மேலும் ஐந்து மாதங்கள் கடந்த நிலையில்:
அன்று அம்பலவாணனின் பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்தினர்
அனைவருமே ஒன்றாக கூடியிருந்தனர். வழக்கம் போல வைஷு தாத்தாவிற்காக வாங்கி
வந்திருந்த கேக்கை அவளையும் கௌஷிக்கையும் வெட்ட செய்த அம்பலவாணன் அவர்களுக்கு
ஊட்டி விட ஜெகா மாமியார் மாமனாருக்கு தனியாக காரம் குறைவாக சமைத்திட சுஜியும் நிவியும்
தந்தைக்கு பிடித்த வகைகளை சமைத்து கொண்டிருந்தனர்.
ராஜி ஓட்டமெடுத்து கொண்டிருந்த நிவியின் மகன் பின்னே ஓட
முடியாமல் ஓடி பிடித்து அவனுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தார்.
அம்பலவாணனோடு சரவணனும் ராகவனும் பேசிக்கொண்டிருக்க உதய்
முக்கிய வேலையாக வேலுவோடு வெளியில் சென்றிருந்தான்.
சமையலை முடித்த ஜெகா அனைவர்க்கும் குடிப்பதற்கு பாயாசம்
கொண்டு வர “உங்க கிட்ட பேசணும் உட்காருங்க பாட்டி” என்று அவர் கையை பிடித்து
அம்பலவாணனின் அருகே அமர வைத்தால் வைஷ்ணவி.
“உனக்கு கஸ்டர்ட் எடுத்துட்டு வரேன் இரு”
“அதெல்லாம் வேண்டாம் பாட்டி உட்காருங்க ஒரு
முக்கியமான விஷயம் கேட்கணும்”
“சொல்லு வைஷும்மா..?” என்று
பேத்தியை தன் மடியில் அமர்த்தி கொண்டு ஜெகா கேட்க,
“அன்னைக்கு அந்த தாத்தா என்னை பேட் டச்
பண்ணினதை யார்கிட்டயும் சொல்லகூடாதுன்னு சொன்னீங்களே பாட்டி அது சரியா தப்பா..?”
என்று கேட்க ஜெகாவிற்கு மட்டுமல்ல ராஜிக்குமே தூக்கி வாரிப்போட்டது.
பதட்டத்தோடு எழுந்துவிட்ட ஜெகா “என்ன உளறிட்டு இருக்க வா
என்னோட” என்று பேத்தியை அங்கிருந்து அழைத்து செல்ல பார்க்க அதற்குள்,
“நில்லு ஈஸ்வரி” என்றார் அம்பலவாணன்.
குறையாத பதற்றத்தோடு அவர் திரும்பவும், “நீ
சொல்லு பட்டு எந்த தாத்தாவை பற்றி சொல்லிட்டு இருக்க, ஏன்
பாட்டி உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு சொன்னாங்க” என்றார்
பேத்தியிடம்.
“அதுவா தாத்து நான் ஃபோர்த் ஸ்டாண்டர்ட்
படிச்சுட்டு இருந்தப்போ நாம எல்லாருமே ஒரு பார்ட்டிக்கு போனமே அங்க தான் ஒரு
தாத்தா..” என்ற வைஷுவின் வாயை பொத்திய ஜெகதீஸ்வரி “சும்மா கண்டதையும் பேசாம
அமைதியா இருடாம்மா.. தாத்தாக்கு நிறைய வேலை இருக்கு” என்று அதட்ட அவர் குரலை
விடவும் ஓங்கி ஒலித்தது “அத்தை அவளை பேச விடுங்க” என்ற சரவணின் குரல்.
மாப்பிள்ளையின் குரலில் ஜெகாவிடம் இன்னுமே நடுக்கம் கூடிட, “அது...
அது.. ஒண்ணுமில்ல மாப்பிள்ளை வைஷுக்கு ஒரு கனவு வந்தது அதை பற்றி என்கிட்டே சொன்னா
நான் அந்த மாதிரி கெட்ட கனவை மறந்தடனும்னு சொன்னேன் அதானே செல்லம்” என்று
கண்களாலேயே அவளிடம் “ஆம்” என்று சொல் என்பது போல ஜெகா கெஞ்ச., எங்கே வைவிஷுவிற்கு அதெல்லாம் புரிந்தால் தானே..?
அப்படியே புரிந்தாலும் இப்போது இந்த விஷயத்தை அவள் விடுவதாக இல்லை.
பின்னே! ஜெகாவும் ராஜியும் சுஜியிடம் தளிர் அவர்களிடம்
உண்மையை மறைத்து கழுத்தறுத்து விட்டதாக ஆற்றாமையில் திட்டி பேசியதை அவளும்
கேட்டிருந்தாலே.. அப்போது அவளுக்கு அவர்களின் கோபம் எதனால் என்று புரியவில்லை
ஆனால் நிவியிடம் மெல்ல விசாரித்து ஒரளவு விஷயத்தை அறிந்து கொண்டவளுக்கு ஜெகா ராஜி
மீது அத்தனை ஆற்றாமை.. அதுமட்டுமா அண்ணாமலையின் பிடிவாதம் குறித்து தெரியவரவும்
அவளுக்கு இருந்த சந்தேகத்தையும் நியாயத்தையும் கேட்க முடிவு செய்துவிட்டாள்.
“இங்க வா வைஷும்மா என்று” சரவணன் அழைக்கவும்
பாட்டியிடம் இருந்து நழுவி தந்தையிடம் செல்ல,
“நீ எந்த தாத்தா பற்றி சொல்ற..? யார் உன்னை பேட் டச் பண்ணினாங்க இதெல்லாம் எப்போ நடந்தது சொல்லு”
“அதுவாப்பா நான் ஃபோர்த் ஸ்டாண்டர்ட்
படிச்சுட்டு இருந்தபோ லீவ்ல இங்க வந்திருந்தேனா அப்போ தாத்தா ஒரு பார்ட்டிக்கு
போகணும் சொல்லவும் பாட்டி என்னையும் ரெடி பண்ணினாங்க... நான் வரலை வீட்லயே டிவி
பார்க்கிறேன் சொன்னதுக்கு அங்க ஐஸ்க்ரீம் எல்லாம் இருக்கும்னு சொல்லி கூட்டிட்டு
போனாங்க அப்போ..” என்றவளை இடைநிறுத்திய அம்பலவாணன்.
“எந்த பார்ட்டி” என்றார் ஜெகாவிடம்.
அவரோ முகத்தில் அரும்பிய வியர்வையை முந்தானையால் துடைத்தவாறே, “அது
வந்துங்க..” என்று தயக்கத்தோடு கணவரை பார்த்தவர், சுமார்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொழில் முறை பார்ட்டி பற்றி சொல்லவும் அந்த நாளை
நினைவு கூர்ந்தவர்,
“சொல்லுடாம்மா நாம போன இடத்துல என்ன நடந்தது”
என்று அம்பலவாணன் கேட்க வைஷ்ணவி அன்று நடந்ததை விவரித்தாள்.
அது அம்பலவாணன் மற்றொரு தொழிலதிபரான ராஜேந்திரனோடு இணைந்து
புதிதாக ஒரு கிளை ஆரம்பிக்க ஒப்புக்கொண்டதை கொண்டாடும் வகையில் ஏற்பாடு
செய்யபட்டிருந்த தொழில்முறை பார்ட்டி. அன்று ராஜேந்திரன் பேரனுக்கு பிறந்தநாள்
என்பதால் இரண்டையும் ஒன்றாகவே ஏற்பாடு
செய்திருந்தார்.
வீட்டின் முன்புற தோட்டத்தில் குழந்தையின் பிறந்தநாள் விழா
கோலாகலமாக விருந்து கேளிக்கை நிகழ்சிகளோடு நடந்து கொண்டிருக்க வீட்டின்
மேல்தளத்தில் தொழில்முறை பார்ட்டி மதுவகைகளோடு நடந்து கொண்டிருந்தது.
அம்பலவாணன் வைஷுவையும் ஜெகாவையும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்
விட்டுவிட்டு வீட்டினுள் சென்றிருந்தார்.
முதலில் கேக் கட்டிங் முடியும் வரை வைஷுவோடு இருந்த ஜெகா அவள்
நண்பர்களோடு விளையாட்டில் கலந்து கொள்ளவும் தன் தோழியர் கூட்டத்தில் ஐக்கியமாகி
போனார். நகை,
புடவை, சமையல் என்று அரட்டை
அடித்துகொண்டிருந்தவற்கு பேத்தியின் நினைவு சுத்தமாக இல்லை.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழிந்த நிலையில் அம்பலவாணன்
அவருக்கு அழைத்து “வைஷுவை சாப்பிட வச்சுடு தனியா விடவேண்டாம் உன்னோடவே வச்சுக்கோ”
என்று சிலர் அதிகமாக குடித்துவிட்டு ஆட்டம் போட்டு கொண்டிருப்பதை சொல்லி இன்னும்
பதினைந்து நிமிடத்தில் தான் வந்துவிடுவதாக சொல்லவும் தான் அவருக்கு பேத்தியின்
நினைவே வந்தது.
உடனே தோட்டம் முழுக்க தேட எங்குமே வைஷ்ணவி தென்படவில்லை.
குழந்தைகள் குழுமி இருந்த இடம் வீட்டினுள் என்று எங்கு தேடியும் அவள் இல்லாததில் நேரமாகவும்
கிலி பிடித்துக்கொண்டது. மாடிக்கு சென்று அம்பலவானனிடம் சொல்லிவிடலாமா..? என்று ஒருநொடி நினைத்தவருக்கு அதன்பின் என்னவாகும் என்பது தெரிந்ததால்
அந்த முயற்சியை விடுத்து மீண்டும் வைஷ்ணவியை தேட தொடங்கினார்.
அப்போதுதான் வீட்டின் பின்புறம் மெல்லிய வெளிச்சத்தில்
நீச்சல் குளம் அருகில் ஆள்கள் நடமாடிக்கொண்டு இருப்பது தெரியவும் உடனே அங்கே செல்ல
கண்ணீரோடு முகம் வெளிறிப்போய் இருந்த வைஷுவை சமாதானபடுத்தியவாறே தூக்கி கொண்டு
வந்திருந்தாள் இளந்தளிர்.
ஜெகாவை கண்டதும் “பாட்டி” என்று வைஷ்ணவி சப்தமிட்டு அழவும்
கலைந்த தலைமுடி, அலங்கோலமாக கிடந்த அவள் உடை, ஓய்ந்த
தோற்றம் என்று அவள் கோலத்தை கண்டு பதறிப்போனார் ஜெகா.
*********************
“அப்புறம்
என்னாச்சு..?” என்று சரவணன் இறுகிய குரலில் கேட்க,
“அப்பா அன்னைக்கு மட்டும் மேம் வரலன்னா அந்த
தாத்தா என்னை எவ்வளவு டார்ச்சர் பண்ணி இருப்பாரு தெரியுமா..? என்னை
அவரோட மடியில உட்கார வச்சுகிட்டு கிஸ் பண்ணினார்.. என்னோட பெர்மிஷன் இல்லாம அவர்
கிஸ் பண்ணினதால நான் அவரை அடிச்சுட்டேன் உடனே அந்த தாத்தா என்னோட கையை அவர் கையாள
ஸ்ட்ராங்கா பிடிச்சுகிட்டாரு என்னால எதுவும் பண்ணவே முடியல”
“நான் எழ ட்ரை பண்ணினேன் ஆனா அவர் என்னோட காலை
அவரோட காலால அழுத்தி பிடிச்சிகிட்டார் என்னால எந்திரிக்கவே முடியவில்லை.. நான்
கத்தகூடாதுன்னு என்னோட வாயை அவர் கையாள அழுத்தமா மூடிட்டு எனக்கு நிறைய கிஸ்
கொடுத்துட்டு வந்தவரு கையை எடுத்துட்டு என்னோட லிப்ல கிஸ் பண்ண வந்தார்..” என்று
சொல்ல,
“போதும்டாம்மா இதுக்கு மேல எதுவும் சொல்லாத”
என்று நடுக்கத்தோடு சொன்ன அம்பலவாணன் பேத்தியை பிடித்து கொண்டார்.
“இல்ல தாத்தா அதுக்கு அப்புறம் தான் மேம் வந்து
அந்த தாத்தாவை அடிச்சிட்டு என்ன காப்பாத்திட்டாங்களே” என்றவள்..,
“ஏன் பாட்டி உங்க பிரெண்ட்ஸ் கூட அரட்டை
அடிச்சிட்டு இருந்த நீங்க என்னோட வரலை ஆனா ஸ்கூல் எல்லாம் எங்க மேம் எப்பவும் எங்க
கூடவே தான் இருப்பாங்க.. நீங்க என் கூட இருந்து இருந்தா அந்த தாத்தா என்ன
தூக்கிட்டு போயிருப்பாரா..?” என்று கேட்க ஜெகாவால் தலை
நிமிர்த்த முடியவில்லை.
“முன்னாடியே எங்க மேம் எனக்கு பிடிக்கும் ஆனா
இப்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதுக்கு அப்புறம் நான் ஸ்கூல் போன போதும் நீங்க
சொன்னதால எங்க மேம் இதபத்தி என்கிட்ட பேசவே இல்ல தெரியுமா..?”
“ம்மா நான் அவளை பெத்தவ என் பிள்ளைக்கு இப்படி
ஒரு அசம்பாவிதமாகி இருக்கு அதை எப்படிம்மா என்கிட்டே இருந்தே மறைக்க முடிஞ்சது
உன்னால..?” என்று வைஷுவை வாரி அணைத்துக்கொண்டு சுஜி அழுகையினூடே
கேட்க ஜெகாவால் பதில் சொல்ல முடியவில்லை.
“சொல்லுங்க அத்தை எங்க பெண்ணை பற்றி எப்படி
எங்க கிட்ட இருந்து மறைப்பீங்க.. இது மட்டும் தான் மறைச்சீங்களா இல்லை இன்னும்
இருக்கா..?” என்று சரவணன் கோபத்தை கட்டுபடுத்திக்கொண்டு
கேட்க,
“இல்ல மாப்பிள்ளை இது மட்டும் தான்..! அதுகூட
இந்த விஷயம் மற்றவங்களுக்கு தெரிஞ்சா என் பேத்தி மேல அவங்களோட பார்வையே வேறயா
மாறிடும்... குழந்தை மனசுல மத்தவங்களோட மாற்றமோ ஒதுக்கமோ விழுந்துடுச்சுன்னா அது
என் பேத்தியை தானே பாதிக்கும்...”
“அது மத்தவங்களுக்கு ஆனா நாங்க பெத்தவங்க ஏன்
எங்ககிட்ட இருந்து மறைச்சீங்க..?”
“அது... மாப்... சுஜிம்மா இந்த விஷயம் சம்பந்தி
வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகுமோன்னு பயந்து தான் மறைச்சுட்டேன்... ஒருவேளை
குழந்தையை அனுப்பாம போயிட்டாங்கன்னா அப்புறம் நீ நீயும் இங்க வராம அதனால தான்
எல்லாம் யோசிச்சு இந்த விஷயத்தை மறைச்சுட்டேன்.. அனா இது தப்பு தான் மாப்பிள்ளை
மன்னிச்சுடுங்க” என்று ஜெகா கைகூப்ப அம்பலவாணன் அவரை ஓங்கி அறைந்திருந்தார்.
எத்தனை பெரிய சம்பவம் அதை இத்தனை வருடங்களாக தன்னிடமே மறைத்து
அன்று பேத்தியின் முகம் வாடி இருப்பதை கண்டு அவர் கேட்ட கேள்விகளுக்கு எத்தனை
எத்தனை பொய்களை சொல்லி பேத்தியிடம் பேச முற்பட்ட அவரிடமே மழுப்பி எப்போதும்
தன்னோடு உறங்கும் பேத்தியை அன்று இரவு மட்டுமல்ல அடுத்து வந்த சில தினங்களுமே
அவரிடம் ஏதேதோ
கட்டுக்கதை சொல்லி பேத்தியை ராஜியின் அறையில் விட்டது என்று எத்தனை
செய்திருக்கிறார்...
“ஏன்டி அன்னைக்கே என்கிட்டே ஒரு வார்த்தை
சொல்லலை..” என்று சீறிய கணவரை கண்ணீருடன் பார்த்த ஜெகாவிடம் கனத்த மௌனம்.
“அவ தான் மறைச்சா நீ ஏன் சொல்லலை..?” என்று ராஜியிடமும் சீறிய அம்பலவாணன் முகத்தில் அத்தனை ரௌத்திரம்.
“என் பேத்தி மேலேயே ஒருத்தன் கை வச்சுட்டு
இத்தனை வருஷம் நிம்மதியா நடமாடி இருக்கான்னா அதுக்கு காரணம் நீ தான்! சொல்லுடி அது
எந்த நாய்..?” என்று ஆவேசமாக கேட்க கன்னத்தை பிடித்திருந்த
ஜெகாவின் உடலில் அப்பட்டமான நடுக்கம்.
திருமணமான இத்தனை வருடத்தில் முதல்முறை தன்னை கைநீட்டிய கணவனை
அச்சத்தோடு பார்த்திருந்தவருக்கு வார்த்தை எழவில்லை.
“சொல்லுன்னு சொன்னேன்” என்று அவர் கர்ஜிக்க
ஜெகா இன்னுமே நடுங்கி போனார்.
“மாமா வாங்க” என்று ராகவன் அம்பலவாணனை
இழுக்க...
“விடுங்க மாப்பிள்ளை சின்ன குழந்தையை நாசம்
பண்ண நினைச்ச நாயை பற்றி இவ அன்னைக்கே சொல்லியிருந்தா அவன் உயிரை
எடுத்திருப்பேன்.. ஆனா என்ன நெஞ்சழுத்தம் இருந்தா அடுத்தநாள் முழுக்க வைஷும்மாவை
என் கண்ணுலேயே காட்டாம எனக்கே கண்கட்டு வித்தை காட்டியிருக்கா” என்று மீண்டும்
ஜெகாவை அடிக்க போக அவருக்கு குறுக்காக வந்து நின்ற வைஷ்ணவி,
“தாத்து அதுதான் அன்னைக்கே தளிர் மேம் அந்த
டெவில் கன்னத்துல பளார் பளார்ன்னு அடிச்சு பக்கத்துல இருந்த பூச்செட்டியை எடுத்து
தலையில அடிச்சு பிளட் வர வச்சுட்டாங்கலே அதுல அவங்க மயங்கி விழுந்துட்டாங்க
உங்களுக்கு தெரியாதா..?” என்று சொல்ல அம்பலவணனுக்கு அந்நபர்
யார் என்பது பிடிபட்டது.
ஆம் பார்டியில் இருந்து வந்த அடுத்த நாள் ஸ்விமிங் பூல் அருகே
தாக்கப்பட்டு மயங்கி கிடந்த அந்த முக்கிய புள்ளி குறித்த விபரம் அவருக்கு
கிடைத்தது.. அப்போது அவர்கள் வட்டத்தில் ஏதோ தொழில் போட்டி காரணமாக இப்படி
செய்திருப்பதாக வதந்தி பரவியதே தவிர அவர் உண்மையை சொல்லவில்லை.
அன்று முழு போதையில் இருந்த நபருக்கு வைஷ்ணவி மட்டுமல்ல தளிர்
முகம் கூட கருத்தில் பதியவில்லை.. இல்லையென்றால் அவனை அடித்து போட்டதற்கு இந்நேரம்
தளிரை சும்மா விட்டிருக்க மாட்டார்.
“யார் உன்னை காப்பாத்தினா வைஷு..?” என்று ராகவன் கேட்க,
“தளிர் மேம் தான் அந்த டெவில் கிட்ட இருந்து
என்னை காப்பாத்தினாங்க சித்தா” என்று சொல்ல அனைவர் முகத்திலும் அதிர்ச்சி.
பின்னே இத்தனை நாள்களில் ஒருமுறை கூட அவள் இந்த விஷயத்தை
பற்றி யாரிடமும் சொல்லவே இல்லையே.
“என்ன சொல்ற வைஷும்மா தளிர் அன்னைக்கு வந்திருந்ததா
நான் பார்க்கவே இல்லையே..”
“நீங்க வீட்டுக்குள்ள போனதுக்கு அப்புறம் மேம்
வந்திருந்தாங்க தாத்து... அந்த டெவில் கிட்ட இருந்து என்னை சேவ் பண்ணி பாட்டிகிட்ட
கொடுத்ததுக்கு அப்புறம் மேம் எங்க போனாங்கன்னு நான் பார்க்கலை”
ஆம் பிறந்தநாள் கொண்டாடும் தருண் இரண்டாம் வகுப்பில் இருந்தே
தளிரிடம் டியூஷன் படிப்பவன் வைஷ்ணவி போலவே தளிர் மீது பித்தாகி இருப்பவனின் ஒரு
பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் தளிர் தவறியதில்லை.
அன்றும் அதேபோல வந்திருந்தவள் குழந்தைகள் விளையாடுவதை
பார்வையிட்டு கொண்டிருக்க ஒளிந்து விளையாடுவதர்க்கு வைஷ்ணவி உட்பட
ஒரு கூட்டம் கிளம்பியது...
அவர்களில் சிலர் வீட்டின் பக்கவாட்டில் வீட்டினுள் என்று
ஒளிந்து கொள்ள வைஷ்ணவி உட்பட இரண்டு பெண்கள் வீட்டின் பின்புறம் சென்றிருந்தனர்.
தருணின் அன்னை தளிருக்கு கேக் மற்றும் சிற்றுண்டி கொடுத்து
உபசரித்தவர் தன் மகன் குறித்து பேசிக்கொண்டிருக்க, பின்புறம் சென்ற
பிள்ளைகளில் இருவர் மட்டும் திரும்பி சுமார் பத்து நிமிடங்கள் ஆகியும் வைஷ்ணவி
திரும்பி வராததையும் அடுத்த ஆட்டத்தை பிள்ளைகள் தொடங்கிவிட்டதை கவனித்த தளிர்
தருணின் அன்னையிடம்,
“எக்ஸ்கியுஸ் மீ மேம்” என்று வைஷ்ணவியை
தேடி சென்றவள் அக்கயவனிடம் இருந்து வைஷ்ணவியை காப்பாற்றி ஜெகாவிடம்
கொடுத்திருந்தாள்.
அது வெளிச்சம் குறைவாக இருந்த இடம் என்பதாலும் ஜெகா இருந்த
பதட்டத்திலும் தளிரிடம் நடந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கண்ணீருடன் கை
கூப்பிய ஜெகாவிற்கு மாஸ்க் அணிந்திருந்த தளிரின் முகம் அவர் மனதில் சரியாக
பதியவில்லை. அவளுக்கு நன்றி தெரிவித்து பேத்தியின் உடை, தலையை
சரி செய்து அவள் முகத்தை கழுவி அழைத்து சென்றார்.
ஆனால் வைஷ்ணவி அவளை அடையாளம் கண்டுகொண்டாள். அடுத்த நாள்
இதுபற்றி யாரிடமும் பேசக்கூடாது இப்படி ஒரு நிகழ்வு நடந்ததையே மறந்துவிட வேண்டும்
என்று வைஷ்ணவியிடம் ராஜியும் ஜெகாவும் சொல்லிக்கொண்டிருந்த போது,
“பாட்டி நீங்க தேங்க்ஸ் சொன்னீங்களே அவங்க
என்னோட மேம் தான்!” என்று அவள் மூலமாக அன்று காப்பாற்றியது அவள் ஆசிரியை என்பதை
தெரிந்து கொண்டதில் அவர் பயம் இன்னும் அதிகரித்தது.
எக்காரணத்தை கொண்டும் ஆசிரியரிடம் மீண்டும் இதை பற்றி
பேசக்கூடாது என்று வைஷுவை தயார் செய்து அனுப்பியிருந்தார்.
Comments
Post a Comment