னை வேண்டுமென்றே தவிர்ப்பதில் இப்போது
தளிரின் கண்ணீர் கோபமாக உருமாறி இருந்தது.
“அவன் உன்கிட்ட ஏதோ கொடுத்திருக்கானாமே அதை
திருப்பி கொடுக்கறதா இருந்தா வர சொல்றான் இல்லன்னா வேண்டாமாம்” என்று ராகவன் சொல்லிட
பலமணி நேர யோசனைக்கு பின் வேறு வழியே இல்லாமல் உதயாதித்தனின் நிபந்தனைக்கு
கட்டுப்படுவதாக ராகவனிடம் தெரிவித்திருந்தாள்.
“நினைச்சதை சாதிச்சுட்ட இப்போ சந்தோஷமா..?”
என்று ராகவன் சிடுசிடுக்க.,
“வரும் போது என் பொண்டாட்டி கிட்ட மட்டன்
பிரியாணி, சிக்கன் ஃப்ரை, சிக்ஸ்டி ஃபை,
மீன் வறுவல்” என்று பெரிய பட்டியலே
கொடுத்து, “இதெல்லாம் சமைச்சு எடுத்துட்டு
வர சொல்லு” என்றான் உல்லாசக்குரலில்.
“டேய் முனியாண்டி விலாஸ்ல கொடுக்க வேண்டிய
ஆர்டரை ஹாஸ்பிட்டல்ல உட்காந்து கொடுத்துட்டு இருக்க..?”
“ப்ச் நம்ம ஹாஸ்பிட்டல் தானே மச்சான்... உமா
கிட்ட நான் பேசிக்கிறேன், எனக்கு லிஸ்ட்ல் ஒரு ஐட்டம் கூட
மிஸ் ஆக கூடாதுன்னு அவகிட்ட சொல்லிடுடா”
“மச்சான் நான் எதுக்குடா உங்களுக்கு நடுவுல
அட்லீஸ்ட் தளிர் ஃபோனையாவது அட்டென்ட் பண்ணி உனக்கு என்ன வேணும்னு சொல்லலாமே...
ஏன் இப்படி..?”
“....”
“மச்சான் ப்ளீஸ் தளிர் பாவம்டா
ஒவ்வொரு நாளும் எங்க எல்லாருக்கும் ஃபோன் போட்டு திரும்ப திரும்ப நீ எப்படி
இருக்கன்னு ஒரே கேள்வியை தான் கேட்குது... உன்னை வீடியோவிலும் காட்ட கூடாதுன்னு
சொல்லிட்ட.. என்னதான்டா நினைச்சுட்டு இருக்க நீ பேசினா தளிர் மனசு கொஞ்சம் அமைதியாகுமே?
ஏற்கனவே அத்தைங்க தளிரை மனம் நோக பேசி வச்சிருக்காங்க இப்போ நீயும்
கஷ்டபடுத்தாதடா ப்ளீஸ்”
“....”
“ப்ச் என்னமோ பண்ணு, போடா”
என்று ராகவன் அழைப்பை துண்டிக்க தானுமே கைபேசியை மேஜையில் வைத்துவிட்டு கண்களை
மூடி படுத்தவனின் மனமெங்கும் பெரும் வலி எழுந்தாலும் சடுதியில் தன்னை நிலைபடுத்தி
கொண்டவன் உறக்கத்தில் ஆழ்ந்தான்.
Comments
Post a Comment