தீராத காதல் தொல்லையோ - 4.2
“இதோ பாருமா இது நான் வாழற வீடு! இங்க பொழுது விடிஞ்சு பொழுது போனா ஒப்பாரி வைக்கிறதை முதல்ல நிறுத்து! உன்னை ஒதுக்கி வைக்கிறேன்னு அப்பா சொன்னா நீயும் அதை ஏத்துக்கிட்டு இங்கே டெரா போட்டுருவியா?”
“என்னடி பெரிய வார்த்தை எல்லாம் பேசற?” என்றார் இந்திரா மகளின் பேச்சில் கொண்ட அதிர்வோடு.
“நானும் இவ்வளவு நாள் பேசக்கூடாதுன்னு தான் இருந்தேன். ஆனா நீ வந்த இடத்துல அமைதியா இல்லாம எனக்கும் என் மாமியாருக்குமே சண்டை மூட்டி விடற” என்றாள் காட்டமாக.
“நான் என்னடி பண்ணினேன்?”
“என்ன பண்ணல நீ? அப்பா உன்னை வீட்டை விட்டு துரத்தினால் இங்கே வந்தோமா ஒரு வாரமோ இரண்டு வாரமோ இருந்தோமான்னு கிளம்பாம இங்கேயே இருந்தா எப்படி?”
“இதோ பாரு ம்மா அந்த வீட்ல வாழற முழு உரிமையும் உனக்கு இருக்குன்னு நானும் பலமுறை சொல்லிட்டேன். அப்படி இருந்தும் இங்கிருந்து நகருவேனான்னு இருக்க..”
“இங்க ஏற்கனவே ஒரு ஆள் சம்பாத்தியத்தை வச்சு தான் நான் குடும்பத்தை நடத்துறேன். இதுல ஒரு ஆளே எனக்கு பாரம் எனும் போது இரண்டு பேர் வந்து சேர்ந்து இருக்கீங்க.. எவ்வளவு செலவாகுதுன்னு தெரியுமா? ஒரு காய்கறி செலவுக்காவது நீ எனக்கு உதவி செய்றியா?”
“என்னடி இப்படி பேசுற? எனக்கு முடியலனாலும் உனக்காக வீட்டு வேலை எல்லாமே நான் தானே செஞ்சு கொடுக்கிறேன். உன் மாமனார் மாமியார்கு டீ, காஃபி போடறதுல இருந்து பாத்திரம் கழுவி, வீடு பெருக்கி எல்லா துணிகளையும் தோய்ச்சுன்னு அசந்து உட்கார கூட நேரம் இல்லாமல் செய்றேனே..”
“இதெல்லாம் செய்து என்ன பிரோஜனம். என் கூட கம்பெனிக்கு வந்து எனக்கு ஏதாவது சம்பாதிச்சு கொடுத்தா பரவால்ல..”
“ஏன்டி எனக்கென்ன இரண்டு பஸ் ஏறி இறங்கி கம்பெனியில் கால் கடுக்க வேலை செய்யற வயசா? என் வீட்ல ராணியாட்டம் இருந்தவ நான் தெரியுமா?”
“இதெல்லாம் வக்கனையா பேசு, ஆனா ஒருத்தி எப்படி இத்தனை பேருக்கான செலவையும் சமாளிப்பேன்னு கொஞ்சமாவது யோசிக்கிறியா?”
“நானாடி யோசிக்கல? உனக்காக யோசிச்சு தானே என் புள்ளையவே ஏமாத்தி திட்டம் போட்டு வீட்டை அடமான போட்டு நகை போட வச்சேன் ஆனா அதை ஒழுங்கா வச்சுக்க உனக்கு துப்பில்லை…”
“என்னமா பேச்செல்லாம் வித்தியாசமா வருது?”
“பின்ன என்னடி உன் புருஷன் நகையை திருடிட்டு போகவே உன் மேல பாசமா இருக்கிற மாதிரி நடிக்கிறது கூட தெரியாம எல்லா நகையையும் அவன் பொறுப்புல கொடுத்துட்ட ஆனா அவன் அத்தனையும் எடுத்துட்டு இன்னொருத்தி கூட போய்ட்டான்..” என்றார் ஆற்றாமையோடு.
“ம்மா என்ன அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசுற? அவரு உன் மாப்பிள்ளை! அந்த ஞாபகம் இருக்கட்டும். இதெல்லாம் என் மாமனார் மாமியார் காதுல விழுந்துச்சு நீ மட்டும் இல்ல நானும் இங்க இருக்க முடியாது..” என்று எச்சரித்தாள் வனிதா.
Comments
Post a Comment